தேர்தல் 2019 -II

05-04-19/எதிரிகளாகவும் சீர்திருத்தம் வேண்டுபவர்களாகவும்

இன்றைய இந்தியாவில் தேசிய கட்சிகள் என்னும் அடையாளம் தாங்கிய அணிகளாக மூன்றைக் காட்டலாம். மைய அரசின் அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதாகட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணி இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் செல்வாக்குடன் இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் அணி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் சமமாக இல்லையென்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கும் இடத்தில் இடதுசாரிகளாக அறியப்படும் இந்தியக் கம்யூனிஸ்டும் அதிலிருந்து உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நட்புமுரணோடு ஒரே அணியாக இருக்கின்றன. இந்தப்பின்னணியில் இந்தப் பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்கால நெருக்கடிகள் இரட்டை எதிர்வை - இருமுனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது

பொருளாதாரக் கொள்கை, சமூக அமைப்பைக் கட்டமைத்தல், இவ்விரு நிலையிலும் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் இடம் ஆகியவற்றில் இந்திய தேசியக் காங்கிரசுக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரண்டுக்கும் முரண்பட்ட நிலைகளே அதிகம். இரண்டிலும் தளர்வான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் வேண்டும் என இரண்டு கட்சிகளுமே நினைக்கக்கூடியன. மறுபரிசீலனையில் இருக்கின்றன என்பதை அண்மைக்கால நடைமுறைகளும் நேர்காணல்களும் காட்டுகின்றன. அந்த வகையில் இரண்டும் இயல்பான எதிரிகள்.

இவ்விரு கட்சிகளையும் மிரட்டும் நிலையில் தீவிரமான வலதுசாரிப் பொருளியல் கொள்கைகளையும் அடிப்படைவாதச் சமூகக் கொள்கைகளையும் பின்பற்றும் இன்னொரு தேசியக் கட்சி இடையில் கிளர்ந்தெழுந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஐந்தாண்டுகளாக அதிகாரத்தில் இருந்து அனைத்து அமைப்புகளையும் சிதைத்து மக்களாட்சி முறைக்கும் பங்கேற்பு அரசியலுக்கும் ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியை உணர்ந்த நிலையில் தான் மும்முனைப் போட்டிக்குப் பதிலாக இரட்டை எதிர்நிலைப் போட்டி உண்டாக்கியிருக்கிறது.

இதனைச் சரியாகப் புரிந்துகொண்ட மனநிலையைக் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் திரு. ராகுல் காந்தி தொடர்ந்து தனது உரைகளிலும் நேர்காணல்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். நேற்று கேரள மாநிலத்து வயநாட்டில் தனது போட்டிக்கான மனுவை அளித்துவிட்டுப் பேசிய பேச்சிலும் காட்டியிருக்கிறார். பக்குவமான பேச்சு. இந்தப் பக்குவமனநிலையை இடதுசாரிகளும் வெளிப்படுத்த வேண்டும்; அதுதான் இந்தத் தேர்தலின் தேவை. சீர்திருத்தத்தை விரும்புபவர்களாகவும் எதிரிகளாகவும் இருக்கமுடியும் எனக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. நாடாளுமன்றத்தை அரசியல் சொல்லாடல்களால் - பொருளியல், சமூகம், பண்பாடு, அறிவு, தத்துவம், நுண்ணரசியல், பேரரசியல் எனப் பலவற்றால் நிரப்பும் நபர்களால் நிரப்பவேண்டும். அதற்கு ராகுல் காட்டும் பக்குவத்தை இடதுசாரிகளும் காட்டவேண்டும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசையல்ல.

05-04-19/ பொதுமனம் என்னும் நகைமுரண்

கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், போக்குவரத்துக் கழகங்கள், வங்கிகள் போன்றன அரசு நடத்தும்போது சேவை நிறுவனங்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சமநிலைத் திறன் வளர்ச்சிகள் முன்வைக்கப் படுகின்றன. சமநிலைப் பார்வைகள் தேவை என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. இந்த எதிர்பார்ப்புகளும் வலியுறுத்தல்களும் தனியார் நிறுவனங்கள் பற்றிய பார்வைகளாக இல்லை. தனியாரும் தனியார் அறக் கட்டளைகளும் நடத்தும்போது சேவைக்குப் பதிலாக லாபம் அடைவதற்கான உரிமை இருப்பதாக ஏற்றுக் கொள்கிறது பொதுமனம். வேலை வாய்ப்புகள், அனுமதிகள், ஒப்பந்தங்கள் வழங்கும்போதும் தனியார் நிறுவனங்கள் பற்றிக் கண்டுகொள்ளாத பொதுமனம் அரசு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்திப் புகார்ப் பட்டியலை வாசிக்கின்றது. இருவேறுபட்ட பொதுமனப் பார்வையின் சிக்கல்களின் பின்னணிகள் அறியாமையின் வெளிப்பாடுகளே.

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் முழுமையும் தனியார் நிறுவனங்கள் அல்ல. அவை நிலமாக, மானியமாக, சம்பள உதவியாக, இலவசக் கருவிகள் வழங்கலாக என அரசிடமிருந்து பெறும் உதவிகள் பலவிதமானவை. இவைகளை வழங்கும் பொறுப்பில் உள்ள அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகக் கவனித்துக் கொடுக்க வேண்டியனவற்றைக் கொடுத்துப் பெற வேண்டியனவற்றைப் பெற்றுக்கொள்கின்றன. பார்க்க வேண்டியவர்களைப் பார்ப்பதற்கும் கவனிக்க வேண்டியவர்களைக் கவனிப்பதற்கும் கணக்கில் வராத -கணக்கில் காட்டாத செல்வத்தைப் பயன்படுத்துகின்றன. அதன் வழியாக உருவாகும் மதிப்பு மற்றும் செல்வாக்கு அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒருவிதத்தில் மரியாதையையும் இன்னொரு விதத்தில் அச்சத்தையும் உருவாக்குகிறது. மரியாதைக்காக நிர்வாகியிடம் பணிவுகாட்டி வேலை செய்கிறார்கள். அச்சம்கண்டு வேலை செய்பவர்களும் பணிந்து போகிறார்கள். விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகள் தனியார் நிர்வாகத்தின் திறமையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் நேரடியாகத் தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் தங்கள் விருப்பம்போல விருதுகள் வழங்கமுடியும்; பணமுடிப்புகள் தரலாம்; சிலரைக் கண்டறிந்து அவர்களுக்குக் கூடுதல் சம்பளமும் வழங்கமுடியும்,

அரசுத்துறையின் உயர்பதவிக்கு வருபவர்கள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறானவர்கள். அவர்கள் பெரும்பாலும் பணி மூப்பு காரணமாக உயர்நிலைக்கு வரும் வாய்ப்புடையவர்கள். அவர்களுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இல்லை. குறிப்பாகச் சரியாக வேலை செய்யாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட்டுத்தன்மை கொண்டது. தனியொருவராக நடவடிக்கைகளை எடுத்து விட முடியாது. தனியார் நிறுவனங்களைப் போல கணக்கில் வராத செல்வம் - பணத் திரட்சியை உருவாக்குவது சாத்தியமில்லை. அதனால் கவனிக்கவேண்டியவர்களைக் கவனிக்கும் விதம் அறிந்திருந்தாலும் செய்ய இயலாதவராக இருப்பார். அதையும் தாண்டி ஒருவர் செய்தால் அது அவரது திறமையாகப் பார்க்கப்படாமல் அவரது ஊழலாகவும் விதிமீறலாகவும் கணிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில் தனக்குக் கீழுள்ளவர்களைச் சிறந்த பணிகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கவும் முடியாது. தவறாக வேலை செய்பவர்களைத் தண்டிக்கவும் முடியாது.

இந்தச் சிக்கல்களைச் சரிசெய்வது பற்றிச் சிந்திக்காமல் அரசுத் துறைகளுக்குப் பதிலாகத் தனியார் துறை இங்கே பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளுக்குப் பின்னே சமுக நலன் சார்ந்த அடிப்படைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறைகள் இல்லை. மிகச் சிறுபான்மையினரால் அமைப்புகள் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்; அவர்களின் கீழ் அனைவரும் பணிசெய்ய வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசியாக அது வல்லரசுக்கனவு; பிராமணிய அறிவு போன்றவற்றைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும். இட ஒதுக்கீட்டை ஒழிப்பது, உரிமைகள் கேட்பது - குறிப்பாகப் பெண்கள் சமநிலைக்காகக் குரல் கொடுப்பது தவறு போன்ற நிலைபாடுகள் கொண்டதாகவும் இருக்கும். வேறுபாடுகள் இல்லாத சமூக அமைப்பே கிடையாது என்று வாதம் செய்வதின் வழியாக இந்தியச் சாதிய அமைப்பான வர்ணாச்சிரம நிலைப்பாடுகளை ஏற்கும். இவை அடிப்படைவாத நிலைப்பாடுகள் என்று சொன்னால் தேச வளர்ச்சியும் நாட்டுப்பற்றும் அளவுகோல்களாக ஆக்கப்படும். இதுதான் இந்தியப்பொதுமனம்

இந்தியப் பொதுமன உருவாக்கம் என்பது பிராமணியத்தின் அடிப்படைவாதத்தை மூளைக்குள் நிறுத்தி விவாதிக்கும் நகை முரண்வாதம். கடந்த அரை நூற்றாண்டாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியப்பொதுமனம், அடிப்படைவாதத்தின் அடையாளமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்கும் கூட்டத் திரட்சியாகப் கட்டமைந்து விட்டது. இங்கே இந்தப் பொதுமனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையறியாது தவிக்கின்றன மாற்று அமைப்புகள்.

31-03-19/ஊடகங்களுக்குத் தேவை

வியாழன் வெள்ளி இரண்டு நாட்களும் கோவை மாநகரில் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றினேன். இரண்டு கிராமங்களுக்கும். சில நேரங்களில் நகரப் பேருந்து. ஆட்டோ, அங்கங்கே நடை. தேர்தல் நடக்கப் போகும் சுவடுகளே இல்லை. நேற்றுப் பகல்நேர ரயில் பயணம் சென்னை நோக்கி. ஒருத்தரும் அரசியல் பேசவில்லை. அலைபேசிகளில் தலைகள் கவிழ்ந்திருந்தன.
சென்னைத் தெருக்களும் தேர்தலைக் காட்சிப்படுத்தவில்லை. விரையும் வாகனங்களில் கொடிகள் பறக்கவில்லை. வெள்ளை வேட்டிகள் வலம் வரக்காணோம்.

தொலைக்காட்சியின் கண்ணாடித்திரைகள் வாக்குகள், ஓட்டுகள், வாய்ப்புகள், புள்ளிவிவரங்கள், கருத்துருவாக்கங்ள், கட்சி பேதங்களெனக் கலவரப்படுத்துகின்றன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் தேர்தல் திருவிழாக்கள் பார்வையாளர்களின் மனத்தில் அலைகின்றன. நான்காவது தூண்கள் பாரஞ்சுமக்கின்றன.மக்களாட்சியின் இருப்புக்காக அல்ல. அவற்றின் வாழ்தலுக்காக


17/03-19/ஊடகங்களை ஆணையில் வைக்கலாமா?

தனிமனிதர்களுக்கெனத் தனி வாழ்க்கை இருக்கிறது. அதைத் தீர்மானிக்கும் இடத்தில் அவரது மனமே இருக்கிறது என்கின்றன சமயங்கள். மனத்தை ஆன்மா, ஜீவன், உயிர் எனப் பேசும் சொல்லாடல்கள் சமயங்களின் சொல்லாடல்களே. அந்த மனத்தைக் கடவுளால் நிரப்பிக்கொள்வதின் மூலம் சரியான மனிதர்களாக வாழமுடியும்; இயங்கமுடியும் என்பது அச்சொல்லாடல்களின் வழிகாட்டுதல் ஆகும்.

இதற்கு மாறானது மனிதர்களின் சமூக இருப்பு. தனிமனித வாழ்க்கை சமூகத்தின் - அதன் இயக்கத்தின் பகுதியாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தைச் சூழலின் போக்கைத் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரத்திற்கு வழங்கிவிட்டு அதன் போக்கில் நகர்கிறார்கள் மனிதர்கள் என்பது நவீனத்துவ அறிவு தரும் விளக்கம்.

அரசியலின் ஆணைகளால் நகர்த்தப்பட்ட மனிதர்களைத் திசைதிருப்பி நடத்துவனவாக இருக்கின்றன ஊடகங்கள். ஊடகங்கள் என்ற பொதுச்சொல்லிற்குள் இன்று வலிமையானதாகத் தோற்றம் தரும் காட்சி ஊடகங்கள் நிகழ்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. அச்சு ஊடகங்களும், ஒலிவழி ஊடகங்களும் பெருங்கருவிகளின் உதவியோடு எல்லாவற்றிலும் அலையும் தன்மையைக் கொண்டுவந்து விட்டன. இந்த மாற்றம் இயல்பாகவே தீவிரத் தன்மைக் கெதிரானவை. நாளொன்றுக்கு மூன்று தடவை சாப்பிடும் ஒருவனுக்கு உணவுப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கலாம். ஆனால் 24 மணிநேரமும் சாப்பிடுவேன் எனச் சொல்பவனுக்கு எந்த உணவு வகைகளைப் பரிந்துரை செய்ய முடியும்? எதையாவது தான் முன்னே வைக்க வேண்டும். அப்படித்தான் நமது ஊடகங்கள் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஊதிப் பெருக்கித் தந்து கொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் ஒவ்வொரு நாளிலும் - அதற்குள் சில மணி நேரங்களுக்குள் புதியபுதிய போக்குகளை உருவாக்கித் தரும் சமூக ஊடகங்களும் இணைந்து கொண்டுவிட்டன.

இந்திய ஊடகங்கள் அரசியல் பேசத் தொடங்கியதன் பின்னணிக் காரணங்களில் முதலிடம் உலகமயம் என்னும் பொருளாதாரச் சொல்லாடலுக்குரியது.
உலகமயம், தனது பொருளாதார நகர்வுகளைப் பின்னங்கால்களில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது என்பதை விளக்கிக் காட்ட முனைந்த போது 'ஊடகங்களைப் பற்றிய பேச்சும், ஊடகங்களின் பேச்சும்' அரசியல் பேச்சாக ஆகிப் போயின. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கைகாட்டி வழியனுப்பிய இந்திய நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ அலைவரிசைகளின் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தின் மெல்லிதழ்களால் வருடப் பெற்றதைச் சுகம் எனக் கருதித் தழுவிக் கொண்டன. அரசாங்கம் தொடங்கிய மெட்ரோ அலைவரிசைகள் ஓராண்டிற்குள் ஒடுங்கிப் போக பன்னாட்டு ஊடக முதலாளி முர்டாக் ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணியாய் தனது ஊடக வலைப்பின்னலை இந்தியாவிற்குள் இறக்கி அனுப்பினார். இதெல்லாம் 1990-களின் கதை.

உலகமயம், தனது பொருளாதார நகர்வுகளைப் பின்னங்கால்களில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது என்பதை விளக்கிக் காட்ட முனைந்த போது 'ஊடகங்களைப் பற்றிய பேச்சும், ஊடகங்களின் பேச்சும்' அரசியல் பேச்சாக ஆகிப் போயின. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கைகாட்டி வழியனுப்பிய இந்திய நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ அலைவரிசைகளின் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தின் மெல்லிதழ்களால் வருடப் பெற்றதைச் சுகம் எனக் கருதித் தழுவிக் கொண்டன. அரசாங்கம் தொடங்கிய மெட்ரோ அலைவரிசைகள் ஓராண்டிற்குள் ஒடுங்கிப் போக பன்னாட்டு ஊடக முதலாளி முர்டாக் ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணியாய் தனது ஊடக வலைப்பின்னலை இந்தியாவிற்குள் இறக்கி அனுப்பினார். இதெல்லாம் 1990-களின் கதை.

உலகமயம், தனது பொருளாதார நகர்வுகளைப் பின்னங்கால்களில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது என்பதை விளக்கிக் காட்ட முனைந்த போது 'ஊடகங்களைப் பற்றிய பேச்சும், ஊடகங்களின் பேச்சும்' அரசியல் பேச்சாக ஆகிப் போயின. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு கைகாட்டி வழியனுப்பிய இந்திய நடுத்தர வர்க்கம், பெருநகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ அலைவரிசைகளின் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தின் மெல்லிதழ்களால் வருடப் பெற்றதைச் சுகம் எனக் கருதித் தழுவிக் கொண்டன. அரசாங்கம் தொடங்கிய மெட்ரோ அலைவரிசைகள் ஓராண்டிற்குள் ஒடுங்கிப் போக பன்னாட்டு ஊடக முதலாளி முர்டாக் ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணியாய் தனது ஊடக வலைப்பின்னலை இந்தியாவிற்குள் இறக்கி அனுப்பினார். இதெல்லாம் 1990-களின் கதை.

உலகமயம் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இப்போது நிலைமை முற்றிலும் மாறிப் போய் விட்டது. இந்தியப் பெருமுதலாளிகளே பன்னாட்டு ஊடகத் தொழிலைக் கைப்பற்றி, இந்திய மனத்தோடு- தமிழ்த் தன்னிலையோடு- உலக மக்களாக வாழப் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரான்சில் வாழும் புதுக்கோட்டைப் பெண்மணியும், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாகர்கோவில்காரரும், ஆண்டாள் அழகரையும், வள்ளியையும் பார்த்து இந்தியப் பெண் தன்னிலைக்குள் தங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். இளம்பெண்களும் யுவன்களும் மானாகவும் மயிலாகவும் நம்பர் ஒன் ஜோடிகளாகவும் ஆடிக் காட்டும் நடனத்தில் மெய்மறக்கிறார்கள். இல்லையென்றால் ” ஒருவார்த்தை ஒருலட்சம்?”’காதல் கீதங்கள்’ என்பதைக் கேட்டுவிட்டுத் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள்.

பெண்களுக்கான சரக்குகள் இவையென்றால் ஆண்களுக்குத் தேவை அரசியல். சொந்தக் கருத்தில்லாத மனிதர்களைத் திரும்பத் திரும்ப அஇஅதிமுக x திமுக என்ற எதிர்வுகளுக்குள் நிறுத்த முயலும் வாதங்களும் பிரதிவாதங்களும் நடக்கின்றன. எப்படியாவது பாரதீய ஜனதாவின் கருத்துக்களை விதைத்துவிடலாம் என நம்பிய செய்தி அலைவரிசைகள் தேர்தல் நெருங்கியவுடன் இரட்டை எதிர்வுக்குள் நகர்வதே உத்தமம் என முடிவுக்கு வந்துவிட்டன. தகவல் ஊடகங்கள் எல்லாவற்றையும் தனது ஆணைகளால் வழி நடத்துகின்றன.
17-03-19/
வேறுபாடுகளைக் கூர்தீட்டி
மதம் இனம் மொழி சாதி மண் மட்டையெனப்
பேசிக் கொலைகளை நியாயப்படுத்துகிறது
பெரும்பான்மை வாதமென்னும் பாசிசம்

18-03-19 தேர்தல் ஆணையம் : உடையக் காத்திருக்கும் பலூன்.

இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் வழியாக நல்லாட்சி நடத்துவதற்கான மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றபோதிலும் தேர்தல் திருவிழாவிற்காகக் காத்திருப்பதில்லையா? போட்டியிடும் கட்சிகள் குறித்து, அமையும் கூட்டணிகள் குறித்து, அவற்றின் தந்திரமான உத்திகள் குறித்து, நிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து என தொடர்ந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறோம். எல்லாமே ஒருவிதத்தில் பாம்பும் பிடாரனும் அவரது நண்பர்களும் நடத்தும் கூட்டுவினைகள் போலவே இருக்கின்றன. இப்போது தேர்தல் ஆணையத்தை எடுத்துக்கொள்வோமே..

தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிக்கையைச் சொன்ன நாள் முதல் அரசாங்கம் என்பதே தேர்தல் ஆணையம் தானோ என்ற ஐயம் வருகின்ற அளவிற்கு அண்மைக் காலங்களில் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுவர்களில் எழுதப்படும் விளம்பரங்களை அழிப்பது தொடங்கி, வரிசைகட்டும் கார்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வினயல் தட்டிகளை வைப்பதைக் கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்யும் விளம்பரங்களைக் கண்காணிப்பது எனத் தேர்தல் ஆணையம் தன் இருப்பைக் காட்டுவதின் உச்சமாக ஒவ்வொரு நெடுஞ்சாலைகளிலும் காவல் துறையினரை நிறுத்திப் பணப்பரிமாற்றம் நடப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருந்தொகைகளைக் கைப்பற்றுவது என நீள்கிறது.
இதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அரசமைப்பை விடக் கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகப் பாவனை செய்கிறது. தேர்தலில் வேட்பாளர்களாகப் பங்கேற்க விரும்பும் அரசியல்வாதிகளிடம் காட்டும் அதிகாரத்தை மெதுவாக நகர்த்தி வாக்காளர் களுக்கும் உணர்த்துகிறது ஆணையம். கட்டுப்பாடுகள் சார்ந்த அரசின் இருப்பைத் தனது இருப்பாகக் காட்டும் தேர்தல் ஆணையத்தின் மீது தேர்தல் காலத்தில் ஏற்படும் நன்மதிப்பின் பின்னணியில் அதன் வேறுசில செயல்பாடுகளும் பாராட்டத் தக்கதாகவே உள்ளன.

19-03-19//அடையாள அரசியல்X மையநீரோட்டம்

தமிழகப் பெருங்கட்சிகள் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் போதிய வாய்ப்புகள் தரவில்லை என்ற வாதம் அடையாள அரசியலின் தாக்கத்தை அறியாதவர்களின் வாதம். மைய நீரோட்டத்தை முன்னெடுக்கும் பெருங் கட்சிகளின் செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் அதிருப்தி ஏற்பட்ட காரணத்தால் தான் ‘ நாங்கள் சிறுபான்மையினர், நாங்கள் பெண்கள், நாங்கள் விளிம்பு நிலையினர், நாங்கள் அரவாணிகள், நாங்கள் மலையின மக்கள், நாங்கள் தலித்துகள்' என அடையாள அரசியல் எழுந்தது.

அடையாள அரசியலை முன்னெடுத்து மைய நீரோட்டக் கட்சிகளிலிருந்து வெளியேறி வந்த பின் திரும்பவும் அவர்கள் வாய்ப்பு வழங்கவில்லை எனப்பேசுவது அர்த்தமற்றது. பிரிந்து வந்தவர்கள் அடையாள அரசியலையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல், திரும்பவும் கூட்டணி என்ற பெயரில் மைய நீரோட்டத்தோடு இணைந்து உரிய இடம் கேட்பது பெருங்கட்சிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கமாகவே கருதப்படும்.
அடையாள அரசியலில் தலித் அடையாளம் மட்டும் விதிவிலக்கானவை. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு காரணமாகத் தலித்துகளுக்குரிய தனித்தொகுதிகளில் தலித்துகளே நிற்கின்றனர். அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. அடையாள அரசியல் பேசும் ஒரு சிறிய கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்போது மைய நீரோட்ட அரசியலை முன்னெடுக்கும் பெரிய கட்சி, தன் கட்சியில் இருக்கும் தலித்துகளுக்குரிய இடத்தைக் குறைக்கவேண்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுப்பதின் மூலம் திமுக.வில் இருக்கும் தலித்துகள் அதனை இழந்ததாகவே கருதுவர். அதனால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் கூடும். இதனையும் மைய நீரோட்ட அரசியல் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அ இ அதிமுக தலைமையில் புதிய தமிழகத்திற்கு ஒரு இடத்தைத் தருவதின் மூலம் தென்காசியில் இருக்கும் அஇ அதிமுக தங்கள் கட்சியினரின் ஆதரவை இழக்கவே செய்யும்.
இந்தச் சிக்கல் மைய நீரோட்ட அரசியல் × அடையாள அரசியல் என்பதின் இடையே நடக்கும் இயங்கியல் சிக்கல்.

18-03-19//எங்கள் வாக்குகள் விற்பனைக்கல்ல

அவரது திறமையை 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்கூடாகப் பார்த்தேன். எங்கள் தெருவிலிருந்த 20 வீடுகளில் 12 வீடுகளுக்குப் பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை உறுதி செய்து கொண்டார். என்னிடம் ஓட்டும் கேட்கவில்லை; பணம் தரவேண்டும் என்றும் கருதவில்லை. 13 ஆண்டுகளில் 6 முறை தேர்தல் வந்துவிட்டது. இரண்டுமுறை அவரே வேட்பாளர். பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றிபெற்றவர். ஒருமுறைகூட தனக்கோ, தனது கட்சிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டதில்லை. என்னை எதிர்க்கட்சிக்காரர் என்று நினைத்து ஒதுக்கி விடுகிறார் என்றும் சொல்லமுடியாது. ‘அவர் கேட்டுக்கொள்வதால் நான் வாக்களித்து விடுவேன்’ என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஒருவர் சொல்வதால் யாருக்கும் வாக்களிக்கும் மனிதர் கிடையாது என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்.

என்னைப் பற்றி அவர் தெரிந்துகொண்டது எனது எழுத்தின் மூலமாக என்பதால், மிகுந்த மரியாதையோடு பேசுவார். 2008 முதல் 2010 வரை- மூன்று ஆண்டுக்காலம் தினமலர் நெல்லைப் பதிப்பின் செய்திமலரில் கட்டுரைத் தொடரொன்றை எழுதினேன். அதனைத் தொடர்ந்து வாசித்துவிட்டுச் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு கட்டுரை குறித்து விவாதிப்பார். நான் முன்வைக்கும் வாதத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலும் ஒரு அரசியல்வாதியாக நடைமுறைப் படுத்துவதிலிருக்கும் சிக்கல்களைச் சொல்லிவிடுவார். இவ்வளவு எழுதும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் வாக்களிக்கும்படி கேட்பதில் இருக்கும் சங்கடத்தை அறிந்தவர். பணம் தருவதாகச் சொன்னால் ஒருவேளை நம்மை மாட்டியும் விட்டுவிடுவார் என நினைத்திருக்கக் கூடும். இரண்டாவது தடவையாகப் பஞ்சாயத்துத் தலைவருக்கு நின்றபோது சொன்னார், ”நீங்களெல்லாம் மனச்சாட்சிப்படி ஓட்டுப் போடுவீங்கய்யா. ஒங்ககிட்டெ நான் ஓட்டுக் கேட்க மாட்டேன்; எல்லாருக்கும் தர்றமாதிரி கைச்செலவுக்குக் காசெல்லாம் தரவும் மாட்டேன்” என்றார். அந்த முறை அவருக்குத் தான் வாக்களித்தேன்.
தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் இப்படித்தான் பணப்பட்டுவாடாவைச் செய்கின்றன. கிராமம், தெரு என ஒவ்வொரு அலகிற்கும் நம்பகமான ஆட்களை வைத்திருக்கிறார்கள். அந்த அலகில் எந்தெந்தக் குடும்பம் எந்தக்கட்சியின் ஆதரவாளர்கள் என்பதைக் கச்சிதமாகக் கணக்கிட்டு வைத்துள்ளனர். சமமான அளவைவிடக் கூடுதலாக ஒரு கிராமத்தில்/ தெருவில் கிடைக்கும் வாக்கு உறுதியாகும் நிலையில் வெற்றி தோல்வியை நிச்சயித்துக் கொள்கிறார்கள்.

18-03-19
===========
நிகழும் காலத்தில் வெற்றி
நிகழ்ந்த காலத்திலும் அதுதான்
நிகழும் காலத்திலும் இதுவே.
நிகழ்ந்த காலத்திலும் அதுதான்
நிகழும் காலத்திலும் இதுவே.
நிகழ்ந்த காலத்திலும் அதுதான்
நிகழும் காலத்திலும் இதுவே.
உள்வாங்கி உயர்த்துதல்
வெளித்தள்ளி விரட்டுதல்
மண்ணின் பெருமை
மாநில மேன்மையும்
மரபு பேணலும்
தேசப்பற்றும் மதச்சார்பின்மையும்
இப்படி இப்படியாகச் சொல்லி
இந்தியாவைச் செய்வோம்
இந்தியாவில் செய்வோம்
எனப்பேசும் எல்லாமும்
வெற்றிக்குத்தான்;
தேர்தல் வெற்றிக்குத்தான்
வெளித்தள்ளி விரட்டுதல்
மண்ணின் பெருமை
மாநில மேன்மையும்
மரபு பேணலும்
தேசப்பற்றும் மதச்சார்பின்மையும்
இப்படி இப்படியாகச் சொல்லி
இந்தியாவைச் செய்வோம்
இந்தியாவில் செய்வோம்
எனப்பேசும் எல்லாமும்
வெற்றிக்குத்தான்;
தேர்தல் வெற்றிக்குத்தான்
வெளித்தள்ளி விரட்டுதல்
மண்ணின் பெருமை
மாநில மேன்மையும்
மரபு பேணலும்
தேசப்பற்றும் மதச்சார்பின்மையும்
இப்படி இப்படியாகச் சொல்லி
இந்தியாவைச் செய்வோம்
இந்தியாவில் செய்வோம்
எனப்பேசும் எல்லாமும்
வெற்றிக்குத்தான்;
தேர்தல் வெற்றிக்குத்தான்
பள்ளம்நிரப்பி மேடாக்குதல்
பெண்களுக்குப் பங்களிப்பு
சமூகநீதிக்கு வரவேற்பு
மொழிப்பற்றும் இனப்பற்றும்
இப்படி இப்படியாக
விவாதிப்பதும் விவாதித்து
விவேகம் காட்டுவதும்
எல்லாம் வெற்றிக்குத் தான்
கொள்கைகள் அல்ல
எண்ணிக்கைகள்
எல்லாம் எண்ணிக்கைகள்
கொள்கைகள் அல்ல
எண்ணிக்கைகள்
எல்லாம் எண்ணிக்கைகள்
கொள்கைகள் அல்ல
எண்ணிக்கைகள்
எல்லாம் எண்ணிக்கைகள்

18-03-19// வாரிசுகள்: எங்கும் எதிலும் வாரிசுகள்

வரப்போகும் தேர்தலில் நேரு குடும்பத்து வாரிசு தான் பிரதமராக வர வேண்டும் எனக் குரல் கொடுக்க வேண்டியதில்லை. நாடாளுமன்ற உறுப்பினராகப் பயிற்சி பெற்ற ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராகித் தலைவராகவும் ஆகிவிட்டார். ஆக்கப்பட்டுக் கட்சி நிர்வாகம் என்னும் அனுபவங்களைப் பெற்று வருகிறார். அடுத்து அவர் அமர வேண்டிய இருக்கை நேரடியாகப் பிரதமர் பதவி என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லக் கூடும்.

இந்தியாவின் மைய அரசாங்கத்தின் அதிகாரம் நேரு குடும்பத்தின் சொத்தாக ஆகி விட்டது எனச் சொல்பவர்கள் அக்கூற்றை இனி விட்டு விட வேண்டியதுதான். ஏனென்றால் இன்று பெரும்பாலான மாநிலங்கள், வாரிசுகளின் ஆட்சியைப் பார்த்து விட்டன. இடதுசாரிகள் மட்டுமே இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள். ஆனாலும் கேரளத்தில் கருணாகரனின் குடும்ப அரசியல் நடக்காமல் இல்லை. ஆந்திரத்தில் என்.டி.ராமாராவின் மகன்கள், மருமகன் எனத் தொடர்கிறது. கர்நாடகத்தில் தேவே கௌடாவின் குடும்பமும், ஒரிசாவில் பட்நாயக்கின் குடும்பமும், மகாராஷ்டிரத்தில் தாக்ரேயின் குடும்பமும், மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாக்களின் குடும்பமும், பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் யாதவ்களின் குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை யாருக்கும் விட்டுத்தரத் தயாரில்லாத குடும்பங்களாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ஹரியானாவின் லால்களின் குடும்பத்தையும் பஞ்சாப்பின் பர்னாலாக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.கர்நாடகாவின் கௌடாக்களின் வாரிசுகள் திரும்பவும் தாத்தாவுக்குப் பிரதமர் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுமே எனக் கண்ணீர் விட்டுக்கதறுகிறார்கள்.
தன்னாட்சி, சுய அதிகாரம், தேசிய நிர்ணயத்திற்கான போராட்டம், தனி நாட்டுக் கோரிக்கைக்கான யுத்தம் எனக் கலவரம் தொடரும் காஷ்மீரிலேயே வாரிசுகள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்திருக்கிறது என்பதை ஜனநாயக அரசியலின் சோகம் எனப் பலர் சொல்லக் கூடும். அதே போல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், மைய அரசியலிலும் வாரிசுகள் ஆட்சி என்ற சாபம் தான் இங்கு சாத்தியம் எனச் சொல்லிச் சலிப்பை வெளிப்படுத்தி ஓய்ந்து விடலாம்.
காஷ்மீர் அரசியலில் தொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளைக் கண்ட - நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பம் அப்துல்லாவின் குடும்பம். முதல்வராகப் பொறுப்பேற்ற உமர் அப்துல்லா இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் வயதில் மிகவும் இளையவர். நாற்பது வயதைத் தொடாதவர். ஆனால் அவரது அரசியல் அறிவு நீண்ட காலப் பின்னணி கொண்டது. தேசிய மாநாட்டுக் கட்சியின் புரவலரான அவரது தந்தை பரூக் அப்துல்லா இதே நாற்காலியில் அமர்ந்து அனுபவம் பெற்ற அரசியல்வாதி. பரூக் அப்துல்லா மட்டுமல்ல, அவரது தந்தையும் காஷ்மீர் அரசியலில் பிரிக்க முடியாத பெயர்தான். காஷ்மீர் சிங்கம் என அழைக்கப் பட்ட சேக் அப்துல்லா தான் காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளைத் தக்க வைக்கக் காரணமானவர். ஆக ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்து உறுப்பினராகத் தான் உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்வராக ஆகிறார். அவர் வரவில்லை என்றால் இன்னொரு அரசியல் பாரம்பரியக் குடும்பமான – முப்தி முகம்மது சையத்தின் மகளான மெகபூபா முகமது முதல்வராக ஆகி இருக்கக் கூடும். ஆக எந்தக் கூட்டணி அதிகாரத்திற்கு வந்தாலும் காஷ்மீரில் தொடரப்போவது வாரிசுகளின் அதிகாரம் தான்.
தமிழ் நாட்டின் கதையைக் கேட்கவே வேண்டாம். அதிகாரத்தில் இருந்த இரண்டு ஆளுங்கட்சிகளின் குடும்ப அரசியலுக்கீடாக எதிர்க் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இல்லாமல் இல்லை. புதிதாகக் கட்சி ஆரம்பித்து வாரிசு அரசியலைச் சாடிய விஜயகாந்த் தனது அதிகாரம் அடுத்துத் தன் மனைவியோ, மச்சானோ தான் அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றார், மாநில அளவில் நடக்கும் வாரிசு அரசியலுக்கு ஈடாக மாவட்ட அளவிலும் அரசியல் குடும்பங்களின் உறுப்பினர்களே அதிகார மையங்களாக இருக்கின்றனர். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளைப் போல அதிகாரத்தையும் வருவாயையும் பிரித்துக் கொடுக்கத் தயாராக உள்ள அமைப்பைக் கொண்டிருப்பது புரியவரலாம். இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், தென் கிழக்காசிய நாடுகளின் அண்மைக்கால அரசியல் நிகழ்வு களைக் கூர்மையாகக் கவனித்திருப்பார்களானால் அப்படிச் சொல்லத் தயங்கவே செய்வர். ஏனென்றால் இது இந்தியாவின் பொதுக்குணம் மட்டுமல்ல; தென்கிழக்காசிய நாடுகளின் பொதுமன வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

பக்கத்து நாடுகளின் கதைகள்

வங்கதேசம் என்னும் நாட்டை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மானின் மகள் அவர் என்பதுதான் அவருக்கு உள்ள சிறப்பு. தேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்ட பின்பு ஆட்சிக்கு வந்த ராணுவத் தலைவர்களாலும் , ஊழல் அரசியல்வாதிகளின் அதிகார வெறியாலும் சிதறிப்போன வங்க தேசம் திரும்பவும் ஷேக் ஹசினாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப் பார்க்கிறது. ஆம் வாரிசுகளிடம் ஆட்சிக் கட்டிலை வழங்கிப் பார்ப்பது அங்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது.
வங்காளதேசத்தில் மட்டும் அல்ல பாகிஸ்தானில் புட்டோவின் மகள் பெனாசிர் வந்தார். பிற்கொரு தேர்தலில். அவரது கணவர் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பெனாசிர் புட்டோ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்புகர் அலி புட்டோவின் மகள் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அப்படியே பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குப் போனால் குமாரதுங்க குடும்பத்தினருக்கு அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்ட வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. மகிந்தாவின் வாரிசுகளும் இப்போது முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பர்மா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து எனக் கீழ்த்திசை நாடுகளின் வரலாறுகள் – ஜனநாயகம், தேர்தல் வாக்கெடுப்பு என நவீன சொல்லாடல்களைப் பயன்படுத்திய போதும் வாரிசுகள் அதிகாரத்திற்கு வருவதை அங்கீகரிக்கும் நிலையையே தொடர்கின்றன.

பொதுப்புத்தியின் இயங்குநிலை

உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப் படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அக வாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்கின்றனர்.
புலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது. அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் நமது மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்