நீளும் வாரக்கடைசியில் நெடும் பயணங்கள் – 1




ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஒரு பெருநகரம் பார்த்தல் என்னும் திட்டத்தில் டல்லாஸ் நகரிலிருந்து போய்த்திரும்புதல் அல்லது ஒருநாள் தங்கித் திரும்பிவிடும் வகையில் பயணங்களைத் திட்டமிட்டோம். அதன்படி ஒருநாள் பயணமாக ஒக்கலகாமா போய்வந்த து முதல் பயணம். அடுத்த பயணங்களான ஆஸ்டின், சான் அண்டனியோ, ஹூஸ்டன் என்பனவெல்லாம் இருநாள் பயணங்களாக அமைந்தன. வேலை நாட்களில் மாலை நேரச்சிற்றுலாவாக டல்லஸ் நகரங்களைப் பார்க்க முடிந்தது.இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தவை நீளும் வாரக்கடைசிப் பயணங்கள். அமெரிக்காவிலும் சரி, கனடாவிலும் சரி ‘நீளும் வாரக்கடைசிகள்’ (Long weekends) என்பது அந்நாடுகளின் விடுமுறை நடைமுறைகளில் முக்கியமான ஒன்று. அது அவ்விரு நாடுகளும் பின்பற்றும் பொருளியல் நடவடிக்கையான நுகர்வுப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையன .

நீளும் வாரக்கடைசி என்னும் சொல்முறைமை

7 ஆண்டுகளுக்கு முன்னால் 2016 மே மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்தேன். அன்று, ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது. அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்க விடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.

போரில் இறந்தவர்களை நினைத்துக்கொள்ளும் இந்த நாளை 1971 முதல் ஐக்கிய அமெரிக்காவின் தேசியவிடுமுறை தினங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்கள். அதற்கு முன்பு உள்நாட்டுப் போரில் உயிர்விட்ட ராணுவ வீரர்களை நினைத்துக்கொள்ளும் நாளாகவே இருந்தது. அதன் தொடக்கம் 1868 மே 30 ஆக இருந்தது. அதன் பிறகு மேமாதத்தின் கடைசித் திங்களை நினைத்துக் கொள்ளும் நாளாக அறிவித்துள்ளார்கள். 1971 முதல் மேமாத த்தின் கடைசித் திங்கள் ஐக்கியக்குடியரசின் அனைத்து மாநிலங்களும் விடுமுறை அளிக்கின்றன. அதுமுதல் மேமாதத்திற்கான நீண்ட வாரக்கடையாக மாறியிருக்கிறது. அன்றிலிருந்து இந்நாட்டரசின் ஆணையை ஏற்று உலகநாடுகளெங்கும் சென்று போரிட்டு மரித்துப் போன அமெரிக்கர்களை இந்தநாளில் நினைத்துக் கொள்கிறார்கள்.





எல்லாவற்றையும் பகுத்தறிவுக் கொண்டும் தர்க்கரீதியாகவும் அணுகிப் பார்ப்பதாக நம்பும் அமெரிக்கர்களைப் போரை ஏற்க வைத்திருக்கும் அரசுகளின் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும். உள்நாட்டுப் போரை நடத்தியதை நினைவுகொள்வதில் அர்த்தமிருக்கிறது. அதே நேரத்தில் உலகத்தின் அனைத்துப்பரப்பிலும் உருவாக்கும் அநீதிகளை - அநீதிகளுக்கான தலைமையை அழித்து நீதியை நிலைநாட்டும் பொறுப்பு அமெரிக்க அரசுக்கு இருக்கிறது என்பதை எப்படி ஏற்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. அந்நிய நாடுகளில் தலையிட்டுப் போரை நடத்தும் அரசின் செயல்பாடுகளால் உள்நாட்டில் பலவிதமான நன்மைகள் பெரும்பாலான மனிதர்களுக்குக் கிடைக்கிறது. முன்னாள் ராணுவ வீரர் என்பதற்காகத் தனிநபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்கும் சலுகைகள் பலவிதமானவை. வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடங்கி வீடு,வாகனம், நிலம், உணவுவிடுதிகளில் சிறப்புரிமையென எல்லாவற்றிலும் முன்னுரிமைகள் உண்டு.இப்போதெல்லாம் உலகப் போர்களில் உயிர்நீத்தவர்களோடு இணைத்து வியட்நாம், லத்தீன் அமெரிக்கா, லிபியா, வடகொரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், எனப் பலநாடுகளுக்கும் சென்று போரிட்டு மறைந்த அமெரிக்க ராணுவவீரர்களுக்கான கல்லறைகளில் சின்னச்சின்னக் கொடிகளையேற்றி நினைவு கொள்கிறார்கள்.

அமெரிக்க அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ள நாட்கள் ஒவ்வொன்றும், அந்தந்த மாதத்தில் நீளும் வாரக்கடைசிக் கொண்டாட்டங்களாக நீட்டித்துக் கொள்வதற்கு ஏற்றபடி அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் ஜூலை 4, கிருஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 மட்டுமே நிலையான விடுமுறை நாட்கள். அவை என்ன கிழமையில் வருகிறதோ அன்று விடுமுறை. மற்ற விடுமுறை நாட்களெல்லாம் அந்தந்த மாதத்தின் நீண்ட வாரக்கடைசி நாட்கள் என்பதாக முறைப்படுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவதொரு சனி, ஞாயிறோடு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ சேர்த்து நீண்ட வாரக் கடைசிகளை உருவாக்கித் தருவதன் மூலம் மாதத்தில் ஒருவாரக்கடைசி விடுமுறை இரண்டு நாளென்பதற்குப் பதில் மூன்றாகிறது. அமெரிக்காவில் பின்பற்றப்படும் விடுமுறைக் கணக்குகளும் கனடாவிலும் பெரிதாக மாற்றமில்லாமல் பின்பற்றப்படும்.

வாரக்கடைசிக் கொண்டாட்டங்கள்

வாரக்கடைசிகள் கொண்டாட்டத்திற்குரியன என்பது மேற்குல வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட சிந்தனை. கொண்டாட்டங்கள் குடும்பவெளிக்குரியன அல்ல என்பதும் அதன் தொடர்ச்சி. இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாடுவதற்குக்கூட பொதுவெளிகளையே தேர்வு செய்வார்கள் அவர்கள். காதலெனும் அந்தரங்கச் செயல்பாட்டை முடித்துக் கணவன் - மனைவி பாத்திரத்தை ஏற்கும் புதிய ஏற்பாட்டிற்குக் கூட ஒரு கேளிக்கை விடுதியையோ, பரபரப்பான பெருஞ்சாலையையோ தேர்ந்தெடுத்து முட்டிபோட்டுக் காதல் விடுத்து, “கணவனாக ஏற்றுக் கொள்” எனச் சொல்வதில் ஒருவித மயக்கத்தை அடைவதுண்டு. ஆனால் இந்தியர்களுக்கு வாரக்கடைசி நாட்கள் என்பன அப்படி அல்ல.

குடும்பம், வீடு - என்ற இரண்டு சொற்களையும் ஒருபொருட் பன்மொழிபோல இந்தியர்களாகிய நாம் பயன்படுத்துகிறோம். வீடு இடப்பெயர். இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகாரமான நிலப்பெயர் வீடு. குடும்பம், வீட்டோடு தொடர்புடைய கருத்தாகவும் அமைப்பாகவும் இருக்கும் பெயர்ச்சொல். தந்தைமை/ ஆண் அதிகாரம் செல்லுபடியாகும் கருத்தியல் தளம். ஒரு வீட்டின் உரிமையாளராக இருக்கும் தந்தை, குடும்பத்தலைவராக நம்பப்படுகிறார். வீடு என்னும் இடத்தின் உரிமை காரணமாகக் குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குளத்திலும் அவரது உழைப்பும் சம்பாத்தியமும் இருக்கிறது என நம்புவதால் அந்த வீட்டின் ஒவ்வொரு அறைக்குள் இருப்பவர்களும் தனது கட்டுப்பாட்டுக்குள், கண்காணிப்புக்குள் இருக்க வேண்டியன என்பதும் அந்த நம்பிக்கையின் நீட்சி.

இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகார வெளியான ‘வீடு’போல மேற்குலக வாழ்க்கையில் வீடு இருப்பதில்லை. வீடு முழுவதுக்குள்ளும் செல்லும் உரிமையை யாரும் விரும்புவதில்லை. வீட்டிற்குள் இருக்கும் ஓரறை மட்டுமே அவர்களது உரிமை. பொது அறைகளான குளியலறை, கழிப்பறை, சமையலறை, சரக்கறை போன்றனவற்றைப் பயன்படுத்த வரிசையில் நிற்கவேண்டும். ஒருவர் பயன்படுத்தியபின் இன்னொருவர் அனுமதிபெற்று நுழையலாம். காக்கவைத்ததற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அனுமதி தந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். மகளின் அறையில் அம்மா நுழைவதற்கும், தந்தையின் அறையில் தனயன் நுழைவதற்கும்கூட அனுமதி வேண்டும். ‘மன்னிக்க, நன்றி’ போன்ற வார்த்தைகள் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்கள். வரிசையில் முதலில் நின்று கதைவைத் திறப்பவர் அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதிப்பவராக நாகரிகம் காட்டினால் மதிக்கப்படுவார்; வரிசையில் வரும் இன்னொருவர் அவரை அனுப்பிவிட்டுத் தான் கதவைத் தாங்கிநின்றால் பெருந்தன்மையோடு நன்றி கூறிப்படுவார். இவையெல்லாம் மேற்கின் பண்பாட்டு அடையாளங்கள்.

வீட்டின் தேவைக்காகச் சேர்ந்து வாழத்தொடங்கிக் காதலனாக ஆக்கிக் கொண்ட ஒருத்தி எனது மாணவியாக இருந்தாள் வார்சாவில். அவனை என்னிடம் அறிமுகம் செய்வதற்கு முன்னால் ஆரத்தழுவி முத்தமிட்ட பின்பே என்னிடம் அறிமுகப்படுத்தினாள். அவளது தந்தையின் வீடு (அவள் அப்படித்தான் சொன்னாள் ) பால்டிக் கடல் ஓரத்தில் ஒரு பண்ணைவீடாக இருக்கிறது. எனக்கு வார்சாவின் விடுதி வாழ்க்கை பிடிக்கவில்லை. அதனால் வீடுதேடினேன். இவன் தன் தாத்தாவின் வீட்டில் உள்ள இரண்டு அறைகளுக்குச் சொந்தக்காரன். ஒரு அறையை வாடகைக்குக் கொடுக்கத் தயாராக இருந்தான். அந்த அறையை எனது படிப்புக்கால அறையாகப் பயன்படுத்தத் தயாரானேன். இரண்டு ஆண்டுகளாக அந்த அறையில் இருக்கிறேன். வாடகை கொடுக்கிறேன். ஓராண்டாகக் காதலிக்கிறோம். இப்போது சேர்ந்து வாழ்கிறோம். எப்போதாவது இருவருக்கும் உறவுகொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்தால் இன்னொருவர் அறையில் அனுமதியோடு நுழைவோம். மற்றபடி தனித்தனி தான்.

வார நாட்களில் நான் எனது அறைக்குப் போகும்போது அவன் வேலைக்குப் போயிருப்பான். அவன் வரும்போது நான் பல்கலைக்கழகத்துக்கு வந்திருப்பேன். இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்றால் வெளியில் தான் சந்தித்துக் கொள்ளமுடியும். வாரக்கடைசிநாட்களில் நண்பர்களோடு வெளியில் செல்வதே விருப்பமானது. அறையில் அடைந்து கிடப்பது சோகம். வாரக்கடைசிகளை வீட்டின் புறத்தே நின்று கொண்டாட வேண்டுமென நினைப்பதும் அவர்களின் பண்பாட்டு அடையாளமே. அந்தரங்கமான இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொள்ளவும் முட்டிபோட்டுக் காதலைச் சொல்லவும்கூடப் பொதுவெளியைத் தேர்வுசெய்பவர்கள் அவர்கள். முத்தத்தை அந்தரங்கமாக நினைக்கும் மனநிலைக்குமாறாகப் பொதுவெளிக்குரியதாக வைத்திருப்பதை நாம் புரிந்துகொண்டால் மற்றவற்றைப் புரிந்துகொள்ளலாம்.

வாரக்கடைசிப் பொருளாதாரம்

வாரக்கடைசியைக் கொண்டாட்டத்தின் அடையாளமாக மாற்றியதின் பின்னணியில் சுற்றுலாப் பொருளாதாரம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உருவாகும் நுகர்வுப் பண்பாடும் இருக்கிறது. சுற்றுலாவும் பண்ட நுகர்வும் மேற்குலகில் தனியார் வசம் இருக்கின்றன. வாரக் கடைசிக் கொண்டாட்டங்களைச் பேரங்காடிகளின் விற்பனைச் சலுகைகள் கட்டமைக்கின்றன. நீண்ட நாள் தேங்கி நிற்கும் துணிகள் உள்ளிட்ட பண்டங்களைக் கழித்துக்கட்டும் விற்பனைச் சலுகைகளை அவை வழங்குகின்றன.. பணப்பரிவர்த்தனையை மாற்றிக் கடன் அட்டைகளாகவும் சேமிப்பு அட்டைகளாகவும் மாற்றிவிட்ட பின்னை முதலாளியம் நினைவு தினங்களைக் கொண்டாட்ட தினங்களாகவும், விற்பனைப் பெருக்க நாட்களாகவும் மாற்றி வைத்திருக்கிறது. நம்மூர்ச் சந்தையில் ஆடிக்கழிவு என்னும் பெயரில் நடக்கும் சலுகைகளை நினைத்துக் கொள்ளலாம்.

பெரிய சேர்க்கை நாளாக்கும் திட்டம்




ஜூன் 30 எங்கள் திருமண நாள். நினைவில் இருக்கும் அந்த நாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இந்த ஆண்டின் நீளும் வாரக்கடைசி நாளொன்றைத் தேர்வு செய்தார்கள் பிள்ளைகள். அதனைக் கொண்டாடத்தேர்வு செய்யப்பட்ட இடம் ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்திய அமெரிக்கர்களின் நினைவுச்சின்னம் இருக்கும் மலைப்பிரதேச நகரம் தாவோஸ். நியூமெக்ஸிகோ மாநிலத்தின் இருக்கிறது. அங்கிருக்கும் மெக்ஸிகன் உணவகத்தில் இரவு உணவுக்குப் பின் பனிக்குளிர்மை கூடிய கேக் ஒன்றைப் பங்கிட்டுத் தின்று கொண்டாடுவதான திட்டம் பற்றி எனக்கும் மனைவிக்கும் முன்னறிவிப்பு இல்லை; இன்ப அதிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதால் முன்பே சொல்லவில்லை.

டல்லாஸ் நகரிலிருந்து 10 மணி நேரம் காரில் பயணித்து அழைத்துப் போனது மகள் குடும்பம். கார்ப்பயணம், விமானப்பயணம், திரும்பவும் கார்ப்பயணம் எனப் பயணித்து கனடாவிலிருந்து தாவோஸ் வந்து சேர்ந்திருந்தது மகன் குடும்பம். நீண்ட தூரமும் நேரமும் பயணித்த பின் ஒன்றிணைந்த மனநிலை. மகிழ்ச்சியானது.மகன் ராகுலன் குடும்பம் 9 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் கனடாவிலுமாக இருக்கிறது. மகள் குடும்பம் சென்னையிலிருந்து புனேக்கு இடம்பெயர்ந்து இப்போது இருப்பது அமெரிக்காவில் .

பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய எனக்கு ஜூன்,30 கோடை விடுமுறையின் கடைசி நாளாக இருக்கும். அந்தக் கொண்டாட்டத்திற்கென எடுத்த புத்தாடை அணிந்து கொண்டு - ஜூலை முதல் தேதியில் புதிய கல்வியாண்டின் பணிகளைத் தொடங்குவேன். பிள்ளைகள் வேலைக்குப் போனபின்பு நானும் மனைவியுமாக மட்டுமே கொண்டாடுவோம். பணி ஓய்வுக்குப் பின் கடந்த நான்காண்டுகளாக அந்த நிலையும் இல்லை.

2023, ஜூலை ஒன்றுக்குரிய சூரியன் இன்னும் வந்து சேரவில்லை. தாவோஸ் மலை உச்சிக்குச் சூரியன் வந்து சேர்ந்தவுடன் புத்தாடையோடு அமெரிக்கப் பூர்வகுடிகளின் நினைவிடத்தைப் பார்க்கச் செல்ல வேண்டும். 1982, ஜூன் 30 இல் நடந்த திருமணம், 41 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த ஆண்டுக்கொண்டாட்டம் புதிய இடத்தில் அனைவரும் - மகள்,மருமகள், மருமகன், மகன், பேரன்கள், பேத்தியெனச் சேர்ந்து கொண்டாடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக நிகழ்ந்துவிட்டது.

  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்