கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக


ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

ராஜபார்வையை எடுப்பதற்காகவே ஹாசன் ப்ரதர்ஸ் என்றொரு கம்பெனியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலவிதமாக அந்தப் படத்தில் பங்களிப்பு செய்தனர். கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனும் நடிகராக மட்டும் இல்லாமல் திரைக்கதை அமைப்பதிலும் வசனம் எழுதுவதிலும் ஈடுபட்டார். அந்தப் படத்திற்கு முன்பு அவர் தன்னைப் பெரும்பாலும் இயக்குநர்களின் நடிகராக(Director’s Actor) மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தார். ராஜபார்வையில்தான் நடிப்பில் சோதனைகள் செய்யும் நடிகராக(Experimental Actor) காட்டிக் கொண்டார். 

ராஜபார்வை கமல்ஹாசனின் படம் எனச் சொல்லப்படவேண்டும் -அவரை முன்னிலைப்படுத்தி அறியப்படும் படமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே , அப்படத்தின் இயக்குநர் புதியவராகத் தேர்வுசெய்யப்பட்டார் என்று அப்போது தோன்றவில்லை; இப்போது தோன்றுகிறது. அதன் இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் கன்னடத்திலும் மலையாளத்திலும் அறியப்பெற்ற இயக்குநராக இருந்த போதிலும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்கு அதிகமும் அறிமுகமாகாதவர். அந்தப் படம் வெளிவந்தபோது எழுதப்பெற்ற அந்தப் படத்தைக் கமலின் படமாக முன்வைத்த தமிழ் ஊடகங்களும் அவற்றின் வழியாகவே சினிமா குறித்த அறிவையும் கருத்துகளையும் உருவாக்கிக் கொள்ளும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவை மூன்றாவது இடத்தில் வைத்தனர். இரண்டாவது இடம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு. முதலிடம் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை அமைப்பாளர் கமல்ஹாசன்.

தொடர்பு அறுபடாத திரைக்கதை அமைப்பு, பாத்திரங்களின் அகவுணர்வை உணர்ந்து வெளிப்படுத்திய நடிப்பு, பின்னணிக் காட்சிகளின் செழுமை, அதுவரை தமிழில் நடித்திராத புதிய நாயகியாக மாதவி, இளையராஜாவின் இசையில் அந்திமழை பொழிகிறது போன்ற நுட்பமான இசைக்கோர்வைகள் கொண்ட பாடல்கள் எல்லாம் இருந்தும் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடவில்லை ராஜபார்வை. என்றாலும் ராஜபார்வை கமல்ஹாசனின் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியப் படம் என்று சொல்லப்பட்டது; இப்போதும் நம்பப்படுகிறது.

ராஜபார்வைக்கு முன்

ராஜபார்வை 1981 -இல் வந்த படம். அதற்கு முன்பு களத்தூர் கண்ணம்மா தொடங்கி (1960) குறத்திமகன் வரை(1972) பன்னிரண்டுகள் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவரை நான் அவனில்லை,அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், போன்ற படங்களில் துணைப்பாத்திரங்களில் நடிக்கவைத்த கே. பாலச்சந்தர் நாயகப் பாத்திரம் X எதிர்நிலைப் பாத்திரம் என்ற வழக்கமான கட்டமைப்பைவிட்டு விலகிய அபூர்வராகங்களில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்துத் திசை திருப்பியவர். அதற்கிடையில் நடனக் கலைஞராகவும் ஒளிப்பட உதவியாளராகவும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் என்பதும் நடிகராகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தார் என்பதும் அவரது நேர்காணல்களில் சொல்லப்பட்ட உண்மை. நடிப்புத் திசையில் திருப்பிவிட்ட கே.பாலச்சந்தரே தனது இயக்கத்தில் உருவான அவர்கள், மன்மதலீலை, நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் வழியாக நடிகர் கமல்ஹாசனை நாயகப் பாத்திரமேற்கும் நடிகராக உருவாக்கியவர். அவரைப் போலவே பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கோகிலா, மூன்றாம் பிறை, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் - ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது, மோகம் முப்பது வருஷம், ஆடுபுலி ஆட்டம், சக்கை போடு போடுராஜா, துரையின் இயக்கத்தில் நீயா, மரியா மை டார்லிங், ஜி.என்.ரங்கராஜுவின் இயக்கத்தில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா எனப் பல வெற்றிப்படங்களில் நடிக்கவைத்து தமிழ்ச் சினிமாவின் நாயக நடிகராக வலம்வரச் செய்தனர். ஐ.வி.சசியின் அவளோட ராவுகள், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நடித்து மாற்று சினிமாவின் ஆதரவாளராகவும், மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி எனப் பலமொழிகளில் நடித்திருந்ததால் இந்திய நடிகராகவும் அறியப்பட்டிருந்தார். 1987 இல் மணிரத்னத்தின் நாயகனில் நடித்துத் தேசிய விருதுபெற்ற நடிகராக உயர்ந்தார்.1981 முதல் 1991 வரையிலான பத்தாண்டுக்காலம், கமல்ஹாசன் என்னும் நடிகரின் நடிப்புக்கொடி பட்டொளிவீசிப் பறந்த காலம் என்பதில் ஐயமில்லை. அவரே எழுதப்போகும் தன்வரலாற்றில் அந்தக் காலகட்டத்தை அப்படித்தான் எழுதிக் கொள்ளக்கூடும்.

தேவர் மகன் என்னும் முரண்நகை சினிமா:


ராஜபார்வையைப் போலவே கமல்ஹாசனுக்கு இன்னொரு திருப்புமுனைப் படம் தேவர்மகன் (1992). இதன் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் தான். இயக்குநர் மலையாளத் திரையுலகில் நன்கு அறியப்பெற்ற பரதன். நடிப்பில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ரேவதி, நாசர், கௌதமி, விஜய், வடிவேலு, காகா ராதாகிருஷ்ணன், அவரின் மனைவியாக நடித்த எஸ்.என். லட்சுமி, சிவாஜி கணேசன் என ஒரு பட்டாளத்தை நடிக்கச் செய்த படம். என்றாலும் கமல்ஹாசனின் படமாகவே அறியப்பெற்றது.

அந்தப் படம் பலவகையிலும் முக்கியமான படம். மேலே சொன்ன நடிகையர்கள், நடிகர்கள் என ஒவ்வொருவருக்கும் முழுமையான பாத்திர வார்ப்புகளைக் கொடுத்த படம். பொதுவாக நகைச்சுவை நடிகர்கள், வில்லன் நடிகர்களுக்குத் தட்டையான பாத்திரங்களேயே வழங்கும் தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மாறுதல்களையும் அகவுணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரங்களாக வடிவமைத்துத் தந்ததோடு தமிழ்ச் சமூகத்தின் நிகழ்கால முரணை – ஒரு சாதியினரின் போலிப் பெருமைகளைக் கடும் விமரிசனத்திற்கு உள்ளாக்கிய படம்.

கல்வி அறிவுபெறுதல், அதன் வழியாக மக்களாட்சி முறைக்கும், அதனால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் சட்டவிதிகளுக்கும் கட்டுப்படுதல் போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சாதியினர் -தேவர்கள்- விலகிப் போகிறார்கள்; அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு கலைக்கு – சினிமாவுக்கு உண்டு என்ற நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட படம். தொடக்கத்தில் பெருநிலக்கிழார் குடும்பம் ஒன்றின் இன்பியல் நிகழ்வுகளையும் பெருமைகளையும் பேசி மெல்லமெல்லத் துன்பியல் முடிவுக்கு நகர்த்திய சினிமா. குடும்ப அமைப்பு, ஊரின் நன்மை போன்றவற்றிற்காகத் தனிமனிதன் தனது காதலை விட்டுத்தருதல் என்னும் துன்பியல் வீழ்ச்சியில் தொடங்கி மொத்தத்தில் கொலைகாரனாகித் தன் சாதியினரை நோக்கித் தனிமொழியாகப் போதனைகளை முன்வைத்துவிட்டு முடித்த அந்தப் படம். துன்பியல் நாடகத்தின் கட்டமைப்போடு உருவாக்கப்பெற்ற திரைக்கதை அமைப்பு கொண்ட படம். நாடகத் தொடக்கத்திற்கும் உச்சநிலைக்கும் இடையே உருவாக்கப்படும் கதைப் பின்னலிலும் சிக்கல் வளர்ச்சியிலும் அறுபடாத முடிச்சுகளையும் அவற்றின் அவிழ்ப்புகளையும் காட்டி நகர்த்திய சினிமா அது. உடன்பாட்டு நிலையிலும் எதிர்மறையாகவும் அதிகமும் விமரிசிக்கப்பட்ட- விவாதிக்கப்பட்ட- தமிழ்ச் சினிமாவாக இன்றளவும் இருக்கிறது தேவர் மகன் என்பதைத் தமிழ் விமரிசகர்கள் ஒத்துக்கொள்வார்கள்.


தேவர் மகன் சினிமா அதன் நோக்கத்தைப் பார்வையாளர்களிடம் எதிர்மறையாக நிறைவேற்றியது ஒருவித முரண்நகை. மக்களாட்சியின் இயங்குநிலைக்குள் படம் பேசிய சாதியினரின் செயல்பாடுகளைக் கொண்டுவரவேண்டும் என நினைத்தனர் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனும் இயக்குநர் பரதனும். ஆனால் நிகழ்ந்ததோ அதற்கு எதிரான நிலையில். தென்மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவர்சாதித் திரள் அப்படம் முன்வைத்த இன்பியல் காட்சிகளான சாதிப் பெருமைகளை மட்டும் பார்த்து ரசித்துத் தனதாக்கிக் கொண்டது. பின்பகுதியை வெறும் சினிமாவின் காட்சிகளாகக் கருதிக் கைவிட்டது. அப்படத்திற்காக இளையராஜா பாடி சிவாஜி கணேசன் நடித்த போற்றிப்பாடடி பெண்ணே… என்ற பாடலும் கமல்ஹாசன் சிலம்பம் ஆடியபடிப் பாடும் சாந்துப்பொட்டு சந்தனப்பொட்டு பாடலும் தென்மாவட்டங்களில் ஒளியாகவும் ஒலியாகவும் தொடர்கின்றன. அந்தப் படம் இப்போதும் அந்தச் சாதியின் பெருமை பேசும் படமாகவே கருதப்படுகின்றது. அப்படத்தில் பெரிய தேவரின் மகன் சக்திவேல் தேவராக நடித்த கமல்ஹாசனுக்குத் “தேவர் மகன்” என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியது. அப்படத்தில் அவர் செய்திருந்த முறுக்கு மீசை ஒப்பனையைப் பல நேரம் அவரது சொந்த அடையாளமாகவே கருதவும் செய்தார். இப்போது மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியின் தலைவராக வலம் வரும் முகம் அந்த முகம் தான்.

ஹேராம் என்னும் குழப்பம்

ராஜ பார்வை, தேவர் மகன் படங்களை அடுத்துக் கமல்ஹாசனின் முக்கியமான படமாக நினைக்கப்படவேண்டிய ஒன்று ஹேராம். 2000 -த்தில் வந்த ஹேராமிற்கும் தேவர் மகனுக்கும் இடையில் மகாநதி, குருதிப்புனல் போன்ற தீவிரமான சமூக உள்ளடக்கப் படங்களிலும் கலைஞன், நம்மவர், இந்தியன், சிங்காரவேலன், அவ்வை சண்முகி மகளிர் மட்டும், சதிலீலாவதி, போன்ற மக்கள் ரசனைக்கான வணிகப்படங்களில் நடித்தார்; பணம் ஈட்டினார் என்பதும் அவரது சினிமா வரலாற்றின் பக்கங்கள்.

ஹேராம் முழுமையாக வணிகப்படம் அல்ல. காலனி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திரப் போராட்டப்பின்னணியில் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கையையும், அவர் இந்த நாட்டுக்கு முன்வைத்த தனிமனித, அரசியல் அறம் ஆகியவற்றின் ஒரு விமரிசனப் பார்வையையும் வைத்த படம். காந்தியின் மீது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மாற்று இயக்கம் – ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் - கொண்டிருந்த வன்மத்தையும் வெறுப்பையும் கதையாகவும் உணர்வாகவும் மாற்றித் தர முயன்ற தீவிர அரசியல் படம். விடுதலைக்குப் பின்னான இந்திய தேசம் சந்தித்துக்கொண்டிருக்கும் மத அடிப்படைப்பெரும்பான்மை x சிறுபான்மைச் சமூகங்களின் முரண்பாட்டுப் புள்ளியை – அச்சமூட்டும் வாழ்க்கையின் தொடக்கத்தைக் கதைப்பொருளாக்கி எடுக்கப்பெற்ற படம்.


இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகளான ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, கிரிஷ் கர்நாட், வசுந்தரா தாஸ், வி.எஸ்.ராகவன் போன்றோர் நடிப்புக் கலைஞர்களாகப் பங்கேற்றிருந்தனர். அப்படம் பேசிய அரசியல், வசனங்களில் வெளிப்பட்ட நுட்பங்கள், இசைக் கோர்வைகள் மூலமாக உருவாக்கப்பெற்ற ஈர்ப்பு, அடையாளங்களை மறைக்காமல் உருவாக்கப்பெற்ற பாத்திரங்கள் போன்றன அப்படத்திற்கு சமகால வரலாற்றைப் பேசிய படம் என்ற நம்பகத் தன்மையைக் கொடுத்தது. ஆங்கிலத்தில் காந்தியின் வாழ்க்கையை விமரிசனங்களின்றிப் படமாக்கிய அட்டன்பரோவிற்குக் கிடைத்த வெற்றியைப் போல ஒரு வெற்றியையும் உலகச் சினிமாவிற்குள் ஒரு கவன ஈர்ப்பையும் பெற்றிருக்க வேண்டிய படம். ஆனால் அந்தப் படத்தின் திரைக்கதையிலும் நோக்கத்திலும் இருந்த குழப்பங்களால் வெற்றிபெறாமல் போன படம். என்றாலும் கமல்ஹாசன் என்னும் சினிமா ஆளுமையின் வரலாற்றில் முக்கியமான படம் என்றே திரைப்பட விவாதங்களில் சொல்லப்படுகிறது.

ஹேராம் படத்தின் மூலம் கமல்ஹாசன் சினிமாவில் சோதனை செய்பவர் என்பதைத் தாண்டிச் சமூகப்புரிதலும் அரசியல் தெளிவும் கொண்ட மனிதர் என்பதாக அறியப்பட்டார். தேவர் மகனில் வெளிப்பட்ட தமிழக அரசியல் அறிவு தேசிய அளவிலான அரசியல் அறிவாக ஹேராமில் நீட்சி பெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக நடந்துமுடிந்த நாடாளுமன்ற/ சட்டமன்ற இடைத்தேர்தல்களின் கடைசிக் கட்டத்தில் “இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாத்ராம் கோட்சே” என்று தேர்தல் பரப்புரையில் ஓங்கி முழங்கினார். வெளிப்படையாக முன்வைத்த அந்தச் சொல்லாடலை ஹேராம் படத்தில் கலாபூர்வமாகச் சொல்ல நினைத்தார் என்பது இப்போது தான் விளங்குகிறது.

கமல்ஹாசன் தேர்தல் அரசியலுக்கு வரக்கூடும் என்ற சந்தேகங்களை அந்தப் படம் எழுப்பியது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்த அந்தக் காலகட்டத்தில்தான், ரஜினிக்குப் பதிலாகக் கமல்ஹாசன் அரசியலுக்கு வரலாம் என்று பத்திரிகையாளர் ஞாநி போன்றவர்கள் கருத்துத் தெரிவித்து வரவேற்புரை சொன்னார்கள். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோது ஞாநி ஆலோசனைகள் வழங்கக் காத்திருந்தார். அவ்வப்போது கமல் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார் என எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் எழுதினார். அவரது படங்களுக்கு திரைக்கதை உருவாக்கும் குழுவில் இருந்த / இருக்கும் சுஜாதா, பாலகுமாரன், மதன், கிரேஸி மோகன் போன்ற எழுத்தாளர்களும் அவருக்கு ஆலோசனைகளைச் சொல்லியிருக்கலாம். இப்போது ஆலோசனைகள் வழங்கும் இடத்தில் முனைவர் தொ.பரமசிவன், கு.ஞானசம்பந்தன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. 

தேவர் மகன், ஹேராம் போன்ற படங்களில் அவர் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை வைத்தபோதும் ‘நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்றே சொல்லி வந்தார். ஆனால் சினிமாவில் அவரது போட்டியாளரும் நட்சத்திர நடிகருமான திரு.ரஜினிகாந்த் ’அரசியலுக்கு வருவேன்; அதுவே எனது லட்சியம்; என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு நான் திருப்பித் தரவேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தார். 1996 -ல் “இவங்க- (செல்வி ஜெ.ஜெயலலிதா) திரும்ப வந்தா இந்த நாட்டைக் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்று குரல் கொடுத்தவர்; அடுத்த தேர்தலில் அவரின் இரட்டை இலைக்கே வாக்களித்தேன் என மாற்றிச் சொல்லிவிட்டு வாக்குச் சாவடியை விட்டு வெளியேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக – முன்னால் முதல்வர்கள் ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் இறந்த பின்னர் அவரது அரசியல் ஆசையும் படம் நடித்துப் பணம்பண்ணும் ஆசையும் போட்டி போட்டு முன்னேறுகின்றன. இதைக் கவனமாகக் கமல்ஹாசனும் பரிசீலனை செய்திருக்கக் கூடும். அதனால் அவருக்கும் அரசியல் ஆசை முளைத்திருக்கக் கூடும்.

திரு.கமல்ஹாசனை தமிழக அரசியல் தெரிந்தவர் எனக் காட்டிய தேவர் மகனும், இந்திய அரசியல் தெரிந்தவர் எனக் காட்டிய ஹேராமும் பின்னிருந்து இயக்க, அவரை அரசியல்வாதியாக்கிய படம் அவரது இயக்கத்தில் வந்த விஷ்வரூபம் (2013) என்றே சொல்லவேண்டும். ஹேராமிற்கும் விஷ்வரூபத்திற்கும் இடையிலான 13 ஆண்டுகளில் பம்மல் கே.சம்பந்தம், தெனாலி, பஞ்சதந்திரம்,வசூல் ராஜா எம்பிபிஎஸ், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற வணிக வெற்றிப்படங்களை -நகைச்சுவைப் படங்களில் நடித்தார். அதே காலகட்டத்தில் விருமாண்டி, அன்பே சிவம், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, உன்னைப்போல் ஒருவன் போன்ற அரசியல் விவாதப்படங்களிலும் கவனம் செலுத்தினார். இவற்றில் சில -விருமாண்டியும் தசாவாதாரமும்- மாநில அரசியலைப் பேசிய படங்கள். சாதிய முரண்பாடுகளை முன்வைத்துவிட்டு அவற்றைக் களையவேண்டிய வழிமுறைகளையும் தேவையையும் சொல்லிய படங்கள். ஆனால் அன்பே சிவம், வேட்டையாடு விளையாடு, உன்னைப் போல் ஒருவர் ஆகிய படங்கள் தேசம் தழுவிய/ சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கெதிராக உரத்துப் பேசும் சினிமாக்கள்.

விலகும் பாதைகளும் இணையும் புள்ளியும்


சாதிப் பிரிவினையை முன்வைத்து உள்ளூர் அரசியல் பேசினாலும், பயங்கரவாதத்தை முன்வைத்து தேசிய/ சர்வதேசிய அரசியல் பேசினாலும் அவரது நம்பிக்கை அல்லது கலைக்கோட்பாடு இந்திய ஞானத்தின் முதன்மைப் போக்கான அத்வைதமாக இருப்பது தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளாக அவர் அடையாளம் காட்டிய மனிதர்கள் அடைய வேண்டிய இலக்கு சிவமாகிய அன்பு என்னும் அத்வைத வேதாந்தம். இந்த ஆதரவுக் கருத்தியலே அவர் தன்னை, இந்தியாவின் பெரும்பான்மை மதத்தின் ஆதரவாளராகக் காட்ட விரும்பும் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அது அவரது நம்பிக்கை; கருத்தியல்; கலைக்கோட்பாடு. கேள்விகளுக்கப்பாற்பட்டது.

2013இல் வந்த விஷ்வரூபத்தின் நிகழ்வெளியும் முன்வைப்பும் உலகு தழுவிய பயங்கரவாதம் என்பதாக வளர்ந்தது. அப்படத்தின் காட்சிகளும் உள்ளடக்கமும் வெளியீட்டிலும் வணிகப்படுத்துவதிலும் சிக்கல்களை உண்டாக்கியது. அவரை முழுமையாகச் சிறுபான்மையினருக்கு எதிரானவராக நிறுத்திவிடும் அபாயமணியை அடித்தது. அப்படத்திற்கெதிரான போராட்டங்கள் அவரைச் சினிமாவின் எல்லைக்குள் இருந்து அரசியல் பரப்பிற்குள் தூக்கிப் போட்டது. எனக்கும் எனது கலை வெளிப்பாட்டிற்கும் பாதுகாப்பில்லாத இந்தத் தேசத்தில் இருப்பதா? வெளியேறுவதா? என்று யோசிக்கிறேன் என்றார். அது தான் கமல்ஹாசன் பேசிய உச்சபட்ச அரசியல் வசனம். சினிமாவில் பேசாத வசனம்.

தனது இணைநேர்கோடான ரஜினிகாந்தின் தயக்கத்தைத் தாண்டி வேகமாக நீளும் ஒற்றைக்கோடாக - ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியைத் தொடங்கியபோது சேவை அமைப்பாக இருந்த அவரது ரசிகர் மன்றங்களைக் கட்சி அமைப்பாக மாற்றினார். இது ஒருவிதத்ததில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பாணி. ஆனால் முழுமையான பாணி அல்ல. திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிக மன்றங்களைக் கட்சியாக மாற்றியபோது தன்னோடு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வந்தவர்களையும் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களையும் சம அளவில் முக்கியமாகக் கருதினார். கட்சிப்பொறுப்புகளில் நியமனம் செய்தார். ஆனால் திரு.கமல்ஹாசன் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை அங்கேயே – உள்ளூர் அளவிலேயே நிறுத்திவிட்டு அரசியல் முகம் இல்லாதவர்களாக இருந்த 20 பேரைக் கட்சியின் மையத்தில் முதன்மைப்படுத்தினார்.

20 பேரில் உபதலைவர் மகேந்திரனும் நடிகர் நாசரின் மனைவி கமீலாவும் பாடலாசிரியர் சிநேகனும் மட்டுமே நடந்து முடிந்த தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் வெளிப்படையானவையல்ல. அறியப்பெற்ற பேச்சாளர்களான பாரதி கிருஷ்ணகுமார், கு.ஞானசம்பந்தன், பொருளாளர் சுகா. நடிகைகள் ஸ்ரீப்ரியா போன்றவர்கள் தேர்தல் பரப்புரைக்குக் கூட வரவில்லை. ஆனால் வேட்பாளர்களை முடிவுசெய்யும் மையச் செயல்பாடுகளில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கமலின் சினிமாவுக்கு உதவிய நண்பர்கள். உள்வட்ட உரையாடல்களில் பங்கேற்றவர்கள். அவர்கள் எவருக்கும் தமிழக வெகுமக்கள் அரசியல் போக்குகளில் நிலைப்பாடுகள் கிடையாது.. கருத்தியல் நிலைபாடுகள் கொண்டவராகவும் அறியப்பட்டவர்கள் அல்ல. இருந்தது என்றால் ஊடகங்களில் வெளிப்படுத்தியதில்லை. இப்படியானவர்களைத் தேர்வுசெய்து கட்சியின் பொறுப்பாளர்கள் என அடையாளம் காட்டியது கூடத் தன்னை மட்டுமே மையப்படுத்தி- ஒற்றைநபர் மையக் கட்சியாக மக்கள் நீதிமய்யம் நகரவேண்டும் என்ற கமல்ஹாசனின் நினைப்பாக இருக்கலாம்.

நடந்து முடிந்த தேர்தலில் அவர் போட்டியிடாமல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாகத் தானும் தான் பெற்றுத் தந்துள்ள கைவிளக்கு -டார்ச் லைட் – சின்னமும் முக்கியம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் பரப்புரைகளையும் விளம்பரங்களையும் செய்தார். இந்தப் போக்கு அவரது முக்கியமான சினிமாக்களான ராஜபார்வை, தேவர்மகன், ஹேராம், விஷ்வரூபம் போன்ற படங்களின் தயாரிப்பும் விற்பனையும் போன்றனவே. இந்த நடைமுறையில் இப்படித்தான் இருக்கும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படம் பார்க்கவரும் பார்வையாளர்களையே திருப்திப்படுத்திட முடியாது. அதனால் தான் தேவர் மகன் தவிர எந்தப் படமும் வெற்றிப்படமாக இல்லை.

தேர்தல் அரசியல் என்பது பலவிதமான கலைவையின் ஈர்ப்பு. சாதி, மதம், மொழி, மரபின் நீட்சி என்ற பழையனவற்றின் குமிழிகள் ஆழமாக இருக்கும். அதே நேரத்தில் கல்வி அறிவு, தனித்து நிற்கும் மனோபாவம், உரிமைகளுக்காகப் போராடுவது, பாலின வேறுபாடுகளைக் களைவது, சமத்துவத்தையும் சமூக நீதியையும் அவாவது என வெளிப்படும் வண்ணக்கலவையின் குமிழிகளும் எழுந்து நகரும். இவற்றையெல்லாம் பேசும் கொள்கை, தேர்தல் அறிக்கை, அமைப்பின் தன்மை இல்லாமல் தொடங்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். அப்படித் தொடங்கியது மட்டுமல்லாமல் இவையெவையும் தேவை இல்லை என்றும் பேசினார் கமல்ஹாசன். இந்தப் பேச்சு மக்களாட்சி முறையில் வெளிப்படக்கூடாத பேச்சு.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சி வெற்றியடையாத கட்சியாக ஆகியிருக்கிறது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை போன்ற பெருநகரங்களில் மூன்றாவது இடம் பெற்ற கட்சி என அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது. கொங்கு வட்டாரத் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள். இப்போதும் அவரது தேவர் மகன் சினிமாவைக் கொண்டாடும் தென்மாவட்டங்களில் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் வாங்கிய ஓட்டுகள் மிகக் குறைவு. கட்டுத்தொகை இழப்பே நிகழ்ந்துள்ளது. 

அவரது தேவர் மகன் வெற்றிப்படம். ஆனால் ராஜபார்வை , ஹேராம் போன்ற படங்கள் சினிமா வரலாற்றில் -கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் பேசப்பட்ட படங்கள். இப்போதைய தேர்தலில் முதலிடத்தில் இருந்த அ. இ.அதிமுக இரண்டாவது இடம் பெற்ற கட்சியாக இருந்தாலும் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழக அணியினர் பெற்ற வாக்குகளில் பாதியளவே பெற்றிருக்கின்றனர். அடுத்து வரும் தேர்தலில் -சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குள் இருக்கும் வட்டார, சாதிய, ஆளுமை முரண்பாடுகளைத் தாண்டி ஒன்றிணைதல் நடக்கவேண்டும். அதற்காக யார் விட்டுக்கொடுப்பார்கள் என்பது இனிவரப் போகும் காலத்தின் இயக்கம். அப்படி மேலெழுப்பும் வேலையை அதன் தேசியக் கூட்டணியான ஆளும் பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு- அ.இ.அதிமுகவின் தன்னேரில்லாத் தலைவியாக விளங்கிய ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர்- கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை எழுப்பியவர்கள் திரும்பவும் எழுப்ப மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி எழுப்பும்போது தாக்குதலுக்குள்ளாகும் கட்சியாக பிரிந்துகிடக்கும் அ இ அதிமுக. வாகவே இருக்கும்

அந்நிலையில் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்பும் அமைப்பாகக் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இருக்கக் கூடும். அதற்கு அவர் அமைப்பு ரீதியாகக் கட்சியைக் கட்டியெழுப்பவேண்டும். திரைப்பட ரசிகர்களின் எல்லைகளைத் தாண்டிப் புதிய பரப்பு வாக்காளர்களை நோக்கி நகர வேண்டும். வருங்காலத் தமிழக அரசியல் நிகழ்வு ஒவ்வொன்றையும் பேசும் கட்சியாக மாறவேண்டும். தாக்கம் ஏற்படுத்தும் பெருநிகழ்வுகளுக்காக மட்டும் இல்லாமல் வட்டார அளவில் உள்ளூர் அளவில் குரல் எழுப்பவும் போராடவும் அணிகளை உருவாக்க வேண்டும். தேர்தல் அரசியலில் கடக்க வேண்டிய பாதை இதுதான். இவற்றையெல்லாம் தனதாக்கித்தான் வெகுமக்கள் அரசியல் நகர்கிறது. வெகுமக்கள் அரசியல் கட்சிகள் நகர்ந்திருக்கிறார்கள்.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பியுள்ள கொங்குமக்கள் தேசியக் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் அப்படியான கட்டமைப்பை மாநில அளவில் கொண்டிருக்கவில்லை என்றாலும் அடையாள அரசியலை முன்வைத்துத் தங்களுக்கான வெளிகளை உருவாக்கியிருக்கிறார்கள் அப்படி உருவாக்கிக் கொண்டு . திராவிட இயக்கங்கள் பேசும் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழியின் தனித்தன்மை ஆகியவற்றை நேரடியாக எதிர்க்காமல் மறைமுகமாக விமரிசிக்கும் -எதிர்க்கும் இயக்கம் ஒன்றாக மக்கள் நீதி மய்யம் இயங்கலாம். அப்படியான சொல்லாடல்களை முன்வைக்கும் கட்சி ஒன்றிற்குத் தமிழ்நாட்டில் எப்போதும் இடமிருக்கிறது. அந்த இடத்தை இட்டு நிரப்புவதின் மூலம் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கவும் வாய்ப்புண்டு. அப்படி உருவாகும்போது மைய அரசின் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதாவே மக்கள் நீதி மய்யத்தை முதல் வாய்ப்பாக அணுகும். இப்படி நடந்ததும் தமிழக அரசியலின் அண்மை வரலாறுதான்.

========================================================
நன்றி: உயிர்மை, ஜூன் ,2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்