கட்டுரைகள் பத்திகள் நேர்காணல்கள் தன்னம்பிக்கை எழுத்துகள்

இலக்கியப்பனுவல்களின் அடிப்படையான வடிவங்கள் மூன்று எனக் கருதியே இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசும் நூல்களை எழுதியவர்கள் நினைத்திருக்கிறார்கள். அரிஸ்டாடில், தொல்காப்பியர், பரதர் போன்றவர்கள் அவர்களின் விருப்பமான இலக்கிய வடிவத்தை மையப்படுத்திக்கொண்டு மற்ற வடிவங்களின் அடிப்படைகளையும் பேசுகின்றனர். அரிஸ்டாடிலுக்கும் பரதருக்கும் முதன்மை வடிவங்கள் நாடகம். அதன் உட்பிரிவாகவோ, துணைவிளைவுகளாகவோ கருதித்தான் கவிதை, கதை போன்றவற்றைச் சொல்கின்றனர். செய்யுளை இலக்கியம் என்ற சொல்லின் இடத்தில் வைத்து அடிப்படைகளைப் பேசும் தொல்காப்பியருக்கோ முதன்மை வடிவம் கவிதைதான். பாட்டு, பா, பாடல் எனச் சிறிய வேறுபாடுகளையும் பேசுபவர் மற்ற வடிவங்களாக மற்றவற்றைப் பேசுகிறார்.

கட்டுரை என்பதை ஆங்கிலத்தில் இரண்டு பெயர்களால் சுட்டுகின்றனர். ஆர்டிகல், எஸ்ஸே -Article, Essay- என்பன அவை. இவை இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. எஸ்ஸே என்பது ஒருபொருள் குறித்த தகவல்களைத் தொகுத்து முன்வைப்பது. ஆனால் ஆர்டிகல் அவ்வாறில்லாமல் ஆய்வுத் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட துறையின் ஒரு பொருளைக் குறித்த விவாதங்களை முன்வைத்து முடிவை நோக்கிச் செல்வதாக அமைந்திருக்கும். எந்தத்துறை குறித்தும் ஆர்டிகல் -கட்டுரை - எழுதப்படலாம். இலக்கியத்துறைசார்ந்து எழுதப்படும் கட்டுரைகளிலும் சிலவகை உண்டு. ஒரு இலக்கியத்தின் நயத்தைப் பாராட்டும் விதமாகவோ, கவிதை வரியின் தத்துவச் செறிவைப் பேசுவதற்காகவோ எழுதப்படும் விளக்கவுரைகள் இங்கே இலக்கியக் கட்டுரைகள் என அழைக்கப்படுகின்றன. 

இலக்கியத்தின் நோக்கம், பயன், படைப்பாளியின் பார்வை, போன்றவற்றைக் கண்டறிந்து கூறும் கட்டுரைகள் திறனாய்வுக் கட்டுரைகள் என அழைக்கப்படுகின்றன.கட்டுரைகள்.. ஒரு விவாத மையத்தைச் சுட்டிக் காட்டி, அது சார்ந்து வாசிப்பவனுக்கு வாசிப்பின் அனுபவத்தையும், விவாத நோக்கத்தையும் தரவல்லதாக இவை வடிவம் கொண்டுள்ளன. எளிமையும் ஆழமும் கொண்டதாக விவாதங்களை எழுப்பும் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களாகச் சிலரைக் குறிப்பிடலாம். பெரியார் என்று அறியப்பட்டுள்ள ஈ.வெ.ராமசாமியின் எழுத்துக்கள் முன்னோடியான உதாரணங்கள்.

பெரியாரைத் தொடர்ந்து பாரதி, வ.ரா., ராஜாஜி, கல்கி என அக்கால கட்டத்துக் கட்டுரையாளர்கள் அவ்வகைக்குப் பலம் சேர்த்தனர். இவர்களின் தொடர்ச்சியாக விந்தன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் கட்டுரைகள் கிளை பிரிந்து புதிய தடங்களுக்குள் சென்றன. தனது சிறுகதைகளில் ஆங்காங்கே தெரிக்கச் செய்த எள்ளல் நடையைப் புதுமைப்பித்தனின் கட்டுரைகளிலும் காண முடிகிறது. அந்த எள்ளலின் காரணமாக சொல்ல வந்ததை நழுவ விட்டவர் அல்ல புதுமைப்பித்தன். ஜெயகாந்தனின் நடையோ ஆழமான விவாதங்களுக்குள் அழைத்துச் சென்று வாசகனைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், இவர்கள் வெளியே இருக்கிறார்கள் என்பதான தலைப்புகளில் ஜெயகாந்தன் எழுதிய உரைநடை, தமிழின் வளமான சித்திரங்கள் என்பதை இப்போது வாசித்தும் உறுதி செய்யலாம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் அளவுக்கு இல்லையென்றாலும் உரைநடையில் தாங்கள் சொல்ல விரும்பியதை நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று ஆசை கொண்டவர்களாக சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் முயற்சிகள் செய்துள்ளனர்.

இங்கே கட்டுரை வடிவம், வேறு வடிவத்திற்கு மாற்றம் பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வாசகனை நேரடியாக விளித்துப் பேசும் கடித முறையைத் திராவிட இயக்கம் தனது வடிவமாக ஆக்கியது. தம்பிக்கு என சி.என். அண்ணாதுரை எழுதியதைப் பின் பற்றி திராவிட இயக்கத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது இயக்க இதழ்களில் கடிதங்களை எழுதினார்கள். உடன் பிறப்புக்கு என மு.கருணாநிதியும், ரத்தத்தின் ரத்தமே என எம்.ஜி.ராமச்சந்திரனும் தங்கள் இயக்கப் பத்திரிகைகளில் கட்டுரை வடிவத்தைக் கடித வடிவமாக ஆக்கிச் சாதனை புரிந்தனர்.

இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரைகளை எழுதிய முன்னோடியாக ரசிகமணியைக் கூறலாம் இலக்கியவரலாறு, இலக்கிய மதிப்பீடு இவை குறித்த குறிப்புரைகள் போன்றவற்றை எழுதியவர்களாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோரை முன்னோடிகளாகவும், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், ரா.பி.சேதுப் பிள்ளை, அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் போன்றோரைப் பின் தொடர்ந்தவர்களாகவும் குறிப்பிடலாம், நவீன இலக்கியங்களை முன்வைத்து இவ்வகைக் கட்டுரைகளை எழுதியவர்களாகக் க.நா.சுப்பிரமண்யம், சி.சு.செல்லப்பா, பிரமிள், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், போன்றோரையும் சுட்டலாம்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இடம் பெறும் பத்தி எழுத்து (Column Writing) என்னும் வகைப்பாடு கூடக் கட்டுரை வடிவத்தில் அமைவன தான். இவ்வடிவம் 1980 -களில் தமிழ்ப் புலனாய்வுப் பத்திரிகைகள் வழியாக வெகுமக்களிடம் அறிமுகம் ஆனது. பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம் , அப்துல் ரகுமான், இன்குலாப் போன்ற படைப்பாளிகள் தங்கள் பாணியில் அதன் வடிவத்தைச் செழுமைப் படுத்தினார்கள், இரண்டாயிரத்திற்குப் பின் இடைநிலை இதழ்கள் தொடர்ந்து பத்தி எழுத்துக்களை இடம் பெறச் செய்கின்றன.இப்போது துறை சார்ந்தும், பொது நிலைப்பட்டதாகவும் பத்தி எழுத்துகள் எல்லாவகை இதழ்களிலும் இடம் பெற்று வருகின்றன.

பத்தி எழுத்து ஆனாலும் சரி, கட்டுரை ஆனாலும் சரி அதன் முக்கிய அம்சம் நிகழ்காலத்தைப் பேசுவது என்பதுதான். ஒரு நிகழ்வு அல்லது ஓர் இயக்கம் அல்லது ஓர் ஆளுமையைப் பற்றிய எழுத்துச் சித்திரம் என்பதாக இதை வரையறை செய்யலாம். வரையறை உருவாக்குவது புரிந்து கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே ஒழிய, மீறுபவைகளை ஒதுக்கி வைப்பதற்காக அல்ல.

தினசரிப் பத்திரிகைகளும் நிகழ்காலச் சமுகப் போக்குகளை விமரிசனம் செய்து கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. தினசரிப் பத்திரிகையின் அடையாளம் தலையங்கம் எழுதுவது என முடிவு செய்து செயல் பட்ட ஏ.என். சிவராமனின் வழிகாட்டுதலை விலகாமல் காத்து வரும் தினமணி ஒவ்வொரு நாளும் நடுப் பக்கத்தில் நேரடித் தமிழ்க் கட்டுரைகளையும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. பிற தினசரிகள் கட்டுரை களுக்கு அத்தகைய முக்கியத்துவம் தருவதில்லை. என்றாலும் கட்டுரைகளை வெளியிடுவதே இல்லை என்று சொல்லி விட முடியாது.

தன்னம்பிக்கை எழுத்துகள்- ஒரு பார்வை

தமிழில் அதிகம் விற்கும் நூல்கள் எவை என்ற புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. எழுத்தின் வகைகளில் இலக்கிய வகைகளாகச் சொல்லப்படும் கவிதை, புனைகதை, நாடகம் போன்றவைகள் முதல் மூன்றிடங்களில் இருக்காது என்பதே உண்மை. தொடர்கதைகளாக எழுதியபின் நாவல் என்று வகைப்படுத்திப் பதிப்பிக்கப்படும் கதைகள் அதிகம் விற்றுள்ளன. கடந்தகாலத்திலிருந்து இன்றுவரை சாதனையாக இருப்பவர் கல்கி. பாலகுமாரன், விமலாரமணி, போன்றவர்கள் நிகழ்கால உதாரணங்களாக இருக்கிறார்கள்.

திரைப்படப் பாடலாசிரியராக இருந்ததால் - இருப்பதால் அதிகம் விற்கும் கவிதை நூல்களை எழுதியவர்களாகக் கண்ணதாசனும்,. வைரமுத்துவும் இருக்கிறார்கள். சிறுகதை ஆசிரியர்கள், நாடகாசிரியர்களெல்லாம் போட்டிக்கே வருவதில்லை. ஆனால் இவர்களோடு போட்டியிடுபவர்களாக தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்/ எழுத்தாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். எனது இளமைப்பருவகாலத்தில் எம்.எஸ். உதயமூர்த்தி இருந்தார். அவரது பேச்சுகளைக் கேட்டதில்லை. ஆனந்தவிகடனில் தொடராக எழுதப்பெற்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பிறகு நூல்களாகவும் வாசித்திருக்கிறேன். ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்தத்தில்லை. எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் வேறுவேறாக இருக்குமோ தவிர புதியன தேடும் ஒரு வாசகனுக்கு வாசிப்புக்களிப்பை அவை தருவதில்லை. 

தன்னம்பிக்கை எழுத்துகள் என்பதின் நிகழ்கால அடையாளமாகப் பலர் இருக்கிறார்கள். வெகுமக்கள் ஊடகங்களில் திரும்பத்திரும்ப அறியப்படும் பெயராக இருப்பவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இவரைப்போலப் பலர் பலவிதமான இதழ்களில் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களது எழுத்துகளைப் பற்றியும் கூடப் பல்கலைக்கழக ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஆய்வுகள் என்னவகையான முறையியலை - ஆய்வுப்பார்வையைக் கொண்டிருக் கின்றன என்பது பெரிய கேள்வி. தமிழ் ஆய்வுகளில் வெவ்வேறு வகையான இலக்கியவகைப்பாடுகளுக்கும் தனித்தனியான வரையறைகள் இருப்பதான நம்பிக்கைகள் எதுவும் வெளிப்படவில்லை. 
தமிழில் எழுதப்பெறும் எல்லாவகையான எழுத்துகளையும் ஒரே அளவுகோல்களால் தான் அளக்கிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் - முறைப்படுத்தும் ஆய்வு மையங்கள் எதுவும் இங்கு இல்லை. இருப்பதாக நம்பிச் செயல்படும் அதிகாரம் இருப்பதாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றன நினைக்கவுமில்லை. அவைகளும் இன்னொரு பல்கலைக்கழகத்துறைகள் போலவே செயல்படுகின்றன.
இதனைச் சுட்டிக்காட்டவும் எவ்வாறு பார்க்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டவுமான ஒரு வாய்ப்பை ஒரு அறக்கட்டளைச் சொற்பொழிவைப் பயன்படுத்திக்கொண்டேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் கவிதாசன் பெயரில் நிறுவப்பெற்றுள்ள அறக்கட்டளை அது. கவிதாசன் அவர்கள் முதன்மையாகத்தன்னை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக/ எழுத்தாளராக நம்புகிறார். வெளிப்பட்டிருக்கிறார். 50 நூல்களுக்கும் மேல் அவர் எழுதியதாக அச்சிடப்பெற்றுள்ளது. தொடர்ந்து மறுபதிப்புகளும் கண்டுள்ளன. விற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னம்பிக்கைக் கருத்துகளை உரைநடையில் சொன்னதையே கவிதை வடிவிலும் சொல்ல முயன்றுள்ளார். அவரது எழுத்துக்களில் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும் சொற்களாக முயற்சி, தன்னம்பிக்கை, வெற்றி என்பன. இந்தச் சொற்களைக் கொண்டு அவர் சொல்லாடும்போது இருப்பைக் குறித்தே பேசுகிறார். உன்னை நீ அறிந்துகொள்; உன் இருப்பை மாற்ற முயற்சி செய்; தன்னம்பிக்கையோடு முயற்சி செய்; வெற்றி உறுதியானது சொல்லும் இந்தச் சொல்லாடல்கள் வெற்றிக்கான வழிமுறைகளைச் சொல்வதில்லை.
இத்தகைய குரல்களுக்கு ஒரு பின்னோக்கிய தடங்கள் இருக்கின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் எனப் போய் பின்னிடைக்காலத்தில் எழுதப்பெற்ற நீதிநெறிவிளக்கம், சதகங்கள், எனச் சென்று பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் வெளிப்படும் நல்லன எவை? கெட்டன எவை? என்ற தொகுப்புரைகளில் நிலைகொள்ளும். அந்தத்தொகுப்புரைகள் அவ்வக்கால இருப்பை ஏற்றுக்கொண்டு தனிமனித மனங்களுக்கான நினைவுப்பாதையை உருவாக்கித் தருவனவாக இருந்ததை உணர்த்தலாம். இந்த வகையில் - நிலைப்பாட்டில்தான் தன்னம்பிக்கை எழுத்துகளும் இலக்கியமாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றை இலக்கியம் என்ற தனி அடையாளமாகக் கொள்வதைவிட ‘எழுத்துகள்’ என்ற பொது அடையாளத்துக்குள் நிறுத்திக்கொள்ளலாம்.

நேர்காணல் வடிவம்

ஒவ்வொரு மாதமும் வெளியிடும் கலை இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களுக்காகவே 1990 களில் வந்த கோமலின் சுபமங்களாவைத் தொடர்ந்து வாங்கியவர்கள் அதிகம். அம்மாத இதழின் தனித்துவ அடையாளமாகவே ஆக்கினார் கோமல். முதன்மையான ஆளுமைகளை நேர்காணல் செய்வதற்காகக் கோமல் சுவாமிநாதன் அவரது துணை ஆசிரியர்களான கவி.இளையபாரதி, சி.அண்ணாமலை போன்றவர்களுடன் தேர்ந்த காமிராக்காரர்களோடு போய்ச் சில நாட்கள் தங்கியெல்லாம் நேர்காணல் செய்தார்கள் என்பதை நானறிவேன். 

ஆளுமைகளின் இப்போதைய இருப்பைக் காட்டும் படங்களைப் பரப்பிவிட்டு அவர்களின் தேடல் மற்றும் தெரிவுகளின் வழியாக இப்போதைய இடத்திற்கு வந்த பாதையை வாசிப்பவர்களுக்குத் தரும் விருப்பம் அந்த நேர்காணல்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. அத்தோடு அவர்களின் கடந்தகாலத்திற்குள் நுழையும்போது அவர்களின் சமகாலத்தவர்களோடும் சமகாலச் சமூக, அரசியல் சூழல்களோடும் எப்படிப் பயணித்தார்கள் என்பதையும் கொண்டுவர முயற்சித்தார்கள். அந்த நேர்காணல்கள் பின்னர் தனியொரு நூலாக வந்தது. பத்திரிகையாளர், திரைப்படக்காரர், பதிப்பாளர், கவி எனப் பல அடையாளங்களைக் கொண்ட இளையபாரதி “ கலைஞர் முதல் கலாப்ரியா வரை” எனப் பெயரிட்டுத் தொகுத்து வெளியிட்டார். 

சுபமங்களாவின் அத்தகைய ஈடுபாடும் எத்தணிப்புகளும் இல்லையென்றாலும் சுபமங்களாவின் தொடர்ச்சியைப் பாவை சந்திரனின் புதியபார்வையும், கண்ணனின் காலச்சுவடுவும் தொடர்ந்தன. பெங்களூரிலிருந்து வெளிவந்த இங்கே இன்று காலம் தொடங்கிச் சுபமங்களா, புதிய பார்வை, காலச்சுவடு, குமுதம் தீராநதி, தினமணி கதிர் போன்ற இதழ்களுக்காக நேர்காணல்களைச் செய்த பௌத்த அய்யனார் நேர்காணல் என்ற இதழைக் கொண்டுவந்தார். நடிகர் நாசர், ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, அரங்கவியலாளர் ந.முத்துசாமி, கவி. தீபச்செல்வன் போன்றவர்களின் ஆளுமைத்தளங்களை முழுமையாக வெளிக்கொண்டுவரும் நேர்காணல்களை வெளியிட்டார்.

ஆளுமைகளின் இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்துத் தொடரும் ஒருவர் செய்யும் நேர்காணல்கள் ஆளுமைகளை அவர்களது சொற்களாலேயே வாசிப்பவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வடிவம். அதனைச் செய்பவர்களுக்கு முதன்மையாகத் தேவை அளவைப்புலம். தர்க்கம் என்ற சொல்லால் அறியப்படும் அளவைப்புலம் நேர்காணலின் அடிப்படை இயக்கத்தைத் தீர்மானிக்கக் கூடியது. இலக்குடனோ, இலக்கின்றியோ தொடங்கும் உரையாடலைத் தீவிரமான கலைவடிவமாக மாற்றுவதில் அளவைப்புல அறிவு வேலைசெய்கிறது. காட்சி, அங்கம், நாடகம் என்ற உள்கட்டுமானத்தைக் கொண்ட நல்திறக் கட்டமைப்பு வடிவத்தைத் தனதாக்கிக் கொள்ளும் நேர்காணல்கள் எப்போதும் வாசிப்புத் திளைப்பைத் தரக்கூடியன.

அண்மைக்காலத்திலும் எழுத்தாளர் பேசும் புதிய சக்தி போன்ற இதழ்கள் ஒவ்வொரு இதழிலும் நேர்காணல்களை வெளியிடுகின்றன. கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் இணைய இதழ்களிலிலும் நேர்காணல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. புதிதாக வரும் நிலவெளியும்கூட நேர்காணல் வெளியிடுவதை முக்கியமாக நினைப்பதாகத் தோன்றுகிறது. திரைப்பட இதழ்கள் பல நேர்காணல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. அலைபேசிகளும் இணையமும் வந்த பின்பு வினாக்களை அனுப்பிப் பதில்களைப் பெற்று வெளியிடும் வடிவமாக நேர்காணல்கள் மாறிவிட்டன. அதன் காரணமாகவே, இந்த நேர்காணல்கள் தொடர்ச்சியற்ற உரையாடல்களாக இருக்கின்றன. 

நேர்காணல்கள் செய்யப்படும் கலை இலக்கிய ஆளுமைகளின் ஈடுபாடுகள், வெளிப்பாடுகள் குறித்த பல தளங்களையும் வெளிக்கொண்டுவரும் நோக்கம் சிதறலாக மாறிவிட்டன. நேரடியாகப் பார்த்துப் பேசாமல் எடுக்கப்படும் வினா-விடை பாணியிலான நேர்காணல்களில் இத்தகைய குறைபாடுகள் தவிர்க்க முடியாதன. குத்து மதிப்பான கேள்விகளை அனுப்பும் பேட்டியாளருக்குத் தொடர்ச்சியற்ற விடைகளைச் சொல்லித் தப்பிக்கிறார்கள் ஆளுமைகள். ஒரு கேள்விக்குப் பின்னால் எழுப்பப்படும் துணைக்கேள்வி வழியாகவே நேர்காணலைக் காத்திரமான விவாதங்களாக ஆக்கமுடியும். ஆளுமைகளின் கலை இலக்கியப்பார்வை, சமகால இலக்கியப் போக்கில் அவரது இடம், சூழலோடும் கலை இலக்கியக் கோட்பாட்டுகளோடு அவரது நெருங்கலும் விலகலும் போன்றனவற்றை வெளிக்கொணராத நேர்காணல்கள் அந்த வடிவத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும். அண்மையில் வாசித்த பலரது நேர்காணல்கள் இதனை உறுதிசெய்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்