அவதாரம் : எப்போதும் நினைவில் இருக்கும் சினிமா.
தமிழ் சினிமா பரப்பில் தேர்ந்த நடிப்புக்கலைஞர்கள் என்ற வரிசையில் அறியப்படும் பெயர்களுள் ஒன்று நாசர். அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் சினிமா அவதாரம்(1995). கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட அந்தப் படம் பல காரணங்களுக்காக இப்போதும் நினைவில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; வெகுமக்கள் ரசனைக்கான படங்களை மட்டும் பார்த்துவிட்டுக் கடந்துவிடும் பலருக்கும் நாசர் என்ற நடிகரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இயக்கிய ‘அவதாரம்’ படமும் நினைவுக்கு வருவதைக் கவனித்திருக்கிறேன். தமிழ்ச் சினிமாக்களைப் பற்றி நண்பர்களோடு நடக்கும் கலந்துரையாடலில் உங்கள் நண்பர்களில் ஒருவர் அந்தப் படத்தை நினைவூட்டிப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். அறிவுத்தளத்திலும் பொதுத்தளத்திலும் நினைவூட்டிப் பேசப்படும் படங்கள் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றுப் போக்கில் ஒரு இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அதே நேரம் அவதாரம் முதன்முதலில் வெளிவந்தபோது பெருந்திரளான மக்களால் அதிகம் பார்க்கப்படவில்லை என்ற உண்மையையும் இங்கே நினைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. வணிகரீதியான வெற்றி என்ற எல்லையைத் தொடும் அளவுக்குப