மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்


நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான்.



காலகட்டத்தின் கதை

இம்மாத (2024,ஜூன்)உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.
 
நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்குகள் என்பதாகத் தோன்றலாம். ஆனால் அந்த இருவரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மாணவர்களாகச் சித்திரித்ததின் மூலம் அக்காலகட்டப் பொதுப்போக்கொன்றை விவாதிக்கும் நோக்கத்திற்குள் நுழைகிறது கதை. அந்த விவாதம் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து மாணவ மனநிலை என்பதால், இந்தக் கதை முக்கியமான கதையாக மாற்றம் பெறுகிறது.
யுவன் சந்திரசேகரின் கதைகளுக்கான வெளியாக மதுரை நகரமும் வைகைக்கரை கிராமங்களும் இருக்கின்றன என்பதைக்கொண்டு அக்கதைகளில் வரும் மனிதர்களை மதுரையின் மனிதர்களாகச் சொல்லிவிட முடியாது. மனிதர்களின் பொதுக் குணத்தையும் இருப்புகளையும் நகர்வுகளையும் எழுதும்போது அந்த மனிதர்கள் குறிப்பிட்ட வெளியில் இருந்தார்கள் எனக் காட்டுவது புனைகதையின் பொதுக்கூறு ஒன்றை உருவாக்கும் புனைவாக்கம் மட்டுமே. அதைத்தாண்டி அந்த இடத்திற்குப் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை. ஆனால் இந்தக் கதையில் இடம்பெறும் கல்லூரி, மதுரையில் ஒரு தனித்துவமான கல்லூரி என்பதைக் கதை பதிவு செய்துள்ளதால் மதுரைக்கதையாக ஆக்க யுவன் முயன்றுள்ளதும் தெரிகிறது.
அரசியல் பார்வைகள் வேறுவேறாக இருந்தபோதிலும் அதனை விவாதிக்கும்போது ஆவேசமாகவும் பிடிவாதமாகவும் வெளிப்பட்ட கருத்தியல்வாதிகளாக இருப்பவர்கள், சட்டென்று மாறி நண்பர்களாகப் பேசிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் நம்பிய அரசியல் கருத்துக்களுக்காகக் கல்லூரி வளாகத்திலும் வெளியிலும் விசாரணைகளைச் சந்திக்கும் நெருக்கடிக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள். அப்படி நுழையும்போது நட்பு மட்டுமே முதன்மையாக இருந்திருக்கிறது.
 
1980 களின் மாணவர்களிடையே கவர்ச்சிகரமான அரசியல் பார்வையாக இருந்த தீவிர இடதுசாரித்தனம். புரட்சிகரமான மாற்றங்களை விரும்பியவர்கள் மெல்லமெல்ல அதனையெல்லாம் கைவிட்டு முதலாளியத்திற்குள் நகர்ந்தது. இடதுசாரித்தனத்தின் மீது கற்பனையான ஈர்ப்பு ஏற்பட்டு விலகலை அடைந்த தலைமுறையின் மீது விமரிசனப் பார்வையை முன்வைத்துள்ள கதையின் வெளியாக மதுரையின் ஒரு கல்லூரி இருக்கிறது. அவர் விவரிக்கும் கல்லூரி வெளியோடு தொடர்புடையவன் என்பதால் இந்தக் கதையும் கதையின் நிகழ்வுகளும் எனக்கும் நெருக்கமாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் மனிதர்களில் ஒருவன் என்பதால் கதையின் பாத்திரங்களில் ஒருவனாகவும் என்னைப் பொருத்தி வாசிக்க முடிந்தது.
*******************

எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும்

யுவன் சந்திரசேகரின் பல கதைகளில் விவாதிக்கப்பட்ட எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும் என்ற அடிக்கருத்து இக்கதையில் இன்னொரு கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் இணையும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும்குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கியத் திறனாய்வுக்கான சொல்லாடல்களாக இருப்பவை. இச்சொல்லாடலைப் புனைவாக்கி எழுதப்படும் கதைக்குள் அலையும் எழுத்தாளப்பாத்திரத்தை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையோடு நிரல்நிறுத்தி வாசித்துவிடத்தூண்டும் குறிப்புகள் கதைக்குள் எங்காவது கிடைத்துவிடும்.

எனது வாசிப்புக்குள் அதிகமான சிறுகதைகளில் உலவும் பாத்திரமாக இருந்தவர் ஜி.நாகராஜன். சுந்தரராமசாமி, திலீப்குமார், பிரபஞ்சன், மணா என்ற லக்ஷ்மா. சி.மோகன் எனப் பலரும் தங்களைக் கதைசொல்லியாக நிறுத்திக்கொண்டு ஜி.என்னின் சாயல் கொண்ட பாத்திரத்தைத் தங்களின் கதைக்குள் உலவ விட்டுள்ளனர். அந்தக் கதைகளை நினைவூட்டும் கதையொன்றை இம்மாதக்(2023 பிப்ரவரி) காலச்சுவடுவில் யுவன் சந்திரசேகர் எழுதியுள்ளார்.

சிங்கத்தின் குகையில் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அக்கதைக்குள் கதை சொல்லியாக யுவன்சந்திரசேகர் இருக்கிறார். ஒரு நாவலை எழுதிவிட்டு அடுத்த நாவல் முயற்சியை அப்படியே கைவிட்ட எழுத்தாளர் ம. கருத்திருமனைக் குறிப்பான ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்துவதற்குப் போதிய ஆதாரங்கள் கதைக்குள் இல்லை. மதுரை நகரம், தங்கியுள்ள விடுதியின் வர்ணனை, எழுதப்பெற்ற நாவலின் வெளி தமிழ்நாடாக இல்லாமல் அந்நியமண்ணாக ( ஆப்பிரிக்கா) இருப்பது போன்றனவற்றைக் கொண்டு ப.சிங்காரத்தின் சாயலை நினைத்துக்கொள்ளத்தூண்டுகின்றன. ஆனால் அத்தகைய தூண்டுதல் இந்தக் கதைக்கு முக்கியமில்லை.

ம.கருத்திருமன் முழுவதும் முழுமையான புனைவுப்பாத்திரம் என்ற நினைப்போடு வாசிப்பதே சரியாக இருக்கும். அக்கதைக்குள் விவாதிக்கப்படும் எழுத்து சார்ந்த விவாதங்கள் தான் முக்கியமானவை. எழுதப்படும் புனைவுக்குள், எழுத்தாளரின் அனுபவத்தின் பங்கு, கதையெழுப்பும் விவாதங்கள், அதன் நிறைவுக் குறிப்பு போன்றனவற்றை ஒரு இலக்கியத்திறனாய்வாளரின் கோணத்தில் கதைக்குள் புனைவாக்கியிருக்கிறார் யுவன் சந்திரசேகர். குறிப்பாக ஆண் -பெண் உறவுகளை எழுதுவது, காமத்தைக் கதைப்பொருளாக்கும்போது எழும் எதிர்ப்புப் போக்குகள் போன்றன விவாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை எழுதும் எழுத்தாளர்களை ஒழுக்கவிதிகள் சார்ந்த அறிவுப்பரப்பும் பொதுமனமும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைத் தடையாக உணரும் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

பல நேரங்களில் மதுரைப்பின்னணியில் தனது கதையை எழுதும் யுவனின் கதைக்குள் அந்தப் பின்னணியே அவரது அனுபவத்தின் சாரம் இருப்பதாகக் காட்டிவிடும். கதைசொல்லியாகத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் தன்னைப் பற்றிய குறிப்புகளில் காட்டும் வெளிப்படைத்தன்மையும் ஒவ்வொரு கதைக்குள்ளும் கதைசொல்லி என்ற இடத்தைத்தாண்டிப் பாத்திரம் என்பதாக அவரை முன்வைத்துவிடும். இந்தக் கதையிலும் அதனைக் கச்சிதமாகச் செய்துள்ளார். நிகழ்காலத்தின் முதன்மையான புனைவெழுத்தாளரான யுவனின் கதைதளை வாசிப்பது எப்போதும் புதிய அனுபவம். ஒருவிதத்தில் எழுத்தாளர்களுக்கு எழுத்து போதையென இக்கதைக்குள் வரும் குறிப்புபோல, வாசிப்பவர்களுக்கு அதுவே போதைதான். வாசித்துப் பாருங்கள்

*********************

சொல்முறைச் சோதனை

விராட பர்வத்தை உனக்கு யார் சொன்னது என்று கேட்டால் என் தாய்மாமா சொன்னார் என்று தான் சொல்வேன். அவரோ வேதவியாசனுக்கு ஜெனமே ஜெய மகாராசன் சொன்னது எனவும், ஜெனமேஜெய மகாராஜனுக்கு அவனது மூதாதையர்களின் ஒருவனான ... சொன்னது எனவும் சொல்லியிருக்கிறார். யுவன் சந்திரசேகரின் புளிப்புத்திராட்சை(2014,மே) என்ற கதை மட்டுமல்ல; பல கதைகள் இதிகாசக் கதை சொல்லும் மரபைப் பின்பற்றி நிகழ்கால மனிதர்களின் கதையைச் சொல்லும் தன்மை கொண்டவை.

கிராமப்புறத்தில் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் புளிப்புத் திராட்சை ஆனால் சொல்லப்பட்ட முறையால் தொடர்ச்சியற்ற எழுத்தின் சாத்தியங்களைப் முழுமையாக வாசகனுக்குத் தரும் கதையாக இருக்கிறது. மார்க்கேஸின் மரணத்தை அறியாத அவரது ரசிகன் வெயிலுமுத்துவைக் கதைக்குள் கொண்டுவந்ததன் வழியாக நவீனத்துவக் கதைகளின் வாசிப்பு முறையைக் கோரும் யுவன் சந்திரசேகர், “ ஒருவேளை காந்தாரியின் ஜாதகமும், தனது ஜாதகமும் ஒன்றாய் இருக்கும் பட்சத்தில் ரத்த முத்துக்கள் நூற்றுக் கணக்கில் குழந்தைகளாக மாறினால், அவர்களையும் சாபம் பிடித்துவிடுமே என்ற அக்கறையால்..” போன்ற குறிப்புகளைத் தருவதன் மூலம் பாரதக் கதையின் பாணியே அதுவும் என எனச் சொல்லவும் விரும்பியுள்ளார்.

கதை சொல்லும் முறைகளின் அடுக்குகளைத் தாண்டி மூவார்நத்தம் ராமசுப்பு வைத்தியரின் வார்த்தைகளாகக் கதைப்பரப்பு மாறும்போது ஒரு பழைய பிரபுத்துவக் குடும்பத்தின் ரகசிய அடுக்குகளாக விரிகிறது. ராமசுப்பு வைத்தியர் மட்டுமல்ல்; தாந்திரீக வேலைகளும் தெரிந்தவர் என்று அறிமுகப்படுத்திவிட்டு. அவரைக் கிண்டலும் கேலியுமாகக் கூப்பிடும் உரிமை கொண்ட லச்சம் என்னும் லக்ஷ்மம்மா,சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ரேஞ்சர் பொன்னுச்சாமி ஆகியவர்களைப் பதவி அடையாளங்கள் நீக்கப்பட்ட மனிதர்களாகக் கதைக்குள் கொண்டுவந்துள்ள விதம் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது.

நவீன வாழ்க்கைக்குள் இருக்கும் நகரமனிதனான கதையின் வாசகன் தனது கடந்தகால நினைவுப்படுகைகளின் வழியாகப் பயணம் செய்யும் வாய்ப்பை உருவாக்கும் எழுத்துமுறையால் யுவன் எப்போதும் தேர்ந்த கதைக்காரனாகவே வெளிப்படுகிறான். அதுமட்டுமல்லாமல், “ ...... என்றாலும், ஊரார் துணிகளில் அழுக்கு நீக்கும் உரிமை ஏகாலியிடமும், ஊரார் ரோமங்களை மழிக்கும் பொறுப்பு நாவிதனிடமும், ஊரார் கனவுகளைச் செப்பனிடும் வித்தை ஜோசியனிடமும், ஊரார் வருவாயைப் பிடுங்கும் சாமர்த்தியம் சர்க்காரிடமும் இருக்கிற மாதிரி, ஊரார் நோவுகளைச் சுமக்கும் பாக்கியம் வைத்தியனைச் சேரும் என்பதால் எங்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்று வாசல்தேடி வந்து கிளிஜோசியன் அவளிடம் அடித்துச் சொன்னதன் அடிப்படையில், என்னிடம் வந்து சேர்ந்த கதைகளைத் தான் உங்களிடம் சொல்கிறேன்.” எனக் கதைக்குள் உருவாக்கும் சுவாரசியமான சொல்முறையாலும் யுவனின் கதைகள் ரசிக்கத் தக்க - நினைக்கத் தக்க கதைகளாக இருக்கின்றன. இந்தக் கதையும் அப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கதையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பார்க்கத்தக்க இரண்டு சினிமா

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்