பொதுக்கல்வியே போதுமென்ற மனநிலை..
பெண்களின் கல்வியில் தமிழகம் காட்டி வரும் அக்கறைகள் மெச்சத் தக்கவையாக உள்ளன. தமிழக அரசு இலவச சைக்கிள், உதவித் தொகை போன்றன கொடுப்பதின் மூலம் காட்டும் அக்கறைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்கள் காட்டும் அக்கறைகளையே சொல்கிறேன்.ஆண்களுக்குச் சமமாகவும் பலநேரங்களில் ஆண்களைத் தாண்டியும் பெண்கள் படித்துப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
படிப்பிலும் தேர்ச்சியிலும் திறமையைக் காட்டுவதிலும் கூடப் பெண்கள் முன்னணியில் தான் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளாகவே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலி டங்களைப் பெறுகின்றவர்களாகப் பெண்களே உள்ளனர். பல்கலைக்கழக அளவில் ஒவ்வொரு துறைக்கும் தரும் தங்கப் பதக்கங்களைப் பெரும் மாணாக்கர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் தான் என்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
கலை அறிவியல் படிப்புகள் என்றில்லாமல் தொழில்கல்வியிலும் பெண்கள் ஆண்களோடு போட்டியிட்டுக் கொண்டு முன்னுக்கு வருகின்றனர். வேலைக்கும் செல்ல அவர்கள் தயார் தான். வேலை செய்து பணம் சம்பாதித்து வசதியான வாழ்க்கையை உறுதி செய்வதில் ஆண்களின் விருப்பத்திற்குச் சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் விருப்பங்கள்.
ஆணுக்குப் பெண் நிகர் என்றொரு காலம் வரும் என்று கனவு கண்ட பாரதி இன்று இருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத்தான் செய்வான். துள்ளிக் குதித்த பாரதி சிறிது நேரத்தில் மனம் தளரவும் செய்வான். காரணம் அவன் நினைத்த பெண்கள் இங்கு உருவாகவில்லை என்பதுதான். பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் முன்வர வேண்டும் என்று அவன் நினைத்தான். அப்படிச் சில பெண்கள் முன்வந்துள்ளனர் என்றாலும் நாங்கள் பெண்கள்; இதுவரை நாங்கள் ஒதுக்கப்பட்டிருந்தோம்; இப்பொழுது விழிப்படைந்திருக்கிறோம்; எங்கள் பார்வையில், எங்கள் நோக்கத்தில் நாங்கள் முன்னேறுவோம் என்ற தீவிரத்தோடு பெண்கள் கற்று வந்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படிக் கற்றுக் கொள்ளாமல் போனதிற்கு யார் காரணம்.? பெண்களா..? அல்லது அத்தகைய கல்வியைத் தரத் தவறிய ஆண்களா..? இப்படியொரு கேள்வியை எழுப்பிப் பட்டிமன்றங்கள் நடத்தித் தீர்ப்புகளை வழங்கிவிடலாம் தான். ஆனால் பட்டி மன்றங்களின் தீர்ப்புகள் உண்மையான தீர்வுகள் ஆகி விடப் போவதில்லை.
சுதந்திரத்திற்குப் பின்னும் நமது தேசம் கடைப்பிடித்த கல்வி முறை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறை தான். அந்தக் கல்வி முறைக்குப் பொதுவான நோக்கம் ஒன்று இருந்தது. தனக்குத் தேவையான ஊழியர்களை உருவாக்குவது என்பது தான் அந்தப் பொது நோக்கம். அந்த ஊழியர்கள் நாட்டை நிர்வாகம் செய்யும் அமைப்புக்கு உதவும் வகையில் நிர்வாகத்தோடும் நிர்வகிக்கப்படும் மக்களோடும் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதற்கு தாய்மொழியிலும் நிர்வாக மொழியான ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளத்தக்க அறிவு வேண்டும். அதன் பிறகு நிர்வாகத்தைப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சில அடிப்படைகளைப் பாடங்களை- கணிதம், அறிவியல், வரலாறும் புவியியலும்- அறிந்திருந்தால் போதும். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கான பொதுக்கல்வியைத் திட்டமிட்டார்கள்; செயல்படுத்தினார்கள்.
தேச சுதந்திரத்திற்குப் பின் இந்தப் பொதுக்கல்வியில் பெரும் மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். எப்படி மாற்றம் செய்வது ? எத்தகைய மாற்றம் செய்வது? என்று முடிவு எடுப்பது உடனடிச் சாத்தியம் இல்லை தான். ஆனால் 1950 -இல் இந்தியாவை ஜனநாயகக் குடியரசு என்று அறிவிக்க முடிவு செய்த போது இந்திய மக்களை அதற்குத் தகவமைப்பது எப்படி என்பதையும் முடிவு செய்து விட்டு அறிவிப்புச் செய்திருக்க வேண்டும்.நமது தேசத்தை ஜனநாயகக் குடியரசாகக் கட்டி எழுப்ப முனைந்த தலைவர்கள் அதற்கான அடித்தளங்களைப் போடாமல் மேல் தளங்களிலேயே கவனம் செலுத்தினார்கள்.
ஒரு தேசத்தின் மக்களைப் புதிய வாழ்முறைக்குத் தகவமைப்புச் செய்ய வேண்டும் எனக் கருதும் அரசாங்கம் முதலில் செய்ய வேண்டியது கல்வி முறை மாற்றங்கள் தான். இந்தியாவில் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி வேறுபாடுகளும், பாரதூரமான பால் வேறுபாடுகளும் இருப்பது வரலாற்றுண்மை. இவ்வேறுபாடுகளை மக்கள் மனதில் ஆழமாகப் பதிப்பதில் வெற்றியடைந்த நிறுவனங்களாகச் சமயங்கள் இருந்துள்ளன.ஆனால் அறிமுகப் படுத்தப்பட நினைத்த ஜனநாயகக் குடியரசோ இவ்விரண்டிற்கும் எதிரான நிலைமைகளை முன் வைப்பது.
இந்த முரண்பாட்டைத் தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல. அறிந்தே இருந்தார்கள். மனிதர்களுக்கு, அவர்களை அறிந்து கொள்ளும் அடிப்படைக் கல்வியை அளித்து விட்டால் போதும் என்று நினைத்தார்கள்.ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொதுக் கல்வி அத்தகைய அடிப்படைகளைத் தருவதாகக் கருதப்பட்டது. இங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொள்ளப் போதுமானது என நம்பப்பட்டது. முரண்பாடுகளைப் பற்றிப் பேசாத அந்தக் கல்வியே, முரண் பாட்டைப் போக்கும் என நினைத்த அந்த நினைப்பு பிழையாகிப் போனது.
இந்தியாவில் இருந்த முரண்பாடுகளையெல்லாம் பேசியும் விவாதித்தும் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எவையெல்லாம் நாம் முன் வைக்கப் போகும் ஜனநாயகக் குடியரசிற்கு ஏற்றவை என்பதும், எவையெல்லாம் எதிரானவை என்பதும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவைகளைக் களைந்து விடும் வழிகள் பற்றிய சிந்தனையை உருவாக்கத் தக்கக் கல்வி முறையைக் கண்டடைந்திருக்க வேண்டும். அவையெதனையும் செய்யாமல் ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொதுக் கல்வியையே இந்திய மக்களுக்குரியதாகக் கருதியதால், எதிர்பார்த்த பலன் எவையும் கிடைக்கவில்லை. ஆங்கில அரசாங்கத்திற்கு ஊழியர்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றவர்களாக இந்தியர்களைத் தகவமைப்புச் செய்யும் என எதிர்பார்த்தது தவறு என்பது இப்பொழுது கூட உணரப் பட்டுள்ளதா..? என்பது தெரியவில்லை. உணர்ந்திருந்தால் அதே பொதுக் கல்வியை இன்றும் தொடர்வதின் அர்த்தம் என்ன.?
சரிபாதியாகப் படிக்க வந்துள்ள பெண்களுக்கும் அதே பொதுக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதும், அதன் தொடர்ச்சியான தொழில் கல்வியையும் பல்கலைக்கழக அளவிலான உயர்கல்வியையும் கற்றுத் தந்து கொண்டி ருக்கிறோம். அவர்களும் எந்தக் கேள்விகளும் இல்லாமல் பள்ளிக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் வரை உள்ள அனைத்துப் பட்டங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு முதலில் வரனையும் அதன் பிறகு அவனது சம்மதத்தின் பேரில் வேலைகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் நிகர் என்பதால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட கல்வியைப் பெண்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது ஒருவிதத்தில் பெண்கள் மேல் செலுத்தப்பட்ட வன்முறை என்றே தோன்றுகிறது. அந்தக் கல்வியைக் கற்று ஊழியர்களாகவும், நிர்வாகி களாகவும், நிபுணர்களாகவும் ஆகிவிட்ட பெண்கள் ஆண்களுக்குச் சமமாக ஆகிவருகிறார்கள் என்பது ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களை இரட்டைப் பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டியவர்களாக மாற்றி துயரத்திற்குள்ளும் இந்தக் கல்வி தள்ளி இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.
குடும்பத் தலைவி அல்லது மனைவி அல்லது தாய் என்ற பாத்திரங்களை விட்டுவிடாமல் தான் பெண் அலுவலகத்தில் ஊழியராகவும், நிர்வாகியாகவும், கேந்திரங்களில் நிபுணியாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் பெண்கள் ஏற்கும் இப்பாத்திரங்கள் குடும்பத்தலைவன் அல்லது கணவன் அல்லது தகப்பன் என்ற சுதந்திரமான பாத்திரங்கள் இல்லை என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில் பெண்களுக்கான சிறப்புக் கல்வி தேவை என்பது மட்டும் உறுதியாகத் தருகிறது. இப்படிச் சொல் வதால் பெண்களுக்கான சிறப்புக் கல்வி என்பது புதுவகைச் சமையல்காரிகளாகவும், புதுவகைத் தாய்மார்களாகவும் இருப்பதற்குக் கற்றுத் தரும் குடும்ப அறிவியல் [Home Science] என்று நினைத்து விட வேண்டியதிலை. அவற்றிலிருந்து விடுபடக் கற்றுத் தரும் சிறப்புக் கல்வியாக அமைய வேண்டும். அக்கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பெண்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கூடிச் சிந்தித்து உருவாக்க வேண்டும் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும்.
மாற்றம் ; அது ஒன்றே மாறாத விதி.
செப்டம்பர் 14, 2007
அவர்கள் என்னிடம் தந்த துண்டறிக்கை 17 வது மாவட்ட மாநாடு எனச் சொன்னது.மாநாடுகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய துண்டறிக்கையோடு அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் கடந்த முறை வந்த மாணவர்களில் யாராவது ஒருவர் இருப்பார்; மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போனதாகத் தெரியவில்லை. மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்லது ஒரு விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி என வழக்கமான வேலைத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வினைகள் அதே தடத்தில் நடந்து கொண்டும்¢ இருக்கின்றன.
இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்திய மாநாடுகளில் மாணவனாக இருந்த போது பார்வையாளனாகவும் பங்கேற் பாளனாகவும் கலந்து கொண்டதுண்டு. பெரிய அளவு பொறுப்புகளில் இருந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் இருந்ததில்லை.இரண்டு முறை அம்மாநாடுகளில் மேடையேற விருந்த நாடகங்களில் நடித்ததும் ,மாணவப் பருவம் முடிந்த காலங்களில் மேடையேறவிருந்த நாடகங்களைக் கவனித்துச் சிறு சிறு திருத்தங்கள் செய்ததும் நினைவில் இருக்கிறது. ஆசிரியனாக ஆகிவிட்ட நான் இப்பொழுது அதன் நேச சக்தி என மனதளவில் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் செய்யும் வினைகள் ஆதரிக்கப்பட வேண்டியவை எனவும், அவை சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் எனவும் நம்பிப் பணியாற்றிய காலங்கள் உண்டு. அந்த நினைப்பின் பேரில், இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளை ஆதரிப்பது தார்மீகக் கடமை என்பதால், துண்டறிக்கையைப் படித்துப் பார்க்காமலேயே நன்கொடைகள் வழங்கிய நாட்கள் உண்டு.
இந்தமுறை அவர்கள் கேட்ட நன்கொடையைத் தந்துவிட ஒப்பவில்லை மனம்.காரணம் 17 வது மாவட்ட மாநாட்டுத் துண்டறிக்கையின் முகப்பு வாசகங்கள் தான்;
தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்த மத்திய சட்டம் இயற்றக் கோரி..
கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி..
கல்வி வியாபாரமாக்கலை தடுத்து நிறுத்தக் கோரி..
நெல்லை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கிடக் கோரி...
இந்த வாசகங்கள் அனைத்தும் உரத்துச் சொல்லப்பட வேண்டியன என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்ற போதும், இவை அனைத்தும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற கதை என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.கட்டுப்படுத்துவது, தடுப்பது என்ற சொல்லாடல் களுக்குள் நிற்கும் இந்த வாசகங்கள் மாற்றத்தை மறுதலித்து ஏற்கனவே இருந்தனவற்றை அவாவுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மாற்றங்களை முன்வைக்க வேண்டிய ஓர் இயக்கம், செய்யப்படும் மாற்றம் தவறானது என்றால் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க முயற்சி செய்யலாமோயொழிய இருப்பதைத் தக்க வைக்க விரும்பலாமா? என்பது ஒரு தத்துவார்த்தப் பிரச்சினை.நேரம் கிடைத்தால் விவாதிக்கலாம்.
கல்வி தனியார் மயமாவதை விமரிசிக்கும் மாணவர் இயக்கம் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தடுப்பதற்கான மூர்க்கமான போராட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் முன்வைக்கப் போவதும் இல்லை.தனியார்மயம், வியாபாரமயம் போன்றவற்றிற்கு அரசாங்கமும் அதன் முதலாளித்துவக் கொள்கைகளும் தான்¢ காரணம் என்று சொல்வதும் விளக்குவதும் மிகவும் சுலபம் தான்.ஆனால் அந்த விளக்கத்திற்குப் பிறகும் விடை தெரிய வேண்டிய கேள்விகள் உள்ளன என்றே நினைக்கிறேன்.
கல்வி நிறுவனங்கள் என்பது அதன் நிர்வாகம்தான் என்பதாகவே மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரிதல் போதுமானதா…? மாணவர்கள்-நிர்வாகம் என்ற இரண்டு முனைகளுக்கும் இடையில் ஆசிரியர்கள் என்றொரு கூட்டம் இருக்கிறதே..? அவர்களைப் பற்றிய மாணவர்களின் கணிப்பு என்¢ன..? அவர்களை வெறும் கூலிகள் என்று வரையறை செய்து பாட்டாளி வர்க்கமாகக் கருதி அவர்களோடு மாணவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டுமா.. ? சுயநிதிக் கல்லூரி களில் அரைச்சம்பளம், கால்சம்பளம் வாங்குபவர்கள் வேண்டுமானால் அத்தக் கூலிகளாக இருக்கலாம். அரசின் நேரடிக் கவனிப்பில் உள்ள கல்வி நிலையங்களிலும் அதன் உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களும் கூலிகள் தானா..? மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் நிகழ்காலத் தேவையை உணர்ந்து பணியாற்றுவதும், பாடத்திட்டங்களில், பயிற்சி முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா..? கல்விக் கூடங்களின் மேம்பாட்டில் ஆசிரியர் களின் பங்கு இல்லவே இல்லையா..? அவர்கள் நினைத்தால் மாற்றங்கள் கொண்டு வந்திருக்க முடியாதா..? என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப் பட்டதில்லை.கடந்த நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் மாணவர்களின் கோபத்தையெல்லாம் நிர்வாகத்தின் பக்கம் மடைமாற்றி விட்டதில் உள்நோக்கங்கள் இருந்திருக்குமோ என்ற ஐயம் மாணவர்களுக்கு இப்பொழுது கூட வரவில்லை என்றால் …அந்தோ பரிதாபம் தான்.
நமது தேசத்தை ஜனநாயக சமத்துவப் பண்பு கொண்டதாக மாற்ற நினைத்த பண்டித நேருவின் கனவுகள் காற்றில் கலந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் அந்தக் கனவின் விளை நிலங்களாகக் கருதப்பட்ட கல்விக் கூடங்கள் இன்றும் அதே பாடத்திட்டத்தையும் பயிற்று முறையையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.அதைக் கற்பவர்கள் பொருளாதார நிலையிலும் சமூகத்தரத்திலும் கடைநிலையில் இருப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இன்னொரு புறமோ புதிய கனவுகள் விதைக்கப்படும் நிலங்களாக சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அங்கு எல்லாவற்றிலும் போட்டிபோடத் தயாரானவர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
சுயநிதிக் கல்விநிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அச்சத்துடனும் உளைச்சலுடன் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்; ஆனால் பழைய நம்பிக்கையை விதைக்க நினைப்பவர்களோ எந்தவிதக் குற்ற வுணர்வுமின்றிப் பணிக்குப் போய்வருகிறார்கள். மாணவர் இயக்கம் நிகழ்காலத்தின் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.
கருத்துகள்