தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்


தமயந்தியின் முதல் படம் தடயம். வணிக சினிமாவின் சூத்திரங்களைப் புறமொதுக்கி விட்டு, ஆண் – பெண் உறவின் எதிர்பார்ப்புகளையும் நுட்பமான தவிப்புகளையும் முன் வைத்த படம். தனது சினிமாவின் விவாதப்பொருளில் மாற்றுத் தளத்தைத் தேர்ந்தெடுத்தது போலவே தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் அந்தப் படத்தில் தனக்கென ஒரு மாற்றுத் தடத்தில் பயணம் செய்திருந்தார்.

இப்போது அவரது இயக்கத்தில் ‘காயல்’ என்றொரு படம் வெளியிடத் தயாராகவுள்ளது. அந்தப் படத்தை எனது சென்னைப்பயணத்தின்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படமும் முதல் படத்தின் தொடர்ச்சியைக் கொண்ட படமாகவே இருக்கிறது. கதைசொல்லும் முறை, காட்சி உருவாக்கம், கதைக்களத்திற்கான நிலவெளிப் பின்னணி, மனித உணர்வுகளின் தவிப்பு, அவர்களின் தன்னிலையைக் கட்டமைக்கும் சமூக நடவடிக்கைகளின் பிடிமானம், அவற்றிற்கான உள்ளார்ந்த அர்த்தங்களைக் கூட்டிப் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தும் இசைக்கோர்ப்பு என ஒவ்வொன்றிலும் இயக்குநரின் கவனத்தையும் நிதானத்தையும் பெற்ற படமாக வந்திருக்கிறது. ஆனால் எழுப்ப நினைத்த விவாதத்திலும், காட்சி அமைப்புகளில் வெளிப்பட வேண்டிய நடிகர்களின் ஈடுபாட்டிலும் முதல் படத்தில் இருந்த முழுமையும் தீவிரமும் குறைந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

வணிக சினிமாவின் முதன்மையான பேசுபொருளாக இருப்பது காதல் என்னும் பொருண்மை. காயலின் பேசுபொருளும் காதல் தான். ஆனால் காதலுக்கான காரணம்; காதலர்கள் வெற்றிபெறுவதற்கான தடைகள், தடைகளை மீறி வென்ற அல்லது வெற்றி பெறாத காதல் என்பது போன்ற திகட்டிப்போன கதைப் பின்னலில் நகரவில்லை. உடல் சார்ந்த ஈர்ப்புகளை மட்டுமே முதன்மைக் காரணமாகக் காட்டும் வணிக சினிமாவின் விவாதத்தை முன்னெடுக்காமல், அறிவுத்தளத்தின் மீது முடிவெடுக்கும் காதலை விவாதப்படுத்தியிருக்கிறது காயல். அவ்விவாதம் ஒற்றைத்தளத்தில் முன்னெடுக்கப்படாமல் பல கிளைகளைக் கொண்ட காட்சிகளாகவும் உணர்வுக் குவியல்களாகவும் நகர்த்தப்பட்டுள்ளதைப் படத்தின் சிறப்பாகச் சுட்டிக்காட்டும் அதே நேரம், அந்தப் பலதள நகர்வு எதனைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவது என்பதில் குழப்பத்தைக் கொண்டிருப்பதாகவும் மாற்றியிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது.

காரணம் அறியப்படாத பிணக்கில் இருக்கும் கணவன் – மனைவி இருவருக்கும் அதிர்ச்சி தரும் தகவல் – மகளின் தற்கொலை என்ற தொலைபேசித் தகவலுடன் தொடங்கும் படம் பின்னோக்கிய நிகழ்வாக மகளின் தற்கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற யூகத்தை மட்டுமே பார்வையாளர் களுக்குக் கோடி காட்டுகிறது. சமூக நடப்புகளின் மீது அக்கறை கொண்ட- சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளும் இளைஞன் ஒருவன் மீது மகளுக்கு ஏற்படும் ஈர்ப்பைத் தந்தை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சாதிவேறுபாட்டை ஏற்காத பிடிவாதம் கொண்ட அம்மா முழுமையாக நிராகரித்துச் சொந்தத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். அந்தத்திருமண வாழ்க்கைத் தோல்வியின் விளைவு மகளின் தற்கொலை.  தற்கொலையின் தொடர் நிகழ்வுகளையும், நீளும் தாயின் பிடிவாதங்களையும் அதனால் கணவன் -மனைவிக்கிடையே ஏற்படும் கசப்பையும் விலகலையும், குற்றவுணர்வின் பரிமாணங்களையும் அவற்றைக் களைந்துவிட நினைத்து முன்னெடுக்கும் தீர்த்த யாத்திரையும் எனப் படம் இலக்கற்ற பயணங்களாக விரிக்கப்பட்டுள்ளது .

சமூகத்தில் நடக்கும் கொலை, தற்கொலை போன்ற குற்றங்களின் பின்னணிகளைக் கண்டறிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும் காவல் துறை அதிகாரி பெண்ணின் தகப்பனார். அவரது ஆதரவு இருக்கும் நிலையில் காதலியைக் கைவிட நினைக்கும் காதலனின் மனநிலையும், அம்மாவின் விரும்பத்தை ஏற்றுத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துத் திருமண வாழ்வில் நுழைந்த பெண்ணின் மணவாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் படத்தில் கூடுதல் காட்சிகளால் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைச் செய்யாது, தற்கொலைக்குப்பின்னான மனவிசாரணைகளில் இறங்கியுள்ளது படம். அவ்விசாரணைகளை ஒற்றை நேர்கோட்டில் நகர்த்தாமல்,    இரண்டு கிளைகளாகக் காட்சிகளை உருவாக்கி நீட்டியிருக்கிறார் இயக்குநர்.   இரண்டும் தற்செயலாகச் சந்திப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.


முதல் கிளையில், மகளை இழந்த துயரத்தோடு, அதனைத் தனது துறைசார்ந்த நடவடிக்கையால் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாமல் தவிக்கும் கணவனின் மனநிலையும்;  தடுக்கும் மனைவியின் சாதிப் பற்றையும் உறவினரைக் காப்பாற்ற நினைக்கும் குணத்தையும் நினைத்து அவரிடமிருந்து பெற நினைக்கும் விலகலும் விரிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களது துயரத்தை மறக்க வைக்க நினைத்து உளவியல் சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் மருத்துவரின் ஆலோசனைப்படி மகளின் அஸ்தியைக் கரைக்கும் முடிவோடு கிளம்பும் பயணக்காட்சிகள் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. இரண்டாவது கிளை, முதல் காதலிலிருந்து விடுபடாமல் இருக்கும் நாயகனின் அலுவலகத்தில் அவனது உதவியாளராக இருக்கும் பெண்ணின் பிடிவாதமான காதலும் நெருக்கமான காட்சிகளும் பொருத்த மற்றனவாகவே அடுக்கப்பட்டுள்ளன. அவர்களது வேலை காரணமாக பிச்சாவரத்தில் தங்கியிருக்கும்போது அவள், நாயகனின் முந்திய காதலையும் பிரிவையும் அறிந்தவள் எனச் சொல்லப்பட்டாலும் அக்குறிப்பு முன்பே சொல்லப்பட்டு, அவன் மீது கொள்ளும் காதல் ஒருவிதப் பரிவின் விளைவு என்பதாகக் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி நகரத்திலிருந்து விலகியிருக்கும் வீடு, கடலோரப்பயணம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் என நெய்தல் பின்னணியில் விரியும் நிலவெளிக்காட்சிகள், பின்னணி இசை போன்றன படத்திற்கான அழகியல் கூறுகளை விரித்துள்ளன. ஆனால் உளவியல் மருத்துவரின் மணவாழ்க்கைப் பிரிவு, அவரது மனைவி சந்தித்த விபத்து, அதனால் அவரது இடத்தில் நாயகனை நிறுத்திவிட்டுக் கிளம்புதல் போன்றன முழுமையான நம்பகத் தன்மை கொண்ட காட்சிகளாக இல்லாமல் செயற்கையான கதை உருவாக்கம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன.

பாத்திரங்களின் செயற்கைத் தன்மையோடு நடிகர்களின் உடல் மொழியும் பொருந்திப்போகாமல் விலகியே பல இடங்களில் உள்ளன. குறிப்பாக நாயகப் பாத்திரம் ஏற்ற ஆதியின் நடிப்பு அவரது பாத்திரத்தின் வளர்சிதை மாற்றங்களை உள்வாங்கியதாக இல்லை. தொடக்கம் முதலே ஒரே வார்ப்பிலேயே நடித்துள்ளார். இரண்டாவது காதலி அமுதாவாக நடித்துள்ளவரின் நடிப்பும் பாத்திரத்தை உள்வாங்கிய நடிப்பாக இல்லை. போலீஸ் அதிகாரி இளங்கோவன், அவரது மனைவி யமுனா பாத்திரங்களை ஏற்றுள்ள இசாக், அனுமோள் ஆகியோரின் நடிப்பில் வெளிப்படும் அனுபவத்தையும் உடல் மொழியையும் மற்ற பாத்திரங்களில் பார்க்க முடியவில்லை. யமுனா பாத்திரத்தின் அழுத்தமான வெளிப்பாடும் அளவும் கச்சிதமாக இருக்கிறது. ஆனால் கணவர் இளங்கோவன் பாத்திரம் அவரளவுக்குக் கச்சிதமாக்கப்படவில்லை. அவர்களின் மகன் பாத்திரம் அழுத்தமான ஒன்றாக இல்லாமல் வந்துபோகும் ஒன்றாக இருப்பது கதைப்பின்னலை வலுவற்றதாக ஆக்கியிருக்கின்றன.

சுட்டிக்காட்டப்பட்டவை ஆகப்பெரிய குறைபாடுகள் இல்லை. அவற்றைத் தாண்டிய சிறப்புகள் படத்தில் உள்ளன. தனது படத்திற்கான நிலவெளிக்காட்சிகள் முழுவதையும் நெய்தல் பின்னணியில் அமைத்துக் காட்டியுள்ளதோடு, நெய்தலின் உரிப்பொருளான இரங்கலின் நிமித்தங்களை ஆழமாக விவாதப்படுத்தியுள்ளார் இயக்குநர். சமூகத்தில் நிலவும்   சாதி போன்ற தளைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மனிதர்கள் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரிவுத்துயர்களில் உழல நேர்வதையும், அதனால் உண்டாகும் குற்றவுணர்வுகளில் தவிப்பதையும் உணர்ச்சிகரமான காட்சிகளால் காட்டியிருக்கிறது  காயல். தங்களின் தவறான முடிவால் மகளைப் பறிகொடுத்து விட்டுத் தவிக்கும் தவிப்பை இந்தளவுக்குப் பேசிய சினிமா வேறொன்றைத் தமிழில் காட்டமுடியாது.

படமாக்கலில் மட்டுமல்லாமல், வணிக சினிமாவைப் போலக் காதலையும் அதன் உள்ளோட்டங்களையும் இயக்குநர் தமயந்தி விவாதப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. காதலை ஒற்றைத்தளத்தில் விவாதப்பொருளாக்கி நேர்கோட்டில் கதைசொல்வது வணிக சினிமாவின் முதன்மையான அடையாளம். அந்த அடையாளத்தை மீறாமல் காட்சிகளை உருவாக்கி, பொதுப்புத்தி சார்ந்த விவாதமொன்றைப் பார்வையாளர்களிடம் தோற்றுவித்து, அதன் தொடர் நிகழ்வுகளால் உச்சநிலைக்கு நகர்த்துவது வணிக சினிமாவின் அடையாளங்கள். உச்சநிலைக் காட்சியின் வழியாக முன்வைக்கும் முடிவை இன்பியலாகவோ, துன்பியலாகவோ முடித்துக் காட்டுவது அது கடைப்பிடிக்கும் முழுமைச்சூத்திரம். இம்முழுமைச் சூத்திரத்தில் முதல் வெற்றியைப் பெறும் புதுமுக இயக்குநர்கள், தொடர்ச்சியாக அதே பாணியைப் பின்பற்றிப் படங்களைத் தருவதன் மூலம் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களை மந்தைகளாக மாற்றும் வேலையைச் செய்கிறார்கள்.

பார்வையாளர்களை மந்தையாகக்கணிக்கும் இயக்குநர்களின் படங்களே சினிமா வணிகத்தில் ஈடுபடுபவர்களால் வாங்கப்படுகின்றன. நுகர்வோருக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்படுகின்றன. இந்தப்போக்கிற்கு எதிராகச் செயல்பட நினைக்கும் இயக்குநர்கள் தங்களின் மாற்று முயற்சிகள் வழியாகத் தமிழ்ச் சினிமாவிற்கு மாற்றுப் பார்வையாளத்திரளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். தமிழில் அப்படியான முயற்சியை மேற்கொண்ட இயக்குநர்களின் பட்டியல் ஒன்றிருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ஹரிஹரன் போன்றவர்களை உள்ளடக்கிய அப்பட்டியல் பெரியது இல்லை என்றாலும் அவர்களே தமிழின் மாற்றுச்சினிமாக்களை உருவாக்கியவர்கள். தமயந்தியின் இரண்டு சினிமாக்களும் அந்த முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர்களின் படங்களோடு இணைந்து கொள்ளும் நோக்கம் கொண்டிருக்கின்றன என்ற தன்மையில் தமயந்தியும் அந்தப்பட்டியலில் இடம் பிடிக்கின்றார்.

காதலைக் கொண்டாடும் சினிமாக்களே தமிழில் அதிகம் மணிரத்னத்தின் அலைபாயுதே போல ஒன்றிரண்டு படங்கள் காதலை விசாரணை செய்யும் படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. தமயந்தியின் காயல், தடுக்கப்பட்ட காதலுக்குப் பின்னான விளைவுகளையும் தடுத்தவர்களின் குற்றமனத்தையும் விசாரணை செய்கிறது. அவ்வகையான சினிமாக்களில் இப்படமே முன்னோடிப்படம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்