உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்
சட்டத்திற்குக் கட்டுப்படாத தனிமனித வீரச்செயல்கள் இன்னொரு தனிமனிதருக்கு அச்சமூட்டக்கூடியன. அதனால் ஒரு தனிமனிதர் அதனை ஏற்க மாட்டார். ஆனால் ஒரு குழுவாக - சமூகமாக அவற்றை விரும்புவார்கள்; ஏற்கவும் செய்வார்கள். ஏனென்றால் சாகசத்தில் விருப்பம் கொண்ட அந்த நாயகனின் குற்றச் செயல்களின் பின்னால் இரக்கமும் அன்பும் காதலும் இருக்கக்கூடும். சில நேரங்களில் குழுவாகப் போராடத் தயாரில்லாதபோதும் தனிமனிதனாக எதிர்த்து நிற்பவர்களாக இருப்பார்கள். இதனை வெற்றிகரமான வணிகசினிமாவின் சூத்திரமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தச் சூத்திரத்தைத் தமிழ்ச்சினிமாவில் கிராமப்புறப்பின்னணியில் - நாயகர்களின் வகைமாதிரிகளாக மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற பாத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். தியாகராசனும், நெப்போலியனும் நாயக நடிகர்களாக நடிக்க அந்தப் படங்கள் தான் காரணம். அறியப்பட்ட நாட்டுப்புற நாயகர்களுக்குப் பதிலாகப் புனைவான பாத்திரங்களை உருவாக்கி நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்து வெற்றியப்பட இயக்குநராக வலம் வந்தவர் எஸ்பி. முத்துராமன். அப்படியொரு காலம் தமிழ்ச்சினிமாவில் இருந்தது. அந்தச் சூத்திரத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து இந்திய நகரங்களின் நகர்ப்புறச் சேரித் தமிழர்களின் காவலர்களாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிம்பு, விக்ரம் என நாயக நடிகர்கள் நடித்த படங்கள் வந்து வசூலில் வெற்றியையும் பெற்றன; சில படங்களில் தோல்வியையும் சந்தித்தன. இவற்றை அப்போது பான் (PAN INDIA) இந்தியன் சினிமாவாகச் சொல்லவில்லை. தமிழ்ப்படங்களாகவே ரசிகர்கள் பார்த்தாரக்ள்.
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர் வாழும் பகுதியொன்றைப் பின்னணி வெளியாகக் கொண்டு எடுக்கப்பட்ட சினிமாக்களின் வெளியாக இருப்பதில் முதலிடம் மும்பையின் தாராவி. நீண்ட காலமாகத் தமிழ்நாட்டிலிருந்து உதிரித் தொழிலாளிகளாகத் தமிழர்கள் சென்று சேர்ந்த இடம் தாராவி. இந்திய நகர்ப்புறச் சேரிகளில் ஆகப்பெரியதும் கூட. அங்கே போனவர்களுக்கு உள்ளூர்க்காரர்களால் பலவிதமான தொல்லைகள் இருந்தன என்பது வரலாறு. சிவசேனா என்ற அரசியல் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் தாராவித் தமிழர்களின் இருப்போடு தொடர்புடையது. இந்தியாவின் தலைநகரான டெல்லிக்குப் போனவர்கள் அரசு வேலைக்காகப் போன நடுத்தரவர்க்கத்தினர். அவர்களைக் குறித்து நாவல்களும் கதைகளும் எழுதப்பட்டுள்ளனவே தவிர சினிமாக்கள் குறைவு.
மும்பை- தாராவிப் பகுதியில் வாழும் தமிழர்களின் காவலர்களாக மணிரத்னத்தின் நாயகனில் வேலுநாயக்கராகக் கமல்ஹாசனும், பாட்சாவின் இரட்டை முகமான மாணிக்கமும் பாட்ஷாவுமாக ரஜின்காந்தும் காட்டப்பட்டுப் பெரும் வெற்றிபெற்றார்கள். பா.ரஞ்சித்தின் காலாவில் கரிகாலனாகவும் ரஜினிகாந்த் வந்து பணம் சம்பாதித்துக் கொடுத்தார். அண்மையில் வந்த மணிரத்னம்/ கமல்ஹாசன் கூட்டுத்தயாரிப்பான தக்லைப் மும்பைக்குப்பதிலாகத் தில்லியைக் களமாகக் கொண்டு அதே சூத்திரத்தில் வந்து வணிக வெற்றியைப் பெறாத படமாக முடிந்துபோனது. மும்பை -தாராவிப் பின்னணியில் சிம்பு நடித்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய வெந்து தணிந்த காடு பெற்ற வசூலைக் கூட ஷங்கர் இயக்கி விக்ரம் நடித்த 'ஐ' படம் பெறவில்லை.
இந்தியாவின் மொழிசார் தேசிய இனங்களில் தமிழர்கள் அளவிற்குப் புலம்பெயர்ந்த கூட்டம் பல உண்டு என்றாலும், ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வுக்குப் பின்னால் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அவர்களின் பொழுதுபோக்குக்குத் தமிழ்ச் சினிமாக்களின் தேவையும் அதிகமாகிவிட்டது. அத்தோடு சினிமாவைத் தியேட்டர்களில் பார்ப்பது என்பதைத் தாண்டி இணையச்செயலிகளில் பார்க்கும் வாய்ப்புகளும் உருவாகிவிட்ட சூழலில் தமிழர் வாழும் பிறநாட்டுப் பின்னணியில் படங்கள் பல எடுக்கப்பட்டுள்ள வரலாறும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த சினிமாக்கள் பல்வேறு மாநிலக்கதாபாத்திரங்களைக் கொண்ட பான்- PAN - இந்தியன் சினிமாக்களைப் போலில்லாமல் முதன்மையான வேறுபாடொன்றோடு இருக்கின்றன.
இந்தியப் பரப்பைத் தாண்டியும் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள் என்பதைக் கொண்டு தமிழ்ப்பரப்பு சினிமாக்கள் இந்தியப்பரப்புக்கு வெளியேயும் நகர்ந்துள்ளன. குறிப்பாகச் சிங்கப்பூர், மலேசியப் பின்னணியில் சினிமாக்களும் அவ்வப்போது வந்து வெற்றியும் பெற்றுள்ளன; தோல்வியையும் சந்தித்துள்ளன. தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்களின் அப்பாவி நாயகனாக நடித்த ராமராஜனைச் சிங்கப்பூருக்குக் கொண்டுபோய் வேடிக்கை பார்க்கும் அப்பாவியாகக் காட்டிய 'ஊருவிட்டு ஊரு வந்து' படம் இளையராஜாவின் பாடல்களால் வெற்றி பெற்ற படம். . ராமராஜனின் சினிமா வாழ்க்கையை இளையராஜாவின் பாடல்களே நிலை நிறுத்தின என்பது தனிக்கதை.
மலேசியப் பின்னணியில் குற்றம், வன்முறை, நாயகத்தனப் படச் சூத்திரத்தில் வெற்றி பெற்ற படமாக அஜித் நடித்த பில்லாவைச் சொல்லலாம். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடித்த கபாலி, அந்த சூத்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அடையாளமாகக் குற்றத்தொடர்புடைய ஆளுமையை நிறுத்தி இன்னொரு பரிமாணத்தை உண்டாக்கியது. இந்த வரிசையில் சேர்வதுபோலவும் விலகுவது போலவும் ஊசலாட்டம் ஆடுகின்ற படமாக அண்மையில் விஜய்சேதுபதி நடித்து வந்துள்ள சினிமா- Ace . இதனைச் சுற்றுலா நோக்கப்படமாகவும் சொல்லலாம். துப்பறியும் - குற்றவன்முறைப் பின்னணிப்படமாகவும் வகைப்படுத்தலாம்.
சீட்டாட்டம் என்னும் சூதாட்டத்தில் ஏஸ் என்ற சீட்டின் நிலை வித்தியாசமானது. எண் ஒன்றாகவும் பதின்மூன்றாகவும் இருக்கும் சீட்டு இந்த A(ce) விஜய் சேதுபதியின் பாத்திரமான போல்ட் கண்ணனின் இரட்டை நிலையை - முதலும் கடைசியுமான இரட்டை நிலையைக் குறிக்கிறது. கெட்டவனும் மனிதாபிமானம் கொண்டவனுமான- திருடனும் காதலனுமான இரட்டை நிலையை -எள்ளலாகவும், குரூரமாகவும் அமைந்த இரட்டை நிலையை உருவாக்க நினைத்த சினிமா. ஆனால் முழுமையாக அந்த இரட்டை நிலையை உருவாக்கவில்லை.
படத்தை இயக்கிய ஆறுமுகக்குமாருக்குத் தனது படம், மலேசியப்பின்னணியில் குற்றம், ரகசியம், காவல்துறைத் தேடல் படமாக எடுக்க இருக்கவேண்டும் என்ற நினைப்பும் இருந்துள்ளது; மலேசியாவின் சுற்றுலாச் சிறப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்ற எண்ணமும் இருந்துள்ளது. இந்தக் குழப்பம் படத்தின் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு இணையாக யோகிபாபு பாத்திரமும் இருக்க வேண்டும் என நினைத்ததால் நகைச்சுவைக் காட்சிகள் தூக்கலாகிப் படத்தின் தன்மையை இரண்டுங் கெட்டான்களின் தொகுப்பாக மாற்றியிருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள பெண்பாத்திரங்களுக்கு முழுமையான பாத்திர வார்ப்பு இருந்த போதிலும் நடிப்பை வெளிப்படுத்தாமல் வந்துபோகும் பெண்களாக - புதுமுக நடிகைகள் தேர்வு செய்யப்பட்டதால் நினைவில் நிற்காதவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால் தனக்குத் தரப்பட்ட வில்லன் பாத்திரத்தைக் கச்சிதமாக நடித்துக் காட்டியிருக்கிறார் பப்புலு பிருத்விராஜ். அவரது பாத்திரமும் நடிப்பும் மட்டுமே குறையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதிகூட ஓர்மையில்லாத நடிப்பையே தந்துள்ளார்.
வெளிநாட்டுப் பின்னணியில் - ஊர்களைச் சுற்றிக் காட்டுவதையும் துப்பறியும் வேலையையும் சரியாகச் செய்வதையும் சரியாகத் திட்டமிட்டுச் செய்த தேர்ந்த தமிழ்ச் சினிமா எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன். இரட்டை வேடத்தில் அவர் நடித்ததோடு நாட்டுக்கொரு காதல் என நகர்ந்த பொழுதுபோக்குப் படம் அது. அதற்கிணையாகச் சொல்லமுடியாது என்றாலும் எஸ்.பி .முத்துராமன் இயக்கியத்தில் ரஜினிகாந்த் -ஶ்ரீதேவி நடித்த படம் ப்ரியாவும் நல்லதொரு பொழுதுபோக்குப் படமாகவே அமைந்தது. அதற்கு எழுத்தாளர் சுஜாதாவின் கதையும் ஒரு காரணம். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்ரதா, கீதா நடிக்க, பாலச்சந்தர் இயக்கிய 'நினைத்தாலே இனிக்கும்' படம் கூட சுற்றுலா நோக்கம் கொண்ட படம் என்ற வகைப்பாட்டுக்குள் வரும். தமிழர்களின் இடம்பெயர்வு/ புலம்பெயர்வுப் பின்னணியில் பேசவேண்டிய இன்னொரு படம் தனுஷ் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா. அதில் ஊர் சுற்றிக் காட்டுவது என்பதைவிட குற்றப்பின்னணியே முதன்மை நோக்கம்.
இந்தப் படங்கள் எல்லாம் இந்தியப்பரப்பைத் தாண்டித் தமிழர்கள் வாழும் பரப்பை நோக்கி எடுக்கப்பட்ட சினிமாக்கள். அந்தப்பரப்பில் வாழும் தமிழர்களின் பாடுகளை - வாழ்நிலையை - துயரத்தையோ கொண்டாட்டத்தையோ சொல்ல நினைத்த படங்கள் அல்ல. அவர்களின் பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் இடப்பின்னணியை உருவாக்கிக் கொண்ட 'பான் தமிழ்-PAN TAMIL' வணிகப் படங்கள்.
கருத்துகள்