வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்


ரீடர்-  A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன.

சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன்

கி.ராஜநாராயணன் படைப்புலகம் -பிரேம்ரமேஷ்

லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி

அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி

ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்

இவ்வைந்தும் என்னிடம் இருக்கின்றன. இவற்றின் தொகுப்பாசிரியர்கள் ஓரளவு அந்தந்த எழுத்தாளர்களின் எழுத்துகளின் பகுதிகளைத் தேர்வுசெய்து தந்துள்ளார்கள். ஆனால் புதிய தலைமுறை வாசகர்களுக்கு உதவும் வாசிப்புப்பார்வையைத் தரவில்லை. அவர்களின் பாராட்டுமுறைப் பார்வையை மட்டும் முன்னுரையாக எழுதியபின் தொகுப்புகளாக மாற்றியிருக்கிறார்கள். எழுத்தாளர்களின் மீதான ஒற்றைப்பார்வையைத் தரும் இத்தொகுப்பு நூல்களில் அவர்களைப் பற்றி மாற்றுப்பார்வைகளை யார் யார் வைத்துள்ளார்கள் என்ற குறிப்புகள் கூடத் தரப்படவில்லை. எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு அந்த எழுத்துகளின் மீதான விமரிசனப்பார்வைகளும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அப்படியான ஒன்றாக - வாசிப்பு - ரீடர் இருக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு



சாருவுக்கு ஒரு வாசிப்பு


நண்பர் சாருநிவேதிதா கோவிட் 19 கால எழுத்துகளாகத் தொடர்ந்து எழுதிவரும் -பூச்சி - குறிப்புகளில் இன்று ஹெலன் சிஸு- ரீடரின் விலைபற்றி எழுதியிருக்கிறார்:

ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது. இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை.

சிஸூவின் புத்தகங்களின் விலை பற்றி யோசிக்கும்போது நான் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் அந்த நாட்டு அதிபரைப் போன்றவர்கள். விலையைப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிப்பக நண்பரிடம் ஏன் ஐரோப்பிய எழுத்தாளர் பலரும் – குறிப்பாக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் – தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்று கேட்டேன். சாத்தியமே இல்லை என்றார். அவர்கள் கேட்கும் முன்பணத்தைக் கேட்டால் நெஞ்சு வலி வந்து விடும் என்றார். பல லட்சங்களில் கேட்கிறார்களாம். இங்கே நாம் பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு புத்தகம் மிஞ்சி மிஞ்சிப் போனால் 300 பிரதி விற்கும். நாம் எப்படி லட்சங்களில் முன்பணம் கொடுப்பது என்றார்.
ஃப்ரான்ஸில் எல்லாம் எழுத்தாளர்களின் நிலை வேறுமாதிரிதான். ஒரு கிண்டில் பதிப்பின் விலையே 7000 ரூ. அச்சுப் புத்தகம் 9000. அதிக வித்தியாசம் இல்லை. எல்லா எழுத்தாளர்களும் இப்படி இல்லை. ஏன் சிஸூ மட்டும் இத்தனை விலை என்று தெரியவில்லை.

http://charuonline.com/blog/ பூச்சி 84
=====================================
இதைப் படித்ததும் ஏன் சாருவுக்கு அதேபோல் ஒரு ரீடர் - வாசிப்பு உதவிக்களஞ்சியம் இல்லை என்று தோன்றியது.

ஒரு மொழியில் செயல்படும் எல்லாருடைய எல்லா எழுத்துகளையும் ஒருவர் வாசித்துவிட முடியாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறைந்தது அவர்களது சிறப்புத் தேர்வுக்குரிய இலக்கியவகையினத்தை முழுமையாகவும் அவ்வகையினம் சார்ந்த மற்றவர்களின் சாராம்சத்தை முன்வைக்கும் ஒரு தொகுப்பையும் வாசித்திருக்க வேண்டும். அப்படியான தொகுப்புகளைக் குறிக்கும் சொல்லாகவே A Reader என்பது இருக்கிறது. தமிழில் அதனை ”வாசிப்பு” என்று மட்டும் சொன்னால் கூடப் போதும். சாருநிவேதிதா- வாசிப்பு
தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வுசெய்துவிட்டு புதுவைப்பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்த தொடக்க நிலையில் எனது நாடகத்துறை அறிவு போதுமானதல்ல. அதற்கு முன்பு நிஜநாடக இயக்கத்தில் பத்தாண்டு காலம் தெருநாடகங்களிலும் இரண்டு மூன்று பெரிய நாடகங்களிலும் நடித்த அனுபவங்களும் பின்னரங்க வேலைகள் சிலவற்றில் உதவியாளனாகப் பங்கெடுத்த அனுபவங்களும் மட்டுமே இருந்தன. மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடந்த நாடகவிழாக்களைப் பார்த்திருந்தேன். தமிழில் மொழிபெயர்க்கப்பெற்ற ஐரோப்பிய, சம்ஸ்க்ருத, இந்திய மொழி நாடகங்களை வாசித்திருந்தேன். என்றாலும் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருந்தது. முழுமையாக ஒரு நாடகக் கோட்பாட்டாளரின் அடிப்படை நூல்களைக்கூட நான் வாசித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாசிப்புக்களஞ்சியத் தொகுப்புகளே கைகொடுத்தன.

ஆங்கிலத்தில் கலை,இலக்கிய வடிவங்கள், வகைகள், காலங்கள், எழுத்தாளர்கள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களுக்கு வெளியிடப்படும் வாசிப்புக்கான களஞ்சியத்தொகுப்புகள் முக்கியமானவை. பல்கலைக்கழகப்பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் இத்தகைய வாசிப்புக்களஞ்சியத்தொகுப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் அப்படியான தொகுப்புகள் பற்றி எனக்குத் தெரிந்த பதிப்பகங்களின் முதலாளிகளிடம் சொல்லிப்பார்த்ததுண்டு. சொல்லும்போது கேட்டுக் கொள்வார்கள். அதைச் செய்வதற்கான தொடர்ச்சியான ஆர்வத்தையும் பொருளியல் தூண்டலையும் காட்டியதில்லை. எனவே எனது நினைப்புகள் அப்படியே நின்று போய்விட்டன. இப்போது சாருநிவேதிதாவின் நூல்களை வெளியிட நல்லதொரு பதிப்பகம் முன்வந்திருக்கிறது. அப்பதிப்பகம் நினைத்தால் - சாருநிவேதிதா - வாசிப்பு - CHARU NIVEDITA - A Reader -தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துவிடலாம். ஓராண்டு வேலையில் அதனைச் சாத்தியமாக்கலாம். அதன் வழியாக உலகப்பரப்பிற்குள் அவர் பேசப்பட வாய்ப்புண்டு.



தமிழிலும் 'ரீடர்கள்' உண்டு!


சில நாட்களுக்கு முன்னர் அ.ராமசாமி, எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய reader பற்றி எழுதியிருந்தார். அது பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவரின் 'வாசிப்பு உதவிக்களஞ்சியத்தை' சாரு வாங்கியதின் பாதிப்பில் எழுதப்பட்டது.பிறகு சாரு, அ.ராமசாமி எழுதியதைப் பகிர்ந்து மேலும் இந்த 'ரீடர்' குறித்து எழுதியபோது 'தமிழில் அப்படி யாருக்குமே ரீடர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்று சாரு குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லை. தமிழில் சில எழுத்தாளர்களுக்கு 'ரீடர்' இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன் வந்திருக்கின்றது. நான் அப்போதுதான் சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகள்' வாசித்துவிட்டு தலை கிறுகிறுத்துப் போயிருந்த காலம். எனவே சு.ராவின் எந்தப் படைப்பைப் பார்த்தாலும் வாங்கும் மனோநிலையில் இருந்தேன். அப்போதுதான் இந்த 'சுந்தர ராமசாமி படைப்புலகம்' என்ற ரீடரை வாங்கினேன்.

இதேபோல அசோகமித்திரனுக்கு, ஜெயகாந்தனுக்கு 'ரீடர்' வந்ததைப் பார்த்ததாக நினைவு. வழமையாக 'காலம்' செல்வத்திடம் புத்தகங்கள் வாங்கும் நான், இதை இங்குள்ள ஒரு புத்தகசாலையில் வாங்கிருந்தேன். படித்துக்கொண்டிருந்த காலம் என்பதால் கையில் காசு புழங்காத நெருக்கடி. வழமையாக வாங்கும் புத்தகங்களை விட, விலை அதிகம் இருந்ததால் திட்டித்திட்டி வாங்கியதாகவும் ஞாபகமிருக்கின்றது. ஏனெனில் அந்தக் காசுக்கு காதலியோடு வெளியில் நல்லாய்ச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு பேரும் தியேட்டரில் படம் பார்க்குமளவுக்கு இதன் விலை இருந்தது. எனினும் கொடுத்த காசுக்கு குறைவைக்காது நல்லதொரு வடிவமைப்போடு இந்த நூல் வெளிவந்திருந்தது.

இதில் ராஜமார்த்தாண்டனின் அறிமுகம், சு.ரா எழுதிய மூன்று நாவல்களில் இருந்து சில பகுதிகள், 7 சிறுகதைகள், 13 கட்டுரைகள், 7 நேர்காணல்கள், 9 கவிதைகள் என 200 பக்கங்களுக்கு மேலாய் சு.ராவின் படைப்புலகின் வெட்டுமுகத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த 'ரீடர்'களை அன்று 'கலைஞன்' பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

அப்படி சு.ராவின் மீது வெறித்தனம் கொண்ட ஒரு வாசகன், இன்னமும் அவரின் கடைசிநாவலான 'குழந்தைகள் ஆண்கள் பெண்களை', கடந்த 15 வருடங்களுக்கு மேலாய் வாசிக்கமுடியாமல் பார்ப்பதும், எடுப்பதும், இடைநடுவில் விடுவதுமாய்த் திணறிக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் இன்றைய காலத்துப் பரிதாபம்.

சாரு நிவேதிதா / பூச்சி 85



ஹெலன் சிஸூவின் ரீடர் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு என் நீண்ட கால நண்பரான அ. ராமசாமி முகநூலில் ஒரு கருத்தை எழுதியிருந்தார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

”பூச்சி-84ஐப் படித்ததும் ஏன் சாருவுக்கு அதேபோல் ஒரு ரீடர் – வாசிப்பு உதவிக்களஞ்சியம் இல்லை என்று தோன்றியது. ஒரு மொழியில் செயல்படும் எல்லாருடைய எல்லா எழுத்துகளையும் ஒருவர் வாசித்துவிட முடியாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறைந்தது அவர்களது சிறப்புத் தேர்வுக்குரிய இலக்கியவகையினத்தை முழுமையாகவும் அவ்வகையினம் சார்ந்த மற்றவர்களின் சாராம்சத்தை முன்வைக்கும் ஒரு தொகுப்பையும் வாசித்திருக்க வேண்டும். அப்படியான தொகுப்புகளைக் குறிக்கும் சொல்லாகவே A Reader என்பது இருக்கிறது. தமிழில் அதனை ”வாசிப்பு” என்று மட்டும் சொன்னால் கூடப் போதும். சாருநிவேதிதா- வாசிப்பு தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வுசெய்துவிட்டு புதுவைப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்த தொடக்க நிலையில் எனது நாடகத்துறை அறிவு போதுமானதல்ல. அதற்கு முன்பு நிஜநாடக இயக்கத்தில் பத்தாண்டு காலம் தெருநாடகங்களிலும் இரண்டு மூன்று பெரிய நாடகங்களிலும் நடித்த அனுபவங்களும் பின்னரங்க வேலைகள் சிலவற்றில் உதவியாளனாகப் பங்கெடுத்த அனுபவங்களும் மட்டுமே இருந்தன. மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடந்த நாடகவிழாக்களைப் பார்த்திருந்தேன். தமிழில் மொழிபெயர்க்கப்பெற்ற ஐரோப்பிய, சம்ஸ்க்ருத, இந்திய மொழி நாடகங்களை வாசித்திருந்தேன். என்றாலும் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருந்தது. முழுமையாக ஒரு நாடகக் கோட்பாட்டாளரின் அடிப்படை நூல்களைக்கூட நான் வாசித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாசிப்புக்களஞ்சியத் தொகுப்புகளே கைகொடுத்தன. ஆங்கிலத்தில் கலை,இலக்கிய வடிவங்கள், வகைகள், காலங்கள், எழுத்தாளர்கள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களுக்கு வெளியிடப்படும் வாசிப்புக்கான களஞ்சியத்தொகுப்புகள் முக்கியமானவை. பல்கலைக்கழகப்பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் இத்தகைய வாசிப்புக்களஞ்சியத்தொகுப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் அப்படியான தொகுப்புகள் பற்றி எனக்குத் தெரிந்த பதிப்பகங்களின் முதலாளிகளிடம் சொல்லிப்பார்த்ததுண்டு. சொல்லும்போது கேட்டுக்கொள்வார்கள். அதைச் செய்வதற்கான தொடர்ச்சியான ஆர்வத்தையும் பொருளியல் தூண்டலையும் காட்டியதில்லை. எனவே எனது நினைப்புகள் அப்படியே நின்று போய்விட்டன. இப்போது சாருநிவேதிதாவின் நூல்களை வெளியிட நல்லதொரு பதிப்பகம் முன்வந்திருக்கிறது. அப்பதிப்பகம் நினைத்தால் – சாருநிவேதிதா – வாசிப்பு – CHARU NIVEDITA – A Reader -தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துவிடலாம். ஓராண்டு வேலையில் அதனைச் சாத்தியமாக்கலாம். அதன் வழியாக உலகப்பரப்பிற்குள் அவர் பேசப்பட வாய்ப்புண்டு.”

அமானுஷ்யத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. அமானுஷ்யத்தோடு பரிச்சயம் உள்ள ஒன்றிரண்டு பேரோடு எனக்கு நட்பும் உறவும் உண்டு. உறவு என்று பார்த்தால் அவந்திகா. நட்பு காயத்ரி. சமயங்களில் பிறருடைய மரணத்தையே கூட தன் தரிசனத்தில் பார்த்து மிரண்டு போய் விடுவாள். ஆனால் அது மிக அரிதாக நடக்கும் விஷயம். பல சமயங்களில் நல்ல விஷயங்களாக இருக்கும். பூரான் விஷயம் எழுதியிருக்கிறேன். காலிகோ பூனை விஷயமும் எழுதியிருக்கிறேன். இப்போது சாரு நிவேதிதா ரீடர் விஷயம். முந்தாநாள்தான் எனக்கு ஒரு ரீடர் கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள். நேற்று ராமசாமி எழுதியிருக்கிறார். இன்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியாகி விட்டது. ரீடர் என்கிற போது எனக்கு ரொலான் பார்த் (Roland Barthes) ரீடர் ஞாபகம் வருகிறது. பார்த் ரீடர், ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) ரீடர் இரண்டும் என்னிடம் உள்ளது. ஃபூக்கோவுக்கு ரீடர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்க வேண்டும். என்னிடம் அவருடைய முக்கியமான புத்தகங்கள் எல்லாமே அந்தக் காலத்தில் Xerox என்ற விஷயம் அறிமுகமான சமயத்தில் புகைப்பட நகல் எடுத்து பைண்ட் செய்து வைத்தது இருக்கிறது. இப்போதெல்லாம் புனைவெழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் இருக்கிறது. ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களை தர்மராஜ் போன்ற பேராசிரியர்கள், புத்திஜீவிகள் படித்து எங்களுக்கு வகுப்பு எடுக்கட்டும் என்று தோன்றுகிறது. நமக்குக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை புனைவெழுத்தில் செலவிடுவோமே?

ஒரு ரீடர் என்பது மேலே ராமசாமி குறிப்பிட்டுள்ளபடி ஒரு எழுத்தாளர் எழுதிக் குவித்திருக்கின்ற canon-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட, அந்த எழுத்தாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பெருந்தொகுப்பு. அந்த ரீடரைப் படித்தால் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டு விட முடியும். புரிந்து கொள்ள முடிகிறாற்போல் இருக்க வேண்டும் அந்த ரீடர். ஹெலன் சிஸூ தன்னுடைய நீண்ட ஆயுட்காலத்தில் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். எழுதிக் கொண்டும் இருக்கிறார். அவை எல்லாவற்றையும் ஒருவரால் படிப்பது சாத்தியம் இல்லை. அப்போது ரீடர்தான் உதவிக்கு வரும். தமிழில் அப்படி யாருக்குமே ரீடர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சி.சு. செல்லப்பாவிலிருந்து தொடங்கி நான் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியுள்ள அத்தனை முன்னோடிகளுக்குமே ரீடர் வேண்டும். நாவலிலிருந்து சில பகுதிகளை எடுத்துப் போடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்