வித்தியாசங்களில் மிளிர்கின்ற வானவில்

“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக்கொண்டும் மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத்தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிராமப் பஞ்சாயத்து நாட்டாமைகளைப் போலவே நகரத்தெருக்களிலும் அரங்குகளிலும் திரளான மக்கள் முன்னால் சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. அங்கும் நிகழ்ச்சிகள் முடியும்போது தெள்ளத்தெளிவான முடிவு இதுதான் எனச் சொல்லி மக்கள் அனுப்பப்படுவார்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரியா? தவறா? மக்கள் வாழ்வதற்கேற்ற இடங்கள் நகரங்களா? கிராமங்களா? போன்ற எதிரிணைகள் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் வழக்காடு மன்றங்களும் பட்டிமன்றங்களும் முன்வைக்கப்படும் முடிவுகளும் கிராமத்து நாட்டாண்மைகளின் தீர்ப்புகளையே நினைவூட்டவல்லன. இந்தப் பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் இப்போது நமது தொலைக்காட்சி நிலையங்களின் சிறப்புநாள் நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, விசயதசமி என முதன்மையான பண்டிகைநாட்களின் முதன்மை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.

இவை மட்டுமல்ல வாரக்கடைசி நாட்களின் சிறப்பு நிகழ்ச்சிகளாகத் தொடர்ந்து இருக்கும் நீயா? நானா? போன்றனவும்கூட இரட்டை எதிர்வுகளின் கட்டியெழுப்பப்படும் நிகழ்ச்சிகள்தான், இவைகளின் நேர்மறை அம்சமாக இருப்பன, எதிரணியின் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன என்பதுதான். ஆனால் தீர்ப்பு சொல்லும் நடுவர்களும் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் எல்லாவற்றையும் இருபக்க நியாயங்களையும் மறக்கடிப்பதைப்போல நீண்ட சொற்பொழிவொன்றை நிகழ்த்தி அவர்களது முடிவை – ஒற்றை முடிவை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

சிறப்பு நிகழ்ச்சிகளின் இரட்டைநிலையை நிகழ்காலத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் விவாதங்களும் உள்வாங்கியுள்ளன. பெரும்பாலும் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மேல் உருவாக்கப்படும் அந்நிகழ்ச்சிகள் இவர்கள் X அவர்கள் என்ற மனநிலையில்தான் விவாதங்கள் நடக்கின்றன. அந்த விவாதங்கள் பெரும்பாலும் மாநில அரசு X மைய அரசு அல்லது தேசிய அரசியல் X மாநில அரசியல் அல்லது ஆளுங்கட்சி X எதிர்க்கட்சி அல்லது வலதுசாரிகள் X இடதுசாரிகள் என்பதான எதிர்வுகளில் விவாதங்கள் நடக்கின்றன. அத்தகைய விவாதங்கள் நடக்கும்விதமாகவே பேசுவதற்கான தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதிக்கத்தக்க விதமாகவே பங்கேற்பாளர்களும் அழைக்கப்படுகின்றனர்.

அண்மைக்காலங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் இருக்கும் சமூக ஊடகங்களுக்கும் இந்தக் கட்டமைப்பு நீண்டு வருகின்றது. அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புகொண்ட சமூக ஊடகங்களான முகநூல், சிட்டுரை போன்றவற்றில்கூட இதுபோன்ற இரட்டைநிலைப் பதிவுகளே அதிகம் விரும்பப்படுகின்றன. அதிகம் விருப்பங்கள் பெறவிரும்பும் நோக்கத்தில் அன்றாட நிகழ்வுகளில் சிலவற்றைத் தேர்வுசெய்து அன்றைய பெரும்போக்காக (Trend) பெரும்பாலோர் ஏற்கும் விதமாகவே பலரும் பதிவுகள் எழுதுகின்றனர். தங்களின் பதிவுகளின் கீழ் வளரும் விருப்பக்குறிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்காக எழுதும் மனநிலையும் ஒருவிதத்தில் நாட்டாண்மையின் தீர்ப்பு மனநிலைதான்.

கிராமத்து நாட்டாண்மையின் தீர்ப்பு தொடங்கி சமூக ஊடகங்களின் பெரும்போக்குப் பதிவுகள் வரை வெளிப்படும் இரட்டை எதிர்மனநிலைகள் (Bi-nary oppositions) பெரும்பாலும் எல்லாவற்றையும் கறுப்பு – வெளுப்பாகப் பார்க்கும் தன்மைகொண்டன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு நபர் அல்லது ஒரு செய்தி போன்றவற்றை இரட்டை எதிர்மனநிலைகளில் நின்று பார்ப்பது எப்போதும் நல்ல முடிவுகளைத் தராது. அதுவும் மக்களாட்சி நடக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொன்றையும் இதுவா? அதுவா? எனப் பார்க்கும் மனநிலையினால் தான் நமது மாநிலத்தில் / நாட்டில் ஆட்சிமாற்றங்கள் நடக்காமல் போகின்றன. அப்படி நடந்தாலும் ஏற்கெனவே இருக்கும் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் மனப்போக்கில் வாக்களிக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும்; மாற்றப்படவேண்டும்.

நல்லது அல்லது கெட்டது எனப்பார்க்கும் பார்வையை மனித உயிர்களுக்கு உருவாக்குவதில் சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் சமயங்களின் இன்னொரு பரிமாணமான ஆன்மீக நிலைப்பாடுகளும் ஞானமரபுகளும் இப்படி இரட்டைநிலையை முன்வைப்பதில்லை. அவை மனித மனங்களின் அலைவுகளையும் படிநிலைகளையும் ஏற்கின்றன; நினைவுபடுத்துகின்றன. இதே நிலையைத்தான் மக்களாட்சி அமைப்பின் சட்டங்களும் மரபுகளும் உருவாக்குகின்றன. ஏற்கத்தக்கன Xநிராகரிக்கவேண்டியன என்ற எதிர்நிலையில் எழுதப்படும் சட்டங்களை மட்டுமே பின்பற்றாமல் மரபுகளையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் போக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களாட்சி அமைப்பில் செயல்படும் மிக உயர்ந்த அமைப்புகளான பாராளுமன்ற, சட்டமன்ற சபைகளும், நீதிமன்றங்களும் எழுதப்படாத மரபுகளையும் எழுதப்பட்ட சட்டங்களையும் பின்பற்றுவது விரும்பப்படுகின்றன.

இந்தப் புரிதலின் பின்னணியில் மனித உயிர்கள் இந்த உலகத்தின் இயற்கை வண்ணங்களை ரசிக்கும் மனோபாவமும் ஏற்கும் மனநிலையில் இருக்கின்றன. கறுப்பு – வெளுப்பு என்பதாக இந்த உலகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கருமை, வெண்மை என்பன இயற்கை வண்ணங்களே அல்ல. இயற்கையின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் வானவில்லைப் பார்த்திருப்போம். நிறப்பிரிகையை -நிறங்களின் சேர்க்கையான அனைத்து வண்ணங்களையும் தனித்தனியாக க்காட்டாமல் ஒன்றின்மேல் ஒன்றாகப் பிணைந்து வானத்தில் தோன்றி வர்ணஜாலம் காட்டும் வானவில்லைப் போல ஒவ்வொன்றையும் ஏற்கும் மனநிலையை மனிதர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நம்மை உருவாக்கவும் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் ஒவ்வொன்றையும் ஏற்கவும் நிராகரிக்கவுமான மனநிலை என்பது பொதுவெளியில் இயங்கவும் அந்தரங்க வெளியில் தன்னிலையை உருவாக்கிக் கொள்ளவும் தேவையானவை. அவைகளே ஒழுக்கங்களாகவும் விழுமியங்களாகவும் அறநூல்களிலும் பக்திமை பேசும் தோத்திரப்
பாடல்களிலும் வலியுறுத்தப்படுகின்றன. சமயங்கள் வலியுறுத்தும் இவற்றையே நவீன உளவியலும் பேசுகின்றது. மனிதர்கள் விரும்பும் வண்ணங்களுக்கும் அவர்களது நடத்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்பதை நவீன உளவியல் (Psychology) விரிவாகப் பேசுகிறது.

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையை வண்ணங்களோடு தொடர்பு கொண்டதாகவே அமைத்துள்ளோம். நமது ஆடைகளாக, அணிகலன்களாக, வாழிட வெளியின் பரப்பல்களாக வண்ணங்கள் இருக்கின்றன. நமது பயிர்களும் மரங்களும் நமது விருப்பமான வீட்டு விலங்குகளும் வண்ணங்களோடு தொடர்புடையனவாக. நமது புழங்குபொருட்கள் ஒவ்வொன்றுக்கும் வண்ணங்கள் உண்டு. நமது காலனிகள், வாகனங்கள் என ஒவ்வொன்றிலும் நமது வண்ணத்தேர்வுகள் இருக்கின்றன. இந்த வண்ணத் தேர்வுகள் எதிலும் கறுப்பு – வெள்ளை என்பதாக மட்டுமே தேர்வு செய்வதில்லை.

மனிதர்களின் குணநலன்களையும் நடத்தைகளையும் வண்ணங்களோடு தொடர்புபடுத்திப் பேசும் உளவியலாளர்கள் ஒவ்வொரு வண்ணத்தையும் ஒருவிதமான குணத்தின் வெளிப்பாடு என்கின்றனர். சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colors) என்று உளவியல் வரையறுக்கிறது. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொன்றின் வன்வண்ணமும் மென்வண்ணமும் பல தளங்களில் நமது கண்ணின் வழியாக மனநிலையைக் கட்டமைக்கின்றன. நம் மீது தாக்கத்தை உண்டாக்கக்கூடிய நிறங்களாக அடிப்படை நிறங்கள் மட்டுமே இருப்பதில்லை. சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய அடிப்படை வண்ணங்களோடு வெண்மை, கருமை, சாம்பல் நிறம்(Grey), ஆரஞ்சு, ஊதா(Violet), இளஞ்சிவப்பு (Pink) மற்றும் பழுப்பு(Brown) நிறங்களும் நம்மீது தாக்கங்கள் உண்டாக்குகின்றன.

வண்ணங்களையும் வண்ணங்களின் அளவுச் சேர்க்கைகளால் உருவாகும் தள வேறுபாட்டையும் ரசிக்கவும் புரிந்துகொள்ளவுமான கல்வியை ஆரம்பக் கல்வியிலிருந்தே அளிக்கவேண்டும். இயற்கை வண்ணங்கள் நிரம்பி வழியும் மலைகள், காடுகள், நதிகள் போன்ற இடங்களுக்குச் சுற்றுலாவாகக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அந்த வண்ணங்கள் அவர்களுக்குள் நுழைந்து படிமமாக மாறிவிடும். அதேபோல மனிதர்கள் வண்ணங்களைச் செயற்கையாக உருவாக்கும் பூங்காக்கள், ஓவியக்கூடங்கள், கண்காட்சிக் கூடங்கள் போன்றவற்றிற்கும் சென்று வரும்போதும் வண்ணப்படிமங்கள் மூளையடுக்குகளில் செய்யும் தாக்கம் நன்மையான பல தாக்கங்களைத் தரும் என்பது உளவியலாளர்களின் வலியுறுத்தல்.

வண்ணங்களின் பலதளக் கலவை போன்றதே சமூக வாழ்வு. அவரவர் முயற்சிகளுக்கு ஏற்பவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதின் மூலமே தனிமனித வாழ்வும் சமூக வாழ்வும் கட்டமைக்கப்படுகின்றன. அதில் சமத்துவமும் வேறுபாடற்ற நிலையும் விரும்பப்படுகின்றன என்றாலும் வித்தியாசங்கள் தவிர்க்கமுடியாதவைகளாகவே இருக்கின்றன. உலகம் வித்தியாசத்தின் சாயலை – வேறுபாடுகளின் இருப்பையும் உள்வாங்கியே நகர்கின்றது. இதனைப் புரிந்துகொள்ளும் நிலையில் தான் ஒவ்வொன்றையும் ஏற்கும் மனநிலையும் இணைந்துபோகும் பொறுப்பும் உருவாகும். வேறுபாடுகளும் வித்தியாசங்களும் நிரம்பிய சமூக அடுக்குகள் கொண்ட உலகுக்குத் தேவை உள்வாங்குதலும் ஒன்றுபடுதலும். இதனை உருவாக்க நினைக்கும் பொறுப்புள்ளவர்கள் வானவில்லின் வகைவகையான வண்ணங்களை அறியவேண்டும்; ரசிக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்