வேதாகமத்தின் வாசனை வீசும் கவிச்சொற்கள்
தமிழ்க்கவிதை மரபில் செவ்வியல் அகக்கவிதைகளுக்கு நீண்ட தொடர்ச்சியும் நீட்சியும் உண்டு. அத்தொடர்ச்சியை உரிப்பொருள் சார்ந்த நீட்சி எனவும், வடிவம் சார்ந்த நீட்சி என்றும் அடையாளப்படுத்தலாம். அன்பின் ஐந்திணைகளான முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பனவற்றின் உரிப்பொருட்களான இருத்தல், ஊடல், புணர்ச்சி, இரங்கல், பிரிவு என்பனவற்றிற்கு அதிகம் தொடர்ச்சி உண்டு. அதனை இங்கே விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த நீட்சியை மைக்கல் கொலினின், “இவனைச் சிலுவையில் அறையுங்கள்” எனத் தலைப்பிட்ட கவிதைத் தொகுதியில் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அகக்கவிதையின் வடிவத் தொடர்ச்சியின் நீட்சியாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு தொனி ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது என்னை வந்து மோதுவதை உணர்ந்துகொண்டே இருக்க முடிந்தது.