இதுவொரு புலப்பாட்டுக்கலை

60 நாட்களைத் தாண்டிய பெருந்தலை- பிக்பாஸ் - பங்கேற்பாளர்களின் இன்றைய பொறுப்புச் செயல் தங்களை முன்மொழிதல். இதுவரை தன்னை ஒரு பங்கேற்பாளராக எப்படி முன் வைத்தார்கள்; அதன் மூலம் பார்வையாளர்களை எப்படி மகிழ்ச்சிப் படுத்தினார்கள் எனச் சொல்லும்படி வலியுறுத்தப்பட்டது. பொதுவான செயல்பாடுகளான காலைவிழிப்பு, வீட்டின் வேலைகள், ஆடை அணிதல், மற்றவர்களோடு பழகுதல் என்பதில் அவரவர்களின் தனித்தன்மையான வெளிப்பாடு இருந்தால் கூடச் சொல்லியிருக்கலாம். ஜித்தன் ரமேஷ் தொடங்கி அஜீத், கேப்ரி, சோம்சேகர், ரம்யா, ஷிவானி, நிஷா எனத் தொடர்ந்தார்கள். இவர்கள் ஒருவரும் பெருந்தலையின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

இந்தப் போக்கு எங்கும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முன்னறிவிப்பு இல்லாமல் ஊடகங்களில் பேசும் நபர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். அவர்களின் பகுதியிலேயே முகவரி சொல்லத்தெரியாதவர்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். தெரிந்த இடத்தைப் பற்றிக்கூடக் குறிப்பாகச் சொல்லாமல் விலகிப் போய்விடுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்த தனித்திறன் நபர்களை அடையாளப்படுத்திச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாகப் பேசும் இந்தப் போக்கு கல்விப்புலங்களில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் காணப்படுகிறது. தேர்வுத்தாளில் எழுதப்படும் விடைகளில் கூட இந்தப் பொத்தாம் பொதுவான வெளிப்பாட்டுமுறையே காணப்படுகிறது. ஆனால் குடிமைத்தேர்வு போன்ற சிறப்புத்தேர்வுகளில் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. எழுப்பப்படும் வினாக்களே குறிப்பான விடைகளை எதிர்பார்ப்பதாகவே இருக்கும். 

குறிப்பாக ஒன்றைவிரிக்கவேண்டும்; அதைப்போலப் பலவற்றை அடுக்கிக் காட்ட வேண்டும்; ஆழமாக விளக்கவேண்டும்; விவாதிக்கவேண்டும்; அதன் மூலம் தங்களின் சொல்லாடல் திறனைக் காட்டவேண்டும்; தங்கள் அறிவைப் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் செயல்படுவதாகத் தெரியவில்லை, பேச்சின் வழியே வெளிக்காட்டவேண்டிய புலப்பாட்டு நெறியின் குறைபாட்டை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வெளிச்சம்போட்டுக் காட்டி விட்டது. நாளை மற்றவர்களும் இப்படியே தான் தொடர்வார்களா அல்லது ஊடகப் பேச்சு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, சிறப்புப் பயிற்சி அளித்த அனுபவம் கொண்டவர்களான அனிதா, அர்ச்சனா, ஆரி, பாலா, சனம்ஷெட்டி, ரியோ போன்றவர்கள் வேறுபடக்கூடும். 

விஜய் தொலைக்காட்சியின் பெருந்தலை நிகழ்ச்சியை விட்டுவிடுவோம். புலப்பாட்டு நெறி என்பதைக் கொஞ்சம் விளங்கிக்கொள்ளலாம். புலப்படுத்தும் நெறியை ஒரு கலையாக வலியுறுத்தியவர் அரிஸ்டாடில். ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் கலை. அதற்கெனத் தனியான இலக்கண வரையறைகளும் தர்க்கமும் உண்டு. குறிப்பிட்ட ஒரு சூழலில் தனியொருவரிடமோ திரளான மக்களிடமோ சொல்வதற்குப் பயன்படுத்தும் சொல்லாட்சித்திறன் என ஒரு வரையறையைத் தரலாம் என்றாலும் வெறும் சொல்லாட்சி மட்டுமே புலப்பாட்டு நெறி அல்ல. காட்சிப்படுத்துதல், உணர்வூட்டித் தன்வசப்படுத்துதல், மொழிநடையின் செம்மை போன்றனவும் ஒருவரது புலப்பாட்டு நெறியைக் கட்டமைக்க க்கூடியன. அதனால் பேச்சுமொழியோடு உடல் மொழியும் புலப்பாட்டு நெறியில் வினையாற்றக் கூடியன. 
தனது புலப்பாட்டுக் கலையை வளர்த்தெடுக்க நினைப்பவர்களுக்கு பலவிதமான சொற்களையும் கூறுகளையும் தருகிறது தொல்காப்பியம். உடல் மொழிக்காக அது தரும் கலைச்சொல் மெய்ப்பாடு. தர்க்கப்பார்வைக்காக அது சொல்லும் கலைச்சொற்கள் முன்னம் மற்றும் நோக்கு. மொழிப்பயன்பாட்டில் இசைத்தன்மையை உருவாக்கத் தொல்காப்பியர் தரும் முதன்மையான கலைச்சொல் வண்ணம். வண்ணம் என்ற சொல்லை இன்று நிறங்களோடு தொடர்புடைய சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் வண்ணம் என்பது ஓசையொழுங்கு. பாக்களில் இடம் பெற்ற வண்ணங்களை 20 வகையாகப் பிரித்துப் பேசுகிறது தொல்காப்பியச் செய்யுளியல். இவையெல்லாம் கலந்து உருவானதே நடையியல். புனைகதையின் வரவிற்குப் பின் மொழிநடையாக மாறியிருக்கிறது. எழுத்துப் பனுவல்களில் மொழிநடையாகச் சுருக்கப்பட்ட கலைச்சொல்லின் இன்னொரு வடிவமாகப் புலப்பாட்டு நெறியைச் சொல்லலாம். பேச்சுக்கலையையும் நடிப்புக்கலையையும் தங்களின் வெளிப்பாட்டுக்கருவியாக நினைப்பவர்கள் புலப்பாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ளலாம். எழுத்துக்கலையை தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாக நினைப்பவர்கள் நடையியலில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தக் கவிதையை (புறம் 45 )எழுதியவர் கோவூர்கிழான். 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே! 

இக்கவிதையில் வெளிப்படுவது ஓர் உறுதிப்பொருள். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இருவர் மோதிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இவ்விருவரும் சகோதரர்கள் அல்லது பங்காளிகள் என்பதை அந்தக் குடிப்பெயரே தெரிவிக்கிறது. ஒரே குடியில் பிறந்த இருவரும் மோதுவதால் என்ன நிகழ்வும் என்பது அவருக்குத் தெரியும். அந்த மோதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போரின் விளைவொன்றை உறுதியாகச் சொல்லிவிட்டி ஒதுங்கிக் கொள்கிறார் கவி கோவூர் கிழான். அந்த உறுதிப்பொருளை உருவாக்க முதல் இரண்டு அடியில் இருக்கும் சொல்லாட்சி அல்லன். அடுத்தடுத்து வரும் அன்றே, அன்றே என்னும் ஏகார ஈற்றுச் சொல். ஏற்று மோதலை நிறுத்தவில்லை என்றால் குடிகெடும் என்பதையும் உறுதியாகச் சொல்ல இன்னொரு ஏகார ஈற்றுச் சொல்லால் முடிக்கிறார் கவிதையை. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்