திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய/திராவிட இயக்கங்கள்

திறந்த நிலைப் பொருளாதாரம்: 

உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் தொடங்கிய காலமாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்படுகிறது. இவற்றை ஏற்றுக்கொண்ட இந்தியா பல தளங்களில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நேருவின் காலத்திய பொருளியல் உற்பத்தி உறவுகள் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லால் குறிக்கப் பட்டது. அரசு தன்னைப் பெருந்தொழில்களில் முதலீடு செய்யும் முதலாளியாக நினைத்துகொண்டு முதலீடு செய்தது. அவை பெரும்பாலும் கனரகத் தொழில்களாக இருந்தன. சிறு மற்றும் குறுந்தொழில்களில் தனியார் துறைக்கு அனுமதிகளை வழங்கியது. அனுமதிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளும் தேக்கநிலையும் இருந்தன.ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரே அனுமதி என்பதைத் தாண்டிப் பல்வேறு கட்டங்களில் அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் செல்ல வேண்டியதிருந்தது.
தொழில் தொடங்குவதையும் உற்பத்தி செய்வதையும் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்படுத்திய அரசாங்க நடைமுறைகள் தேக்கத்திற்கு வழிசெய்வதாக இருந்தது. நிர்வாகம் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், பயன் அடைந்த மக்கள் என அனைவரிடமும் தேக்கம் நிலவுவதாக நம்பப்பட்டது. நடைமுறைகளின் மேல் அதிருப்தியும் நம்பிக்கை இன்மையும் ஏற்பட்ட நிலையில் தோன்றிய மாற்று முயற்சிதான் திறந்த பொருளாதார நடைமுறை.

காங்கிரசின் மனமாற்றம்

திறந்த பொருளாதார நடைமுறைகள் திரு ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றாலும் திரு நரசிம்மராவின் ஆட்சிக் காலத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னணியில் உலக வங்கியில் பணியாற்றிவிட்டு நிதி அமைச்சராக வந்த முனைவர் மன்மோகன் சிங் இருந்தார். பின்னர் அவரே நாட்டின் முதன்மை அமைச்சரானார். உலகமயத்தைப் புரிந்து வைத்திருந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். புரியாத அமைச்சர்களுக்குப் புரியவைக்கும் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கக் கூடும். அந்தப் புரிதலை மாநில முதல்வர்களுக்கும் மாநிலங்களில் ஆட்சியிலிருந்த மாற்றுக் கட்சியினருக்கும் புரியவைக்கும் முயற்சி அவ்வளவு விரைவாக நடந்தன என்று சொல்லமுடியாது.

திறந்த பொருளாதார முறைக்கு முன்பிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார முறையினால் விளைந்த நன்மைகளைவிடத் தீமைகளும் தடைகளும்தான் அதிகம் எனப் பொருளாதார வல்லுநர்களும் புதிய சிந்தனையாளர்களும் எழுதினார்கள்; பேசினார்கள். அதனை மறுத்துப் பேசிய - எழுதிய சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளில் ஒருசாராரும் -குறிப்பாக இடதுசாரிகள்- தங்கள் கருத்துக்களை வலுவாகச் சொல்லி மக்களை நம்பச் செய்ய முடியாமல் தவித்தார்கள்.அந்தப் பின்னணியில் தான் திறந்த நிலைப் பொருளாதாரம், இந்திய அரசின் மையக் கொள்கையாக மாறியது.

அந்த நேரத்தில் உலக அளவில் சோசலிசப் பொருளியல் உறவுகளையும் கட்டுமானங்களையும் கொண்டிருந்த ரஷ்யா, போலந்து, உக்ரைன், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் உலக ஊடகங்களால் விரிவாகப் பேசப்பட்டன. இந்தியாவின் தேசிய ஊடகங்களும் அவற்றை வழிமொழிந்தன. அவை பெரும்பான்மை மக்களைத் திசைமாறச் செய்தன. மனதளவில் இந்தியர்கள் தாராளமயத்தையும் உலக மயத்தையும், பெருமுதலாளிகளை மையமிட்ட உற்பத்தி மற்றும் விநியோக முறைமைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். மாறத் தயாரானார்கள்.

எதிர்க்கட்சிகள்

உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகிப் பரவிக் கொண்டிருந்த திறந்தநிலைப் பொருளாதாரம் இந்தியப் பரப்பில் ஏற்படுத்திய சாதகங்களும் பாதகங்களும் எத்தகையன என்று விவாதங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கின, விவாதங்களும் விமரிசனங்களும் இரண்டு வகையாக இருந்தன. இடதுசாரிகள் உலகமயம் ஆபத்தானது என்ற கோணத்தில் விமரிசனங்கள் வைத்தார்கள். அதைத் தடுக்க நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற சொல்லும் தெம்பும் கட்சிப்பலமும் அவர்களுக்கு இல்லை. இதற்கு மாறாகப் பா.ஜ.க.வினர் உலக மயம், தாராளமயம், தனியார் மயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழல் நடக்கிறது என்று விமரிசித்தார்கள். அத்தோடு இந்தியத் தன்மை பொருளியல் நடவடிக்கைகளின் ஆதரவாளர்கள் போலக் காட்டிக்கொண்டார்கள். . நாங்கள் வந்தால் அந்த ஊழ்ல்கள் நடக்காது என்றார்கள்; இந்தியப் பண்பாடு, இந்தியக் கல்விமுறை, இந்தியச் சிந்தனை முறை போன்றனவற்றைத் திரும்பக் கொண்டு வந்து விடுவோம். அந்நிய அடையாளங்கள் இல்லாமல் ஆக்கப்படும் எனப் பொருளியல் மற்றும் பண்பாட்டுப் பாதைகளைப் பற்றிப் பேசினார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மை மக்களின் ஏற்புடன் நுழைந்த அல்லது நுழைக்கப்பட்ட திறந்த நிலைப் பொருளாதாரம் அதன் சாத்தியங்களைப் பலவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பெருநகரங்களில் முழுமையாகவும், சிறுநகரங்களில் ஒன்றுக்குப் பாதியாகவும் காணலாம். வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் எதாவது ஒரு ரூபத்தில் தனது அடையாளத்தைக் கிராமங்கள் அளவிற்கும் கொண்டு போய்விட்டது உலகமயம். 
அலைபேசிப் பயன்பாடு இல்லாத இந்திய வெளிகள் இல்லை என்பது இன்றை உண்மைகள்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் உரிமங்கள் பெறுவது எளிதாக்கப்பட்டதாலும் தொழிற்பேட்டைகளுக்குப் பதிலாகத் தொழில் பூங்காக்கங்கள் அமைக்கப்பட்டு அரசின் நேரடிக்கவனிப்பில் சலுகைகள் தரப்பட்டு உற்பத்தியும் பங்கீடும் நடக்கின்றன. அவற்றிற்குப் பெறப்பட வேண்டிய வரிவிதிப்பு முறை தேசந் தழுவிய முறையாக ஆக்கப்பட்டிருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரிமுறை (GST) என அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வரிவிதிப்புகள் நடக்கின்றன. இந்நடைமுறைகளுக்குப் பின்னால், சில பிரிவுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அரசின் தேர்வு வாரியங்களும் கூட இன்னும் சில ஆண்டுகளில் தேவையில்லாமல் போய்விடக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்திக் காட்டித்தான் மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தின் பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.


திறந்தநிலைப் பொருளாதாரம் சில புதிய துறைகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்கென உருவாக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. மின்னணுவியல் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான் ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு போன்றன வளர்ந்துள்ளன, தகவல் தொழில் நுட்பம், தொடர்பியல்துறை, நுகர்வோர் வணிகம் ஆகியன ஏராளமான இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதோடு கூடுதலான சம்பளத்தையும் வழங்கி, அவர்களை நுகர்வுப் பண்பாட்டின் பங்காளிகளாகவும் ஆக்கி விட்டது.


இதன் அடுத்த கட்டத்தை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டு விட்டன. மக்களிடம் தங்கள் அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைப் பேசுவதற்காகத் தெருமுனைப் போராட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்த அவை இப்போது வேலை வாய்ப்பு முகாம்களைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதன் மூலம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் திருப்பி விட முடியும் என நம்புகின்றன.


நகரங்களை மையமிட்டுத் தொடங்கப்பட்ட புதுவகைக் கல்வி நிறுவனங்கள் விளிம்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வகைவகையான பாடங்களை அவை அறிமுகப் படுத்துகின்றன. இவையெல்லாம் வியாபார உத்திகளின் நீட்சி எனக் குற்றம் சாட்டப்படும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும் அவை நடக்கின்றன. ‘வழிகளைப் பார்க்க வேண்டாம்; விளைவுகளைப் பாருங்கள்’ என்று சொல்லும் அற மறுப்பு வாதிகளின் பேச்சு என்றாலும் மாற்றங்கள் நடந்துள்ளன. மாற்றங்கள் நடக்கவே இல்லை என்று வாதிட்டால் உண்மையின் பக்கம் இல்லாதவர்கள் என்பதாகி விடும்.

உலகமயமும் பா.ஜ.க.வும்

இந்தியக் காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் மைய, மாநில அரசுகள் இரண்டுமே- பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கி அவற்றை வளர்த்த பின்னர் அவர்களிடமிருந்து வரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிகையோடு திட்டங்கள் தீட்டின; செயல்பட்டன. அந்த நம்பிக்கை ஓரளவு நிறைவேறவே செய்துள்ளது. பெருநகரங்களில் தொடங்கும் நான்கு வழிச் சாலைகளும், அவற்றில் கட்டப்படும் பெரும்பாலங்களும் கிராமங்களுக்கும் போகின்றன. வண்ணத் தொலைக்காட்சிகளை விளிம்பு நிலை மக்களும் பார்க்கவே செய்கின்றனர். புது வகை ஆடைகளையும் கல்வியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளத் தடைகள் எதுவும் இல்லை. ஆனால் எப்படிப் பெறுவார்கள் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது.ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்த இந்த 10 ஆண்டுகளில் சிலவற்றை நடத்திக்காட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெருமுதலாளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக எண்ணிக்கை குறைவான முதலாளிகள் இருந்தால் போதும் என்று பொருளியல் நடவடிக்கைகளை மாற்றியுள்ளது. அதானி, அம்பானி என்ற பெயர்கள் எல்லாவற்றிற்கும் பரிசீலிக்கப்படுகின்ற பெயர்களாக மாறியுள்ளன.

விடுதலைக்குப் பிந்திய 50 ஆண்டுகள் நடந்த வளர்ச்சிகளைக் கடந்த 25 ஆண்டுகளோடு ஒப்பிட்டு அண்மைய வளர்ச்சியே வேகம் கொண்டது என வாதிட முடியும். ஆனால் அந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்ட உள்கட்டுமானங்கள் இல்லாமல் இப்போதைய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மாற்றங்களும் வளர்ச்சியும் உலகமயப் பொருளாதாரத்திற்குப் பின் ஏற்பட்டுள்ளன என்றாலும் அவை எல்லாம் ஓர்மைப்பட்டனவாக இல்லை.ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் ஒன்றாகக் கருதாமல் குறிப்பிட்ட வகை மனிதர்களை மட்டும் மேன்மைப் படுத்தும் ஒரு கொள்கையை ஏற்கமுடியவில்லை என்பதால் அதன் வெளிப்பாடுகள் பாதகமானவை என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட இந்தியாவில் உலகமயம் எல்லா வகையிலும் தோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வலுவான ஒரு காரணம் இருக்கிறது.


உலகம் தழுவிய நோக்கம், அமைப்பு, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு என வளர்த்தெடுக்க வேண்டிய உலகமயப் பொருளாதாரம் இவை எல்லாவற்றிலும் எதிர்த் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அதன் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?


உலக அரசுகளின் ஒரு கிளையாக இந்திய அரசும் இருக்கிறது; எனவே உலகத்தின் சட்ட திட்டங்களுக்கு இந்தியர்களும் கட்டுப்பட வேண்டும் எனப் பேசும் அதே நேரத்தில் நமது அரசு அமைப்பின் கடைக்கோடியான உள்ளாட்சி நிர்வாகங்களும் மாவட்ட நிர்வாகங்களும் எந்தவிதச் சுதந்திரமும் இல்லாமல் தனிநபர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகிக் கொண்டிருப்பது நன்றா? தீதா?


இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாகப் பல கேள்விகளை எழுப்பலாம்


1.இங்கே தோன்றிக் கொண்டிருக்கும் வட்டார ஆதிக்க மனோபாவமும் அதன் தொடர்ச்சியாகப் பழைய சாதிப்பெருமைகளின் வளர்ச்சியும் நன்றா? தீதா? இதற்கும் உலகமயப் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி விட முடியுமா?


2.நவீனத்துவ வரவின் மூலம் விடுதலை அடைந்தவர்களாகக் கருதிய பெண்கள், ஒடுக்கப்பட்ட குழுவினர், இடம் சார்ந்த சிறுபான்மைக்குழுவினர் தங்கள் விடுதலை உணர்வைத் தொலைத்து விட்டு அச்ச உணர்வில் வாழ நேர்ந்துள்ளதற்கும் உலகமயத்திற்கும் தொடர்பு இல்லையா?


3. அரசியல் தளத்தில் புதுவகைப் பண்பாடு எதுவும் நுழைந்து விடாமல் தடுக்கும் வாய்ப்பே உலகமயப் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னும் தொடரும் என்றால் எதற்காக அதனை நாம் வரவேற்க வேண்டும்?


4, கல்வி, வேலைவாய்ப்பு, தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்ளத் தேவையான அடையாளங்களை உருவாக்குதல் போன்றவற்றை மறுப்பதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புவதாக மாறிப் போனால் உலகமயத்தின் பின் விளைவுகள் எத்தகைய ஆபத்தைச் சந்திக்கும் என்பதை உணரவேண்டியது அவசியமில்லையா?

உலகமயமும் திராவிட அரசியலும்

பல கேள்விகளை எழுப்பி நம் காலத்தை விசாரிக்கும் போது நன்மையும் தீமையும் எதுவெனப் புரியவரலாம். இங்கு நடக்கும் அரசியல் தேர்தல் அரசியல்போலத் தோன்றினாலும் உள்ளே ஓடுவதென்னவோ கருத்தியல் அரசியல்தான்.அரசியல் கருத்துகளே தேர்தல் அரசியலின் காரணிகள்.தேசிய அரசியலும் திராவிட அரசியலும் எதிரெதிர் நிலைபாடுகள் கொண்ட அரசியல் பார்வைகள் என்றபோதிலும் அதிகாரம் எதிரிகளைக் கூட்டணிக்கட்சிகளாக ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றிவிடுகிறது. நவீனத்துவ அரசியலிலிருந்து பின்நவீன அரசியலாக மாறியதின் அடையாளங்கள் இவை.

சாதி என்பது உருவாக்கப்பட்ட ’கருத்து’ என்பதைச் சொல்லிக்கொண்டே அதனை ”இருப்பாக”க் கருதிச் செயல்படுவதில் திராவிட அரசியல் தேர்ச்சி பெற்றுள்ளது. சென்னை ராஜதானி உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது இந்தத் திராவிட அரசியல். அதன் பகுதிகளாக இருந்து மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்குப்பின் தனிமாநிலங்களாக மாறிவிட்ட தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட ஆந்திரம் என ஒவ்வொன்றிலும் நடப்பது திராவிட அரசியலின் பரிமாணங்களே.

திராவிட அரசியலைப் புரிந்துகொள்வதென்பது மிகவும் பிற்படுத்தப் பட்டோரையும் உள்ளடக்கிய இடைநிலைச் சாதிகளின் மோதலையும் விட்டுக் கொடுத்தலையும் புரிந்துகொள்வதாகும். மனுஸ்மிருதியின் அடிப்படையிலான வகைப்பாட்டில் சத்திரிய, வைசிய சாதிகளாகக் கருதப்படும் இடைநிலைச் சாதிகள் அரசியலதிகாரத்தின் வழி பொருளியல் மேலாண்மையைப்பெற நடத்தும் போராட்டங்களில் அந்தந்தச் சாதிகளில் இருக்கும் ஏழைகளின் துயரத்தைப் பணயம் வைக்கின்றன.

தொடக்கத்தில் தங்களுக்கு மேலே இருப்பதாகப் பிராமணர்களைக்காட்டிக் கிண்டலும் கேலியும் பேசி அரசியல் செய்தன. இடைநிலைச்சாதிகளின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டபின் தங்களுக்குக்கீழே இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னச்சின்ன வளர்ச்சியை/ மேம்பட்ட வாழ்க்கையை முன்வைத்து வன்மத்தைத் தூண்டிவருகின்றன.

கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்றவற்றில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகள் எதிரெதிர் கட்சிகளில் தங்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்துகொள்வதைப்போலத் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இதன் நிலைமை மாறானது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளின் அரசியல் தலைமையை எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பொருளியல் வலிமையைக் கைப்பற்றிக்கொள்கின்றன பெரும்பான்மை எண்ணிக்கைச் சாதிகள்.
சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் பொருளியல் வலிமைபெற்ற சாதிகளின் தேர்தல் இயக்கத்தைச் சமாளிப்பதற்கு இப்போதிருக்கும் தேர்தல் சட்டவிதிகள் போதுமானவையல்ல என்பதைமட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்