நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்
சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து: பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.