மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு
கவிதை உருவாக்கும் அழகியல் என்பது எழுதிக்காட்டப்படும் சித்திரிப்புகளின் வழி உருவாக்கப்படும் உணர்வுகளால் கடத்தப்படுகின்றன. கவி. இன்பாவின் இந்தக்கவிதை அதை மட்டுமே செய்திருக்கின்றன. வேறெங்கும் கண்களைச் சுழற்றவே இல்லை. வாசிப்பவர்களையும் அவரது கண்கள் வழியே பயணிக்கக்கோருகிறது. ஆனால் வாசிப்பவர்கள் கண்களின் நாலாபக்கமும் சுழலும் என்பதும், அதன் வழியாக உருவாகும் நினைப்புகளுக்குக் காரணங்களைத் தேடவும் செய்யவும் வாய்ப்புண்டு.
1)நாடு மாறி நான்
சிவப்புக் காதோலை
கருப்பு வளையல்
ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்
களக்கக் கட்டிய பூச்சரங்களென
பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்
காவிரிக்கரையில்
முழு ஆடையோடு முழுகி
வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு
கரையேறும் கட்டுக்கழுத்திகள்
படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி
மஞ்சள் தோய்த்தச் சரடைக்
கழுத்தில் கட்டி முடித்தபின்
முகூர்த்த மாலைகள் ஆற்றில் வீசியெறியப்பட்டன
குளம் பிறந்த பின்
பிறந்த கிராமத்திலிருந்து
பொன்னியாற்றங்கரையேறி
மெயின் கார்டு கேட்டில் இறங்க
யோசனை தூரம் நீண்ட வரிசையில்
கடவுச்சீட்டின் தாகத்தை
நன்னாரி சர்பத் தீர்த்து வைத்தது.
பதினெட்டாம் பெருக்கன்று
கறுப்பு அட்டை கைக்கு வந்த களிப்பில்
தேங்காய்ப் பல் அரிசியில்
கருங்காலி எள் கலந்து இன்னும் கூடுதலாய்
இனித்தது கற்பகக்கட்டி
புடம்போட்ட ‘ பிங்க்’ அட்டை கைக்கு வந்தவுடன்
கறுப்புக் கடவுச்சீட்டில் ஓட்டையிட்டபோது
தேசப்பிதாவிற்குச் சற்று நேரம் நெஞ்சுவலி வந்தது
இப்படியாகச் சப்பரங்கட்டி இழுத்து வந்து
கல்லாங் ஆற்றில் கழித்து விடப்பட்ட
நாடுமாறி நான்.
2) வினோதமான மியாவ்
அந்த நாற்காலில் தனியாக
அமர்ந்திருந்தது அந்த பூனைக்குட்டி
அதன் விழிகளில்
இரண்டு பளிங்குக் கற்கள்
சும்மா இல்லை
அலைபாய்ந்தன
அவள் அந்தப் பூனைக்குப்
பாலூட்ட வருகிறாள்
மிருதுவான பாதங்கள் திரும்புகின்றன
அவளருகே நெருங்கிச் செல்கிறது
அவளருகே தயங்கித் தயங்கி நிற்கிறது
அவள் மெல்ல வருடிக்கொடுக்கிறாள்
அவள் தன் கரங்களால் தூக்குகிறாள்
அவள் மடியில் வசதியாக அமர்ந்துகொண்டது
இப்போது மியாவ் சத்தம்
வினோதமாகக் கேட்கிறது
3) சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும்
வெயிலை வரைந்து கொண்டிருந்த
தூரிகையிலிருந்து
இளமஞ்சள் திரவம்
வழிந்துக் கொண்டிருந்தது
இரண்டு கைகளிலும்
மணலை அள்ளிப்
பறக்கவிடுகிறாள் சிறுமி
வண்ணத்துப் பூச்சிகள்
பறந்து செல்கின்றன
பூக்களால் நிரம்பி
வழிந்தது கடற்கரை
அவளைத் தன் கால்களால்
தூக்கிக் கொண்டு வந்து
வீட்டில் இறக்கி விட்டுச்செல்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்.

கருத்துகள்