ரவிக்குமார் கவிதைகள்


மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவயமான நடப்பைக் குறித்துப் பயன்படும் இச்சொற்கள் ஒருமையாக ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளும், ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறும்போது உருவாக்கும் உணர்வுகளும் ஒன்றுபோலானவை அல்ல. அதேபோல தன்மை, முன்னிலை என்ற இடங்களுக்குரியனவாக நின்று ஒலிக்கும்போது உண்டாக்கும் உணர்வுகளுக்கும் படர்க்கையாக நின்று ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒரு சொல்லைப் புனைவாகவும் கருத்தாகவும் நினைப்பாகவும் அவரவர்களுக்குக் கைவந்த இலக்கியவடிவங்களில் பயன்படுத்துகின்றார்கள். மரணம் அல்லது கொலை அல்லது தற்கொலை என்ற சொற்களின் வழியே ஒரு புனைகதை ஆசிரியன் உருவாக்கும் எண்ணங்களும் உணர்வெழுச்சிகளும் போலவே நாடக உரையாடலில் உருவாக்குவதில்லை. திரளாக அமர்ந்திருக்கும் பார்வையாளர்களின் கண்ணை நோக்கிப் போகும் வசனத்தில் ஒரு மரணம் பற்றி அல்லது தற்கொலை பற்றி அல்லது கொலை பற்றிய சொல்லாட்சி குரலொலியாக மட்டுமில்லாமல், உச்சரிக்கும் நடிப்புக்கலைஞரின் உடல் மொழியோடும் சேர்ந்து பயணிக்கின்றது. அதற்கேற்பப் பார்வையாளர்கள் தூண்டப்படுகின்றார்கள். இந்தச் சொற்கள் ஒருமையாகவும், பன்மையாகவும், ஒருமைப்பன்மையாகவும், பன்மையொருமையாகவும் மாற்றப்பட்டு இலக்கியப்பனுவல்கள் வெவ்வேறுவிதமாக அலைந்துகொண்டிருக்கின்றன.
நமது நிகழ்காலம் ஊடகங்களின் காலம். எல்லாவற்றுக்கும் பின் நவீனத்துவ அர்த்தங்களை உருவாக்கும் வேலையை இந்த ஊடகங்கள் செய்துகொண்டே இருக்கின்றன. அதனால் சொற்களுக்கான அர்த்தங்களை உருவாக்கிய அகராதிகள் பயன்பாடில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் ஒரு கவி எழுதும் சாவு அல்லது மரணம் குறித்த கவிதைகள் எப்படியான அர்த்தங்களை அல்லது உணர்வெழுச்சிகளை உருவாக்கும் என்பதைப் பின்வரும் மூன்று கவிதைகளில் வாசித்துப் பாருங்கள். தலித் இதழில் வந்துள்ள இந்தக் கவிதைகள் தனியறை வாசிப்பிலிருந்து நகர்ந்து திரள் வாசிப்புக்குரியனவாக பரவுகின்றதாக நான் புரிந்துகொண்டேன். நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கின்றீர்கள் என்பதைப் பின்னூட்டத்தில் எழுதலாம். [முழுமையான தலித் இதழை வாங்கி வாசிக்க அலைபேசி எண் பின்னூட்டத்தில் உள்ளது]
1.
இப்போதெல்லாம்
உடனே
கிடைத்துவிடுகிறது மரணச் செய்தி
உயிர் பிரிந்த சில நிமிடங்களில்;
சிலருக்கு, உயிர்
பிரிந்துகொண்டிருக்கும்போது,
இன்னும் சிலருக்கு
மருத்துவமனையில் இருக்கும்போதே
இறந்தகாலமாகிவிட்டது
இழவு சொல்ல ஆள் தேடிய காலம்
‘வாழுக்குப் போகலன்னனாலும் சாவுக்குப்
போகணும்’
பூமர் அங்கிள்களின் புலம்பலாகவும்
இல்லை
துக்கம் விசாரிக்க வருபவர்களும்
அழுதது, புரண்டது,
ஒப்பாரி வைத்தது,
கடைசிவரைக்கும் சென்று
கண்கள் கலங்க
துக்கித்து நின்றது எல்லாமே …
பழைய காலம்
சொல்ல வேண்டியவர்களுக்கு வாட்ஸப்
ஊருக்கு உலகத்துக்கு முகநூல்
ரத்த சொந்தங்க
மொபைல்
ஷேர் செய்வதற்கோ
RIP எனக் கமெண்ட் போடுவதற்கோ
நேரம் கிடையாது
அழுவதுபோல் ஒரு எமோஜி
இது சோஷியல் மீடியா காலம்
இன்று ஒரு பதிவில் விரியும் மரணத்தை
அழித்து விடுகிறது இன்னொரு பதிவு ■
2.
முஸ்லிம்களைக் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
கிறித்தவர்களைக் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
தலித்துகளைக் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
பெண்களைக் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
சிறுமிகளைக்கூடச் சீரழித்துக் கொலைசெய்தார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
புகார் செய்தவர்களைக் கொன்றறார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
சாட்சிகளைக் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
ஒரு நீதிபதியையும் கொன்றார்கள்
நீதி கிடைக்குமென்று
நீதிமன்றத்திடம் ஓடினோம்
இப்போது
நீதியையே கொன்றுவிட்டார்கள்
இனி
எதை நம்பி
எங்கே ஓடுவோம்? ■
3.
கண்மாயில்,
மின்விசிறியிலிருந்து தொங்கும் கயிற்றில்,
ரயில் தண்டவாளங்களுக்கு இடையில்,
இப்போது –
பட்டப்பகலில், நெரியும் ஜனத்திரளின் நடுவில்
செய்தி மதிப்பும் இல்லா மரணங்கள்
எண்ணிக்கையாகவும் மாறாத உயிர்கள்
பெருக்கெடுத்த ரத்தம்
ஆவியாகிறது,
காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாய்
நிலைகொள்கிறது,
சுழன்று புயலாகிறது
சிலர் அதற்குப் பெயரிடுகிறார்கள்
வெண்மணி
கயர்லாஞ்சி
பரமக்குடி
உணா
எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன
ஊரைப் புரட்டப்போகும்
புயலுக்காகக் காத்திருக்கிறது
புறத்தொண்டர் பெருங்கூட்டம்
அதிகார வெப்பத்தில் வலுவிழந்து
மீண்டும் இதயங்களுக்குத்
திரும்புகிறது புயல் சின்னம்
தள்ளிப்போகிறது
பருவமழை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல்: காமம் - பெண் கவிதைகள்

அமெரிக்கன் கல்லூரி: அலையும் நினைவுகள்

பேச்சுமரபும் எழுத்துமரபும்