பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி
ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள்.