பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..

பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பிலும் தேர்ச்சியிலும் திறமையைக் காட்டுவதிலும் கூடப் பெண்கள் முன்னணியில் தான் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளாகவே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலி டங்களைப் பெறுகின்றவர்களாகப் பெண்களே உள்ளனர். பல்கலைக்கழக அளவில் ஒவ்வொரு துறைக்கும் தரும் தங்கப் பதக்கங்களைப் பெரும் மாணாக்கர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் தான் என்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

கலை அறிவியல் படிப்புகள் என்றில்லாமல் தொழில்கல்வியிலும் பெண்கள் ஆண்களோடு போட்டியிட்டுக் கொண்டு முன்னுக்கு வருகின்றனர். வேலைக்கும் செல்ல அவர்கள் தயார் தான். வேலை செய்து பணம் சம்பாதித்து வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதில் ஆண்களின் விருப்பத்திற்குச் சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் விருப்பங்கள்.

ஆணுக்குப் பெண் நிகர் என்றொரு காலம் வரும் என்று கனவு கண்ட பாரதி இன்று இருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத்தான் செய்வான். துள்ளிக் குதித்த பாரதி சிறிது நேரத்தில் மனம் தளரவும் செய்வான். காரணம் அவன் நினைத்த பெண்கள் இங்கு உருவாகவில்லை என்பதுதான். பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் முன்வர வேண்டும் என்று அவன் நினைத்தான். அப்படிச் சில பெண்கள் முன்வந்துள்ளனர் என்றாலும் நாங்கள் பெண்கள்; இதுவரை நாங்கள் ஒதுக்கப்பட்டிருந்தோம்; இப்பொழுது விழிப்படைந்திருக்கிறோம்; எங்கள் பார்வையில், எங்கள் நோக்கத்தில் நாங்கள் முன்னேறுவோம் என்ற தீவிரத்தோடு பெண்கள் கற்று வந்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படிக் கற்றுக் கொள்ளாமல் போனதிற்கு யார் காரணம்.? பெண்களா..? அல்லது அத்தகைய கல்வியைத் தரத் தவறிய ஆண்களா..? இப்படியொரு கேள்வியை எழுப்பிப் பட்டிமன்றங்கள் நடத்தித் தீர்ப்புகளை வழங்கிவிடலாம் தான். ஆனால் பட்டி மன்றங்களின் தீர்ப்புகள் உண்மையான தீர்வுகள் ஆகி விடப் போவதில்லை.

சுதந்திரத்திற்குப் பின்னும் நமது தேசம் கடைப்பிடித்த கல்வி முறை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறை தான். அந்தக் கல்வி முறைக்குப் பொதுவான நோக்கம் ஒன்று இருந்தது. தனக்குத் தேவையான ஊழியர்களை உருவாக்குவது என்பது தான் அந்தப் பொது நோக்கம். அந்த ஊழியர்கள் நாட்டை நிர்வாகம் செய்யும் அமைப்புக்கு உதவும் வகையில் நிர்வாகத்தோடும் நிர்வகிக்கப்படும் மக்களோடும் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதற்கு தாய்மொழியிலும் நிர்வாக மொழியான ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளத்தக்க அறிவு வேண்டும். அதன் பிறகு நிர்வாகத்தைப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சில அடிப்படைகளைப் பாடங்களை- கணிதம், அறிவியல், வரலாறும் புவியியலும்- அறிந்திருந்தால் போதும். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கான பொதுக்கல்வியைத் திட்டமிட்டார்கள்; செயல்படுத்தினார்கள்.

தேச சுதந்திரத்திற்குப் பின் இந்தப் பொதுக்கல்வியில் பெரும் மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். எப்படி மாற்றம் செய்வது ? எத்தகைய மாற்றம் செய்வது? என்று முடிவு எடுப்பது உடனடிச் சாத்தியம் இல்லை தான். ஆனால் 1950 -இல் இந்தியாவை ஜனநாயகக் குடியரசு என்று அறிவிக்க முடிவு செய்த போது இந்திய மக்களை அதற்குத் தகவமைப்பது எப்படி என்பதையும் முடிவு செய்து விட்டு அறிவிப்புச் செய்திருக்க வேண்டும்.நமது தேசத்தை ஜனநாயகக் குடியரசாகக் கட்டி எழுப்ப முனைந்த தலைவர்கள் அதற்கான அடித்தளங்களைப் போடாமல் மேல் தளங்களிலேயே கவனம் செலுத்தினார்கள்.

ஒரு தேசத்தின் மக்களைப் புதிய வாழ்முறைக்குத் தகவமைப்புச் செய்ய வேண்டும் எனக் கருதும் அரசாங்கம் முதலில் செய்ய வேண்டியது கல்வி முறை மாற்றங்கள் தான். இந்தியாவில் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி வேறுபாடுகளும், பாரதூரமான பால் வேறுபாடுகளும் இருப்பது வரலாற்றுண்மை. இவ்வேறுபாடுகளை மக்கள் மனதில் ஆழமாகப் பதிப்பதில் வெற்றியடைந்த நிறுவனங்களாகச் சமயங்கள் இருந்துள்ளன.ஆனால் அறிமுகப் படுத்தப்பட நினைத்த ஜனநாயகக் குடியரசோ இவ்விரண்டிற்கும் எதிரான நிலைமைகளை முன் வைப்பது.

இந்த முரண்பாட்டைத் தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல. அறிந்தே இருந்தார்கள். மனிதர்களுக்கு, அவர்களை அறிந்து கொள்ளும் அடிப்படைக் கல்வியை அளித்து விட்டால் போதும் என்று நினைத்தார்கள்.ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொதுக் கல்வி அத்தகைய அடிப்படைகளைத் தருவதாகக் கருதப்பட்டது. இங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொள்ளப் போதுமானது என நம்பப்பட்டது. முரண்பாடுகளைப் பற்றிப் பேசாத அந்தக் கல்வியே, முரண் பாட்டைப் போக்கும் என நினைத்த அந்த நினைப்பு பிழையாகிப் போனது.

இந்தியாவில் இருந்த முரண்பாடுகளையெல்லாம் பேசியும் விவாதித்தும் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எவையெல்லாம் நாம் முன் வைக்கப் போகும் ஜனநாயகக் குடியரசிற்கு ஏற்றவை என்பதும், எவையெல்லாம் எதிரானவை என்பதும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவைகளைக் களைந்து விடும் வழிகள் பற்றிய சிந்தனையை உருவாக்கத் தக்கக் கல்வி முறையைக் கண்டடைந்திருக்க வேண்டும். அவையெதனையும் செய்யாமல் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொதுக் கல்வியையே இந்திய மக்களுக்குரியதாகக் கருதியதால், எதிர்பார்த்த பலன் எவையும் கிடைக்கவில்லை. ஆங்கில அரசாங்கத்திற்கு ஊழியர்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றவர்களாக இந்தியர்களைத் தகவமைப்புச் செய்யும் என எதிர்பார்த்தது தவறு என்பது இப்பொழுது கூட உணரப் பட்டுள்ளதா..? என்பது தெரியவில்லை. உணர்ந்திருந்தால் அதே பொதுக் கல்வியை இன்றும் தொடர்வதின் அர்த்தம் என்ன.?

சரிபாதியாகப் படிக்க வந்துள்ள பெண்களுக்கும் அதே பொதுக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதும், அதன் தொடர்ச்சியான தொழில் கல்வியையும் பல்கலைக்கழக அளவிலான உயர்கல்வியையும் கற்றுத் தந்து கொண்டி ருக்கிறோம். அவர்களும் எந்தக் கேள்விகளும் இல்லாமல் பள்ளிக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் வரை உள்ள அனைத்துப் பட்டங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு முதலில் வரனையும் அதன் பிறகு அவனது சம்மதத்தின் பேரில் வேலைகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் நிகர் என்பதால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட கல்வியைப் பெண்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது ஒருவிதத்தில் பெண்கள் மேல் செலுத்தப்பட்ட வன்முறை என்றே தோன்றுகிறது. அந்தக் கல்வியைக் கற்று ஊழியர்களாகவும், நிர்வாகி களாகவும், நிபுணர்களாகவும் ஆகிவிட்ட பெண்கள் ஆண்களுக்குச் சமமாக ஆகிவருகிறார்கள் என்பது ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களை இரட்டைப் பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டியவர்களாக மாற்றி துயரத்திற்குள்ளும் இந்தக் கல்வி தள்ளி இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

குடும்பத் தலைவி அல்லது மனைவி அல்லது தாய் என்ற பாத்திரங்களை விட்டுவிடாமல் தான் பெண் அலுவலகத்தில் ஊழியராகவும், நிர்வாகியாகவும், கேந்திரங்களில் நிபுணியாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் பெண்கள் ஏற்கும் இப்பாத்திரங்கள் குடும்பத்தலைவன் அல்லது கணவன் அல்லது தகப்பன் என்ற சுதந்திரமான பாத்திரங்கள் இல்லை என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்நிலையில் பெண்களுக்கான சிறப்புக் கல்வி தேவை என்பது மட்டும் உறுதியாகத் தருகிறது. இப்படிச் சொல் வதால் பெண்களுக்கான சிறப்புக் கல்வி என்பது புதுவகைச் சமையல்காரிகளாகவும், புதுவகைத் தாய்மார்களாகவும் இருப்பதற்குக் கற்றுத் தரும் குடும்ப அறிவியல் [Home Science] என்று நினைத்து விட வேண்டியதிலை. அவற்றிலிருந்து விடுபடக் கற்றுத் தரும் சிறப்புக் கல்வியாக அமைய வேண்டும். அக்கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பெண்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கூடிச் சிந்தித்து உருவாக்க வேண்டும் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும்.

28-05-06

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்