சிவன் – தமிழ் – தமிழ் ஈழம்


ஒட்டாவா சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள க்யூபெக் நகரிலிருது வாகன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிவன் அருள் பெற விரும்புபவர்கள் முன்பதிவுக் கட்ட்டணமாக 35 டாலர் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம் என்ற விளம்பரத்தை முகநூலில் ஒருவாரம் முன்பு பார்த்தேன். அப்போதே அந்த த்தேரோட்ட நிகழ்வைப் பார்த்துவிடுவது என முடிவு செய்து மகன் ராகுலனிடம் விசாரித்தபோது ஒவ்வொரு வருடமும் ஜூலையில் தான் நடக்கும் போகலாம் என்று சொல்லிவிட்டார். இன்று (15/07/2023) காலை தான் அந்தத்தேரோட்டம்.கனாட்டா பகுதியிலிருந்து 20 நிமிடக் கார்ப்பயணத்தில் இருக்கிறது ‘நோர்த் கோவர்’ என்ற கிராமியப்பகுதி. தோப்பு, ஆறு, தோட்டம் என வளமான பகுதியில் அமைந்துள்ள அந்தக் கோயிலுக்காக பெரிய நிலப்பரப்பு வாங்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பது கோயிலின் கட்டமைப்பு அல்ல. ஒரு பெரிய வீட்டின் உட்பகுதிக்குள் மரத்தாலான சிறிய கோபுர அமைப்புகளுக்குள் தெய்வ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விடவும் தேர் பெரியதாக இருந்தது. 

முற்பகல் 11 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போனபோது தேர் ஒரு மூலையைக் கடந்து திரும்பியிருந்த து. நீண்ட வடக்கயிற்றின் இரண்டு பிரிகளை ஆண்களும் பெண்களுமாக நின்று இழுத்துக் கொண்டிருந்தார்கள். தேருக்குப் பின்னால் இரண்டு ஆண்கள் தேங்காயைக் கையில் பிடித்துத் தரையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். தேருக்கு முன்னால் அக்கினிச்சட்டி ஏந்திய பெண்கள், காவடி எடுத்துச் செல்லும் சிறுவர்கள் என இரண்டு பிரிகளுக்கும் இடையில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். வடம்பிடித்து இழுப்பவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் முறுக்கு, வடை, சுசியம் போன்ற பலகாரங்கள் தரும் தட்டுகள் போய்க்கொண்டே இருந்தன. இலவச நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் மட்டுமல்லாமல் பாப்கார்ன், சிப்ஸ் போன்றன வழங்கும் இடங்களும் இருந்தன. சாமிக்குப் படைக்கும் அர்ச்சனைத் தட்டுகளில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை என முக்கனிகள் இருந்தன. புகை எழுப்பும் தீபராதனைகள், பத்தி,சூடம் ஏற்றுதல் இல்லை. தேர் சுற்றிவரும்போது வளைவு உருவாக்கப்பட்டு தேர் நின்று பூஜை செய்யும் முறையும் இருந்தன. தேர்த்தட்டில் பூணூல் அணிந்த சிவாச்சாரியர்கள் நின்றிருந்தார்கள்.

தேர்த்திருவிழாவைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கும். கோயில் இருக்கும் சாலையின் இருமருங்கிலும் அரை மைல் நீளத்திற்குக் கார்கள் வரிசைகட்டி நின்றன. அத்தோடு வளாகத்தில் இருந்த தரைப்பகுதியில் கார்களின் வரிசைதான். கார்களின் எண்ணிக்கை பல நூறு இருக்கும். தேரோட்ட த்திற்குப் பெயர்போன தமிழ்நாட்டு ஊர்களில் ஒன்று திருநெல்வேலி. நெல்லையப்பரின் தேரோட்டம் இதே ஜூலை மாதம் – ஆனிமாதம் தான் நடக்கும். லட்சக்கணக்கான மக்கள் திரளும் நெல்லையப்பர் தேரோட்டத்தைச் சில வருடங்கள் பார்த்திருக்கிறேன். வாகையடி முக்கிலிருந்தும், சுடலை மாடன் கோவில் தெருவில் நின்றும் பார்த்திருக்கிறேன். ஆடி 18 தபசில் நடக்கும் சங்கரன் கோவில் தேரோட்டமும் நினைவில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் நினைவில் இருக்கிறது. இவையல்லாமல் நெல்லையில் ஒவ்வொரு ஊரிலும் சிவனுக்கும் அம்மனுக்கும் பெருமாளுக்கும் தேரோட்டங்கள் உண்டு.மதுரையில் அழகர் பவனி, தேரோட்டங்களையெல்லாம் தாண்டிய ஆகப்பெரும் நிகழ்த்து வடிவம்.

******

பிற்பகல் ஒருமணி வாக்கில் தேர் கோயில் வாசலுக்கு முன்பு இருக்கும் பீடத்திற்கு முன்பே நிலைகொண்டது. தேர் நிலைகொண்ட அதே நேரம் அன்னதானத்திற்கான அறிவிப்பு வந்தது. பழுப்பு அரிசிச்சோறு, வடை, சாம்பார், கூட்டு, வத்தல். வடாம், அப்பளம், பாயசம் என முழுச்சாப்பாடு அனைவருக்கும் வழங்கப்பட்ட து. செம்பழுப்பு அரிசிச்சோறு விரும்பாதவர்களுக்காக வெள்ளை அரிசிச்சோறும் பருப்புக்குழம்பும் என இன்னொரு வகை ஏற்பாடும் இருந்தது. ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட உணவு போதாது என்று உணர்ந்த நிலையில் திரும்பவும் ஒரு வாகனத்தில் உணவுப்பொருட்கள் வந்திறங்கின. வந்தவர்கள் அனைவரும் வரிசையில் நின்று அன்னதானத்தில் கலந்துகொண்டார்கள்.

2007 – இப்படியொரு கோவில் வேண்டுமென நினைத்து உருவாக்கியவர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களே. இப்போதும் அவர்களே முழுமையாகச் சிவன் கோயிலின் பக்தர்களாக இருக்கிறார்கள். இந்தியத்தமிழர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வருகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது தெரிந்தது. ஆடைத்தெரிவும் ஆபரணங்கள் அணியும் முறைகளும் ஒப்பனை முகங்களும் இருவகைத் தமிழர்களிடையேயும் வேறுபாடுகளைக் காட்டுகின்றன. 2008 முதல் நடக்கும் இந்த த்தேராட்ட த்திற்கு இந்த ஆண்டு 15 வது ஆண்டு.ஆனால் கோவிட் தொற்றுநோய்ப்பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் தேரோட்டம் நடக்கவில்லையாம். கடந்த ஆண்டு முதல் புதிய சிவன் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டப்படுகிறது. 2026-27 இல் 12000 சதுர அடியில் கோயிலைக் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தும் திட்டம் இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளும் நிதியுதவிகளும் நடக்கின்றன. இந்தியத்தமிழர்களும் நன்கொடைகள் வழங்குகிறார்கள் என்றார்.

திருவிழாவின் – தேரோட்டத்தின் ஒரு ஓரத்தில் ஒரு பொதுவாக்கெடுப்புப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு ஒலிபெருக்கியில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த ஏற்பாட்டைச் செய்யும் கணவன் -மனைவி இருவரும் டொரண்டோவிலிருந்து இங்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பு முன்வைக்க இருக்கும் கருத்துப்பிரேரணைக்கு உதவும் விதமாக இந்தப் பொதுவாக்கெடுப்பு நடக்கிறது என்றார் அங்கிருந்த பொறுப்பாளர். தமிழரின் அரசியல் விருப்பு எனத்தலைப்பிடப்பட்ட வாக்கெடுப்புச் சீட்டில் தமிழீழம், சமஸ்டி, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற மூன்று வாய்ப்புகள் இருந்தன. அம்மூன்றில் ஒன்றைத் தெரிவு செய்து அங்குள்ள பெட்டியில் போட்டுவிடச் சொன்னார்கள். நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சுற்றுலாப் பயணி என்று சொன்னபோது வலியுறுத்தவில்லை.

புலம்பெயர்ந்து இரண்டு பத்து ஆண்டுகள் ஆனபின்பும் யாழ்ப்பாணத்தமிழர்களின் நினைவுப்பெட்டகத்தில் தமிழ்மொழி என்பதும் தமிழ் அடையாளம் என்பதும் தமிழீழத்தாயகம் என்பதும் அழியாத நினைவுகள் என்பதை அந்த வாக்கெடுப்பு உணர்த்தியது. இவ்வடையாளங்கள் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றன. சிவன் தான் தமிழ்; தமிழ்தான் சிவன். அதுபோல் சிவனே தமிழீழத்தின் கடவுளாக இருக்கத் தக்கவன் என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்திருக்கும். ஆனால் இந்துக்கடவுளர்களுக்காக ஒரு நாடு எனச் சமயப்பெரும்பான்மையர் நினைப்பதுபோலச் சிவனுக்காக ஒரு நாடு என்று அவர்கள் போராடும்போது சொல்லவில்லை. தனிநாடு அடைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது.


*********

மூன்று மணி நேரம் அந்த வளாகத்தில் இருந்தபோது நமக்குத் தெரிந்த முகம் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கோயிலுக்குள் சிவனைக் கண்மூடி வழிபட்டுவிட்டுக் கண் திறந்த ஒருவர் ‘உங்கள் முகம் பார்த்த முகமாக இருக்கிறதே’ என்றார். அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் கோவிட் முகமூடி அணிந்திருந்தார். “நீங்கள் இந்தியரா? என்று கேட்டேன். ஆமாம்; கோயம்புத்தூர்” என்றார். நான் இப்போது கோயம்புத்தூரில் தான் இருக்கிறேன். ஆனால் ஓராண்டாகத்தான் இருக்கிறேன் என்றபோது, ‘இல்லை, உங்களை விஜய் டிவியின் நீயா? நானா?வில் பார்த்திருக்கிறேன்’ என்றார். சரிதான் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டோம். அவரோடு வந்திருந்த மதுரைக்காரத் தம்பதி, சிவகங்கைக்காரர்களையெல்லாம் அழைத்துக் காட்டிப்பேசினார். அவரைத் தாண்டித் தேரோடு நடந்து கொண்டிருந்த போது ஒருவர் ‘நீங்கள்.. ? என்று இழுத்துவிட்டு பேரா. ராமசாமி தானே?’ என்றார். ‘ஆமாம்.. நீங்கள்’ என்றேன். நான் சுதர்சன். யாழ்ப்பாணம்; 20 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். உங்களுடைய முகநூல் எழுத்துகளுக்கு வாசகன்; பாலோயர்’ என்று சொல்லிப் படம் எடுத்துக்கொண்டார். அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஊடகங்கள் – தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகமான முகநூல் தரும் அறிமுகத்தின் வீச்சை நினைத்துக்கொண்டேன். இருவரும் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டார்கள். ஒருவேளை இங்கே இருக்கப்போகும் 15 நாட்களுக்குள் அழைத்துப் பேசலாம். சந்திக்கவும் நினைக்கலாம்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்