தூக்கம் தொலைந்த இரவானது

 இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி:
விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார்.
சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்?
சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 !
வந்து சேர்ந்தது சுமார் 7 .
இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ?
கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல.
திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்?
ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி .
கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லை
சரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லை
கரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லை
உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை .
இந்தப் பதிவிற்கு, “ நேரலையில் முகத்தை காட்டும் ஆசையைத் தூண்டிய ஊடகங்களைப் பொறுப்பாக்கி வழக்குப் பதிய வேண்டும்” எனப் பின்னூட்டம் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன்.

வீட்டில் இருக்கும் நாட்களில் மாலை ஆறு மணிக்குச் சன் தொலைக்காட்சியின் செய்திகளோடு உணவுநேரத் தலைப்புச் செய்திகளைப் பார்ப்பதும் கேட்பதும் தவறுவதில்லை. அதல்லாமல் உணவுநேரத் தலைப்புச் செய்திகள் மூன்றும் கேட்கும் பட்டியலில் உண்டு. தமிழ்த்தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதிய தலைமுறையும், சன்செய்திகளும் தவறாமல் கேட்கும் பட்டியலில் இருக்கின்றன. வாரத்தில் சில நாட்கள் கேட்கும் அலைவரிசைகளாகப் பாலிமர், தந்தி, நியூஸ் 18.காலையில் ஒன்பது மணிக்கு முன்பு சாப்பிட உட்கார்ந்தால் ஒன்பது மணித் தலைப்புச் செய்தியைக் கேட்பது வழக்கம். பிற்பகலில் இரண்டு மணி தலைப்புச் செய்தி; இரவு உணவின் போது 8 மணிக்குரிய தலைப்புச் செய்திகள். விஜயின் மதுரை மாநாட்டு நேரலைகளைப் பார்த்தபின்பு, “சனிக்கிழமை” நேரலைகளைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்ததால் நேற்று பகலில் நாமக்கல், கரூர் பயணங்களைப் பார்க்கவில்லை.
பகலெல்லாம் கோவில் திருவிழாக்களை நேரலையாக வருணிக்கும் பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல ‘விஜயின் வருகைக்குக் கட்டியங்கூறிய அலைவரிசைகள், திரும்பவும் நேரலையாக மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்து நடந்த ஒவ்வொன்றும் இரவு முழுவதும் தூக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டன.

கூட்டத்தை நடத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் போய்விட்ட அந்த நடிகன் மீதும், அவனைப் பார்க்கவும் தலைவனாக ஆக்கவும் வந்த கூட்டத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட முட்டாள்களின் கூச்சல்கள். ஆளுங்கட்சியைக் குறைசொல்லித் திசை திருப்பும் வாதங்கள் எனத் தமிழ்நாட்டைப் பைத்தியக்காரர்களின் சிறைச்சாலையாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் என்று தோன்றியது.

அதற்கு இடம் தர முடியாது எனக் காட்டத் தொடங்கினார் தமிழ்நாட்டரசின் முதல்வர். அரசு நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிநார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கரூர் நோக்கிக் கிளம்புகிறார் என்ற செய்திக்குப் பின் எல்லாம் மாறத்தொடங்கின. கரூரின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனைக்குப் போய்விட்டார். இன்னொரு அமைச்சர் அன்பில் மகேஸ் வந்துகொண்டிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை, மருத்துவத்துறை எல்லாம் களம் இறங்கியபின் தொலைக் காட்சிகளின் நேரலைக் காட்சிகளும் த்வனியும் மாறத்தொடங்கியது. கணினித் திரையில் முகநூலும் தொலைக்காட்சியில் நேரலை ஓட்டங்களும் என மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் நள்ளிரவு தாண்டி விட்டது. படுக்கப் போனால் தூக்கம் வரவில்லை
திரும்பவும் தொலைக்காட்சியைத் திறந்தால் சென்னையிலிருந்து காவல்துறையின் உயரதிகாரியின் செய்தியாளர் சந்திப்பு. சொல்ல வந்ததைச் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளை அனுமதித்ததில் கொஞ்சம் பதற்றம். முதல்வர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அவற்றைக் கேட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரவில்லை. திரும்பவும் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களையும் வாசித்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வருகையும் மருத்துவமனையில் இறந்தோர்களுக்குச் செலுத்திய அஞ்சலிக் காட்சிகளும் உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர் பேசிய அந்த உரை பக்குவமான அரசியலின் அடையாளம்.
********
இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம்.
தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல்.

அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது.
தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள்.

அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்பியது மதுரை மண்ணை.

இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள்.

நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.


  • Reply
  • Hide
Hemalatha Ramesh
சரியான பார்வை இக்கட்டுரை.பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,எந்த பொருளாதார,அரசியல் புரிதலற்ற,சினிமா கவர்ச்சி மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு கட்சியாக வளர்ந்து வருகிறது த.வெ.க. ஆபத்தானது

Rasheed Ahmed A
Hemalatha Ramesh இவ்வளவு துயரம் நடந்தபின்னும், சம்பந்தப்பட்ட நபர் ஆறுதல் சொல்ல, நிவாரணப்பணிகள் செய்ய, துக்கத்திலும் கலந்து கொள்ள முடியாத நபரிடம் ஆட்சி சென்றால்?
  • Reply
  • Hide
  • Edited
Top fan
அலெக்ஸ் பரந்தாமன்
Rasheed Ahmed A தமிழக மக்களுக்கு விமோசனம் இல்லை.
  • Reply
  • Hide
தோழர் ரவி
ஆழமான பார்வையோடு விரிவாக அனைத்தையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சிறப்பான பதிவு தோழர்..
சம்பவத்தில் கொடுமையானது ஒன்றுமறியா குழந்தைகள் இறப்பு. எதைப்பற்றியும் கவலையின்றி ரசிக மனப்பாண்மையில் அரசியல் அறியாமையில் உள்ள பெற்றார் செய்த செயலை என்னவென்பது..
90's kids எந்த சமூக பார்வையுமற்று வளர்ந்துள்ளது (பெரும்பாலானவர்கள்) பதற்றத்தை தருகிறது தோழர்.
  • Reply
  • Hide
  • Edited
IMuthiah
பொறுப்புள்ள பதிவு. சிந்தனையைத் தூண்டுகின்ற பதிவு. ஊடகங்களின் சமூக விரோத அரசியலை விரிவாக விவாதிக்க வேண்டும். ஊடகங்களுக்கு எல்லாமே கொண்டாட்டம்தான். வருமானம்தான். முதலாளிகள், சமூப்பொறுப்பற்ற திரைத் துறையினர், சாதி வெறியர்கள், மதத்தின் பெயரால் நாட்டைப் பிளப்பவர்கள், சனநாயக அரசியல் என்ற பெயிரில் செயல்படும் ரவுடிகள், மொள்ளமாறிகள், பொதுச் சொத்தைத் திருடிப் பிழைப்பவர்கள் இவர்களை முட்டுக்கொடுத்துக் கொண்டு காலை நக்கிப் பிழைக்கும் ஊடகங்களை அம்பலப்படுத்தவேண்டும். மக்களை ஆக்கபூர்வமாக அரசியல்படுத்துவதறகுப் பதில் அவர்களைத் திரைப்பட மயக்கத்திலும், சாராய போதையிலும், கார்ப்பரேட் மயப்பட்ட கிரிக்கட் விளையாட்டுகளில் மதிமயங்கச் செய்தலும் என கார்ப்பரேட் ஊடகங்கள் இளைஞர்களைத் திசைதிருப்புகின்றன. சமூகத்தை வலதுசாரித்தனத்தை நோக்கி வேகமாக இயக்கிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பேசுங்கள். பேசுவோம்.
  • Reply
  • Hide
Author
அ. ராமசாமி
IMuthiah பேசிக்கொண்டுதான் இருக்க முடிகிறது


Jeevan
சிறப்பானதொரு பதிவு.
இது போன்ற மரணங்கள் மனதை வேதனையடைய செய்கின்றன.
  • Reply
  • Hide
Marvelnayagam
Sir, இதற்கெல்லாம் மூல வேர் எம். ஜி. ராமச்சந்திரன் என்ற கேடு கெட்ட அரசியல் வாதிதான். அப்போதிருந்தே கொஞ்சமாவது பகுத்தறிவை கற்க ஆரம்பித்த தமிழ் மக்களை பின்னோக்கி இழுக்க ஆரம்பித்தவர் அவர்தான்.
  • Reply
  • Hide
Kumarasami Klr
Marvelnayagam எம்ஜிஆரை குறை சொல்லாதீர்கள் மக்கள் மாற வேண்டும் எந்த திரைப்படத்திலும் எம்ஜிஆர் இளைஞர்கள் சீரழியும் காட்சியை காட்டவில்லை எம்ஜிஆர் ஒரு சகாப்தம் அவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள் எம்ஜிஆர் தன் ரசிகர்களை கெடுக்கவில்லை கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் அவரைப் போய் யாரோடும் ஒப்பிடாதீர்கள் சிறந்த நிர்வாகத்தை ஏழை மக்களுக்காக செய்தவர் எனக்கு 65 வயது ஆகிறது அவருடைய ரசிகனாக இருந்தவன் 2020ல் தேசிய கட்சியான பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்காக பணியாற்றி வருகிறேன் வரலாறு தெரியாமல் பதிவிடாதீர்கள் எதற்கு 10 பேர் லைக் போட்டார்கள் என்று தெரியவில்லை
  • Reply
  • Hide
Dennis Maria Arasarathinam
முக ஸ்டாலினுக்கும் காவல்துறைக்கும் எந்த பொறுப்பும் இல்லை என்பது போல உங்கள் பதிவு இருக்கிறது. ஸ்டாலினும், காவல்துறையும், விஜயும் சேர்ந்து செய்த படுகொலை இது.
  • Reply
  • Hide
Author
அ. ராமசாமி
Dennis Maria Arasarathinam உங்க பக்கத்துல போய் எழுதுங்க
Mohan Mohan
ஏன்டா முண்டம் முழுமையாக விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் டா.
8.45 காலையில் பிரச்சார நேரம் என்று அறிவித்தவன் விஜய் டா... ஆனால் பிரச்சார இடத்திற்கு வந்தது மாலை 7 மணி டா.
மக்கள் பசி தாகமுடன் காத்திருப்பதை அறிய மாட்டானா?
மாஸ் காட்டவே லேட்டாக வந்து நெரிசலை உருவாக்கியவன் விஜய் டா
கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட வேண்டும் டா
  • Reply
  • Hide
Santhanam Ramasamy
Dennis Maria Arasarathinam போடா மெண்டல்...இந்த கூட்டத்தை யார் கூட்டியது
  • Reply
  • Hide
Ramamurthy Bharathi
அருமையான சிந்தனை. தன்னிடம்வெறியர்கள்போல்செயல்படும் இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் எனகாட்டுமாஅரைவேக்காட்டுமுயற்சி. அதற்கு அப்பாவிகள் பலி. நடிகர்பொறுப்பேற்காமல்வித்தாரம்பேசுகிறார். தாய்மாமன் ஒவ்வொருசாவுவீட்டிற்கும்புதுத்துணிஎடுத்துகொடுத்துதலைகட்டவருவார். அதையும் வரவேற்கும் ஆட்டுமந்தைக்கூட்டம்மற்றும் ஊடகங்கள். தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. வடக்கில்சாமிகளுக்காகவும்சாமியார்களுக்கும்கூடிநெரிசலில்சாகிறார்கள் என்றால் இங்கே திரைப்பட நடிகர்களைளக்காண சா கிறார்கள்.
  • Reply
  • Hide
  • Edited
தலைவன் ஏகன்
சர்வதேச அளவில், சாவு பெருகும் போதுதான், அரசியல் அரங்கம் சூடு பிடிக்கிறது.ஆனால் அவை ஒருபோதும் தீர்வு நோக்கியதாக இருப்பதில்லை.
  • Reply
  • Hide
அலெக்ஸ் பரந்தாமன்
தலைவன் ஏகன் எங்கள் நாட்டிற்கும் பொருந்திப்போகிறது தங்கள் கருத்து.
  • Reply
  • Hide
Mihavel A Mihavel
எழுத்தாளர் சரவணன் சந்திரன் கடந்த ஆண்டு பதிவு
  • Reply
  • Hide
Top fan
அலெக்ஸ் பரந்தாமன்
தங்களது பார்வையும் பதிவும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இறந்தவர்களுக்கு அஞ்சலியையும், பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு எங்கள் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  • Reply
  • Hide
Jeeva Nandham R
நல்ல திமுக சொம்பு .
ஸ்டாலின் சாதாரணமாக ஒரு திருமண விழாவுக்கு வந்தாலே குறைந்தது மூவாயிரம் போலிசார் களத்தில் இருப்பார்கள் பின்னனியில் அந்நகரமே உளவுதுறை கட்டுப்பாட்டிலும் ரகசிய போலிசாரின் கட்டுப்பாடில் இருக்கும். இதுபோன்ற ரோட்ஷோ என்றால் 10000 போலிசார் குறையாது.
இவ்வளவுக்கும் திமுக கட்டுங்ேகோப்பான கட்சி அதன் தொண்டர்கள் தக்க உத்தரவின்றி எதையும் செய்ய மாட்டார்கள் என்பது அறிந்ததே .
ஆனால்இங்கு பத்தாயிரம் பேர் கூடவே தகுதியற்ற இடம் என்பது பார்த்தாலே தெரிகிறது நான் நேரிலும் அந்த இடங்களை பார்த்திருக்கிறேன்.
விஜய் போன்ற சற்றும் ஒழுக்கமோ சுய கட்டுபாடோ அற்ற தலைவனை கொண்ட கட்சியில் பெரும்பாலும் அதன் நிர்வாகிகள் அனுபவமற்ற விசிலடிச்சான் குஞ்சுகள்.
அவர்களுக்கு பெரும் கூட்டங்களை தங்கள் தொண்டர்களை கொண்டு நிலமையை சமாளிக்க வேண்டும் என்பதில் சிறிதும் அனுபவமற்ற தான்தோன்றிகள்.
இந்நிலையில் விஜய் வரத்தாமதமானால் காத்திருக்கும் ரசிகர்களுடன் நடிகனை பார்க்கும் ஆர்வத்தில் வரும் ஊர்மக்களையும் பல இடங்களில் தடுப்பு அமைத்து போலிசார் தடுத்திருந்தால் வந்த கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும். இது போலிசாரின் அப்பட்டமான தோல்வியாகும்.
இதனிடையே விஜய் வருவதற்கு முன்பே சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது?
அது உண்மையானல் விஜய் அவ்விடத்துக்கு வந்தது தவறு.
இதனை உணரும் அளவு தவக கூட்டத்தில் யாருக்கும் அறிவு கிடையாது ஆனால் போலிஸ் என்ன செய்தது என்ற கேள்வி
எழுவது இயல்பு .
மொத்தத்தில் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகள் என நினைத்து பயந்துள்ளது ஆளு்ம் கட்சி
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகூலை கடந்தவாரத்தில் விஜய் சந்தித்து கூட்டனி குறித்து பேசியிருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் திமுக கூட்டனியில் இருந்து விலகினால் பைனான்சியலி திமுகவுக்கு பாதிப்பு மறாறும் டெல்லி லாபியில் பாதிப்பு ஏற்படும். எனவே இது விஜய்ககு வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை.
அதற்கு விலை 40 அப்பாவி குழந்தைகள் பெண்கள் உயிர்?
செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்தார் ரகசியமாக ஒரு முறை அதன் பிறகு டெல்லி உச்சநீதிமன்றமே திமுக தடுப்பு அரணாக செயல்படுவதை காண்கிறோம் அவ்வளவு திறமை சூட்சமம் உள்ளது பாலாஜி அன்கோவிடம். என்பதையும் கவனி்க வேண்டும்.
  • Reply
  • Hide
  • Edited
Sivan Push
Biased writing
  • Reply
  • Hide
Santhanam Loganathan
தனக்கென எந்த அனுபவமும் இல்லாமல், தன்னைத் தொங்கிக்கொண்டு அரசியலில் மேலே வரத் துடிக்கும் குட்டித் தலைவர்களை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் நடத்தும் சிறுபிள்ளைத்தனமான அரசியலின் விளைவு இது. இந்தச் சோகம் வெகுநாட்களுக்கு மனதில் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு முத்திரையைக் கட்சி துவங்கிய உடனேயே பதித்த மாபெரும் மடத் தலைவராக விஜய் அறியப்படுவார்.
  • Reply
  • Hide
  • Edited
Tamil Arasan
இந்திய தேர்தலரசியல் கூட்டம்சேர்க்கும் கலாச்சாரத்தின் நீட்சியால் நடந்த கோரவிபத்துதான் இந்த கரூர் அசம்பாவிதம்...
இத்தகைய கூட்டங்களை மக்களுக்கு அசம்பாவிதமில்லாமல்,இடையூரில்லாமல் நடக்க நேர்மையான வழிகாட்டலுடன் திட்டவட்டமான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனநாயக உரிமை பாதிக்கப்படாமல் வகுக்கப்பட வேண்டும்...
இது வெறுமனே அரசியல் பேசிவிட்டு கணந்துவிடக்கூடிய நிகழ்வு அல்ல பெங்களூர் நிகழ்வு, சென்னை வான் கண்காட்சி அசம்பாவிதம் போன்று இங்கே பெரும் மக்கள்திரளைக்கொண்ட இந்தியா போன்ற நாட்டில் கூட்ட நெரிசலைப்பற்றி விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டும்...
அதைவிடுத்து இந்த விஷயத்தில் அரசியல் மட்டுமே பேசுவது பிரச்சனையின் மையத்தை விட்டுவிட்டு தனக்குத்தேவையானதை பேசுவதாகவே அமையும்....
  • Reply
  • Hide
T Mahavishnu
இவர் சேலம் வழியாக நாமக்கல் வந்து இருக்கலாம் தூரம், நேரம் சேமித்துக் இருக்கலாம் . திருச்சியிலிருந்து கரூர் பக்கம் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் வாய்க்கு வந்த படி பேசினால் தன்னை நம்பி வரும் ரசிகர்களை கொன்ற கேடுகெட்ட மனிதர் . வந்தான் கொன்றான்,பாதுகாப்பாக சென்றான்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

தமிழில் பாரம்பரிய அரங்கும் நவீன அரங்கும்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்