புதிய வெளிகளில் விரியும் விவாதங்கள்


 ஆ .சி. கந்தராஜாவின் 'ஒரு அகதியின் பேர்ளின் வாசல்' நாவலை வாசித்த போது போலந்தில் இருந்த இரண்டாண்டுக் காலத்துக் காட்சிகள் எனக்குள் திரும்பவும் படமாக விரிந்தன.
போலந்திலும் ஈழத்தமிழ் அகதிகள் இருக்கிறார்கள் என்ற தகவலை எனக்குச் சொன்னவர் மரிஸ்யா. வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையின் தமிழ்ப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவி. “உரிய ஆவணங்கள் இல்லாமல் போலந்துக்குள் நுழையும் தமிழ் பேசும் மனிதர்களைக் கைது செய்து விசாரிக்கும் காவல்துறை, நீதிபதிகளின் முன்னால் நிறுத்தும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்வதற்காக நமது துறைக்குத் தகவல் வரும். தமிழ்ப் பேச்சை போல்ஸ்கியில் மொழிபெயர்க்கத் தெரிந்த ஆசிரியரோ, ஆய்வாளர்களில் ஒருவரோ போவார்கள். அவர்களோடு நானும் போவேன்; பேச்சுத் தமிழைக் கற்றுக் கொள்ள அதுவும் ஒரு வாய்ப்பு” என்று தமிழ் கற்கும் தனது ஆர்வத்தை விளக்கிச் சொல்லும்போது போலந்துக்குள் ஈழத்தமிழர்களின் இருப்பைப் பற்றிச் சொன்னார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து முன்னால் சோசலிச நாடுகளில் ஒன்று. அகதி வாழ்க்கையைத் தேடிய பயணத்தில் ஈழத்தமிழர்களின் விருப்பங்களில் ஒன்றாக முன்னால் சோசலிச நாடுகள் அதிகம் இருந்ததில்லை. கட்டணம் குறைவான ரஷ்ய விமானங்களில் பயணம் செய்வது அவர்களின் தேர்வாக இருந்தாலும் வாழ்க்கைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் அந்த நாடுகளில் தஞ்சம் கோருவதில்லை. சோசலிச நாடுகளில் எல்லாப்பணிகளையும் அந்த நாட்டு மக்களே செய்துகொள்ளும் பயிற்சியைப் பெற்றிருந்தார்கள் என்பதைத் தாண்டி, அந்நாடுகளில் புதிதாக வருபவர்களுக்குத் தரும் அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இதற்கு மாறானவை முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள். குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சேவைப் பணிகளுக்குரிய வேலைகளை அந்நாட்டு மக்கள் செய்யாமல், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களைக் கொண்டு செய்துகொள்வார்கள். அத்தோடு உடல் உழைப்பின் வழியாகச் செய்யும் உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் சேவைப் பணிகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி லாபம் ஈட்டுவதில் முதலாளித்துவ நாடுகள் கவனம் செலுத்தும். அதனால் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் விரும்பிச் செல்லும் நாடுகளாக அவையே இருந்தன. இவையெல்லாம் நான் ஐரோப்பாவிற்குப் போவதற்கு முன்பே அறிந்த செய்திகள்

போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைப் பேராசிரியராகத் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் (2011 அக்டோபர் முதல் 2013 ஜூலை வரை) ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வந்திருந்த ஈழத் தமிழ் அகதிகளோடு இணைய வழித் தொடர்புகள் அதிகம் உண்டு. சில நாடுகளில் நடந்த தமிழ் விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் போலந்தில் அப்படியொரு கூடுகையோ, கொண்டாட்டமோ நடந்ததாகத் தகவல் இல்லை. சந்தித்தவர்களும் கூட ஈழப் போராட்டம், அதன் அரசியல் காரணங்கள் போன்றவற்றில் ஈடுபாடு காட்டியவர்கள் அல்ல. ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட்டால் நல்ல வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வந்தவர்களாகவே இருந்தனர்.

முதன்முதலில் சந்தித்தவர் இருபதுகளில் இருந்த ஓர் இளைஞர். நான் தங்கியிருந்த சோக்றட்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குப் பக்கத்திலிருக்கும் சிறிய அங்காடி வளாகத்தில் என்னையும் மனைவியும் பார்த்தார். தரைத்தளமாக சிறிய கடைகள் கொண்ட அங்காடி வளாகம். பெருநகர நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வளாகத்தில் 150 முதல் 200 சதுர அடி கொண்ட கடைகள் ஐங்கோணத்தில் வரிசைப்பட்டிருக்கும். நடுவிலும் கடைகள் உண்டு. குடிபானக்கடைகள், பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள், காலனிகள், கைப்பைகள் போன்ற பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமல்லாமல் ஆண்களும் பெண்களும் தங்கள் உடலை அழகுபடுத்திக் கொள்ளும் நிலையங்களும் இருக்கும் வளாகம் அது. அந்த வளாகத்தில் விற்கும் அதே பொருளை சாலையின் அந்தப் பக்கம் இருக்கும் மார்க்போல் போன்ற பேரங்காடிகளில் வாங்கினால் விலை கூடுதலாக இருக்கும். அவற்றைத் தாண்டி ஆர்க்கேடியா போன்ற பெரும்பேரங்காடிகளில் இன்னும் கூடுதல் விலை.

குறைவாகப் பணச்செலவில் வாழ்க்கையைக் கடத்தும் மனிதர்கள் புழங்கும் அந்த வளாகத்தில் தான் அந்த இளைஞரைச் சந்தித்தோம். அவரது கையிலிருக்கும் அலைபேசி சிம்கார்டைப் பற்றிய விளம்பர வாசகம் அடங்கிய பட்டை ஒன்றை தோள்பட்டையிலிருந்து இறக்கிக் குறுக்காகப் போட்டிருந்தார். எல்லாம் போல்ஸ்கியில் எழுதப்பெற்றிருந்தது. எங்களின் தமிழ் உரையாடல் அவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். எங்களை நெருங்கிய அந்த இளைஞரின் கையில் அலைபேசிக்கான சிம்கார்டுகளின் தொகுதி ஒன்று இருந்தது. பட்டையிலிருக்கும் வாசகத்தைத் தொட்டுக்காட்டி, “ஒன்று வாங்கினால், இன்னொன்று இலவசம்” என்பதை முதலில் போல்ஸ்கி மொழியில் சொல்லிவிட்டு, உடனடியாக ஆங்கிலத்திலும் சொன்னார். சிம்கார்டின் பெயரைப் பார்ப்பதற்கு முன்பு அவரைப் பார்த்தேன். ஐரோப்பியர் இல்லை என்பதை உடலின் நிறம் மட்டுமில்லாமல் பேச்சின் உச்சரிப்பும் காட்டியது. சிம்கார்டை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது, லைகா என்ற பெயரையும் அது குறித்த தகவல்களையும் போல்ஸ்கியில் சொன்னார். ‘எனக்குத் தெரியும். இது இலங்கைத் தமிழர் ஒருவரின் முதலீட்டில் ஐரோப்பாவில் புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருந்த அலைபேசிக் குழுமத்தின் சிம்கார்டு’ என்று தமிழில் சொன்னேன். அவர் என்னிடம் தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தே அப்படிச் சொன்னேன். எங்கள் அருகில் போல்ஸ்காவினர் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து விட்டுத் திரும்பவும் போல்ஸ்கியிலேயே பேசினார்.

நீ இலங்கைத் தமிழரா? எங்கே இருக்கிறாய்? எனத் திரும்பவும் தமிழிலேயே பேசினேன். அவர் தமிழில் பேசாமல் போல்ஸ்கியிலேயே ஏதோ சொன்னார். சொன்னது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. சிம்கார்டுகளை அவரிடமே கொடுத்துவிட்டு நாங்கள் வாங்கவேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அங்காடி வளாகத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டோம். கொஞ்சதூரம் வந்தபின் அந்த இளைஞர் பின் தொடர்ந்து வருவது தெரிந்தது. வேகமாக வந்தவர் ‘மன்னிக்க வேணும்’ என்றார். “என்னிடம் இந்த நாட்டில் இருப்பதற்கான விசா இல்லை; முறையான பாஸ்போர்ட்டும் கிடையாது” என்று தயங்கித்தயங்கி யாராவது பக்கத்தில் வருகிறார்களா? என்று பார்த்தபடியே பேசினார். “இந்த நாட்டு மொழியில் பேசாமல் ஏதோவொரு மொழியில் பேசினால், காவலர்களிடம் சொல்லி விடுவார்கள்; கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பார்கள்; சிறைக்கு அனுப்பி விட்டால் என் அம்மாவின் பாடு சிக்கலாகிவிடும்” என்று தன் நிலையைச் சொன்னார். அம்மாவோடு இங்கு இருக்கிறார் என்பது புரிந்தது.

‘நான் இந்தியாவிலிருந்து வந்துள்ள தமிழர்; இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறேன்; இங்கே எங்களோடு வீட்டுக்கு வரலாம்’ என்று அழைத்தபோது அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை; எங்களோடு வரவும் அவர் மறுத்து விட்டார். “தானொரு இலங்கைத் தமிழர் என்று பொது இடங்களில் காட்டிக் கொள்வதை அவர் விரும்பவில்லை; அதனால் உண்டாகும் சிக்கல்களைச் சந்திப்பது எளிதானதல்ல” என்று நம்பினார். இப்போது அவரிடமிருந்து இரண்டு சிம்கார்டுகளை வாங்கிக் கொண்டு இரண்டுக்கும் பணம் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தேன். இதே இடத்திற்கு பின்னரும் வருவாயா? என்று கேட்டபோது, ‘சந்தேகம் தான்; எந்தப் பகுதிக்கு அனுப்புகிறார்களோ அங்குதான் நான் செல்ல வேண்டும்; என் உடலில் சிம்கார்டு விளம்பரத்தை மாட்டிக்கொண்டு நின்று எனக்குத் தெரிந்த போல்ஸ்கிச் சொற்களைக் கொண்டு விற்பனை செய்வேன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப்போய் விட்டார். அவரை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. இருப்பிடம் என ஒன்று இருக்குமா என்றும் தெரியவில்லை.

சில வாரங்கள் கழித்து, இன்னொரு சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த இடம் ‘லிட்டில் இந்தியா’. சின்ன வெங்காயமும் பச்சைமிளகாயும் இல்லாமல் செய்யப்படும் சாம்பார், சாம்பாராகவே இல்லை என்பது மனைவியின் அங்கலாய்ப்பு. இரண்டு வருடத்தில் நாக்கு செத்துப் போகும்; இந்தியாவுக்குத் திரும்பியபின் நாக்கின் ருசியை மீட்டெடுக்கப்படாதபாடு படவேண்டியிருக்கும் என்று பயமுறுத்தியதால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பும்போது நேராக லிட்டில் இந்தியா போவதை வாடிக்கை ஆக்கிக்கொண்டேன். அரிசி, பருப்பு வகைகள், பொடிகள் எல்லாம் கிடைக்கும். அவற்றை வாங்க எந்த நாளும் போகலாம். ஆனால் இந்தியக் காய்கறிகள் வாங்க வேண்டுமென்றால் செவ்வாய்க்கிழமைதான் போக வேண்டும். லண்டன் வழியாக வரும் காய்கறிகள் அன்றுதான் வந்திறங்கும். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் தமிழ்க் கன்னடர். கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்த பெற்றோரின் மகன். பொறியியல் படித்துவிட்டு ஐரோப்பாவிற்கு வந்தவர் போல்ஸ்காப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு போலந்துக் குடிமகனாகி விட்டவர்.

அவரிடம் போலந்தில் இருக்கும் தமிழர்கள் பற்றி அவரிடம் விசாரித்தபோது தமிழர்கள் அதிகமில்லை; எப்போதாவது இலங்கைத் தமிழர்கள் வருவதுண்டு; வந்தாலும் அதிகமான பொருட்கள் வாங்க மாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தார். அன்று கணவனும் மனைவியுமாக அவர்கள் வந்தார்கள். வார்சாவிலிருந்து விலகியிருக்கும் கிராமத்துப் பண்ணையொன்றில் விவசாய வேலைகள் செய்வதாகச் சொன்னார்கள். அவர்களும் அளவோடுதான் பேசினார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் எனது வீடு; வாருங்கள்’ என்று அழைத்தேன். போலந்தில் அகதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?என்று கேட்கும் ஆர்வத்தில் தான் வீட்டிற்கு அழைத்தேன். அவர்களும் வீட்டிற்கு வரத்தயங்கவே செய்தார்கள். போலந்தில் இருப்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதே தயக்கத்திற்கான காரணமாக இருந்தது. அவர்களை அழைத்துப் போவதால் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும் வாய்ப்புண்டு என்றும் சொன்னார்கள்.

2011-12 கல்வியாண்டின் முதல் பருவம் முடிந்து இரண்டாவது பருவத் தொடக்கத்தில் அந்த மாணவி, ‘இன்று வகுப்புக்கு வர இயலாது; நீதிமன்றம் செல்கிறேன்; அனுமதி வேண்டும்’ என்று உற்சாகமாகப் பேசினாள். அரசாங்கம் கொடுத்த அழைப்புக்குத் துறைத்தலைவர் அவரது பெயரை அனுப்பியிருக்கும் உற்சாகம்பேச்சில் வெளிப்பட்டது. “நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லும் தகவல்களில் எனக்கு சந்தேகம் இருந்தால் அங்கிருந்தபடியே அலைபேசியில் கேட்பேன்; நீங்கள் அதைத் தெளிவுபடுத்தவேண்டும்’ என்றும் சொல்லி விட்டுப் போனாள். போனவள் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்துச் சந்தேகம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அலைபேசியில் அழைத்து, “வகுப்பு முடிந்து உடனே வீட்டுக்குப் போய்விட வேண்டாம்; வார்சா ரயில் நிலையத்தில் நாம் சந்திப்போம். இன்று எனக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பு அனுபவங்களை உங்களோடு பேச வேண்டும்” என்று சொன்னாள்.

நான் போவதற்கு முன்பே அங்கு வந்துவிட்டாள். ரயில் நிலையத்திற்கருகில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்குள் அழைத்துப்போய் இருவருக்கும் தேநீர் சொல்லிவிட்டு இரண்டு பெரோக்கி எடுத்து வந்தாள். ‘நான் செய்த வேலைக்கு நீதிமன்றம் மதிப்பூதியம் தந்திருக்கு; அதனால் இன்று என் செலவு’ என்று சொன்னபோது தான் கற்ற தமிழ் வழியாகச் சம்பாதிக்க முடிந்த மகிழ்ச்சி அவளிடம் வெளிப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். ஐரோப்பா முழுவதும் உள்ள விசா நடைமுறைகளைச் சொல்லிவிட்டு ‘எந்த மனிதனையும் விசாரித்து விட்டுத்தான் தண்டனை வழங்குவார்கள்; அதேபோல் நியாயமான காரணங்கள் இருந்தால் விசா இல்லையென்றாலும் அரசின் கண்காணிப்பில் தங்க அனுமதித்து விடுவார்கள் என்றாள். “இன்று விசாரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் நால்வருக்கும் இங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி கிடைத்து விட்டது; அதற்கு நான் கற்ற தமிழைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று சொன்னபோது அவளது மகிழ்ச்சியால் கண்கள் விரிந்தன; முகம் சிவந்தது.

மாணவி சொன்னது உண்மைதான். எந்தவொரு குற்றவாளியையும் உரிய விசாரணைக்குப் பின்பே தண்டிக்கும் நடைமுறையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பின்பற்றுகின்றன. விசாரணைக் கைதிகளுக்கான வழக்குரைஞரை ஏற்பாடு செய்தல், மொழிபெயர்ப்பாளரைக் கொண்டுவந்து நிறுத்துதல் என எல்லாச்செலவுகளையும் அரசுகளே ஏற்றுக்கொள்கின்றன என்பதைப் பலரும் திரும்பத்திரும்பச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அகதிகளின் அனுபவங்கள் வழியாகவும் வாசித்திருக்கிறேன். மாணவியிடம் ‘ஈழத்தமிழர்களுக்கான அகதி முகாம் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘அப்படியெல்லாம் இல்லை; வார்சாவின் நடுவே விஸ்துலா ஆறு ஓடுகிறதல்லவா. அந்த ஆற்றுக்கு அந்தப் பக்கம் பல்வேறு நாட்டு மக்கள் இருக்கும் குடியிருப்புகள் இருக்கின்றன. அங்கே தங்கிக் கொள்வார்கள்; அங்கிருந்து வார்சாவிற்குள் வந்து வேலைசெய்வார்கள்; திரும்பவும் அங்கு போய்விடுவார்கள். அங்கெல்லாம் நாங்கள் பெரும்பாலும் போவதில்லை. அங்கிருப்பவர்கள் முரடர்கள்; தவறானவர்கள் என்று பலரும் சொல்வார்கள். அங்கு காவல் கண்காணிப்பு உண்டு. அவ்வப்போது காவல் நிலையத்திற்குச் சென்று தங்கள் இருப்பைப் பதிவுசெய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டு‘வசதி குறைவான வீடுகள் தான்’ என்று சொல்லும்போது அந்தக் குடியிருப்புகள் தமிழ்நாட்டு அகதிகள் முகாம் போன்றன என்று புரிந்து கொண்டேன்.

இன்று விசாரணைக்கு வந்தவர்களில் 25 வயது இளைஞர் ஒருவர் இருந்தாரா? என்று கேட்டேன். ‘இல்லை; ஒரு கணவன் – மனைவி ; மற்ற இருவரும் 42, 44 வயதுக்காரர்கள்; ஒருவர் குழாய் வேலை செய்வதாகச் சொன்னார்; இன்னொருவருக்கு வீட்டுத்தோட்டங்களில் வேலை. கணவனும் மனைவியும் வார்சாவில் இல்லை; 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் உருளைக்கிழங்குத் தோட்டத்தில் வேலை கேட்டிருப்பதாகவும், அரசாங்கம் அனுமதித்தால் அந்த வேலை கிடைக்கும் என்றார்கள். ஒருத்தரிடமும் போலந்தில் தங்குவதற்கான விசா இல்லை. முறையான பாஸ்போர்ட்டும் இல்லை என்றே சொல்கிறார்கள்’ என்று நீதிமன்றத்தில் நடந்தனவற்றைச் சுருக்கமாகச் சொன்னாள். சொல்லிவிட்டு, ‘மனிதாபிமான அடிப்படையில் நீதிமன்றம் போலந்தில் இருக்கலாம் என்று அனுமதித்து விட்டது’ என்றும் சொன்னாள். லிட்டில் இந்தியாவில் சந்தித்த அந்தக் கணவனும் மனைவியுமாக இருக்கும் என்று மனது ஆறுதல் பட்டுக்கொண்டது.

*******

போலந்தின் இரண்டாண்டுக்கால நேர்க்காட்சிகளோடு, கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக நான் வாசித்த ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பின் பல்வேறு காட்சிகளும் ஆசி. கந்தராஜாவின் ஒற்றை நாவல் வாசிப்பின்போது திருப்புக் காட்சிகளாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. நாற்பதாண்டுக்கால ஈழத்தமிழ் இலக்கியத்தைப் ‘போரிலக்கியம்’ என ஒற்றைச் சொல்லால் விளித்துக் கடக்கும் நிலை இன்று உள்ளது என்றாலும், அதற்குள் வெவ்வேறு காலகட்டங்களும் அவற்றிற்கேற்ப உரிப்பொருள் - உள்ளடக்கப் பொருண்மை வேறுபாடுகளும் உள்ளன.

பேரினவாதக் கருத்தியல் காரணமாக ஏற்பட்ட இனமுரண்பாட்டால் ஈழத்தமிழர்கள் தங்களைச் சிறுபான்மை இனமாக உணரத்தலைப்பட்டதைப் பேசிய காலகட்டம் முதல் நிலையென்றால், உரிமைப் போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட சூழலை முன்வைத்த கவிதைப் பெருக்கத்தை இரண்டாவது கட்டமாகச் சொல்லலாம். தங்கள் நிலைப்பாடுகளை வலியுறுத்தவும் ஆயுதப் போராட்டத்திற்கு இளைஞர்களை ஈர்க்கவும் வாய்ப்பளிக்கும் கவிதை வடிவத்திலிருந்து, போர்க்களக்காட்சிகளை எழுதும் நோக்கத்தில் புனைகதைகளின் பக்கம் நகர்ந்தது;எழுத்தாளர்களும் நகர்ந்தார்கள். அது அடுத்த கட்ட இலக்கிய நகர்வு. இந்நகர்வில் பேரினவாத அரசோடும், அதற்கு உதவியாக வந்த இந்திய அமைதி காக்கும் படையென்ற பெயரில் இலங்கைத் தமிழர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தோடும் சண்டையிட்ட போராளிக்குழுக்கள், வெவ்வேறு காரணங்களால் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்தையும் வாசிக்க முடிந்தது.

காரணமற்ற போர்களினால் அலைக்கப்பட்ட மக்கள், இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் உள்நாட்டு இடப்பெயர்வுகள் எழுதப்பெற்றன. உடைக்கப்பட்ட பாலங்கள், போக்குவரத்தற்ற காட்டுப் பகுதிகள், அத்துவானக் காடுகளில் நீண்ட நெடிய நடைப்பயணங்கள், இடையிடையே மரணங்கள் என உள்நாட்டு இடப்பெயர்வுகளை எழுதிய புனைவுகளும் அதற்குள் எழுதப்பெற்றன; வாசிக்கக் கிடைத்தன. சொந்த வீடுகளையும் கன்று காழிகளையும் காணிகளையும் விட்டுப் பிரியமுடியாத மனத்தோடு பெயர்ந்துபோனவர்கள் கண்ட போர்க்களக்காட்சிகளையும், அழிவுகளையும் எழுதிக் காட்டிய மூன்றாவது கட்டப் போரிலக்கியம்,புலப்பெயர்வு நிலையையும் பேசத் தொடங்கின. இவ்வகைப்புனைவுகளும் கட்டுரைகளும் புலம்பெயர் தேசங்களிலிருந்தே பெரும் தொகைநூல்களாகவும் தொகுப்புகளாகவும் வாசிக்கக் கிடைத்தன.

புலப்பெயர்வை எழுதிய புனைவுகளில் பலவும், முறையான கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களின் அலைவுகளையும் வலிகளையும் நெருக்கடியான வாழ்க்கை முறைகளையும் விரிவாக எழுதிக்காட்டின. முறையற்ற வழிகளில் கடவுச்சீட்டுகளைத் தயார்செய்து தருவதோடு போலியான நுழைவுச் சீட்டுகளையும் ஏற்பாடு செய்து தந்து பணம் பெற்றுக்கொண்ட குற்றச் செயல் கூட்டத்தினரால் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வும் எழுத்துகளில் பதிவாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல், பாலியல் வணிகம் என உலகம் முழுவதும் பரவிக்கிடைக்கும் இருட்டு உலகத்தோடு ஆயுதக்குழுக்களுக்கு உள்ள தொடர்புகளையும், அகதிகளாகச் சென்று சேரும் நாடுகளில் சந்தித்த துயரங்களையும், பனிப்பிரதே வாழ்க்கையால் சந்தித்த உடல் நோவுகளையும் எழுதிய போர்க்கால இலக்கியம் இப்போது ஒருவித சமநிலைப்பார்வையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த காலத்தின் மனவெழுச்சிகள், ஆயுதப்போராட்டத் தயாரிப்புகள், லட்சியவாதத்தின் பேரால் நிகழ்ந்த கொலைகளும் வன்முறைகளும் மறுபரிசீலனைக்குரியனவாக மாறியிருக்கின்றன. போராடிக் களைத்ததின் விளைவுகளை நடப்பும் காட்டுகின்றன; இலக்கியப்பதிவுகளும் பேசத் தொடங்கியுள்ளன.

போரிலக்கியத்தின் விரிவான இந்நகர்வின் பின்னணியில் ஆசி கந்தராஜாவின் ஒரு அகதியின் பேர்ளின் வாசல் முக்கியமானதொரு வரவாகத் தோன்றுகிறது. நாவல் உள்பட எல்லாவகைப் புனைவுகளிலும் ஈடுபடும் எழுத்தாளர்கள் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தங்கள் விருப்பம்போல உருவாக்குகிறார்கள். உருவாக்கி விரிக்கும்போது இம்மூன்று கூறுகளிலுமே இரண்டு வகையான உருவாக்கம் நடக்கிறது. ஒவ்வொரு கூறிலும் நேரடியான உருவாக்கமும், நினைக்கப்படும் புனைவாக்கமும் நிகழ்கின்றன. ஒரு புனைகதையில் இடம்பெறும் பாத்திரங்களைக் குறிப்பிட்ட காலம், வெளிகளில் உலவ விடும் நோக்கம் நடக்கும்போது அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருப்பதில்லை. எழுதுபவரின் நினைவுகள் காலத்தை முன் பின்னாகவும் அசைபோடும்; பாத்திரங்களைச் சந்தித்தவர்களாகவும் சந்தித்தவர்களால் சொல்லப்பட்டவர்களாகவும் முன்வைக்கும்; அவர்கள் இயங்கும் வெளிகளைப் பார்த்தனவாகவும் கேட்டனவாகவும் காட்சிப்படுத்தும். இவையே எழுத்தென்னும் படைப்புச் செயலில் நடக்கும் வேதிவினை.

இந்த இடத்தில் நாவல் என்னும் இலக்கியவகை, காப்பியமென்னும் வடிவத்திற்குள் உருவான புதிய வகை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவருடைய நீண்ட வாழ்க்கை வரலாற்றை விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட காப்பியத்தைப் போலல்லாமல் ‘குறிப்பிட்ட’ என்பதற்குள் எழுத்தாளரை நிறுத்தி அதன் மீதான சில தளங்களில் விவாதங்களையும் விசாரணைகளையும் முன்னெடுக்கும் வகையாக நாவல் இலக்கியம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பிய மொழிகளில் உருப்பெற்ற நாவல் வகையைத் தமிழும் அப்படித்தான் உள்வாங்கியிருக்கிறது

ஆசி கந்தராஜா இந்த நாவலில், ஜெர்மனியின் பேர்ளின் நகரத்தையும், 1982 முதல் 2017 வரையிலான முப்பத்தைந்து ஆண்டுக்கால அளவையும் அந்தக் ‘குறிப்பிட்ட’ என்பதற்குள் வைத்திருக்கிறார். பள்ளிக்கல்விக்குப் பின்னான உயர்கல்விக்காகப் பேர்ளின் நகரில் வசிக்க நேர்ந்த ஒருவனின் ( பால முருகன்) தன் வரலாறு போல ஒரு வாழ்க்கைக் கதையும், இலங்கையில் உண்டான இனக்கலவரமும் அதன் தொடர்ச்சியான போர்க்காலமும் உண்டாக்கிய நெருக்கடியில் புலம்பெயர்ந்த இன்னொருவனின் (தவராசா) முன்னிலைக் கதையும் இணைநிலையாக நகர்த்தப்பட்டுள்ளன. மேல்நாட்டுக் கல்வி, அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதனைக் கைப்பற்றிய ஆடவனுக்கு யாழ்ப்பாணச் சமூகத்தில் கிடைக்கச் சாத்தியமான மரியாதைகள், அதை அளிக்க நினைக்கும் குடும்பங்களின் போட்டிகள், அதனைப் பெரிதாக நினைக்காத காதல் மனம், காதலை வெளிப்படுத்தத் தயங்கும் ஆண் – பெண் மனநிலைகள் என நகரும் தனியொரு இளைஞனின் அகவாழ்க்கை ஒரு அடுக்காக நகர்கிறது. அவனது மனத்திற்குள்ளே ஒரு புறநிலை எதிர்கொள்ளலாக பேர்ளின் நகரம் இருக்கிறது. அவன் கற்கச் சென்ற காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வலுப்பெற நினைத்த சோசலிசக் கட்டுமான அரசும், அதனை இல்லாமல் ஆக்க நினைத்த முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டுமான அரசும் எனக் கருத்தியல்/ அரசியல் முரணாகப் பேர்ளின் நகரம் நாவலுக்குள் விரிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்களில் தொடங்கும் அந்த முரணிலைக் கருத்தியல் ஒவ்வொரு நிறுவனங்களிலும் வெளிப்படுகிறது. இந்த விவாதங்களின் வழியாக ஆசி. கந்தராஜா தனது நாவலை உலக இலக்கியங்களின் விவாத த்தளத்திற்குள் நகர்த்தியிருக்கிறார். அதனாலேயே நாவலுக்குள் ஒன்றிற்கு மேற்பட்ட சொல்முறைகள் இருப்பது போன்ற வடிவம் உருவாகியுள்ளது; ஒரு நேர்கோடற்ற – நான் லீனியர்- கதைசொல்லியின் திறனைக் கொண்டிருப்பது வெளிப்பட்டுள்ளது

தனியொரு மனிதனின் அகநிலை விவாதங்களையும் புறநிலைப் பார்வைகளையும் விரிவாக எழுதும் நாவல், அதன் இணைக்கதைக்குள் கதைசொல்லியை நகர்த்துவதன் மூலம், இலங்கை அரசியலின் – ஈழத்தமிழர்களின் போராட்ட வாழ்க்கையின் சாட்சியாகக் கதைசொல்லியை மாற்றுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ஜெர்மனிக்குள் வந்திறங்கும் ஈழத்தமிழ் அகதிகளின் இருப்பையும் பணிகளையும் அல்லது தண்டனைகளையும் உறுதி செய்யும் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் ஒருவனாகப் பாலமுருகன் கதைக்குள் இருக்கிறான். அதன் உச்சநிலையாகப் பள்ளிக்காலத்து நண்பன் தவராசாவின் கதையையும் நீதிமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டிய சூழல் வருகிறது. அவர்களின் சந்திப்பு உணர்ச்சிகரமான நாடக த்தின் உச்சநிலைக்காட்சியின் துயரப்படிமங்களாக எழுதப்பெற்றுள்ளது. மொழி, இனம் என்ற தனது அடையாளம் சார்ந்த அணுகுமுறையால் பலரையும் காப்பாற்றிய பாலமுருகன், நண்பன் தவராசாவையும் காப்பாற்றிப் புதியதானதொரு வாழ்க்கைக்குள் நுழைத்துச் சாட்சி ஒப்பம் இடுகிறான்.

நாற்பதாண்டுக் கால ஈழத்தமிழ்ப் போராட்ட வரலாற்றைக் குறுக்குவெட்டாக வாசிப்புக்குத் தருகின்ற இந்நாவலின் கதை சொல்லி, ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், போர்கள், புலம்பெயர்தலின் அலைக்கழிப்புகள் என எதிலும் நேரடியாக ஈடுபட்ட அனுபவம் இல்லாத ஒருவர் என்பதைக் குற்றச்சாட்டாகச் சிலர் கருதக்கூடும். ஆனால் ஒவ்வொன்றிலும் தொடர்புடைய மனிதர்களின் செயல்பாடுகளையும், நோக்கங்களையும், நகர்வுகளையும் விசாரித்து அறிந்து முன்வைக்கும் ஓரிடத்தில் இருந்தவர் அந்தக் கதைசொல்லி என்பதையும் அவர்கள் உணரக்கூடும். இலங்கையில் இனப்பிரச்சினையின் தொடக்கநிலைக் குறிப்புகள் வெளிப்பட்ட 1970 களின் இறுதியாண்டுகளிலேயே - பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே- ஐரோப்பாவிற்குள் நுழைந்து விட்டதால் இலங்கையின் போர்க்காலச் சூழலை விலகி நின்று பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவராகத் தன்னை இருத்திக் கொண்டு, தனது மனிதர்கள் வெவ்வேறு சுழலில் சிக்கி, அகதி வாழ்வில் படும் அவல நிலையைக் குறித்த அக்கறைகளை வெளிப்படுத்துகிறார். தனது நண்பனின் வாழ்க்கைப்பாடுகளுக்காக அவர்காட்டும் பரிவு என்பது ஒருவிதத்தில் தனது இனத்து மனிதர்கள், நீண்ட நெடிய போராட்டத்தைத் தனதாக்கிக் கொண்டு தொடரும் அலைக்கழிப்புகளையும் துயரங்களையும் சுமந்துகொண்டு அலைகிறார்களே என்ற மனக்குமுறல்களின் வெளிப்பாடும் கூடத்தான்.

போர்க்கால ஈழத்தமிழ்ப் பகுதிகளையும் புலம்பெயர் தேசத்து வெளிகளையும் எழுதிக் காட்டிய நாவல்கள் பலவும் கடந்த நாற்பதாண்டுக் காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தந்துள்ளன. அவற்றிலிருந்து ஆசி. கந்தராஜாவின் நாவல் இரண்டு முக்கியமான விலகலைக் கொண்டிருக்கிறது. முதலாவது விலகல் ஐரோப்பிய மையவாதமாகவும் முரண்பாடாகவும் விவாதிக்கப்படும் அரசுருவாக்க முரண்பாடு. பெர்ளின் நகரை மையப்படுத்தி பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை வழியாக முதலாளித்துவ நாடுகள் மேற்கொண்ட நெருக்கடிகள் இந்நாவலில் முக்கியமான விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளன. இந்த விவாதங்கள் உலக நாவல்கள் பலவற்றில் விவாதிக்கப்படும் சொல்லாடல்களுக்கு இணையாக எழுதப்பெற்றுள்ளது. இரண்டாவது விலகல் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் பம்பாயின் தாராவிப் பகுதியின் பங்கு. அகதி வாழ்க்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பரிவு, அரசமைப்புகளின் குரூரமான எதிர்மறைப்போக்கு போன்றன பலரால் எழுதப்பெற்றுள்ளன. ஆனால் இதில் பம்பாய் நகரத்துக் குற்றச்செயல் கும்பல்களின் இடம் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலியான கடவுச்சீட்டு உருவாக்கம், விசா உரிமங்கள் தயாரித்தல், ஆள்மாறாட்டம், போதைப்பொருள் கடத்தலுக்கு அகதிகளைப் பயன்படுத்துதல், அப்பாவிப் பெண்கள் மீதான பாலியல் குரூரங்கள் என பம்பாய் நகரின் இருட்டான வாழ்க்கை இதுவரை எழுதப்படாத பகுதிகளாக இந்நாவலின் வழியாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.

பழைய மரபான சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் புதிய மனிதனொருவன் புறங்கையால் ஒதுக்கிவிட்டு முன்னேறும் அகநிலை மாற்றத்தை விவரிப்பதில் தொடங்கி ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்குள் ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியுள்ள அவலத்தின் கசடுகளை விவாதித்து மறுபரிசீலனையைக் கோரும் இந்நாவலின் வரவு முக்கியமானதொரு வரவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்