மத்தேயு என்னும் தன்மை, முன்னிலை, படர்க்கை

தன்மை, முன்னிலை, படர்க்கை  இந்தச் சொற்களை இலக்கணப் புலமையின் அடிப்படைச் சொற்களாக அறிமுகம் செய்துள்ளது நமது கல்வியுலகம். தான், யான், நான் என்பன தன்மைகள்- தன்மை ஒருமைகள். அவற்றின் பன்மைகளாக தாம், யாம், நாம், நாங்கள். முன்னிலையில் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. அவன், அவள், அவர்,அது என்பன படர்க்கை யொருமைகள்; அவர்கள், அவை பன்மைகள். ச்சொற்களை உச்சரிக்கும்போது நான் என்னும் தன்னிலையும் நீ என்னும் மாற்றுநிலையும் அவள்/அவன் /அவர்-கள், அவை என்னும் விலகல் அல்லது சுட்டுநிலையும் உருவாவதைப் பற்றி இலக்கணப்புலம் விரிவாகப் பேசுகின்றது. இந்த உருவாக்கமே மொழியின் அடிப்படை வினையாற்றுக்கூறு. இவற்றிலிருந்தே அறிவுத்தோற்றம் நிகழ்கிறது.

இதே மூன்று சொற்களை மனிதர்களின் இருப்பைக் குறித்த அடிப்படைச் சொற்களாக விரிக்கின்றது தத்துவம். ஒரு மனித உயிரி நானாக இருப்பதில் இருக்கக்கூடிய ரகசியங்களைத் தொடர்ந்து பேசுகிறது. தன்னிலை யுரைத்தலின் விரிவுகள் பலப்பலவாக வெளிப்பட்டுள்ளன. கனிவாக, காதலாக, காமமாக, கொஞ்சலாக, அழுகையாக, புலம்பலாக, எண்வகை மெய்ப்பாடுகளையும் தன்னிலை உரைத்துப் பார்த்திருக்கிறது.  அதன் நீட்சியாக, ஒவ்வொரு தானும், தன் முன்னிருக்கும் நீயை அறிந்துகொள்ள முயல்கிறது. அறிந்துகொள்ளுதலின் தொடர்ச்சியாக அடைய நினைக்கின்றது; அன்பு செலுத்துகின்றது; ஆதரவு காட்டுகின்றது; அடக்கவும் விளைகின்றது. ஒவ்வொரு நானும் தன் முன்னிலையோடு நெருங்கியும் விலகியும் வினையாற்றுகின்றன.

விலகலின் தூரம் கூடும் நிலையில் படர்க்கையைப் பற்றிய எண்ணவோட்டங்கள் உருவாகின்றன. அதனுள் விருப்பும் வெறுப்புமாக தெறித்து விழுகின்றன. இவற்றையெல்லாம்   அறிவதற்காக மொழி உருவாக்கிக் கொண்ட சொற்களே , ,யா என்ற முதலெழுத்துகள் வழி உருவாகும் வினாச்சொற்கள். என்ன? எது? எப்படி?எங்ஙனம்? ஏன்? யாது? யார்? யாவர்? என்னும் வினாச்சொற்கள் வழி கேட்கப்படும் காரணங்களும் காரியங்களும் உலகத்தை – உலகத்தின் இருப்பை- உலகத்தில் மனிதர்கள், விலங்குகள்,தாவரங்கள் என உயிரினங்களின் இருப்பையும் அவற்றிற்கிடையேயான உறவுகளையும் விளக்கப்பார்க்கின்றன. உறவுகள் வழி உருவாகும் உணர்வுகளின் அளவுகளைக் கணக்கிடுகின்றன. உயிரினங்கள் இயற்கைப் பொருட்களோடும், இயற்கைப்பொருட்களை நிலைமாற்றி உருவாக்கும் செயற்கைப் பொருட்களோடும் கொள்ளும் உறவுகளுமாக வாழ்வியல் கட்டமைக்கப்பட்டு விரிகின்றது. கட்டமைக்கப்பட்ட வாழ்வியலை இலக்கியப்பனுவல்கள் எழுதிப்பார்க்கின்றன.

********  

மத்தேயு – அறியப்பட்ட பைபிள் கதாபாத்திரம். தொடக்கநிலையிலிருந்தே இயேசுவோடு இருந்த சீடர்களில் ஒருவரான மத்தேயு, வரி வசூலிக்கும் தண்டல் நாயகப்பணியில் இருந்ததாகவும், அவரோடு விருந்துண்டு, தனது பன்னிரு சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார் இயேசு என்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் சொல்கின்றன. தான் நம்பிய கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் விடாப்பிடியும் தளரா உறுதியும் கொண்ட இயேசுவின் கருணையும் இரக்கமும் மனிதகுலத்தின் தேவை. தன்னை நம்பியவர்களை ஈடேற்றம் செய்வதற்காக இயேசு கல்வாரி மலையில் சுமந்த சிலுவைப்பாடுகளைச் சொல்லும் ஒவ்வொரு மொழியும் இரங்கல் பாக்களை எழுதும் உன்னத மொழிக்கூறுகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும். சிலுவை சுமந்த இயேசுவின் பாடுகளுக்கும் மறு உயிரிப்புக்கும் விண்ணேற்றத்திற்கும் சாட்சியாக இருந்தவர் மத்தேயு. பைபிள் வழியாக உலகத்திற்கு அறிமுகமான மத்தேயு பாத்திரத்தைத் தனது ஈழத்தமிழ்ப்பரப்பிற்குள் திரிந்த/ திரியும் பாத்திரமாக்கியிருக்கிறார் கவி.கருணாகரன். 

கருணாகரனின் இந்த உருவாக்கம் நவீனத்தமிழ்க் கவிதைப்பரப்பிற்குப் புதியது  என்றாலும் ஒருவித மரபுத்தொடர்ச்சி கொண்டது. சங்கச்செவ்வியல் கவிதைகளில்   ஆதிமந்தியும் வெள்ளிவீதியும் மற்ற கவிகளின் கவிதைகளில் பாத்திரமாக வந்து போகின்றார்கள். அந்த வருகையில் காதலின்/ காமத்தின் ஒருவகை வெளிப்பாட்டைக் காட்டும் அடையாளமாக – குறியீடாக ஆக்கப்பட்டுள்ளனர். நவீனக் கவிதைகளுக்குள் கலாப்ரியாவின் கவிதைகளுக்குள் சசியும் நகுலனின் கவிதைகளில் சுசிலாவும் புனைவுத் தன்மையுடன் வந்துபோகிறார்கள். இந்த வருகையெல்லாம் ஒற்றைப் பரிமாணமும் ஒற்றை உணர்வு வெளிப்பாடும் கொண்டவை. கருணாகரனின் மத்தேயு ஒற்றையை மறுதலித்த பல பரிமாண உருவாக்கம். அதுவே கருணாகரனின் தனிச்சிறப்பு.

தன்னைப் பற்றிச் சொல்லும் மத்தேயு, தனக்கு முன்னால் இருப்பவரைச் சொல்லும் மத்தேயு, நினைவுகளிலும் அலைவுகளிலும் திரியும் மத்தேயு எனக் கவி.கருணாகரனின் கவிதைகளுக்குள் உருமாற்றம் அடைந்திருக்கிறார். உருமாற்றம் செய்யப்பட்ட மத்தேயு திரிந்த வெளியும் காலமும் முக்கியமானவை. சிறியதேசமே என்றாலும் இலங்கை   மொழி, சமயவாழ்வு, இன அடையாளம் போன்றவற்றில் முரண்பாடுகள் கொண்ட நிலப்பரப்பு. அந்நிலப்பரப்பு எனும் வெளிக்குள் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களின் இன அடையாளத்தைப் பேணவும், இனத்தின் அடையாளமாகக் கருதும் மொழியின் தனித்துவமான - செவ்வியல்- இருப்பைச் சிதையாமல் காக்கவுமான போராட்டத்தைத் தொடங்கிப் போர்க்களமாக மாற்றிக் கொண்ட காலமது. ஏறத்தாழ முப்பதாண்டு காலப் போர்க்கால வாழ்க்கையில் தனிமனிதவெளியும் பொதுச் சமூகவெளியும்   சந்தேகங்களாலும் நம்பிக்கையின்மையாலும் நிரம்பி வழிந்தது. அதன் தொடர்ச்சியாகக் கொலைகளும் வன்முறையும் இயல்பு வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவற்றிற்கெல்லாம் தீர்வாக வந்த பெருந்தோல்விக்கான காரணங்கள் எதனால்? யாரால்? என கேள்விகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. தீராத கொந்தளிப்புகளோடு போர்க்கால, போர்க்களப் புலத்தில் திரிந்த மத்தேயுக்களைக் கருணாகரன் இப்போது தனது கவிதைகளில் மறு உயிர்ப்புச் செய்து வாசிக்கத்தந்துள்ளார்.

யேசுவின் செயல்பாடுகளுக்குச் சாட்சியாக இருந்த மத்தேயுவைப் போலக் கருணாகரன் உருவாக்கும் மத்தேயுக்கள் பங்கெடுத்த நிகழ்வுகளும் பங்கெடுக்கத்தவறிய நிகழ்வுகளும் பங்கெடுக்க மறுத்த நிகழ்வுகளும் கவிதை நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளன. நிகழ்வுகள் வழி அடுக்கப்படும் காட்சிகள் ஈழத்தமிழ் நிலத்தை அறிந்தவர்களுக்கு உருவாக்கக் கூடிய உணர்வுகள் ஒருவிதமாக இருக்கலாம். அதனைப் பனுவல்கள் வழி அறிந்தவர்களுக்குத் தரும் உணர்வுகள் வேறுவிதமாக இருக்கலாம். அவ்வுணர்வுகள் தமிழ்க் கவிதைப்பரப்பிற்குள் தனி ஈழத்திற்கான போரும் போரின் நிமித்தங்களும் உருவாக்கிய அணிச்சேர்க்கை, தலைமைத்துவம், கட்டுப்ப்படுதல், தியாகம், அர்ப்பணிப்பு, எதிரிகளை அடையாளப்படுத்துதல், அழித்தொழிப்பின் நியாயங்கள், மறுதலிப்புகள், துரோகம், ஒத்தோடி போன்ற சொல்லாடல்களால் உருவாகக்கூடியன என்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றுக்கெல்லாம் சாட்சியமாக இருந்த கருணாகரனையே கவிதைகளுக்குள் அலையும் மத்தேயுவாகவும் வாசிக்கமுடியும்.  ஒவ்வொன்றையும் அதனதன் இருப்போடு அடையாளப்படுத்தி மத்தேயு கவிதைகளை வாசிக்கும்போது கவிதையெனும் இலக்கிய வடிவத்தின் சக்தியும் உள்ளடுக்குகளுக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் அர்த்தங்களும் புரிபடும். அவற்றில் சிலவற்றை எடுத்துக்காட்டி இங்கே விளக்கிக் காட்டலாம்; ஆனால் நான் செய்யப் போவதில்லை. எனக்குத் தோன்றும் அர்த்தங்களும் உணர்த்தும் உணர்வுகளும் அனைவருக்கும் கிடைக்கும் என்பதற்கில்லை. எனது வாசிப்பில் பலவிதமாகத் தோற்றமளிக்கும் மத்தேயூவை ஒருவர் இன்மையாக/ அரூபமாக   உணரவும் வாய்ப்புண்டு. கவிதைக் கலையின் சாத்தியங்கள் அப்படியானவை. நீங்கள் எப்படி வாசிப்பீர்களோ, அப்படியே வாசித்துக் கொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்

***********

கவி, கருணாகரன் முந்திய தொகுப்பான நினைவின் இறுதி நாட்கள் தொகுப்பை வாசித்தபோது அத்தொகுப்பில் இருந்த மத்தியூ, மத்தியூவின் சிரிப்பு, மத்தியூவின் வருகை, மத்தியூவின் டயறி 01, மத்தியூவின் டயறி 02 என்ற தலைப்பிட்ட ஐந்து கவிதைகளும் தந்த செய்திகளும் உணர்வுகளும் புதுவிதமான கவிதையனுபவமாக இருந்தன.அப்போதே அதுகுறித்த அவரோடு உரையாடினேன்; முடிந்தால் இதுபோன்று இன்னும் பல கவிதைகளை எழுதித் தனித்தொகுப்பாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. அக்கோரிக்கையோடு இன்னுமொரு கோரிக்கையும் இருக்கிறது. இக்கவிதைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகக்கவிதை வாசகர்களுக்குக் கொண்டு போகப்படவேண்டும். சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையின் சிங்கள வாசகர்களுக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. அந்தக் கோரிக்கையின் ஒருபகுதியை நிறைவேற்றும் முயற்சியாகத் தமிழ்க் கவிதைகளை/ இந்தியக் கவிதைகளை ஆங்கிலத்திலும், மறுதலையாக ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யும்    மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா அவர்களுக்குக் கருணாகரனின் மத்தேயு கவிதைகளைப் பரிந்துரைசெய்து மொழிபெயர்ப்பு செய்யமுடியுமா? என்று கேட்டுக்கொண்டேன். அவரும் மனமகிழ்ச்சியோடு மத்தேயு கவிதைகளை மொழிமாற்றம் செய்திருக்கிறார். சிங்கள மொழிபெயர்ப்பும் நடக்கவேண்டும். ஒரே தொகுப்பில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழியிலும் இக்கவிதைகள் வாசிக்கக் கிடைக்கவேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்