தே.த.நு.தே.(NEET) சில குறிப்புகள்

குறிப்புகள் தான்; கட்டுரை அல்ல


இந்திய அரசாங்கம் ஒத்துக்கொண்ட ஒதுக்கீடுகள் அல்லது பங்கீடுகள் பலவிதமானவை. சாதிக்குழுக்கள், அரசுகள், பாலினம், அரச சேவைக் குழுவினர் என நுட்பமான சொல்லாடல்கள் அதற்குள் செயல்படும்.தேசிய திறனறி நுழைவுத்தேர்வு இப்போதிருக்கும் சாதிக்குழுமங்களின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையோ ( 31 +30+20+19), மத்திய- மாநில பங்கீட்டையோ (15 +85) அசைத்துப் பார்க்கப்போவதில்லை. இவ்விரு பங்கீட்டைத் தவிர பெண்களுக்கென 33 சதவீதப்பங்கீடும், முன்னாள் ராணுவத்தினருக்கென 10 சதவீதப்பங்கீடும் இருக்கின்றன.இவைபற்றிப் பேச்சையே காணோம்.

பள்ளிக்கல்வியில் ஒருவர் கற்ற கல்விமுறையையும் தேர்ச்சிமுறையையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டுச் சிறப்புப்பயிற்சிகள் வழியாக, தே.த.நு.தே.(NEET)வை எதிர்கொண்டு இடம்பிடிக்கச் சொல்லும் இம்முறை, இந்தியாவிலிருக்கும் நகர்ப்புறச் சூழல் - கிராமப்புறச் சூழல் என்ற பாரதூரமான வேறுபாட்டையும், பணமுடையவர் - பணமற்றவர்கள் என்ற வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ளவில்லை. அப்படியான வேறுபாடுகள் இருக்கின்றன; அதைக்களைய வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. ”அவையெல்லாம் இருக்கும்; கண்டுகொள்ள வேண்டியதில்லை” என்ற மனநிலையோடு இருப்பவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த நுழைவுத்தேர்வு.

’நகர்மயமாகிவிட்டது இந்தியா: மூன்றிலொரு பங்கினர் நகரங்களில் வாழ்கின்றனர். அவர்களால் போட்டித்தேர்வுக்கான பயிற்சியைப் பெறமுடியும்; எனவே அத்தகையவர்கள் மட்டும் போட்டித்தேர்வில் பங்கெடுக்கட்டும்’ எனக் கருதும் மனநிலைகொண்டவர்கள் மட்டுமல்ல அவர்கள். நகர் மயத்தையும் நகரவாழ்வையும் ஏற்றுக்கொண்டதோடு; முதலாளியமும் அதன் தொடர்ச்சியான பன்னாட்டு மூலதனத்தோடு கொள்ளும் உறவுமே இந்தியாவை வளப்படுத்தும்; வாழவைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இந்தப்புரிதல் ஏற்பட்டால் தான் யாரெல்லாம் எதிர்க்கவேண்டும்; யாரையெல்லாம் போராட்டக்களத்திலிருந்து விலக்கிவைக்கவேண்டும் என்பதும் புரியவரும்.
நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்ட, நகரவாழ்க்கையின் சொகுசையும் பலன்களையும் அனுபவிக்கத்தக்க பொருளாதார வளம்கொண்டவர்களை இந்தப் போட்டித்தேர்வு பெரிதும் பாதிக்கப்போவதில்லை. அவர்கள் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், தலித்துகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் அவர்கள் நகரவாசிகள் என்பதை மறந்தவிடவும் மறுத்துவிடவும் முடியாது.

இந்த ஆண்டு தவறவிட்டதை அடுத்த ஆண்டு கைப்பற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இப்போதே நகரங்களில் தனிப்பயிற்சி மையங்களில் விளம்பரங்கள் வரத்தொடங்கி விட்டன. தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் மாநிலப் பாடத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மைய பாடத்திட்டத்திற்கு நகர்வதோடு, தனிப்பயிற்சி வகுப்புகளையும் அங்கேயே தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு முதலீடு செய்து லாபம் பெறும் வழிமுறைகள் நன்றாகவே தெரியும். தனிப்பயிற்சி நிலையங்களைச் சிறுநகரங்கள் நோக்கியும் நகர்த்துவார்கள். தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், மேலாண்மையாளர்களாகவும் ஆக்கநினைக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வைக்கும் கட்டணத்தொகையைச் செலுத்தக் கடன்வாங்கவும் , நகை நட்டுகளை அடகுவைக்கவும், நிலபுலன்களை விற்கவும் தொடங்குவார்கள். அப்போது இப்போதுள்ள கிராமங்களும் இல்லாமல் போகும். கிராமங்களும் கிராமத்து மனிதர்களும் இடம்பெயர்ந்துவிட்டால், இந்தியாவில் நிலத்துக்கடியில் இருக்கும் தாதுக்களை ஏலம்போடத் தடையிருக்கப்போவதில்லை.

இந்தியாவைக் காலனியாக்கிய ஐரோப்பியர்கள், இந்திய நிலப்பரப்பில் விளைந்த மிளகு,ஏலம் ,பருத்தி, அரிசி, கோதுமை, கரும்பு, தேயிலை, காப்பி போன்ற பயிர்களுக்காக வந்தார்கள்; விளைச்சலைக் கொண்டு சென்றார்கள். ஆனால் நிகழ்காலத்திய உலகமயமும் அதன் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளும் நிலத்திற்கடியில் இருக்கும் இரும்பு, செம்பு, அலுமினியம், நிலக்கரி போன்ற தாதுக்களையும் பெட்ரோல், எரிவாயு, நீர் போன்றவைகளையும் தோண்டியெடுத்து விற்றுக்கொள்முதல் செய்திட வருகிறார்கள். பொது நுழைவுத்தேர்வு என்பதை எதிர்க்கும் போராட்டத்தில் நிலத்தையும் நிலத்திற்கடியிலிருக்கும் வளத்தையும் காப்பாற்றும் போராட்டமும், மொத்தத்தில் கிராமங்களைத் தக்கவைக்கும் போராட்டமும் சேர்ந்திருக்கிறது. இதனை நகரவாசிகளோடு இணைந்து செய்யமுடியுமா? என்பதும்கூடக் கேள்விக்குறிதான்.

பன்னாட்டு மூலதனமும் அதனோடு கைச்சாத்திட்டு உறவுகொள்ளும் அரசும் நிலங்களுக்கடியிலிருக்கும் வளங்களையே வளைக்கப்பார்க்கிறார்கள். அதனை எதிர்க்கும் போராட்டங்கள், கிராமங்களிலிருந்து எழவேண்டும் .


***************

நமது பள்ளிக்கல்வியைத் தரப்படுத்துவதை நீட்டிற்காகத் தயார்படுத்துவதாக ஆக்கி விடக்கூடாது. நமக்கான அறிவைப்பெறுதல், தானாகச் சிந்தித்தல், திரும்பச்சொல்லுதல், உலகத்தை எதிர்கொள்ளல் என்பதற்கான மாற்றங்களை உள்ளடக்கியதாகத் தரப்படுத்தவேண்டும். அதன்பிறகும் நமது கல்வி நிறுவனங்களில் நாம் உருவாக்கும் முறைமையொன்றின் அடிப்படையிலேயே இடங்களை நிரப்பவேண்டும். தன்னாட்சி என்பது முக்கியம். அதற்குக் கல்வி மாநிலப்பட்டியலில் இடம்பெறவேண்டும்.

தப்பும் குறிகள்

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.


மருத்துவக் கல்விதான் வாழ்வின் லட்சியம் என்று நினைத்தவர்கள் மாநிலக்கல்வி வாரியப் பாடங்களோடு மையக் கல்வி வாரியப் பாடங்களையும் தனிப்பயிற்சியாகப் படித்திருப்பார்கள். சென்ற ஆண்டு கோட்டை விட்டதாக நினைத்தவர்களும் இந்த ஆண்டு திரும்பவும் விண்ணப்பம் அனுப்பியிருக்கக் கூடும். புதியவர்களும் பழையவர்களும் தேர்வு மைய ஒதுக்கீடு என்ற இன்னொரு ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அரசுகளும் அரசு நிறுவனங் களுமே காரணம் எனச் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நான் அப்படி நினைக்கவில்லை.


இதுபோன்ற மையப்படுத்தப்பெற்ற தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அரசுத் துறைகளிடமிருந்து புறநிலைப் பங்களிப்பாளர்களிடம் (அவுட் ஷோர்சிங்) ஒப்படைக்கப்பட்டிருப்பது முதன்மையான காரணம். இணையவழி விண்ணப்பம் தொடங்கி, தேர்வுகள் நடத்துவது, திருத்துவது, முடிவுகள் அறிவிப்பது, கல்லூரிகளை ஒதுக்குவது வரை அரசுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்று, ஒற்றைச் சாளர முறையில் நடத்திய முறை தமிழ்நாட்டில் இருந்தது. இந்த முறைக்கு மாறாக யார் நடத்துகிறார்கள் என்பதையே அறிய முடியாத முறை - அவுட் ஷோர்சிங்- இப்போது நடைமுறையில் இருக்கிறது. அதைப் பெற்றவர்கள் மைய அரசின் முக்கியமானவர்களின் தொடர்பினால் தான் இந்த வேலையைப் பெற்றிருப்பார்கள். அந்த நிறுவனங்கள் எதுவும் பதில் சொல்ல முன்வராமல் மௌனமாக இருக்கின்றன. அதனை அறிந்துகொள்ள விரும்பாத - அறிந்தாலும் பேச முடியாத இடத்தில் இருக்கும் அரசின் கல்வித்துறைகள் ஒன்றும் சொல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மருத்துவக்கல்விக்கு நடக்கும் தேர்வின் பிரச்சினை மட்டுமல்ல. ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவித்தொகைகளுக்கும், விரிவுரையாளர் பதவிக்கான தகுதித் தேர்வுகளுக்கும் இப்போது விரிவடைந்துள்ளன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழியாக வழங்கப்பெறும் பட்டியலின மாணவர்களுக்கான ராஜீவ் காந்தி பெயரிலான உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான மௌலான அபுல்கலாம் ஆஸாத் உதவித்தொகை போன்றன முறைப்படியான தகவல்களை மாணவர்களுக்கு அனுப்புவதில்லை. தேர்வுகள் இல்லாமல் தெரிவு செய்யப்படும் மாணாக்கர்களுக்குத் தனிக்கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கப்படுவதில்லை. எல்லாம் இணையத்தில் பட்டியலாக வெளியிடப்படுவதோடு சரி. ஒவ்வொரு நாளும் இணையத்தை மேய்ந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே அதைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து பிடிக்க முடியும். குறிப்பிட்ட தேதிக்குள் கவனித்து அவ்விணையம் தரும் இன்னொரு இணைப்பின் வழியாகச் சென்று தன்னைப் பற்றிய தகவலைத் தராமல் விட்டுவிட்டால் அதன் கதை அம்போ தான். எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதே சிக்கல் இங்கே. ஆனால் இந்தியாவின் கிராமப்புறப் பட்டியல் மாணவ, மாணவிகளும், சிறுபான்மை மாணாக்கர்களும் ஒவ்வொரு நாளும் இணையத்தில் நுழைந்து வெளியேற வேண்டுமென்கிறது நமது அரசின் தனியார் மயக்கொள்கை. போகிற போக்கில் நான் இதனைச் சொல்லவில்லை. என்னிடம் ஆய்வுசெய்த இசுலாமிய மாணவி ஒருத்திக்குக் கிடைத்த உதவித்தொகையைப் பெற முடியவில்லை.என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.


இணையவழிப் பதிவேற்றம், விண்ணப்பம், தேர்வுகள் எல்லாம் இனிச் சாத்தியம் எனச் சொல்பவர்கள் சில உண்மைகளை உணரவேண்டும்.நான் பணியாற்றும் பல்கலைக்கழகம் மட்டுமல்ல: பல பல்கலைக்கழகங்களும் அனைத்துவகையான விண்ணப்பங்களையும் இணையவழியாகவே பெறுகின்றன. விண்ணப்பங்களை அளித்தல், நிரப்பியதைச் சரிபார்த்தல், செலுத்தப்பெற்ற வங்கி ரசீதுகளைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற வேலைகளைப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் செய்வதற்குப் பதிலாக மாணவர்களே இணையம் வழியாகப் பதிவேற்றம் செய்கிறார்கள். வங்கிப் பணியாளர்கள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேலைகள் குறைந்திருக்கின்றன. ஆனால் மாணாக்கர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.இங்கே ஒவ்வொருவரிடமும் கணினி தரப்பட்டிருக்கிறது என்றாலும் இணையத் தொடர்புக்கு இன்னும் கணினி மையங்களுக்கே செல்கிறார்கள். எல்லாத் துறை மாணாக்கர்களுக்கும் தேவையான பயிற்சிகள் தரப்படவில்லை. நகர்ப்புற மாணாக்கர்களுக்கு இவை எளிது; செலவு குறைவு. ஆனால் கிராமப்புற மாணாக்கர்களுக்குச் சிக்கல். செலவும் கூடுதல்.


பல்கலைக்கழகங்களும் இணையவழி விண்ணப்பங்களைச் சரிசெய்ய - அதில் ஏற்படும் சிக்கல்களைக் களையப் புறநிலைப் பங்களிப்பாளர்களிடமே காத்துநிற்கின்றன. மொத்தத்தில் லாபம் புறநிலைப் பங்களிப்பாளர்களுக்கே.
இந்திய ஒன்றிய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் செயல்படுத்துபவர்களும் நகர்ப்புற மேல்தட்டுவர்க்க/ சாதிகளுக்காக வேலை செய்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள். ஆனால் கிராமப்புறத்தைக் கொண்டாடுவதாகப் பாவனை செய்கிறார்கள். அந்தப் பாவனைகளைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் தங்கள் அம்புகளைக் குறிதவறிப் பாய்ச்சுகிறார்கள்.


இந்தியா ஒரேநாடு; இந்தியாவில் இருக்கும் எல்லாக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தின்படி, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நகர்த்தி, மையப்பட்டியலில் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கிய போதே இவையெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்திருக்கவேண்டும். தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியைக் கொண்டு உருவாக்கப்பெற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் தொழில் கல்லூரிகளிலும் பிற மாநிலங்களின் மாணவர்கள் நிரப்பப்பட இருக்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாக மாநில உரிமையை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு இல்லை


ரகசியம் விவாதமாகியுள்ளது

தொழில்கல்வி நிறுவனங்களில் முதல்வருக்கென்று தனிச்சலுகை - தனி இட ஒதுக்கீடு உண்டு. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் முதல்வர் பரிந்துரையின்பேரில் ஒன்று அல்லது இரண்டுபேர் சேருவார்கள்.பொறியியல் கல்லூரிகளில் இன்னும் கூடுதலாகவே இடம்பெறுவார்கள். தனியார் தொழில் கல்லூரிகள் அவை இருக்கும் பகுதிச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் சலுகைகளை வழங்குகின்றன. அவர்களுக்கு அடிப்படைத்தகுதிக்குரிய மதிப்பெண்கள் இருந்தால் போதும்.
ஒவ்வொரு முதல்வரும் அதனைத் தனது சொந்தநலன், குடும்பநலன், கட்சி நலன் என ஏதாவதொன்றை மையப்படுத்தி நிரப்புவார்கள். தேர்தல் காலங்கள் என்றால், கூட்டணிப்பேரத்திற்காகவும் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்வார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை விற்றுப்பணமாக்குவார்கள். இதெல்லாம் மக்களாட்சி அமைப்பே அதிகாரத்திற்கு/ அரசியல்வாதிகளுக்கு வழங்கும் ரகசியச் சலுகைகள். மருத்துவர் கிருஷ்ணசாமியின் மகள்மூலம் அந்த ரகசியம் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதுபோன்ற சலுகைகள் தேவையா? குறைந்த அளவு மதிப்பெண் பெற்றவர்களைத் தனது பரிந்துரைகள் மூலம் அரசியல்வாதிகள் நுழைப்பது சரியா? என்பது விவாதிக்கப்படவேண்டும்.


பாடங்கள் மட்டுமல்ல; தேர்வுகளும் .....

ஒரு பேராசிரியராக எனது பாடங்களுக்கு என்னளவில் நெகிழ்ச்சியான தேர்வுமுறைகளை உருவாக்கித் தருகிறேன். அப்படித்தருவதற்கும் கட்டுப்பாடுகளும் எல்லைகளும் இருக்கின்றன. பல நேரங்களில் நான் தேர்வுகள் இல்லாத கற்பிக்கும் முறையைப் பற்றிச் சொல்வேன். அதற்கு ஒருவரும் காதுகொடுத்ததில்லை. இந்திய உயர்கல்விக்கூடங்களே சிந்திக்க மறுக்கின்றன. பிறகெப்படிப் பள்ளிக்கல்வியில் அதுசாத்தியம்?


சரி x தவறு என்பதாகவும், நான்கில் ஒன்று சரி என்பதாகவும் அமையும் கொள்குறி வினாவிடைத்தேர்வுகள் (Multiple Choice) தேர்வுமுறைகளிலேயே அறிவுக்குப் புறம்பான தேர்வுமுறை. தர்க்கக்காரணங்கள் இல்லாமல் எண்ணிக்கையைக் குறைக்கவிரும்பும் நிலையில் எல்லா அமைப்புகளும் இதையே பரிந்துரை செய்கின்றன; பின்பற்றுகின்றன. அறிவு, தரம், திறமை போன்ற சொற்களின் அர்த்தங்கள் செயல்படாத இந்தத் தேர்வுமுறையைப் பின்பற்றியே உயர்கல்வியில் முனைவர்பட்ட உதவித்தொகையை வழங்கும் இளநிலை ஆய்வுத் தொகைத்தேர்வு, (JRF) அறிவியல் ஆய்வுக்கான இந்தியக்குழும உதவித்தொகைத் தேர்வு (CSIR) போன்றன நடைபெறுகின்றன. இவற்றை முன்பு அரசு அமைப்புகள் நடத்தின. இப்போது எல்லாம் தனியார் நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. வினாத்தாள் குறிப்பதும் விடைகளைத் திருத்தவும் ரகசியமாகிவிட்டன. எல்லாம் ரகசியம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்