தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-


சினிமாவை எப்போதும் பொழுதுபோக்காகவே நாம் நம்புகிறோம்; நினைக்கிறோம். அதனைக் கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படை நூல்கள் உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்ட நூல்களும் தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லை. ஒரு ஆளுமையின் ஆக்கமுறைமைகளைக் கல்வி அடிப்படையிலான அறியும் நூல்கள் இல்லை. தமிழ்/இந்திய அசைவுகளிலிருந்து நடிப்பு முறைமைகளை - நடிப்புக்கலைக்கூறுகளைக் கற்கும் பயிற்சி நூல்கள் நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகள் அதனை நோக்கிய சில சுட்டிக்காட்டல்கள் மட்டுமே

நடப்பியல் சினிமாக்காரர் மகேந்திரன்:

தமிழ்ச்சினிமாவின் இயக்குநர்களில் நடப்பியல் சினிமாவுக்கான முன்மாதிரியாகப் பலரும் பீம்சிங்கைச் சொல்வதுண்டு. சிவாஜி கணேசன் நடித்த பா- வரிசைப்படங்கள் நடப்பியல் கூறுகளோடு இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. நான் தொடர்ந்து சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு வந்த இயக்குநர்களில் மகேந்திரனைக் கவனமாக நடப்பியல் சினிமாவைத் தேர்வு செய்து வெளிப்பட்டவர் எனக் கணித்திருந்தேன். ஒருமுறை அவரை அருகிருந்து பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்கிடைத்தபோது, அந்தக் கணிப்பு உறுதியானது.

அவர் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். நான் அப்போது படித்துக் கொண்டிருந்த மாணவன். 40 ஆண்டுகளுக்கு முன்பு .. கல்லூரிக்குள் நுழைந்து நேராக வந்தால் இடது பக்கம் இருக்கும்.சிவாஜி கணேசன் திறந்து வைத்த கலையரங்கத்தில் தொடங்கி டேனியல் போர் நூலகம் தாண்டி, மணிக்கூண்டு முன்னால் நின்று பழைய நினைவுகளுக்குள் நுழைந்தார். விடுதிகளுக்கு முன்னால் செல்லும் சாலையில் திரும்பி பிங்காம்டன் ஹால் முற்றமேடைக்கு வந்து மெயின் ஹால் அரங்கில் நுழைந்தார். கல்லூரி வளாகத்தில் அங்கங்கே நின்று பேசிக்கொண்டே போனார். நானும் உடன் போய்க் கொண்டே இருந்தேன். அவர் காலத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லி இப்போதும் அதுபோல் நடக்கிறதா? என்று கேட்டார். எங்கள் ஆசிரியர் ஒருவர் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டே போனார். ஆங்கில இலக்கியம் படித்த அவர் அப்போதே நடக்கும் நாடகங்கள் பற்றியும் பிலிம் கிளப் பற்றியும் பேசினார். அங்கு கற்றுக்கொண்ட இலக்கியப்பார்வையே பின்னர் சினிமாவை நோக்கி நகர்த்தியதாகவும் சொன்னார்.
ஆங்கில இலக்கியத்தில் கற்றுத்தரப்படும் நாடகங்களும் நாடகங்கள் குறித்த அடிப்படை அறிவும் எதனையும் காட்சிகளாகவும் அங்கங்களாகவும் பிரித்துப் பார்க்கும் அறிவையும், ஒவ்வொன்றிலும் உணர்வு ததும்பும் உரையாடல்களால் நிரப்ப வேண்டியது குறித்தும் இலக்கியத்தையும் சினிமாவையும் இணைத்து இணைத்துச் சொன்னார்.
அந்த உரையை நிகழ்த்தும்போதே அவருடைய முக்கியமான சினிமாவாக்களான முள்ளும் மலரும், உதிரிப்பூக்களும் வந்திருந்தன.அதற்கும் முன்னால் தங்கப்பதக்கம், வாழ்வு என் பக்கம், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற படங்களின் திரைக்கதை வசனகர்த்தா. அதற்கும் முன்பு ஒரு டஜன் படங்களுக்குக் கதை எழுதிய கதாசிரியர். என்றாலும் முள்ளும் மலரும் தான் அவரை புதிய அலை சினிமாக்காரராகக் காட்டியது. அண்ணன் - தங்கை பாசம் என்னும் குடும்ப உறவுக்கதைக்குத் தமிழில் எப்போதும் பெரிய இடமுண்டு என்றாலும் முள்ளும் மலரும் அதையும் தாண்டிக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நடிப்பால் நிரப்பும் நடிகைகளையும் நடிகர்களையும் முன் வைத்தது. ரஜினிகாந்த், ஷோபா, ஜெயலட்சுமி (படாபட்) சரத்பாபு என ஒவ்வொருவரிடமும் நடிப்பைக் கொண்டுவரச்செய்தார். நடப்பியல் நடப்புக்கு மாற முடியாத ரஜினிகாந்தைக் கோபக்கார அண்ணனாக வார்த்துக் காட்டினார்.

முள்ளும் மலருக்குப் பிறகு நடிப்புப்பாடம் நடத்தும் இயக்குநராக மாறி ஒவ்வொருவரையும் திறமையான நடிகைகளாகவும் நடிகர்களாகவும் மாற்றினார். ரஜினியைப் பாசமும் கோபமும் கொண்ட அண்ணனாக மாற்றி நடிக்க வைத்தார் மகேந்திரன். பாரதிராஜாவின் படங்களிலும் பாலுச்சந்தரின் படங்களிலும் அழகுப் பொம்மைகளாகவும் சிலவகையான முகந்திருப்புதலுக்கும் பழக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, ராதிகா, ரேவதி, சுகாசினி, தீபா போன்றவர்கள் மகேந்திரனிடம் நடிக்கக் கற்றுக்கொண்டார்கள். மெட்டியில் விஜயகுமாரி, உதிரிப்பூக்களில் அஸ்வினி போன்ற நடிகைகளின் நடிப்பைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியும்.

அவர் இயக்கிய எல்லாப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.கதை, வசனம், நடிப்பு எனப் பல நிலைகளில் சினிமாவில் அவரது பங்களிப்பு உண்டு. என்றாலும் அவரது இயக்கத்தில் வந்த ஒவ்வொரு படங்களும் - முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, அழகிய கண்ணே, கைகொடுக்கும் கை, ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் - வணிக சினிமா என்னும் ஒற்றைப் பரிமாணத்தைக் கலைத்துப் போட்ட நவீனத்துவ சினிமாக்கள். கதைசொல்லிய முறை, காட்சித்துண்டுகள், அவற்றிற்கான இடப்பின்னணிகள், பின்னணி இசை, தேவையான இடங்களில் மட்டுமே பாடல்கள் என ஒவ்வொன்றையும் கவனத்துடன் செய்தவர். படப்பிடிப்புக்குப் போவதற்கு முன்பு எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு - இயக்குநர் படியைத் தயாரித்துக் கொண்டு படப்பிடிப்புக்குச் செல்வதாகப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்போதும் நல்ல நடிப்பைத் தரவிரும்பும் ஒரு நடிகையோ, நடிகரோ மகேந்திரனின் பாத்திர உருவாக்கத்தையும் அதற்குரிய நடிகைகள் தேர்வையும் அவர்களிடம் அவர் வாங்கியிருக்கக் கூடிய வேலையையும் கவனித்துக் கற்றுக்கொள்ள முடியும். புதுச்சேரியில் நடிப்புக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த காலத்தில் இதனை மாணாக்கர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

இலங்கைப் பயணத்தின்போது கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு இருந்த இடத்தை நண்பர் கவி. கருணாகரன் காட்டினார். தமிழ்நாட்டிலிருந்து அங்குபோன சினிமாக்காரர்களான பாரதிராஜா, தங்கர்பச்சான், மகேந்திரன் போன்றவர்களில் மகேந்திரன் மட்டுமே பயன்படும் வகையில் கற்றுக்கொடுத்ததாகச் சொன்னார். அதற்குக் காரணம் அவரது தொடர்ச்சியான வாசிப்பே. போர்க்காலத்துக் கதைகளை வாசித்து அவற்றைத் திரைக்கதையாக்குவதும், இயக்குநரின் பார்வைக்கோணத்தையும் சமூகப் பொறுப்பையும் எவ்வாறு கொண்டுவர முடியும் என்பதையும் கற்பித்திருக்கிறார். சினிமாவை முழுமையாக தொழில்நுட்பமாக மட்டும் பார்க்காமல் கலையாகவும் சமூகத்திற்குத் தேவையான பார்வையை முன்வைக்கும் திரள் மக்கள் ஊடகமாகவும் அவர் அறிந்து வைத்திருந்தார். அவர்தான் புதுமைப்பித்தன், உமாசந்திரன், பொன்னீலன் எனத் தமிழின் நவீன எழுத்தாளர்களைச் சினிமாவிற்குள் அறியச் செய்தவர்.

நடிப்பு முறைமையின் உடலியக்கம்

உயிர் - இயந்திரவியல் (bio-mechanism) என்னும் அறிவுத்துறையின் கூறுகள் மனித உடலின் இயக்கங்களைப் பற்றிப் பேசும் ஓர் அறிவுத்துறை. அதன் கூறுகளை விளையாட்டு, நடிப்பு, சண்டைப் பயிற்சி போன்ற உடலைப் பயன்படுத்தும் துறைகளில் இயங்குபவர்கள் கற்றுத்தேர்ந்துபயன்படுத்துவ துண்டு. மனித மனித உடலாக மட்டுமே பாவித்து இயங்குபவர்கள் அதனைக் கொண்டு நடப்பியல் பாணி நடிப்பைத் தருவார்கள். இதற்குமாறாக நடப்பியல் பாணியைத் தவிர்க்க நினைத்துக் கூடுதல் அசைவுகளைக் கொண்டு வருவதற்காக விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன போன்றவற்றின் அசைவுகள், திரும்புதல் போன்றவற்றை கவனித்து அதனை உள்வாங்கிய அசைவுகளையும் பாவனைகளையும் வெளிப்படுத்துவார்கள்.
இந்நடிப்பு முறையின் இயல்புகளை விளக்கிக் கோட்பாட்டாக முன்மொழிந்தவர் ரஷ்ய நாட்டு நாடகக்காரர் மேயர்கோல்டு(Vsevolod Meyerhold) .

 உயிர் - எந்திரவியல் நடிப்பு (Bio- Mechanical Acting) முறையைத் திரைப்படத்தில் கொண்டுவந்து புகழ்பெற்றவர் ப்ரூஸ்லீ. அவரது அசைவுகள் பெரும்பாலும் படமெடுத்து நிற்கும் நல்லபாம்பின் அசைவுகளை நினைவூட்டும். தமிழில் சில படங்களின் காட்சி அமைப்புகளில் மிருகங்களின் சந்திப்பை நினைவூட்டும் காட்சி அமைப்புகள் உண்டு. எம்ஜிராமச்சந்திரனும் நம்பியாரும் சண்டைக் காட்சிகளில் ஈடுபடும்போது அவர்களின் முகங்களின் உணர்வுநிலை மிருகங்களின் உணர்வுநிலையை நினைவுபடுத்தியதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். குருதிப் புனல் படத்தில் சிறைக்குள் நடிகர்கள் கமல்ஹாசனும் நாசரும் பேசும் உரையாடல் நகர்வுகள் ஒரு மேசையைச் சுற்றி நடக்கும். நடுவில் இருக்கும் இரையை எடுப்பதற்கு எடுத்துக்கொள்ள முயலும் சிங்கமும் புலியும் போல நகர்வார்கள்.

ரஜினிகாந்த் முழுவதுமாகத் தொடக்கம் முதலே நடப்பியல் பாணியைவிடவும் ஒருவிதக் கூடுதல் அபிநயத்தன்மையுடன் அசைவுகளைக் கொண்டுவர முயன்றவர். சிகரெட்டை வாய்க்கு அனுப்பும் வேகம் தொடங்கி, நடத்தல், படியேறி இறங்குதல், பார்த்தல், திரும்புதல் என ஒவ்வொன்றிலும், மனித உடலின் அசைவுக்குள் மிருகங்களின் வேகத்தைத் திணித்துப் பார்வையாளர்களைத் திணறடிப்பார். அதேபோலச் சில படங்களில் பாடல்காட்சிகளில் பறவைகளின் அசைவுகளை உள்வாங்கி நகர்வார். இதைத் தாண்டிய இந்திய அரங்கியலின் நடிப்புப் பாணிகள் எதற்கும் அவரது உடல் ஒத்துழைத்ததைப் பார்க்கமுடியாது. செவ்வியல் அரங்கியலும் நாட்டார் அரங்கியலும் பின்பற்றும் நடிப்புமுறைக்கு மாறான உயிர்- எந்திரவியல் நடிப்புப்பாணியைக் கற்றுத்தேர்ந்து வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதற்கான பாத்திரங்களையே அவருக்கு இயக்குநர்கள் உருவாக்குகிறார்கள். இதைத் தாண்டிய மாறுபட்ட நடிப்பாக எதையும் அவர் தரவில்லை.

இரா, பிரபாகரின் இரண்டு நூல்கள்


அமெரிக்கன் கல்லூரியிலிருந்து தமிழ் இலக்கியத்துறைக்கும் கலைத்துறைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் பட்டியல் நீண்ட ஒன்று. கல்லூரியின் வரலாற்றை எழுதும் ஒருவர் அதைத் தனியாகப் பட்டியலிட்டுக் காட்டுவார்கள். அந்தப் பட்டியலை உருவாக்கும்போது கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் உருவாக்கிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் தனியே எழுதவும் செய்தார்கள். எனது அறிதலுக்கு முன்பு இருந்த ஆசிரியர்கள் பற்றிச் சொல்ல முறையான தகவல்கள் என்னிடம் இல்லை.ஆனால் எனது மாணவப்பருவத்தில் அங்கே நடந்த கலை,இலக்கிய நிகழ்வுகளின் பின்னணியில் இருந்த பேரா.சாமுவேல் சுதானந்தாவின் ஆளுமைத் திறனைப் பற்றிச் சொல்ல முடியும். அவரால் அடையாளம் காணப்பட்டு வாய்ப்புகளை உண்டாக்கி மாணவப்பருவத்தில் நடக்கும் போட்டிகளில் பரிசுபெற்றவர்களாகவும், பின்னர் கலை, இலக்கியத்துறையில் வெற்றிபெற்றவர்களாகவும் பலர் இருந்திருக்கிறார்கள். அவரது சிறப்பே ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம், அந்த ஆர்வத்திற்கான வாய்ப்பை உண்டாக்குவது எப்படி எனக் கணிப்பதுதான். அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். தமிழ்த்துறையின் ஆசிரியராகவும், மாணவர் நாட்டுத்தொண்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அவரால் அடையாளங்காணப்பட்ட பலர் அவரைக் குறித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள்.

பேரா.சாமுவேல் சுதானந்தாவுக்குப் பின் அப்படியொரு இடத்தை அமெரிக்கன் கல்லூரியில் உருவாக்கி மாணவர்களை வளர்த்தெடுத்தவர் இரா.பிரபாகர் வேதமாணிக்கம். அவரால் தமிழ் நாடகத்திற்குள்ளும் சினிமாவுக்குள்ளும் தள்ளிவிடப்பட்ட மாணாக்கர்கள் பட்டியல் நீண்டது. இந்திய அளவிலும் உலக அளவிலும் பயணித்த அவர்கள் இப்போதும் அவரோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவரது நூல்களில் இரண்டு தமிழ்ச்சினிமாவோடு தொடர்புடையவை. கவனித்து வாசிக்கப்பட வேண்டியவை.

சினிமா ஓர் அறிமுகம்: அடிப்படைப் பாடநூல்
பள்ளிக்கல்வியில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணார்க்கர்களின் விருப்பம் இன்னும் இருக்கிறது. அதனால் அடிப்படை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மொழிமாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் பட்டப்படிப்பு, உயர்பட்டப்படிப்பு, ஆய்வுப்படிப்புகளில் தேவை உணரப்படவில்லை. ஆங்கிலவழி என நுழைந்து தமிழும் ஆங்கிலமும் கலந்து தேர்வுகள் எழுதி வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வகையான அறிதலும் வெளிப்பாடும் இரண்டாங்கெட்டான் தன்மையிலானது. பாடங்களிலும் தெளிவில்லாமல், கற்ற மொழிவழியான வெளிப்பாட்டிலும் புலமையில்லாமல் போய்விடும். கடந்த அரைநூற்றாண்டுக் கல்வியில் இதுதான் நடந்தது.

தமிழால் எல்லாம் முடியும் என்ற சத்தம் தோன்றி ஒரு நூற்றாண்டைத் தாண்டி விட்டது. இந்தச் சத்தம் வெறும் சத்தம்தான்.அடிப்படை அறிவியல் துறைகளின் பாடங்களைத் தமிழில் கற்பிக்கப்பாட நூல்கள் தமிழில் இல்லை.அண்மையில் நடந்த பாடத்திட்ட மாற்றங்களில் முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பாடங்களைப் பின்னர் தமிழுக்கு மொழிமாற்றம் செய்தார்கள். அவ்வாறான மொழிமாற்றப் புத்தகங்கள் மாணவர்களுக்கு உண்டாக்கும் நெருடல்கள் குறித்துப் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதற்குப் பதிலாக நேரடியாகத் தமிழில் எழுதித் தரும் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

நண்பர் இரா.பிரபாகர் எழுதியுள்ள “சினிமா ஓர் அறிமுகம் “ என்னும் நூல் திரைப்படக்கலையின் அடிப்படைகளையும் தொழில் நுட்பப் பகுதிகளையும் விரிவாக முன்வைத்துள்ளது. சினிமாவைப் பாடமாக்க விரும்பும் ஒரு கல்வி நிறுவனம் தயங்காமல் இதனை மட்டுமே பாடநூலாக்கலாம். பார்வை நூல்களுக்குத் தமிழில் ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன.

இப்போது வெளிவர உள்ள 12 ஆம் வகுப்புச் சிறப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 6 அலகுகளில் ஒரு அலகாகச் சினிமாவைச் சேர்த்துள்ளோம். ஆசிரியர் குழு எனது ஒருங்கிணைப்பில் அப்பாடங்களை எழுதியது. இந்த நூல் முன்பே வந்திருந்தால் அதன் முன்பகுதியான அடிப்படைகளை அப்படியே சேர்த்திருக்கலாம். இப்போது இந்த நூல் சினிமாவைப் பட்டப்படிப்பில் தனியொரு தாளாக வைக்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கி யிருக்கிறது. இதுபோன்ற அடிப்படை நூல்கள் நிகழ்த்துக்கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் எழுதப்படவேண்டும். இன்னும் சொல்வதானால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றுக்குமே எழுதப்பட வேண்டும்.

தமிழியல் ஆய்வு:
தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன. அந்த விரிவைத் தரம்/ தரமின்மை என்ற அளவுகோலைக் கொண்டு ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் விரிவும் பரப்பும் என்ற நிலையில் தமிழ்த்துறைகளைப் போல வரலாற்றுத்துறையோ, சமூகவியல் துறையோ, நிலவியல் துறையோ, பொருளியல் துறையோ விரிவுகளைக் கண்டதில்லை.

காலனிய காலத்துத் தமிழ்த்துறைகள் இலக்கியம், இலக்கணம் என்ற இருவேறு பிரிவுகளும் வேறுவேறு சட்டகங்கள் கொண்டவை என்பதைக் கூட வேறுபடுத்திப் பார்க்கும் வகையறியாது ஒரே துறையாக - தமிழ்த்துறையாக இருந்தன. ஆனால் பின் காலனியத்தின் தொடக்கநிலையிலேயே தமிழியல் துறைகள் - தமிழியல் புலங்களாக மாறி பலதளங்களில் பயணித்து மொழியியல், நாட்டாரியல், மானிடவியல், நிலவியல், தொல்லியல், மருந்தியல், இனவரைவியல், தொடர்பியல், காட்சி ஊடகவியல் எனப் பலவற்றோடு உறவும் முரணும் கொண்டவைகளாக மாறியிருக்கின்றன. இன்று இந்தத் துறைகளெல்லாம் தனித்த துறைகளாக அறியப்பட்டாலும் அத்துறைகளின் தொடக்க ஆய்வுகளைச் செய்தவர்கள் தமிழ் படித்துவிட்டு தமிழியல் துறையில் ஆய்வுகளைச் செய்தவர்களே என்பதை மறுக்க முடியாது.
 
இலக்கியவகைப்பாட்டிற்குள்ளேயே கவிதையியல், கதையியல்.நாடகவியல், திறனாய்வியல் எனப் பிரிந்து பலநிலை வளர்ச்சியை அடைந்ததோடு இலக்கணவியல் மொழியியலின் அறிவியல் பார்வையை உள்வாங்கிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.இவ்விரு பிரிவும் மக்களின் அதன் இயல்பிலேயே மக்கள் திரளோடும் , அதன் வாழ்நிலையோடும் உறவும் முரணும் கொண்டு நகர்பவை என்பதால் அதனோடு தொடர்புடைய துறைகளான பண்பாட்டியல், நாட்டாரியல்,மக்கள் தொடர்பியல் ஆகியனவற்றை நாடிச்சென்று தமிழியல் புலத்தை விரிவாக்கிக் கொண்டன. அந்த விரிவாக்கம் ஒவ்வொன்றின் உட்கூறுகளையும் தேடிச்சென்று ஒருங்கிணைந்த கல்விப்புலமாகவும் தனித்துவமான புலங்களாகவும் கருதி வளர்ந்துள்ளன.தகவல் தொடர்பியல் வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்தில் ஒவ்வொரு கலைகளும் வெகுமக்கள் மற்றும் திரள் மக்கள் நோக்கில் ஆய்வு செய்யவேண்டிய நெருக்கடியைச் சந்திக்கின்றன.
 
அந்த நெருக்கடி ஒவ்வொரு ஆய்வையும் தனித்த ஆய்வாகச் செய்யாமல் இலக்கியவியலின் அடிப்படைகளை உள்வாங்கிய பிறதுறை அறிவுத் தளங்களை இணைத்த முறையியலைக் கோருகின்றன.அம்முறையியல் பல முறையியலைக் கைவிடாது புதிய முறையியலைக் கைக்கொள்ளும் நெளிவுசுழிவுகளைக் கொண்டவை. அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் இரா.பிரபாகர் செய்துள்ள “தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்” என்னும் தலைப்பில் செய்துள்ள ஆய்வை வாசிக்கும்போது இதனை உணரலாம்.
முனைவர் பட்ட ஆய்வேட்டின் இயல்புக்கேற்ப,
1.வெகுசனப்பண்பாடும் வெகுசன இசையும்
2.வெகுசன இசையும் தொழில் நுட்பமும்
3.தமிழ் வெகுசன இசையும் கேட்போரின் பண்பாட்டு எதிர்வினையும்
4.இளையராஜா: காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய கலைஞன்
5.உலகமயமாதலும் தமிழ் வெகுசன இசையும்: ஏ.ஆர்.ரஹ்மானை முன்வைத்து
எனத் தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள இயல்களுக்குள் தமிழ்நாட்டு மக்கள் திரளுக்குள் சினிமா இசையின் கூறுகளான சொற்களும் ஒலிக்கலவைகளும் ஒலியின்மையான அமைதியும் இணைந்து உருவாக்கப்படும் வினைகள் பற்றிய பேச்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வினைகளின்போது கிடைக்கும் அர்த்தமற்ற மனக்கோடுகளும் அர்த்தங்களாக உள்வாங்கப்படும்
காட்சிப்படிமங்களும் தனிமனிதத் தன்னிலைகளைக் குழுவின் பகுதியாகவும் இணைப்பாகவும் ஆக்கும் வேதிவினையைக் குறித்த சொல்லாடல்களை முன்வைத்து ள்ளது.நிதானமாக வாசிப்பதோடு தமிழ்ச் சமூகத்தில் அவை உருவாக்கும்/ உருவாக்கிய சம்பவங்களோடு அசைபோடும்போது உங்களின் புரிதலின் தளங்கள் விரிவாகும்.

இப்படியொரு ஆய்வைத் தமிழியல் புலத்திற்குள் சாத்தியமாக்கியுள்ள பேரா. பிரபாகர் தனது மாணவப்பருவத்திலிருந்தே ஒரு பாடகராக- இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞராக - ஒலிக்கோர்வைகளை உருவாக்கிய இசையமைப்பாளராகச் செயல்பட்டவர் என்பதை நான் அறிவேன். இப்படித்தான் தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாகப் பரப்பை விரித்தது. அவரது ஆய்வேடு வாசிக்கும் மொழிநடையில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்