பார்க்கத்தக்க சினிமா

இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.
DNA
தொய்வேற்படுத்தாத வகையில் அடுக்கப்படும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்ற ஊகிப்பைத் தவிர்க்கும்போது துப்பறியம் வகை சினிமாக்களின் திரைக்கதை வேகம் எடுக்கும் ஒன்றாக மாறிவிடும். இந்தவகைத் திரைக்கதையின் பலத்தில் தான் குற்றம், வன்முறை, துப்பறிதல் வகையான சினிமாக்களின் வெற்றி உறுதியாகின்றது.

திரைப்படத்தில் முன்வைக்கப்படும் குற்றச்செயல்கள் சமூகத்தைப் பொதுநிலையில் அச்சப்படுத்தும் ஒன்றாக இருக்கும் நிலையில் அந்த சினிமாவுக்குச் சமூகப் பொறுப்புள்ள சினிமா என்ற தகுதியும் கிடைத்துவிடும். நடப்பது என்னவென்று தெரியாதவர்களுக்கெதிராக நடக்கும் குற்றச்செயல்கள் எப்போதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்று. அப்பாவியான குடும்பப்பெண்கள், முதியவர்கள், பள்ளிச் சிறார்கள் போன்றவர்களின் மீது நடக்கும் வன்முறைகள் இரக்கவுணர்வை உண்டாக்கிப் பார்வையாளர்களை ஒன்றச்செய்துவிடும்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வந்துள்ள DNA மருத்துவமனைகளில் நடக்கும் குழந்தைகள் கடத்தல் என்ற பொருண்மையைப் பின்னணியாக்கித் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்ச்சிகரமான முடிச்சுகளால் பின்னப்பட்ட திரைக்கதையில் இந்திய/ தமிழ் வெகுமக்களை ஈர்க்கும் தன்மைகள் நிரம்பியுள்ளன.

குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது; தள்ளிப்போட மட்டுமே முடியும் என்ற சமயச் சொல்லாடலை முன்வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கடத்தப்படும் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் நடந்த திருமணத்தின் பின்னணியும் இரங்கத்தக்க ஒன்றாக வார்க்கப்பட்டிருக்கிறது. காதல் தோல்வியின் பொருட்டுக் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஒருவனும், குறிப்பிட்ட வகையான மனநிலைப் பிறழ்வு கொண்ட ஒருத்திக்கும் நடக்கும் திருமணத்தில் பிறந்த குழந்தை கடத்தப்படுகிறது என்ற முடிச்சு கூடுதல் அழுத்தமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.
 
பெற்றோர்களின் உடற்கூறுகள் பிள்ளைகளின் உடற்கூறுகளில் தொடர்கிறது என்ற அறிவியல் உண்மையை மட்டும் பேசாமல், அம்மாவின் உள்ளுணர்வு மனநிலையையும் அதனோடு இணைத்துப் பேசும் பொதுப்புத்தியையும் கலந்து பேசியிருக்கிறார்கள் இயக்குநரும் வசனம் எழுதிய அதிஷாவும். தத்து எடுப்பவர்களும் கூடப் பிறப்புக்காலத்தின் சிறப்புகளைக் கணித்துக் குழந்தைகளை வாங்கிப் போகின்றார்கள் என்ற விவரமும் தரப்பட்டுள்ளதால், குழந்தை கடத்தலுக்கும் இடமாற்றங்களுக்கும் காரணங்கள் சொல்லப்பட்டு விடுகின்றன. 

வெகுமக்கள் சினிமாவின் தேவைகள் இவையெல்லாம். இதற்கும் மேலாகத் திணிக்கப்பட்ட ஆட்டக்காட்சிகள், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து வெற்றிக்கான சூத்திரம் முழுமையாகி இருக்கிறது. இந்தச் சூத்திரத்தையே மலையாள சினிமாக்கள் குறிப்பான குடும்ப எல்லைக்குள், அதன் காடுகளையும் நீர்நிலைகளையும் காட்சிப்படுத்திப் பார்வையாளர்களுக்குத் திளைப்பை உண்டாக்குகின்றன. அந்தக் காட்சிப்பின்னணிகளை இந்தப் படம் உருவாக்கவில்லை. அதிகமும் இருட்டும், மழையும் பின்னணியாக நிற்கின்றன.
 
பெரும் செலவில் எடுக்கப்பட்ட பல சினிமாக்கள் வணிகத்தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படம் அதிலிருந்து தப்பி, தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் வெற்றிப்படமாக ஆகியிருக்கிறது. இதுபோன்ற சினிமாக்கள் வழியாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் புதிய நடிகர்களின் வருகையும் வாய்ப்பும் உருவாகின்றன. மலையாள சினிமாவுக்கான இயற்கைக்காட்சிகளைப் போலவே நல்ல நடிப்புக்கலைஞர்களின் இருப்பும் முக்கியமான ஒன்று. அதனை நோக்கியும் இந்தப் படம் நகர்ந்துள்ளது.

8 வசந்தங்கள் ( 8 VASANTALU ) தெலுங்கு சினிமா

படத்தை வாங்கித் தனது சந்தாதாரர்களுக்குப் பார்க்கத் தந்துள்ள நெட்பிளிக்ஸ்(Netflix) படத்தை காதலுணர்வு நிரம்பிய நாடகத் தன்மையான (Romantic Drama)சினிமா என அறிமுக தந்துள்ளது. ஆனால் படத்தைப் பார்த்தபின் அப்படியொரு வகைமைக்குள் அடக்கிவிடத் தோன்றவில்லை.
 
 
பதின்ம வயதில் தோன்றும் உடல்சார்ந்த ஈர்ப்பினால் உண்டாகும் காதலின் சிடுக்குகள் படம் முழுவதும் இருக்கின்றன. மையப்பாத்திரமான ஷுத்தியின் மீது மையல் கொள்ளும் இரண்டு இளைஞர்கள் படத்திற்குள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காதலினால் அலையும் மனமும் அதனால் ஏற்படும் திருப்பங்களும் மட்டுமே திரைக்கதையாக ஆக்கப்படவில்லை.
புதிய தலைமுறையின் நம்பிக்கைகள், ஈடுபாடுகள், விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள், நல்ல நட்புகள் உருவாக்கும் சூழல்கள், அவர்களோடு நடக்கும் உரையாடல்கள் ஏற்படுத்தும் தன்னம்பிக்கை, புரிதல்கள், தெளிவுகள் என நேர்மறையான உணர்வுக்குவியல் நிரம்பிய படத்தைக் காதல் கதையாக மட்டும் சுருக்கிவிட முடியாது. 

தந்தையிடமிருந்து எழுத்தையும், நம்பிக்கையான குருவிடமிருந்து பாதுகாப்புக்கலையான கராத்தேயையும் கற்றுக்கொண்ட பெண்ணின் இளம்பருவ நிகழ்வுகள் தான் மொத்தப்படமும். தந்தை வழியாகக் கிடைத்த எழுத்தார்வம் அவளது எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. உண்மையான ஈடுபாட்டோடு கற்ற கராத்தே பாதுகாப்பைத் தருகின்றது. புதியனவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பெண்ணுக்கு அவை தரும் பலன்கள் படத்தில் பொருத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
படத்தின் நிகழிடங்களாகக் கஷ்மீர், ஊட்டி என பசுமை நிறைந்த இடங்களைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர். எழுதுவதற்காகத் தங்கியிருக்கும் காஷ்மீரில் தோல்வியில் முடியும் ஒரு காதல்; இன்னொரு காதல் அவளது தாயோடு இருக்கும் ஊட்டியில். பார்வையாளர்களுக்குக் குளிர்ச்சியான காட்சித் திளைப்புகளைக் காமிரா நிரப்பித்தருகின்றது. குருவின் ஈமக்காரியத்திற்குச் செல்லும் வாரணாசியும் பயணமாகச் செல்லும் தாஜ்மகாலின் பிரும்மாண்டமும் அதனதன் அர்த்தத்தில் வண்ணக்கலவையாகி நிற்கின்றன.

 
இயக்குநர் பணீந்திர ரெட்டி புதிய இயக்குநர் என்றபோதிலும் தெலுங்குப் படங்களின் வணிக சினிமாவுக்கான கூறுகளோடு நுழையாமல்(உரத்துப் பேசும் வசனங்கள், அடிதடி, அதிரும் இசையோடு கூடிய பாடல்கள் ) என எதுவும் இல்லாமல் தனது சினிமாவை உருவாக்கியிருக்கிறார். பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் பெரும்பாலும் புதிய நடிப்புக்கலைஞர்கள். முழுமையான நடிப்பைத் தர முயன்றுள்ள போதிலும் சில இடங்களில் போதாமை வெளிப்பட்டுள்ளது. ஆனால் மையப்பாத்திரத்தை ஏற்றுள்ள அனந்திகாவின் அழகான உடல்வாகும் உணர்வு வெளிப்பாடுகளும் குறையைக் கவனிக்கவிடாமல் செய்துவிடக்கூடும்.

வன்முறை, குற்றப்பின்னணி, துப்பறிதல், காவல்துறையின் கடமையுணர்ச்சி அல்லது பக்கச்சார்பு என வரும் சினிமாக்களுக்கு - மலையாளச் சினிமாக்களுக்கு ஒரு மாற்றாக - தளும்பலோடு நகரும் நதிபோல ஒரு சினிமாவைப் பார்க்க விரும்புபவர்கள் 8 வசந்தலுவைப் பார்க்கலாம்.


கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்
நவம்பர் 22, 2024

மறதிகளும் நினைவுகளும் தன்னியல்பானவையாக இருக்கும்வரை சிக்கல் இல்லை. அவையே மறைத்தல்களும் அழித்தல்களுமாக ஆகும்போது குற்ற நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன. முன்னது உளவியல் சிக்கல். பின்னது குற்றவியல் விவாதம்
உளவியல் சிக்கல்களுக்கும் குற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே தவிக்கும் மனிதர்களின் ஆட்டத்தைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கிறது கிஷ்கிந்தா காண்டம். ஒவ்வொரு சினிமாவையும் பார்வையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெரும்விதமாகத் தயாரிக்க வேண்டுமென நினைக்கிறார்கள் மலையாளச் சினிமா இயக்குநர்கள். இதற்காக அவர்கள் பின்பற்றுவது கலையின் அடிப்படைகளைத் தவறவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். காலம், இடம், பாத்திரங்களிடையே இருக்கவேண்டிய ஓர்மைத்தன்மையில் பிசகு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
திட்டவட்டமான கால எல்லைக்குள் நடக்கும் நேர்நிலைக் காட்சிகளோடு நினைக்கப்படும் காலத்தில் நிகழ்வதைப் பின்னோக்கு நிகழ்வுகளாகப் பொருத்துகிறார்கள். அதேபோல் குறிப்பான வெளியில், இடப்பரப்பிற்குள் வைத்துக் கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளைக் காரணகாரியங்களோடு அணுகி விவாதிப்பதைச் சரியாகச் செய்கின்றார்கள்.
இந்த விவாதங்களுக்கு அறிவியல் பூர்வமான கருத்துநிலைகளின் பின்னணியைத் தவிர்ப்பதில்லை. அதனால் படத்தில் தர்க்கச் சிக்கல்கள் எழுவதில்லை. இந்தப் பின்னணிகள் பெரும்பாலும் இந்திய மெய்யியல் தொடங்கிச் சமகாலச் சமூகவியல், உளவியல் காரணிகளாக இருக்கின்றன. இல்லையென்றால் வரலாறு, தொன்மை போன்ற அறியப்பட்ட நிகழ்வுகளின் தர்க்கங்களைத் தனதாக்கிக் கொள்கின்றன. இந்தக் கவனத்தைத் தமிழ்ப்பட இயக்குநர்கள் முதன்மையானதாகவும், தவறவிடக்கூடாத அடிப்படைகள் எனவும் நினைப்பதில்லை.
சில நாட்களுக்கு முன்னால் -ஹாட்ஸ்டார் இணையச்செயலியில் வெளியாகி நல்ல விமரிசனப் பார்வைகளைப்பெற்றுவரும் கிஷ்கிந்தா காண்டம் நல்ல சினிமாவின் அனைத்து அடையாளங்களோடும் இருக்கிறது. இந்தப் படத்தின் கதையைப் பாகுல் ரமேஷ் எழுதியிருக்கிறார். அதனை இயக்கியிருப்பவர் திஞ்சித் அய்யநாதன் இயக்கியிருக்கிறார்.
இந்திய இதிகாசத்தின் காண்டங்களில் ஒன்றான கிஷ்கிந்தா காண்டம், நிலப்பரப்பின் அடிப்படையில் குரங்கின இனக்குழுவின் வெளி. வாலி -சுக்ரீவன் என்ற குரங்கினச் சகோதரர்களின் முரண்பாட்டில் ராமன் நுழைந்து தனது விருப்பத்திற்காக - சீதையைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் வாலியைக் கொன்று, சுக்ரீவன்/ அநுமன் உதவியைப் பெற்றுச் சீதையிருக்கும் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டு வரும் நிகழ்வுகளின் கதைக்களம்.
இப்போது வந்துள்ள மலையாள சினிமா-கிஷ்கிந்தா காண்டம், நேரடியாக ராமாயணப்பாத்திரங்களை நினைவூட்டவில்லை. ஆனால் குற்ற மனம் சார்ந்து ராமாயணப்பாத்திரங்களின் சாயலோடு உள்ள பாத்திரங்களைக் கொண்டது. அத்தோடு மற்ற விலங்குகளைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் குரங்குகள் திரியும் அடர்த்தியான வனப்பகுதிதான் கதையின் களம். காட்டிற்குள் வரும் மனிதர்களின் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகளில் ஒன்று கையில் வைத்திருக்கும் அந்தப் படம் படத்தின் விவாதத்தோடு தொடர்புடையது. படத்தின் முக்கியமான திருப்பத்தின் காரணமாக படத்தின் பெயரோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது.
அப்பா,மகன், மகனின் இரண்டாவது தாரமாக வரும் மருமகள் என்ற மூன்று பாத்திரங்களும் படத்தின் மையப்பாத்திரங்கள் என்றாலும் அப்புப்பிள்ளையே முதன்மைப்பாத்திரம். மறதியெனும் வியாதியோடு வாழும் - அதனை மறைக்க நினைக்கும் அப்புப்பிள்ளையின் இருப்பு இயல்பானதா? மறைக்க நினைக்கும் முயற்சியா? என்ற ஒருவரிச் சொல்லாடலின் மேல் திரைக்கதை நிகழ்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அப்புப்பிள்ளையின் மறதிக்குள்ளும் நினைவுக்குள்ளும் இருக்கும் மகன் அஜய்சந்திரனின் முதல் திருமண வாழ்க்கையும், அதில் ஏற்பட்ட ஒரு கொலையும் ஒரு தற்கொலையும் என ரகசிய முடிச்சுகள் இருக்கின்றன. அதனைச் சொல்லாமலேயே இரண்டாவது மனைவியோடு புதிய வாழ்க்கையைத் தொடர்ந்துவிட முடியுமென நம்பியவனுக்குத் திருமண நாளன்று வரும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் சிக்கல் தொடங்குகிறது.

காவல் நிலையத்திலிருந்து வரும் அந்தத் தொலைபேசி அழைப்பு, முன்னாள் ராணுவ அதிகாரியான அப்புப்பிள்ளையின் துப்பாக்கியைக் குறிப்பிட்ட நேரத்தில் சரண்டர் செய்யாததின் காரணங்களைத் தேடுவதில் விரிகிறது. சரண்டர் செய்யப்படாத துப்பாக்கிக்குப் பின்னால் இருக்கும் குற்றச் செயல்களின் உளவியல் காரணங்களைப் புது மனைவியான அபர்ணா அறிவதும் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதுமான நிகழ்வுகளே அடுக்கிச் செல்லும் கதைப்பின்னல். துப்பாக்கியை வைத்து உருவாக்கும் ரகசியங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. அவரது மறதியால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட இருந்த அழிக்க முடியாத வடுக்கள் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. அந்த மறதி திட்டமிட்ட மறைப்பு முயற்சிபோலத் தோன்றினாலும் தேவையான மறதியாக இருக்கிறது என்பதின் மூலம் ஒரு நல்முடிவைச் சினிமாவுக்கு உருவாக்கித் தருகிறது.
இந்த முடிவுக்காகவும் முடிச்சுகளை அவிழப்பதற்காகவும், காவல்துறை, முன்னாள் ராணுவ அதிகாரி, காட்டிலாக ஆட்கள், அப்பாவின் நண்பர் என உருவாக்கப்படும் பின்னணிக்குள் காட்டில் மறைந்து இயக்கம் கட்டும்-ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கையுள்ள நக்சலைட் நடவடிக்கைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளமாக விரிகின்றன. இந்த அடுக்குகள் தான் ஒரு சினிமாவைக் கலையின் நெருக்கத்திற்கு நகர்த்தக்கூடியன;அதே நேரத்தில் வணிக சினிமாவின் வெகுமக்கள் ஈர்ப்பை உருவாக்கவும் கூடியன.
கதைக்கும் திரைக்கதைக்கும் பாத்திரங்களுக்கேற்ற நடிப்புக் கலைஞர்களின் தேர்வுக்கும் தரும் முக்கியத்துவத்தின் வழியாக நல்ல சினிமாவை உருவாக்கித் தரும் மலையாள இயக்குநர்கள், வெகுமக்களின் ரசனைக்காக எனச் சொல்லி மைய நிகழ்வோடு பொருந்தாத பாடல்காட்சிகளையும், சண்டைக்காட்சிகளை நகைச்சுவை நடிகர்களின் இணைநிலைக்காட்சிகளையும் சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்க்காமலேயே ஒரு சண்டைக்காட்சி உருவாக்கும் கொதிநிலைத்தன்மை கொண்ட காட்சிகள் இருக்கும்படி நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சின்னச்சின்ன வசனங்களாலும் நடிகர்களின் உடல் மொழியாலும் பார்வையாளர்களிடம் சிரிப்பை உண்டாக்கும் நிகழ்ச்சிகளையும் உருவாக்கித் தருகிறார் இயக்குநர். அதையெல்லாம் தாண்டி காட்சிகளுக்கென இசைக்கப்படும் ஒலிக்கோர்வைகள் உறுத்தாமல் இழையோடும்போது அந்த இசையோடு பயணிக்கவும் முடிகிறது. நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தானே? இது ஏன் தமிழ்ச் சினிமாவில் இயங்கும் இயக்குநர்களுக்குப் புரிபடாமல் இருக்கின்றது?

தொலைந்துபோகும் பெண்கள்

எளிமையான கதைமுடிச்சு, அதனை அவிழ்த்து அவிழ்த்துக் காட்டும் திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்துதலிலும் நிகழ்வுகளை அடுக்கிச்சொல்வதிலும் நவீனத்துவ முறைமை என்பது அமீர்கானின் சினிமாக்களின் பொதுத்தன்மை. அத்தோடு குறிப்பான இடத்தில் – குறிப்பான சமூகச்சூழலில் வைத்து விவாதிக்கும் பேசுபொருள் என்பதும் இன்னொரு பொதுத்தன்மைதான். தொலைந்து போகும் பெண்கள் ( LAAPATAA LADIES) படமும் அப்படியான பொதுத்தன்மைக்குள் எடுக்கப்பட்டுள்ள நல்லதொரு சினிமா.
விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய மாற்றங்களை- சாதீய வேறுபாடுகள், சமய இணக்கத்திற்கான கவனம், உள்வாங்கும் அரசியல் பார்வை, பெண்களின் சமூக இருப்பு என ஒவ்வொன்றையும் கவனித்து விவாதப்படுத்தும் படங்களைத் தந்துகொண்டே இருப்பன அமீர்கானின் தயாரிப்புகள். இந்தியப் பெண்களின் அறிவைத் தடுத்து நிறுத்தும் குடும்ப அமைப்பையும், திருமணம் தான் இந்தியப் பெண்களுக்கான ஒரே விமோசனம் என்னும் கருத்தை வலியுறுத்தும் பெற்றோர்களையும் காட்டி, இந்தியப் பெண்களின் விருப்பப்படியான கல்வி, சொத்துரிமை, விரும்பிய திருமண வாழ்க்கை என்பதை நேரடியாகச் சொல்லாமல் கதையின் போக்கில் உணர்த்துகிறது படம். அமீர்கானின் படங்கள் விவாதிக்கும் ஒவ்வொன்றும் விடுதலைபெற்ற இந்தியாவில் நடந்திருக்கவேண்டிய மாற்றங்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
****
புதுமணப்பெண்களின் நீண்ட தூரப் பயணத்தின்போது இடம் மாறிவிடுவதால் தொலைந்துபோனதாக நினைக்கும் இரண்டு பெண்கள் அதனை எதிர்கொள்ளும் நிகழ்வுகளே கதைப்பின்னல். ஒரே மாதிரியான வண்ண ஆடைகளால் -முகத்திரைகளால் மூடப்பட்ட நிலையில் இடம் மாறும் இரண்டு பெண்களில் ஒருத்தி விரும்பியே தொலைந்து போகிறாள்; கணவனைப் பிரிகிறாள். இன்னொருத்தி பயணக்களைப்பில் அறியாமல் கணவனைப் பிரிகிறாள். இதன் தொடர்ச்சியே மொத்தப் பட த்தின் காட்சிகள்.

கணவர்களைப் பிரிந்த இருவரும், வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைக்காமல் புதிய இடங்களில், அங்குள்ள சூழலுக்குள் தங்களை இருத்திக்கொண்டு எல்லாவற்றையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் காட்சிகளால் படம் விரிகிறது. தனித்துவிடப்படும் பெண்களை ஏமாற்றவும் பாலியல் ரீதியாகச் சுரண்டவுமே முயல்வார்கள் என்ற புகைமூட்டமான காட்சிகளை அமைத்து அச்சத்தில் இருக்கும் பெண்களாகக்காட்டாமல் மனிதர்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைத்து அடுத்த கட்டத்தை நகர்த்தும் பெண்களாக இருவரையும் காட்டியுள்ளது படம். காவல் நிலையம், காவல் துறை போன்றவற்றைச் சித்திரிக்கும்போது வழக்கமான எதிர்மறைத் தன்மையுடன் காட்சிகள் உருவாக்கப்பட்டாலும் அதற்குள் இழையோடும் நகைச்சுவையும் அங்கத்தன்மையும் சேர்ந்து பட த்தின் முடிவில் தரப்பட்டுள்ள திருப்பத்தை நம்பச் செய்கின்றன. விரும்பிக் காணாமல் போகும் பெண்ணுக்கு நடந்த து விருப்பமில்லாத திருமணம். அவளது விருப்பம் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாத மரபான இந்திய விவசாயம். அதனைக் கல்லூரியில் சேர்ந்து கற்று ஆய்வு மேற்கொள்ள நினைப்பவள். ஆனால் திருமணம் தான் பெண்ணுக்கு முதன்மைத் தேவையென நினைக்கும் அம்மாவின் நெருக்கடியால் ஒத்துக்கொண்ட திருமணத்திலிருந்து தப்பிக்க இந்தத் தொலைந்துபோதல் உதவும் என நினைத்து விரும்பியே காணாமல் போகிறாள்.அவளது அறிவார்ந்த செயலால் நகரும் காட்சிகளில் திருப்பங்களும் அங்கதம் இழையோடிய உரையாடல்களும் படத்திற்கு வலுவூட்டுகின்றன. அவள் தான் தன்னை அழைத்து வந்த தீபக்கின் மனைவியைக் கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறாள்.
வட இந்தியக் கிராமங்களின் அழகும் வேளாண் வாழ்க்கையுமாக விரியும் காட்சிகளில் அழகியலைக் கூட்டும் விதமாகப் பின்னணி இசையும் சின்னச்சின்ன பாடல்களும் பார்ப்பது சினிமா என்ற எண்ணத்தைத் தாண்டி இயல்பான வாழ்க்கையின் காட்சிகள் என்ற உணர்வைத் தந்துள்ளன. சமகால இந்தியப் பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை, திருமண வாழ்க்கையில் உண்டாக வேண்டிய நெகிழ்ச்சி என ஒவ்வொன்றையும்- நடந்திருக்கவேண்டிய மாற்றங்கள் என ஒவ்வொன்றையும் கவனித்து விவாதித்துள்ளது. அந்த வகையில் அவை சமகால இந்தியச் சமூகத்தை - வாழ்க்கையை நேரடியாக விவாதிக்கக்கூடியன.
நட்சத்திர மதிப்புக்கொண்ட நடிகர்களைத் தெரிவு செய்யாமல், பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களையும் நடிகையர்களையும் தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ள இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்திய சினிமாவின் தரமான பட த்தைத் தந்துள்ளனர். இடம் மாறித் தொலைந்து திரும்பும் பெண்களாக நடித்துள்ள பெண்களும், அவர்களின் கணவர்களாக நடிக்கும் ஆண்களும், கிராமியச்சூழலையும் காவல் நிலையச் செயல்பாடுகளையும் ரயில் நிலையக் கடையையும் மிகுந்த நம்பிக்கையான காட்சிகளாக்குவதில் நடிகர்களின் நடிப்பு முதன்மையான பங்களிப்பைச் செய்துள்ளன.

எளிமையான மனிதர்களைப் பாத்திரங்களாக்கி இந்திய வாழ்க்கையின் மாற்றங்களையும், மாற்றங்களுக்குத் தடைகளாக இருக்கும் அமைப்புகளையும் விவாதப்படுத்திச் சினிமாக்களை எடுத்த சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் போன்றோரின் படங்களின் வரிசையில் இந்தப் படத்தைச் சொல்லத்தோன்றுகிறது. தொலைந்துபோகும் பெண்கள் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாரதியாரின் விடுதலைக் கும்மியின் ஆலாபனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. படம் முடிந்தபோது இந்த வரிகள் தானாகவே வந்து நின்றன:
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...