இந்த முறை டெல்லியில்..

தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும்

கடந்த ஆண்டு முன்னோக்கிப் போன மனநிலையைத் திரும்பவும் பழைமைக்குள் திருப்பிவிட்டது ஆட்சி மாற்றம். இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதைவிடவும் தீபாவளிக்குரிய சடங்கான வெடி வெடிப்பதும் வானவேடிக்கைகளும் முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு நடந்த மாற்றங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. திரும்பவும் வெடிகள் வெடித்தன; வானவேடிக்கைகள் நிகழ்ந்தன. மேகங்கள் கருத்துத் திரண்டு நின்றுவிட்டன டெல்லியின் வான் பரப்பில்.

தீபாவளிக்குப் பின்னர் சில நாட்களில் டெல்லியில் இருந்தேன். இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்றைச் செய்யாமல் திரும்புவதில்லை. இந்தமுறை ஒருவாரம் இருந்தும் அதிகம் ஊர் சுற்றவில்லை. காரணம் டெல்லியின் காற்றும் சூழலும் மாசுபட்டு நிற்கிறது என்ற எச்சரிக்கையின் அழுத்தம்.

தீபாவளிக்குக் கொளுத்திய வான வேடிக்கைகளும் பட்டாசுகளும் உண்டாக்கிய புகைமேகம் காற்றின் சீர்மையைக் கெடுத்துவிட்டது என்று நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் நண்பர்களும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள், நாட்டின் தலைநகரம் டெல்லி ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வந்து திரும்பும் பெருநகரம். உள்நாட்டு மனிதர்கள் மட்டுமல்லாமல் பல நாட்டு மனிதர்களும் வந்துபோகின்ற பரப்பு.


இந்த -2024 ஆம் ஆண்டுத் கொண்டாட்டங்களில் டெல்லி நகரம் மாற்றத்தைக் கண்டடைந்திருக்கிறது. வெடிப்பதைக் கைவிட்டுவிட்டு தீபங்களை ஏற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள். டெல்லி மாசடைவதின் பின்னனியில் சுற்றியிருக்கும் கிராமங்களில் எரிக்கப்படும் சோளத்தட்டை எரிப்பு, போக்குவரத்து நெரிசல், பெருகும் தொழில்கூடங்களின் எண்ணிக்கை, விதிகளைப் பின்பற்றாத அரசு நிர்வாகமும் மக்களும் எனப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்கள் டெல்லிக்கு மட்டும் உரியன அல்ல. இந்தியாவின் பெருநகரங்களும் சிறுநகரங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
உலகமயத்தின் தொடர்ச்சியில் நகர்மயமாதலோடு தொடர்புடையதாக இருந்த தொழில் பெருக்கமும் மாசடையும் சூழலும் கிராமங்களை நோக்கி நகர்ந்துவிட்டன. இப்போதாவது நமது அரசுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும் மனிதர்களின் வாழ்விடங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணுவது குறித்தும் கடுமை காட்டவேண்டும். முதன்மையாகப் போக்குவரத்துத் துறையில் விதிமீறலைத் தடுப்பதில் தொடங்கி அரசு நிர்வாகம் சீரான மாற்றங்களைத் தொடரவேண்டும்.

தீபாவளி அன்று வெடித்த வெடிகளுக்கான காகிதக் குப்பைகளைச் சுமந்து செல்லும் நகரசபைத் தொழிலாளிகளின் முணுகல்கள் நமது நாகரிகத்தின் மீது உமிழப்படும் எச்சில்களாக இருக்கின்றன. வெடிகள், குப்பைகளாக மாறுவதற்கு முன்னால் எழுப்பிய ஓசைகளும் புகையும் இன்னும் காதுகளிலும் கண்களிலும் படிந்து நிற்கின்றன. நமது பள்ளிக்கல்வியில் கற்பிக்கப்படாத பகுதிகளாக அன்றாடக் குடிமை வாழ்க்கையின் நடைமுறைகள் உள்ளன.
சாலைகளில் நடப்பது தொடங்கி, நிலம், நீர், வளி, ஆகாயமென ஒவ்வொன்றினோடும் நம்து மெய்கொள்ளும் உறவுகள் பேசப்படவேண்டும். நமது தெருக்களைச் சுத்தமாக வைத்திருப்பதை உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகவே நாம் கருதுகிறோம். எல்லாவற்றிலும் மக்களுக்கு அறிவுரைகள் தேவைப்படுகின்றன. நாம் வாழும் இடங்களைக் கெடுப்பதின் வழியாகவே - அவ்விடங்களைத் துயரமான இடங்களாக மாற்றுவதன் மூலமே பண்பாடும் மரபும் காப்பாற்றப்படும் என்று நினைப்பது ஒருவிதத்தில் தற்கொலை மனோபாவம். நகர்மயமாதலை அனுமதித்ததின் தொடர்ச்சியில் ஐம்புலன்களையும் பாதிக்கும் சுற்றுச்சூழல் மாசுகளைக் குறித்துக் கவலைப்படாத அரசுகள் மக்கள் விரோத அரசுகளே. இதனை ஐரோப்பாவின் இலக்கியங்களும் கலைகளும் நகர்மயமாதலைக் குறித்த புரிதலை உருவாக்கும்போதே பேசத்தொடங்கிவிட்டன.

தொழில்மயமாதலின் பின்னணியில் மாசடையும் மனித வாழ்க்கைக்குப் பின்னால் அரசும் சமயநம்பிக்கைகளும் இருப்பதை விவாதித்த நாடகம் இப்சனின் மக்களின் பகைவன் (Enemy of the people ). அதனை இந்தியச் சூழலோடு பொருத்திப் படமாக்கினார் சத்யஜித்ரே. நாடகமாகவும் சினிமாவாகவும் எப்போதும் நினைவிலிருக்கும் பனுவல்கள். பள்ளிகளில் திரையிடப்படவேண்டிய சினிமாக்களின் பட்டியலில் அதனைச் சேர்க்கவேண்டும்; விவாதிக்கவேண்டும்.

மேற்கத்தியப் பெருநகரங்கள் போல இடைவெளிகளோடு கட்டடங்களும் அமைப்புகளும் இல்லையென்றாலும் பசுமையான மரங்களும் பூங்காக்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. புதுடெல்லிப் பகுதியில் நல்ல சாலைகளும் போக்குவரத்தும் இருக்கின்றது. ஆனால் காற்றும் வானமும் புகைமூட்டம் கவிந்து அச்சமூட்டும்போது நகரத்திலேயே இருப்பவர்களுக்குப் பழக்கமாகி விட்டது. அவர்கள் எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்னைப் போல எப்போதாவது போய்த்திரும்பும் மனிதர்கள் அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் போனவேலையை மட்டும் பார்த்துவிட்டு தங்கும் விடுதியின் அறைக்குள் முடங்கிவிட்டு வரவேண்டியதே சரியென முடிவு செய்ய வேண்டியதாகிவிட்டது.    
 
THAT'S NOT PERFORMANCE; IT IS A PLAY READING
தேசிய நாடகப்பள்ளியில் பணியாற்றும் பூமிநாதனிடமிருந்து கடைசி நாளில் அந்த விளம்பர அட்டை வாட்ஸ் அப்பில் வந்தது. ஆனால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. NSD - என்பது மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. தேசிய நாடகப் பள்ளியில் ஒரு நாடகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அது முழுமையான நாடக நிகழ்வல்ல; நிகழ்த்துநிலை வாசிப்பு என்று சொன்னார் பூமி. இந்தியில் இருக்கும் விவரத்தை ஆங்கிலப்படுத்தி அனுப்பச் சொன்னேன். அனுப்பினார். Flying feathers Arts Association, Organizing, Nsd passouts present,
Stories of Sooryabala, Mamatha kaliya, chitra mudral and maitreyi pushpa's NAATYA PAAT.

தியாகத்தாய், நல்ல மருமகள், படிதாண்டாப் பத்தினி அடிமை மனைவி, செல்லமான மகள் எனப் பல பாத்திரங்களை ஏற்று வாழ்க்கையை முடிக்கும் இந்தியப் பெண்களைப் பற்றி இந்திய இலக்கியங்களும் கலைகளும் புனைந்து வைத்திருக்கும் கதைகளைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நமது புராணங்களையும் காவியங்களையும் மறுவிளக்கம் செய்யும் நவீன நாடகங்களும் சினிமாக்களும் விட்டுவிடுதலையாகிப் பறந்துவிடத் துடிக்கும் பெண்கள் சந்திக்கும் தடைகளையும் சுமக்கும் பாரங்களையும் தாண்ட வேண்டிய எல்லைகளையும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. அதே நேரம் அதனைத் தடுத்து நிறுத்திட நினைக்கும் சக்திகளோ திரும்பவும் பழைமைக்குள் திருப்பிப் பெண்களைக் குடும்ப எல்லைக்குள் நிறுத்திவிட விரும்புகின்றன. இந்த முரண்பாட்டைப் பேசும் காட்சிகளைக் கொண்ட இந்த நாடகத்தை முழு மேடையேற்றமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தம் தான்.
 
நிகழ்த்துநிலை வாசிப்பைப் பார்க்கவே மண்டி ஹவுஸ் பகுதியின் பிரபலமான ஶ்ரீராம் செண்டரின் உள்ளரங்கில் நல்ல கூட்டம். நாடகப்பனுவலைக் கையில் வைத்துக்கொண்டு வாசிக்கப்படும் நிகழ்த்தப்படும் அந்த வாசிப்பே நடிப்புக் கலைஞர்களின் ஈடுபாட்டு நடிப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் தரவே செய்தன. நாடக நிகழ்வுக்கான முழுத்தயாரிப்பு இல்லையென்ற போதிலும் சிறப்பு விருந்தினர்களும் வாழ்த்துரைகளும் இருந்தன. பாராட்டுக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்திருந்தன. 

பார்த்தது நாடகமேடையேற்றமல்ல; நிகழ்த்து வாசிப்பு. 

 
மண்டி அரண்மனை/ MANDI HOUSE

கொரோனாவுக்குப் பின்னர்  டெல்லிக்குப் போகும் ஒவ்வொரு முறையும் பூமிநாதனிடம் டெல்லியில் இருக்கும் நாட்களின் விவரங்களைச் சொல்லி விடுகிறேன். அப்படிச் சொல்லிவிட்டால் அவர் பணியாற்றும் தேசிய நாடகப் பள்ளியிலோ அது அமைந்திருக்கும் மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள பிரபலமான அரங்குகள் ஏதாவதொன்றில் நடக்கும் நாடகங்களைப் பற்றித் தகவல் தருவார். போன வேலையை முடித்துக்கொண்டு மாலையில் போய் நாடகங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவேன். இந்த முறை டெல்லியின் மாசடைந்த வானிலை அச்சமூட்டியது. 

நாடக நிகழ்வு எதுவும் இல்லையென்றும், தேசிய நாடகப்பள்ளியில் காட்சிக் கோர்வை வகுப்புகள் (Scene Blocking ) இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் வாருங்கள் என்றார். ஆனால் அவற்றைப் பார்க்கப் பகல் நேரத்தில் போகவேண்டும். அந்த வாய்ப்பு குறைவு என்பதால் போகவில்லை. ஆனால் கடைசி நாளில் ஶ்ரீராம் செண்டரில் இந்த நிகழ்த்து வாசிப்பு (PLAY READING) இருக்கின்றது என்ற தகவல் சொன்னவுடன் தவறவிடவில்லை.

கலை, இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் டெல்லிக்குப் போனால் மண்டி ஹவுஸ் பகுதிக்குப் போவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹிமாசலப் பிரதேச மன்னர் ஒருவரின் அரண்மனையான மண்டி அமைந்திருந்த அந்தப் பகுதியில் தான் இந்தியக் கலை, இலக்கிய அமைப்புகளின் உயர் அலுவலகங்களும் ஆவணக்கூட்டங்களும் அருங்காட்சியகங்களும் இருக்கின்றன. தேசிய நாடகப்பள்ளி, சாகித்ய சங்கீத், லலித்கலா அகாடெமிகளும் காமானி ஆடிட்டோரியம், ஶ்ரீராம் செண்டர் போன்ற உலகப்புகழ்பெற்ற அரங்குகளும் கலைக்கூடங்களும் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் தொலைக்காட்சி சேவையை வழங்கிய தூரதர்ஷனும் பல்கலைக்கழக மானியக்குழுவும் என எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்ற நினைத்த பண்டித ஜவஹர்லால் நேருவின் கனவுகளைச் சுமந்து நிற்கும் நவீன ஆலயங்கள். அங்கே வணங்க வேண்டிய கடவுள்கள் இல்லை. கொண்டாட வேண்டிய இந்தியக் கலைகளும் அறிவும் திரட்டி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுமரபும் எழுத்துமரபும்

காதல்: காமம் - பெண் கவிதைகள்

கதைசொல்லுதலின் சாகசங்கள்