இடுகைகள்

தமிழ்கற்பிக்க ஒருகனவுநிறுவனம்.

படம்
வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையிலிருந்து திரும்பி வந்து ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. 2011 அக்டோபரில் போலந்தில் இந்தியவியல் துறை தொடங்கப்பெற்ற 80 -வது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. அதிலும் கலந்து கொண்டேன். நான் திரும்புவதற்கு மூன்று மாதம் முன்பு 2013- ஆம் ஆண்டு ஏப்ரலில் தமிழ்ப் பிரிவுக்கான 40 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பெற்றது. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல இந்தியவியல் துறைகள் உலகநாடுகள் பலவற்றில் இயங்குகின்றன.

போய்த் திரும்பும் பறவைகள் -ஜெயந்திசங்கரின் கதைகள்

படம்
  ஒரு படைப்பாளியின் கதைகளை அவ்வப்போது வாசிக்கும்போது வாசிப்பவரிடம் உருவாகும் நினைப்புகள் ஒருவிதமானவை. நிதானமாக வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் வெளிகளுக்குள் வாசகரை அழைத்துச் சென்று கதைக்குள் உருவாக்கப் பெற்ற மனிதர்களின் வினைகளையும் அவ்வினைகளுக்கான காரணங்களையும் முன்வைக்க முயல்வது முதன்மைச் செயல்பாடாக இருக்கும். அப்படி முன் வைக்கும் காரணங்களாகக் கதாபாத்திரங்கள் வாழ நேர்ந்த சமூகச்சூழலும் அதை எழுதியவரின் காலச்சூழலும் இருக்க முயல்கின்றன. அந்த நேரத்தில், கதாசிரியன் உருவாக்கும் வெளி, பாத்திரங்கள், அவைகளின் வினைகள், அவை நிகழ்வதற்கான காரணிகள் என்ற எல்லைகளைத் தாண்டி வாசகமனம் செல்வதில்லை. ஜெயந்தி சங்கரின் பல கதைகளை நான் அப்படித்தான் வாசித்து முடித்திருந்தேன். அத்தகைய வாசிப்புகளின் போதெல்லாம் அவரால் உருவாக்கிய பாத்திரங்களே என்னோடு நெருக்கமாக நின்று என்னோடு பேசினார்கள்; தங்களை முன் வைத்தார்கள்; தங்களின் செயல்பாடுகளுக்கான காரணகாரியங்களைச் சொல்லப்பார்த்தார்கள். அப்படிச் சொல்லியபோதே இவர்களெல்லாம் என்னருகில் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தேன்.

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

படம்
காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு. படிக்கப்படாமல் போய்விடுவதற்கு எனது நேரமின்மை மட்டுமே காரணமாகி விடாது. செய்திக் கட்டுரையை எழுதியவரின் ஈர்ப்பும் ஒரு காரணம். சமஸின் யாருடைய எலிகள் நாம் தொகுப்பில் இருக்கும் பல கட்டுரைகள் எனது மாலைநேர வாசிப்பில் வாசித்தவை என்பது திரும்பவும் படிக்கும்போது தோன்றுகின்றது.

பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

காலில் ஒட்டாத கரிசல் மண்

படம்
வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது.