இணைநேர்கோட்டுப் பயணிகள்

கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்