கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு
எனது அயல் பயணங்கள் என்பன பெரும்பாலும் கல்விப்பயணங்கள் தான். உலகத்தமிழ் மாநாட்டிற்காக மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வது மூன்றாவது அயல்நாட்டுப் பயணம். 2011 இல் பல்கலைக் கழகத்தில் தொலைதூர மையங்களைச் சௌதி அரேபியாவின் தம்மாமிலும் ரியாத்திலும் ஆரம்பிக்க அனுமதிக்கலாமா என்று பார்க்கச் சென்ற ஒருநபர் குழுவுப் பயணம்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.
நான்கு நாட்கள் தங்கியிருந்த அந்தப் பயணத்தைத் தொடந்து வந்த து ஐரோப்பியப் பயணம். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் இருக்கைப் பேராசிரியர் பொறுப்புக்குத் தேர்வு பெற்றுச் சென்ற பயணம் அது. இரண்டு கல்வி ஆண்டுகள் (2011 அக்டோபர் 8 முதல் 2013 ஜூலை10 வரையிலான) அங்கு தங்கியிருந்த காலத்தில் நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தன அதற்குள் அடக்கும்.
கோலாலம்பூர் பயணம் சரியாகச் சொல்லப்படவேண்டுமென்றால் ஆய்வு மாநாட்டில் கட்டுரை வழங்கப்படுவதற்காகச் சென்ற கல்விப்பயணம். பொதுவாகப் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளைத் திட்டமிடும் கல்விப்புலத்தவர்கள் ஆறுமாதத்திற்கு முன்பே அறிவிப்பைச் செய்து விடுவார்கள். 2015 ஜனவரி 27 தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தப் போகிறது என்ற அறிவிப்பும் அப்படித் தான் முன்கூட்டியே வந்தது. வந்த போதே அம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படிப்பது என்று முடிவுசெய்து விட்டேன்.
ஆறுமாதம் என்பது குறைந்த கால அளவுதான். ஓராண்டுக்கு முன்பே அறிவிப்புச் செய்யும் நிறுவனங்களும் உண்டு. அடுத்த கல்வி ஆண்டின் நிகழ்திட்டங்களை ஓராண்டுக்கும் முன்பே திட்டமிட்டுத் தங்கள் இணைய தளங்களில் வெளியிடும் பல்கலைக்கழகங்கள் இப்போது உலகமெங்கும் உள்ளன. ஒரு மாத காலத்தில் ஆய்வுச் சுருக்கத்தை ஏற்றுப் பங்கேற்பை உறுதிசெய்தால் தான் அந்த நாட்டிற்கு நுழைவு அனுமதி வாங்குவது, பல்கலைக்கழகத்திற்கும் கல்விப்பயணங்களுக்கு உதவும் நிதிநல்கைக் குழுக்களுக்கும் அந்த ஏற்பைக்காட்டி அனுமதியும் நிதி உதவியும் பெற வசதியாக இருக்கும். அத்தோடு குறைந்த விலையில் பயணச்சீட்டு பெறுவது, பயணம் செய்யும் நாட்டில் கூடுதலாகத் தங்கித் தங்கள் துறைசார்ந்த ஆய்வு மையங்களைப் பார்வையிடுதல், அங்கு வாய்ப்பிருந்தால் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல், சுற்றுலா போதல் போன்றவற்றைத் திட்டமிட முடியும். இதற்கெல்லாம் பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் இந்தக் கால இடைவெளி தேவை.
கோலாலம்பூரில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தப் பயணத்தை மலேசியா – சிங்கப்பூர் பயணம் என்று சொல்வதா? சிங்கப்பூர் - மலேசியா பயணம் என்று சொல்வதா? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்குப் பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்பது தனிக்கதை. வார்சாவிலிருந்தபடியே ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்குப் போய்வந்தபோது உண்டான நாடுகள் பார்க்கும் ஆசை இந்தியாவிற்கு வந்தபின் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அத்தோடு பணி சார்ந்து பதவி உயர்வுக்காகவும் பின்னர் ஆய்வு நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பு, பல்கலைக்கழக நிர்வாகப் பதவிகள் போன்றவற்றிற்கு முயற்சிக்க வேண்டும் என்றால் கூடுதலான அயல்நாட்டுப் பயணங்களும், அங்கு நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளில் பங்கேற்பது போன்றன கூடுதல் தகுதியாக இருக்கும் என்பதும் காரணங்களாக இருந்தன.
பல்கலைக்கழகத் துறைசார்ந்த பொறுப்பு என்று பார்த்தால் அதன் உயர்நிலையான பேராசிரியர் பதவியை 2005 ஏப்ரலிலேயே அடைந்து விட்டேன். ஆகஸ்டில் துறைத்தலைவராகவும் ஆகிவிட்டேன். இனிக் கிடைக்க க்கூடிய ஒரே பதவி உயர்வு மூத்தநிலைப் பேராசிரியர் என்பதுதான். அதற்குப் பத்தாண்டுகள் பேராசிரியராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தை அடைவது 2015 ஏப்ரலில். அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள், வெளிப்படுத்த வேண்டிய திறன்கள் என்பனவற்றுள் ஒன்றாகப் பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதும் ஒன்று. இதனை உள்வாங்கியே மலேசியாவில் நடக்க இருந்த ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வது என்ற முடிவை எடுத்தேன்.
2015 ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னதாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு விட்டால் எனது அடுத்த கட்டப் பணி உயர்வான முதுநிலைப் பேராசிரியர் நிலைக்கு விண்ணப்பித்துவிடலாம். இது ஒன்றுதான் அந்த முடிவை எடுப்பதற்கு முன்னுரிமைக்காரணம். ஏற்கெனவே செம்மொழி நிறுவனம் நடத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒன்றும் ( சங்கப்பெண் கவிதைகளின் கவிதையியல்- அகம்) வார்சா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் இன்னொன்றுமாக ( சங்கக் கவிதைகளில் போருக்கெதிரான பெண்கள் மனநிலை) இன்னொன்றுமாக இரண்டு கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் இரண்டு கட்டுரைகள் போதுமானது என்றாலும் கூடுதலாக ஒன்றை – அயல்நாட்டிலேயே சென்று வாசித்துவிடலாம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.
ஒரு பல்கலைக்கழக ஆசிரியருக்கு துறைசார்ந்த பணிகளின் அடிப்படையில் பணி உயர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும். இரண்டு கல்வி ஆண்டுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு புதுவைப்பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்தது1989 ஜூலை முதல் தேதி. அப்போதிருந்த நடைமுறைப்படி விரிவுரையாளர்(Lecturer). இணைப் பேராசிரியர் ( Reader) பேராசிரியர் (Professor ) என மூன்று படிநிலைகள் தான் இருந்தன. முதல் படிநிலையைத் தாண்ட எட்டாண்டு காலமும் அடுத்த கட்டமான பேராசிரியராகப் பதவி உயர்வுபெற இன்னொரு பத்தாண்டு காலமும் பணியாற்ற வேண்டும். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியராகவே இருந்து பணி ஓய்வு பெறுவார்கள்.
மூன்றடுக்கு நடைமுறையை 1996 இல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய சம்பளவிகித மாறுதல் குழு மாற்று அமைத்தது. பணிக்காலத் திறன் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் இன்னொரு அடுக்கைக் கொண்டுவந்த தோடு பணியின் பெயர்களையும் மாற்றிவிட்டது. விரிவுரையாளர் என்ற பெயர் ஒழிக்கப்பட்டு உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என்ற இரண்டாக மாற்றப்பட்டது. ஆனால் இடையில் தேர்வுநிலை உதவிப் பேராசிரியர், மூப்புநிலை உதவிப்பேராசிரியர் இணைப்பேராசிரியர், மூப்புநிலை இணைப்பேராசிரியர், இணைநிலைப் பேராசிரியர், எனப்படிநிலைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான கால இடைவெளி முறையே 5, 3, 3, 8, 3 எனப் பிரிக்கப்பட்டுப் பேராசிரியராக ஆகும் காலம் தள்ளிப்போடப்பட்டன. அத்தோடு இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தனது பணிகளை முறையாகச் செய்திருக்க வேண்டும் என்பதோடு, கற்பித்தல், கற்றல், மதிப்பிடுதல் ஆகிய மூன்றிலும் தொடர்ச்சியாகத் திறன்வளர்ப்பு இருக்கவேண்டும்; மூன்று நிலைகளிலும் புத்தாக்க முயற்சிகள் வெளிப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதற்காகத் தொடக்க நிலையில் – உதவிப்பேராசிரியர் நிலையில் நான்கு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்புக்கும், மூன்றுவார கால புத்தொளிப்பயிற்சி வகுப்புகள் இரண்டுக்கும் சென்று வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காமல் ஒருவர் பணி உயர்வு பெறுவது இயலாத ஒன்றாக மாறியது. அடிப்படையான இப்பயிற்சிகளோடு கட்டுரைகள்/ நூல்கள் எழுதுவது, ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவது, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்பது, கருத்தரங்குகள்/ பயிலரங்குகள் ஒருங்கிணைப்பது, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் போன்ற சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது போன்றவற்றோடு தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் நடக்கும் ஆய்வியல் கருத்தரங்குகளிலும் பங்கேற்பது, ஆய்வுக்கழகங்களை உருவாக்கிப் பணியாற்றுவது, ஆய்விதழ்களின் ஆசிரியர் பொறுப்பு எனப்பலவும் கூடுதல் தகுதியாகவும் திறனாகவும் கருதப்பட்டு பதவி உயர்வுகள் பெறுவதில் வேகம் குறைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றையும் தக்க ஆதாரத்தோடு வழங்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் அமைக்கும் நேர்காணல் குழுவைச் சந்தித்து விவாதிக்க வேண்டும்.
புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து நேரடி விண்ணப்பம் மூலம் இணைப் பேராசிரியராக மனோன்மணியத்தில் இணைந்த நான், எனது வேலைகளின் போக்கிலேயே இத்திறன்கள் பலவற்றையும் அதனதன் போக்கில் செய்திருந்தேன். அதனால் உரிய நேரத்தில் – சரியாக எட்டாண்டுகளுக்குப் பின் பேராசிரியர் பதவிக்கு நகர்த்தப்பட்டேன். அதேபோலப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் மூத்த பேராசிரியராக நகரவேண்டும் என்றால் ஒரேயொரு நிலையில் மட்டும் போதிய மதிப்புப்புள்ளிகள் இல்லாமல் இருந்தது. பன்னாட்டுக் கருத்தரங்கப் பங்கேற்புகள் குறைவாகவே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருந்தாலும் அதனை மாநாட்டுப் பங்கேற்பாக க்கொள்ள வாய்ப்பில்லை என்பதால், சரியான அர்த்தத்தில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிட வேண்டும் என்று நினைத்தேன் அந்த வகையான பங்கேற்பை இந்தியாவிற்குள் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் சிலவற்றில் பங்கேற்றுச் சரிசெய்யலாம்.இங்கே பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். என்றாலும், செய்ய வேண்டியதைச் சரியாகவே செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
*********
இந்திய/ தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே பணி சார்ந்த பயணங்களின் போது கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கி ஊர் சுற்றிப் பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்ட நோயாகிவிட்ட து. அப்படித்தான் கேரளத்தின் உள்காடுகளையும் கர்நாடகத்தின் மைசூர்,பெங்களூர் நகரங்களையும் புதுடெல்லியையும் சுற்றியிருக்கிறேன். அயல் நாடொன்றிற்குப் போய்விட்டுக் கட்டுரையை வாசித்து விட்டுக் கருத்தரங்கம் நடந்த கோலாலம்பூரை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு வரும் மனநிலை இல்லை. மாநாட்டை ஒட்டி முன்னும்பின்னுமாகச் சில கல்விப்புல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொண்டு மலேசியாவில் குறைந்தது பத்துநாட்கள் தங்குவது என்று முடிவுசெய்தேன். அதனால் கருத்தரங்கிற்குக் கட்டவேண்டிய பதிவுக் கட்டணம் நூறு அமெரிக்க டாலரை மட்டும் கட்டிவிட்டு விமானப் பயணத்திற்கான சீட்டுகளை முன்பதிவு செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டு எடுத்திருந்தால் கட்டணம் குறையும் என்றாலும் பயணத்திட்டம் முடிவாகாததால் பயண அனுமதிக்கான நுழைவு அனுமதியும் (Visa)வாங்கவும் இல்லை.
மாநாட்டிற்கான கட்டுரைச் சுருக்கத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த காலகட்ட த்தில் ஒருநாள் எழுத்தாளர் இமையத்திடம், மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் போகப்போகிறேன்; அதற்கான கட்டுரை ஒன்றை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அப்படியா? நானும் பங்கெடுக்கலாமா?’ என்று கேட்டார். அதில் என்ன சிக்கல்; நீயொரு தமிழின் முக்கியமான எழுத்தாளர்; அத்தோடு ஆசிரியர் ஆகவே கலந்துகொள்ளலாம்; கட்டுரைச் சுருக்கத்தைத் தயார் செய்துவிட்டுப் பதிவுக்கட்டணத்தைக் கட்டிவிடு’ என்று சொல்லி விவரங்களை இணையம் வழியாக அனுப்பி வைத்தேன். அவரும் வரத்தயாரானார்.
மலேசியப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இருக்கும் சிலரைத் தெரியும். அவர்கள் அனைவருமே தமிழ்மாநாட்டின் பொறுப்பாளராக இருப்பார்கள். அதனால் அவர்களிடம் வேறு ஏற்பாடுகளுக்குக் கேட்கமுடியாது. கோலாலம்பூர் பல்கலைக்கழகம் தவிர வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறதா? என்பது முதலில் தெரியவில்லை. பின்னர் சுல்தான் இத்ரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் படிப்பிற்குள் தமிழ் இருப்பதாக அறிய முடிந்த து. அத்துறையில் மதுரையைப் பலகலைக்கழகத்தில் படித்த முனைவர் வீரலட்சுமி என்பவர் இருப்பது தெரியவந்த து. அவரிடம் ஒரு அழைப்புக் கடிதம் தரமுடியுமா? எனக் கேட்டேன். அவரது துறையின் தலைவரோடு கலந்து பேசித் துறையில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றைச் செய்வதற்கான அழைப்புக்கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அது கூடுதலாகச் சில நாட்கள் மலேசியாவில் தங்குவதற்கு விடுப்புப்பெற உதவியது.
இதே நேரத்தில் கல்விப்புலம் சாராத இலக்கிய அமைப்புகளில் பங்கேற்கலாம் எனவு நினைத்தேன். ஏற்கெனவே முகநூல் வழியாக அங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகள், அமைப்புகள் குறித்துச் சில தகவல்கள் தெரியும். அத்தோடு மலேசியாவில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து விவாதக்களங்களை உருவாக்கிவரும் வல்லினம் குழுவையும் கேள்விப்பட்டிருந்தேன். அ.மார்க்ஸின் கட்டுரைகள் வல்லினத்தின் வந்து கொண்டிருந்த நேரம். அ.மார்க்ஸின் எழுத்துகளை வாசித்ததின் தொடர்ச்சியாகவே வல்லினம் இதழையும் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த மணிமொழி, யோகி, கே.பாலமுருகன் போன்ற பெயர்களையும் தெரிந்திருந்தது. இவர்கள் எல்லாம் முகநூலிலும் இருந்தார்கள். மணிமொழி ஒரு மொழி ஆசிரியை. அதன் காரணமாக வார்சாவிலிருந்த போதே தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறார். யோகியின் கவிதைகளையும் பாலமுருகனின் கதைகளையும் கூட வாசித்துக் கருத்துச் சொன்னதின் வழியாக அறிமுகமுண்டு. வல்லினத்தின் ஆசிரியர் நவீனின் எழுத்துகளை வாசித்திருந்தேன் என்ற போதிலும், அவர் முகநூல் வழியாகவோ, தொலைபேசியிலோ பேசுவதில் ஒரு விலகலைக் காட்டக்கூடியவராக இருந்தார். ஒருவேளை அ.மார்க்ஸோடு முரண்பாடு கொண்ட ரவிக்குமாரோடு என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த விலகலைக் கடைப்பிடித்திருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். தமிழ்நாட்டிலேயே பலர் அப்படியான விலகலோடு இருந்தார்கள் என்பதால் இது சாத்தியம் என்பதாக நினைத்துக்கொண்டேன்.
தமிழ்நாட்டிற்குள் போகும் கல்விப்புலப் பயணங்கள் வாரம் தோறும் இருக்கும் என்பதால் அவரும் வருகிறேன் என்று சொல்லவும் மாட்டார். அவருக்கு விருப்பமான கோயில்கள் இருக்கும் நகரங்களுக்குப் போவதாகச் சொல்லும்போதுகூட வந்தே ஆவேன் என்று அடம்பிடித்ததில்லை. நானே முன்வந்து அழைத்தால்கூட வரத்தயங்கவே செய்வார். அங்கு போனபின்பு அவரது விருப்பம் முழுவதும் நிறைவேறாமல் என்னுடைய வேலைகளில் மூழ்கிவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் என்னோடு வருவதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
மலேசியப் பயணம் ஒருவாரத்திற்குள்ளான பயணம் என்பதால் உடன் அழைத்துப் போவதா? வேண்டாமா? குழப்பம் முதலில் இருந்த து, உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வரங்கங்களில் நான்கு நாட்கள் கழியும்; அந்த நேரங்களில் அவர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தரும் அறையில் தனியாகத் தங்கவேண்டியதாக இருக்கும். இன்னொரு நாட்டில் தனியறையில் இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் எளிதானதல்ல. அதனால் உள்நாட்டுப் பயணங்கள் போலவே தனியாகச் சென்று திரும்புவது என்று தனியாளுக்கு மட்டுமே மாநாட்டில் கட்டணம் செலுத்திப் பதிவுசெய்திருந்தேன்.
அதில் திருப்பம் ஏற்பட்டது சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்புதான். சிங்கப்பூரில் மனைவியின் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். இப்போது அழைப்பு மனைவியின் அண்ணன் மகளிடமிருந்து. தற்செயலான தொலைபேசிப் பேச்சில் சிங்கப்பூரில் இருக்கும் அண்ணன் மகளிடம், ‘ உங்க மாமா மலேசியா வருகிறார்’ என்று சொன்னபோது, ‘ மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்னுதான்; நீங்களும் வாங்க’ என்று அழைத்துவிட்டார் அவரது அண்ணன் மகள். அண்ணன் மகள் என்றால், நேரடியான அண்ணன் மகள் அல்ல. அவரது பெரியப்பாவின் மகன் வழியில் அண்ணன் மகள். பெயர் திலகராணி. என் மனைவிக்குப் பிரியமானவள். குழந்தையாக இருக்கும்போது என் மனைவியால் வளர்க்கப்பட்டவள் எங்கள் திருமணத்தின் போது நான்கு வயதுக்குள் இருக்கும். அவளது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர். அவள் பிறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதால் ‘அப்பனைத் தின்றுவிட்டு வந்த ராசியில்லாத பெண்’ எனக் கருதப்பெற்ற குழந்தை. அதனால் அவளது அம்மாவின் சீராட்டுக்குப் பதிலாக அத்தையின் மடியில் வளர்ந்த பெண். அந்த அத்தைதான் என் மனைவி. அதனால் அவளது அம்மாவைவிடவும் அத்தையான என் மனைவியை அதிகம் பிடிக்கும். அத்தையின் கணவரான என்னையும் அவளுக்குப் பிடிக்கும். அவளைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னது நான் தான். சிங்கப்பூரில் திருமணம் செய்து கொடுக்கலாமா? என்ற ஆலோசனையில் கொடுக்கலாம் என்று சொன்னதும் நான் தான்.
சிங்கப்பூருக்கான மருமகளின் அழைப்பு இரண்டுவிதமாக இருந்தது. எப்படியும் அவளுக்கு அத்தையைச் சிங்கப்பூருக்கு அழைக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருந்ததை உணரமுடிந்தது. அவளும் அவளது கணவர்- செல்வக்குமாரும் போட்டுச் சொன்ன பயணத்திட்டங்கள் இப்படி இருந்தன. இருவரும் நேரடியாக கோலாலம்பூர் போய்விட்டு, அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்து ஒருவாரம் தங்கிவிட்டுப் போகலாம். அதில் சிக்கல்கள் இருக்கும் என்றால் இருவரும் முதலில் சிங்கப்பூர் வந்துவிட்டு, அத்தையை அவளிடம் விட்டுவிட்டு மாமா மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்து அத்தையை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பலாம். இந்த இரண்டில் இரண்டாவது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்த அழைப்பை ஏற்றுச் சிங்கப்பூர் போவதென்று முடிவானது.
சிங்கப்பூரில் மனைவிக்கு இருக்கும் உறவினர்களில் திலகராணி -செல்வக்குமார் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அவர்களிருவருக்கும் தாத்தாவாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மதுரை மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்கக் கிளம்பிய தனியாட்களில் ஒருவர். தோட்ட த்தொழில் மட்டும் அல்லாமல் பலவகையான தொழில் செய்து சிங்கப்பூரில் வாழ்ந்துவிட முடியும் என்பதை உறுதி செய்துகொண்ட பின், கிராமத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போன மனைவியையும் கைப்பிள்ளையையும் திரும்ப வந்து அழைத்துப் போனவர். மனைவியை அழைத்துப் போனாலும் அங்கேயே ஒரு காதலும் உண்டு. இரண்டு பேருக்கும் சேர்த்துப் பத்துப் பிள்ளைகளைப் பெற்றுச் சிங்கப்பூரின் மனித வளத்துக்குப் பங்களிப்பு செய்தவர். அவரது ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களுமான வாரிசுகள் இரண்டாம் தலைமுறையினர். எல்லோருமே சிங்கப்பூரில் தான் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒரு பயணத்தில் பார்த்துவிட முடியாது என்பதும் தெரியும். என்றாலும் விடுபட்ட சொந்தங்களைப் பார்ப்பது என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியான கணங்கள் என்பதை மறுக்கமுடியாதல்லவா?
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்களில் குடும்பங்களாகவும் தனிநபர்களாகவும் வெவ்வேறு திசையில் பயணித்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் இன்றும் உள்ளன. அறுபது வீடுகள் கொண்ட எங்கள் கிராமத்தில் மலைக்காரர் குடும்பம் என ஒன்று இருந்தது போல ரங்கூன்காரர் குடும்பம் ஒன்றும் உண்டு. மலைக்காரர் குடும்பம் என்பது தேயிலைத் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டபோது பொண்டாட்டியும் புருசனுமாக மூணாறு மலையில் குடியேறி அங்கேயே தங்கிய குடும்பத்தின் பெயர். எப்படியாவது சொந்தங்களில் பெண் பிள்ளைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரும்பவும் ஊருக்கு வரும்போது அந்தப்பெயரும் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டுவிடும். அதே கதைதான் ரங்கூன்காரர் குடும்பத்துக் கதையும். என்ன வேலை என்று தெரியாமலேயே அழைத்துச் செல்லப்பட்டு மலேசியாவின் ரப்பர்க்காடுகளில் கூலியாக இருந்து இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் ஊருக்கு வந்துபோகும் குடும்பத்தவர். ரங்கூன்காரராக இல்லையென்றால் ஒரு ஊரில் பினாங்குவாசியாக இருக்கலாம். இன்னொரு ஊரில் கெடாவாசியாக இருப்பார். அவர்களில் சிலர் பர்மாக்காரர்களாகவும் அறியப்பட்டதுண்டு. நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலிருந்து இலங்கையின் தேயிலைத்தோட்டங்களை வளப்படுத்தியவர்களும் தென் தமிழகத்துக் கூலி விவசாயிகள் தான். எந்த நாட்டுக்கு – எந்த ஊருக்கு என்று சொல்லாமலேயே கப்பலேற்றி அழைத்துப் போன வெள்ளையர்கள் எந்தப் பகுதித் தோட்டங்களில் தொழிலாளிகளாக ஆக்கினார்களோ அந்த ஊர்க்காரராக இங்கே அறியப்படுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகளை விடவும் மிலிட்டரிக்காரர்கள் சொல்லும் கதைகள் நம்ப முடியாதவைகளாக இருக்கும். இந்திய ராணுவத்துக்குப் போனவர்களும் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைப் போலவேதான் கதைகளை அளந்துவிடுவார்கள்
சிங்கப்பூருக்குப் போனவருக்கு ஒரு பிள்ளையையாவது சொந்தத்தில் தரவேண்டும் என்ற நினைப்பு உருவாவதில் தங்கியிருக்கிறது ஊர்ப்பற்று. தமிழ்நாட்டில் திருமணமாகி வந்த பெண்ணைப் பேறுகாலத்திற்காகச் சிங்கப்பூருக்கு அழைத்துப் போய் அவருடைய மகன்களுக்கு அங்கு குடியுரிமை பெற உதவியிருந்தார். அந்தப் பையன்களுக்குத் திரும்பவும் தமிழ்நாட்டில் உறவில் திருமணம் செய்ய வேண்டுமென்று தனது தம்பி வழிப் பேத்தியைத் திருமணம் செய்து கொண்டு போனார். இப்படி கொடுத்தும் எடுத்துமாக நடக்கும் உறவின் தொடர்ச்சிதான் சிங்கப்பூரில் மனைவிக்குச் சொந்தமாக இருந்தவர்கள். அங்கிருந்து இங்கு வரும்போதெல்லாம் சிங்கப்பூருக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டுப் போவார்கள். மெனக்கெட்டுப் போகாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்த என்னை மலேசியா போகும்போது சிங்கப்பூர் போகலாம் என்ற பேச்சு யோசிக்க வைத்த து.
மலேசியா பயணத்தோடு சிங்கப்பூரையும் சேர்த்துக் கொள்ளலாம். என்னுடைய அக்காமார்களை இப்போதாவது பார்க்க வேண்டும் என்று மனைவி சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் சிங்கப்பூர் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சரி போகலாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் மலேசிய மாநாட்டிற்கு தனியாளுக்கான பதிவுக்கட்டணம் மட்டுமே கட்டியிருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் திலகராணி – செல்வக்குமார் சொன்ன இரண்டாவது பயணத்திட்ட த்தை நடைமுறைப்படுத்துவது என்று முடிவுசெய்தோம். நான் சிங்கப்பூரில் மருமகளோடு இருக்கத் தயார்; நீங்கள் மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்தால் போதும். நான் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் பயணம் உறுதியான போது அதையும் கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்த பயணமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையைப் புதிதாக உருவான முகநூல் நட்புகள் தந்தன. சிங்கப்பூரிலிருந்து தினசரி எனது முகநூல் பதிவுகளுக்கு முதல் விருப்பத்தைப் போடுபவராக இருந்தவர் கடலூரான் ஹாஜாமொய்தீன். தொடர்ச்சியாக அவரது விருப்பக்குறிக்குப் பின்னால் ஒருநாள் அவரது பெயருக்குப் முன்னால் இருக்கும் ‘கடலூரான்’ பற்றிக் கேட்டுவிட்டு, எனது பாண்டிச்சேரி காலத்தைப் பற்றிச் சொன்னதின் தொடர்ச்சியாக நெருக்கமானவர்களாக மாறியிருந்தோம். அவரிடம் தான் “இப்படியொரு உறவினர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்; வரலாம் என்றிருக்கிறேன்; இதனைத் தாண்டி கலை, இலக்கியம் சார்ந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். எந்த த்தயக்கமும் இல்லாமல் ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களில் முகம் தெரியாமல் – கடிதத்தொடர்பும் இல்லாமல் அறிமுகமான ஒருவர் உண்டு. சுந்தர ராமசாமி பல்லக்குத்தூக்கிகள் கதையை நாடகமாக்கியபோது அதைச் சிங்கையில் மேடையேற்றியவர்; பெயர் இளங்கோவன். அந்த நாடகம் எனது முதல் புத்தகமான ‘நாடகங்கள் விவாதங்கள்’ என்ற தொகுப்பில் மூன்றில் ஒரு நாடகமாக இருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வுசெய்வதற்காகப் போனபோது அந்தப் புத்தகத்தை வாங்கிப் போன சுந்தரராமசாமி சிங்கப்பூரில் இருந்த இளங்கோவனிடம் கொடுத்துவிட்டு வந்திருப்பதாகவும் மேடையேற்றும்போது உங்களை அழைத்தாலும் அழைக்கலாம் என்று சொன்னார். அப்படி அவர் அழைக்கவில்லை. ஆனால் அவரோடு சில காலம் தொடர்பிருந்தது. அவரது நாடக நூலொன்றைச் சென்னையில் அச்சிட்டு எடுத்துச் செல்ல வந்தபோது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த நூலைப் புதுவை முகவரியை வாங்கி நூலை அனுப்பிவைத்தார். ஊடாடி என்ற தலைப்பில் எழுதப்பெற்ற அந்நாடகம் இருமொழி நாடகமாக அச்சிடப்பெற்றதாக நினைவு. தமிழ்ப் பனுவல் குறித்து இரண்டு மாதத்திலேயே புதிய கோடாங்கியில் விரிவான அறிமுகம் ஒன்றை எழுதியிருந்தேன். நாடகத்துறையை விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு வந்தபின்பு தொடர்பு விட்டுப்போய்விட்டது. ஆனால் அவர் இப்போது என்ன செய்கிறார்; நாடகத்துறையில் தான் செயல்படுகின்றாரா? என்பது தெரியவில்லை. இளங்கோவன் என்ற அந்த நாடகக்காரரை சிங்கப்பூரில் இருந்த மற்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு முன்பாகப் படித்தவர் ஒருவர் இருக்கிறார். அமெரிக்கன் கல்லூரில் தற்காலிகப் பணியில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது நிரந்தரப் பணியில் சேர்ந்தவர் முனைவர் வேல்முருகன். சிங்கப்பூரில் வேலை கிடைத்த தால் அங்கேயே போய்விட்டார். அவர் பணியாற்றும் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் பார்த்துவிட்டுத் தமிழ்க் கல்வி அங்கு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டேன். அத்தோடு அவரிடமிருந்து ஓர் அழைப்புக் கடிதம் பெற்றுவிட்டால் அந்தப் பயணக் காலத்தை பணிமேல் விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது கொஞ்சம் யோசித்தார். மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவரது துறையில் இருக்கும் அனைவரும் போக இருப்பதால், அந்த நேரத்தில் துறையில் ஏதும் நிகழ்வு நட த்துவதும் மாணவர்களைச் சந்திப்பதும் இயலாது என்று பதில் சொன்னார். மாநாட்டிற்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து என்றால் ஏற்பாடு செய்யலாம் என்பதுபோலச் சொன்னார். அவரது தயக்கம் புரிந்ததால் அதைக் கைவிட்டேன். அங்கிருக்கும் இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் கிடைத்தால் கூடப் போதும் என்று பல்கலைக்கழகத்தில் பணிமேல் விடுப்பு அளிக்கும் அதிகாரி சொன்னதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது சிங்கப்பூரில் இருக்கும் முகநூல் மற்றும் எழுத்தாள நண்பர்களின் உதவிகளை நாடினேன்.
சிங்கப்பூரில் நவீனத்துவத்தை உள்வாங்கி எழுதும் புதிய எழுத்தாளர்கள் வரிசை ஒன்று உருவாகி வருவதை எனது வாசிப்பின் வழியாக அறிந்திருந்தேன். லதாவின் எழுத்துகளை காலச்சுவடில் வாசித்திருந்தேன். எனது நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் வழியாகச் சில சிங்கை எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுள் ஷா நாவஸ் என்பவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றையும் உணவு தொடர்பான நூலையும் மனுஷ்யபுத்திரன் தந்ததால் வாசித்திருந்தேன். மனுஷ்ய புத்திரனும் அங்கே போய்விட்டு வந்து அவரது அனுபவங்களைச் சொல்லியிருந்தார். அத்தோடு அம்ருதா பதிப்பகம் வெளியிடும் முத்துக்கள் பத்து என்ற சிறுகதைத் தொகுப்பு வருசை ஒன்றுக்கு முன்னுரை ஒன்று வேண்டும் என்று திலகவதி கேட்டார். அவர் கேட்டு எதையும் மறுத்த தில்லை. அவர் அனுப்பி வைத்த பத்துக் கதைகளையும் படித்துவிட்டு முன்னுரை எழுதிக்கொடுத்தேன். கதைகளின் நிகழ்களம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்ற பகுதிகளாகவும் இங்குமங்குமான அலைவுகளே கதைகளின் சிக்கல்களாகவும் இருந்தன. அந்தக் கதைகளின் ஆசிரியரான ஜெயந்தி சங்கரும் சிங்கப்பூரில் இருப்பவர் என்பது புத்தகம் வந்த போது தெரிந்தது. இவர்களில் சிலரைத் தொடர்புகொண்டு இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் பெற முயன்றேன்.
முயற்சி கைகூடி, சிங்கப்பூர் நூலக வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடகவியல் குறித்து ஓர் உரை நிகழ்த்த அழைப்பு கிடைத்தது. சிங்கப்பூர் வாசகர் வட்டம், அதன் செயல்பாடுகள் முன்பே முகநூல் வழியாகத் தெரிந்த ஒன்று . தமிழ்நாட்டிலிருந்து சென்ற சில எழுத்தாளர்கள் அவ்வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்ற அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அழைப்பை அனுப்பியவர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக இருந்த சித்ரா அவர்கள். அவரிடம் எடுத்துச் சொன்னவர்கள் ஷாநாவாஸும் கடலூரானும். அவ்விருவரையும் தொலைபேசி வழியாகப் பேசி ஏற்பாடு செய்தவர் ஜெயந்திசங்கர். வாசிப்பும் எழுத்தும் இப்படியான உதவிகளைப் பெற்றுத்தந்துவிடும். ஒரு கூட்ட த்திற்கு ஏற்பாடு செய்வதின் வழியாக ஒரு பயணத்தின் கண்ணிகளை எளிதாக அவிழ்த்துவிட முடியும் என்பதை அனுபவங்களின் வழியாகச் சொல்லவேண்டும் என்பதற்காகவே இந்த விவரிப்புகள் எல்லாம்.
பயணத்தில் சிங்கப்பூர் சேர்ந்துகொண்ட போது பயணப்பாதையும் மாறியது. சென்னை – சிங்கப்பூர் -கோலாலம்பூர் என்று போய்விட்டுத் திரும்பவும் கோலாலம்பூர் -சிங்கப்பூர் -சென்னை என்று மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தை தந்தது விமானக் குழுமங்கள் தரும் பயணச் சலுகையும் தான். பொதுவாக வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு விமானக் குழுமத்தின் பாதையொன்றைத் தெரிவுசெய்து ஒரு நாட்டின் ஒரு நகரத்தில் இறங்கிவிட்டு பயணமுடிவில் அதே நகரத்திலிருந்து திரும்பும் விதமாகப் பயணத்திட்டம் அமைந்தால் பயணக்கட்டணத்தில் சலுகை கிடைக்கும். போகவும் வரவுமான ஏற்பாட்டிற்குப் பதிலாக ஒற்றைவழி மட்டும் என்றால் கட்டண விகிதங்கள் கூடும். இந்தக் காரணங்களுக்காகவே பலரும் – சொந்தப்பணத்தில் பயணம் செய்யும் பலரும் போகவும் வரவுமான பயணத்திட்டத்தைத் தேர்வு செய்வார்கள். அரசாங்கம் அல்லது வேலை பார்க்கும் குழுமங்கள் தரும் பணத்தில் பயணம் செய்பவர்கள் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.
என்னுடைய இந்தப் பயணத்தின் ஒரு பகுதியைப் பல்கலைக்கழகம் அதன் கல்விப்பங்கேற்பு வரம்புக்குள் வழங்கும் என்றாலும் அது முழுமையான பயணத்திற்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு வாரப் பயணத்தை இறுதி செய்தேன். 2015, ஜனவரி 24 முன்னிரவு கிளம்பி சிங்கபூருக்கு அடுத்த நாள் அதிகாலையில் இறங்கும் விதமாக பயணச்சீட்டு வாங்கப்பட்டது. கிளம்பிய நேரம் அதேபோல் பிப்ரவரி 7 ஆம் தேதி சிங்கப்பூரில் அதிகாலை கிளம்பி 05.50 விமானத்தைப் பிடித்துச் சென்னையில் காலை நேரத்திலேயே வந்திறங்கும்போது நேரம் 07.40. 110 நிமிடப் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் சிங்கப்பூருக்கும் சென்னைக்குமிடையே இரண்டரை மணி நேரம் – 150 நிமிடங்கள் வானத்தில் காணாமல் போய்விடும் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து கீழைத்தேய நாடுகளுக்குள் நுழையும் போது உங்கள் வாழ்க்கையில் சில மணிநேரங்களைத் தொலைத்துவிடுவீர்கள். மேற்கு நோக்குப் பயணத்தால் பயணதூரத்திற்கேற்ப வாழ்க்கையின் காலமும் கூடிக்கொள்ளும். கிழக்கும் மேற்கும் திசைகளால் மட்டும் முரண்பட்டவையல்ல.
பின்குறிப்பு:
நண்பர் கே.பாலமுருகனின் குறிப்பொன்று:

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)
கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
“உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.
பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.
அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.
அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்
அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.
கே.பாலமுருகன்
நான்கு நாட்கள் தங்கியிருந்த அந்தப் பயணத்தைத் தொடந்து வந்த து ஐரோப்பியப் பயணம். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் இருக்கைப் பேராசிரியர் பொறுப்புக்குத் தேர்வு பெற்றுச் சென்ற பயணம் அது. இரண்டு கல்வி ஆண்டுகள் (2011 அக்டோபர் 8 முதல் 2013 ஜூலை10 வரையிலான) அங்கு தங்கியிருந்த காலத்தில் நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தன அதற்குள் அடக்கும்.
கோலாலம்பூர் பயணம் சரியாகச் சொல்லப்படவேண்டுமென்றால் ஆய்வு மாநாட்டில் கட்டுரை வழங்கப்படுவதற்காகச் சென்ற கல்விப்பயணம். பொதுவாகப் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளைத் திட்டமிடும் கல்விப்புலத்தவர்கள் ஆறுமாதத்திற்கு முன்பே அறிவிப்பைச் செய்து விடுவார்கள். 2015 ஜனவரி 27 தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தப் போகிறது என்ற அறிவிப்பும் அப்படித் தான் முன்கூட்டியே வந்தது. வந்த போதே அம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படிப்பது என்று முடிவுசெய்து விட்டேன்.
ஆறுமாதம் என்பது குறைந்த கால அளவுதான். ஓராண்டுக்கு முன்பே அறிவிப்புச் செய்யும் நிறுவனங்களும் உண்டு. அடுத்த கல்வி ஆண்டின் நிகழ்திட்டங்களை ஓராண்டுக்கும் முன்பே திட்டமிட்டுத் தங்கள் இணைய தளங்களில் வெளியிடும் பல்கலைக்கழகங்கள் இப்போது உலகமெங்கும் உள்ளன. ஒரு மாத காலத்தில் ஆய்வுச் சுருக்கத்தை ஏற்றுப் பங்கேற்பை உறுதிசெய்தால் தான் அந்த நாட்டிற்கு நுழைவு அனுமதி வாங்குவது, பல்கலைக்கழகத்திற்கும் கல்விப்பயணங்களுக்கு உதவும் நிதிநல்கைக் குழுக்களுக்கும் அந்த ஏற்பைக்காட்டி அனுமதியும் நிதி உதவியும் பெற வசதியாக இருக்கும். அத்தோடு குறைந்த விலையில் பயணச்சீட்டு பெறுவது, பயணம் செய்யும் நாட்டில் கூடுதலாகத் தங்கித் தங்கள் துறைசார்ந்த ஆய்வு மையங்களைப் பார்வையிடுதல், அங்கு வாய்ப்பிருந்தால் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல், சுற்றுலா போதல் போன்றவற்றைத் திட்டமிட முடியும். இதற்கெல்லாம் பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் இந்தக் கால இடைவெளி தேவை.
கோலாலம்பூரில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தப் பயணத்தை மலேசியா – சிங்கப்பூர் பயணம் என்று சொல்வதா? சிங்கப்பூர் - மலேசியா பயணம் என்று சொல்வதா? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்குப் பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்பது தனிக்கதை. வார்சாவிலிருந்தபடியே ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்குப் போய்வந்தபோது உண்டான நாடுகள் பார்க்கும் ஆசை இந்தியாவிற்கு வந்தபின் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அத்தோடு பணி சார்ந்து பதவி உயர்வுக்காகவும் பின்னர் ஆய்வு நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பு, பல்கலைக்கழக நிர்வாகப் பதவிகள் போன்றவற்றிற்கு முயற்சிக்க வேண்டும் என்றால் கூடுதலான அயல்நாட்டுப் பயணங்களும், அங்கு நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுமாநாடுகளில் பங்கேற்பது போன்றன கூடுதல் தகுதியாக இருக்கும் என்பதும் காரணங்களாக இருந்தன.
பல்கலைக்கழகத் துறைசார்ந்த பொறுப்பு என்று பார்த்தால் அதன் உயர்நிலையான பேராசிரியர் பதவியை 2005 ஏப்ரலிலேயே அடைந்து விட்டேன். ஆகஸ்டில் துறைத்தலைவராகவும் ஆகிவிட்டேன். இனிக் கிடைக்க க்கூடிய ஒரே பதவி உயர்வு மூத்தநிலைப் பேராசிரியர் என்பதுதான். அதற்குப் பத்தாண்டுகள் பேராசிரியராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தை அடைவது 2015 ஏப்ரலில். அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள், வெளிப்படுத்த வேண்டிய திறன்கள் என்பனவற்றுள் ஒன்றாகப் பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதும் ஒன்று. இதனை உள்வாங்கியே மலேசியாவில் நடக்க இருந்த ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வது என்ற முடிவை எடுத்தேன்.
2015 ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னதாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு விட்டால் எனது அடுத்த கட்டப் பணி உயர்வான முதுநிலைப் பேராசிரியர் நிலைக்கு விண்ணப்பித்துவிடலாம். இது ஒன்றுதான் அந்த முடிவை எடுப்பதற்கு முன்னுரிமைக்காரணம். ஏற்கெனவே செம்மொழி நிறுவனம் நடத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒன்றும் ( சங்கப்பெண் கவிதைகளின் கவிதையியல்- அகம்) வார்சா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் இன்னொன்றுமாக ( சங்கக் கவிதைகளில் போருக்கெதிரான பெண்கள் மனநிலை) இன்னொன்றுமாக இரண்டு கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் இரண்டு கட்டுரைகள் போதுமானது என்றாலும் கூடுதலாக ஒன்றை – அயல்நாட்டிலேயே சென்று வாசித்துவிடலாம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அது.
ஒரு பல்கலைக்கழக ஆசிரியருக்கு துறைசார்ந்த பணிகளின் அடிப்படையில் பணி உயர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும். இரண்டு கல்வி ஆண்டுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு புதுவைப்பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்தது1989 ஜூலை முதல் தேதி. அப்போதிருந்த நடைமுறைப்படி விரிவுரையாளர்(Lecturer). இணைப் பேராசிரியர் ( Reader) பேராசிரியர் (Professor ) என மூன்று படிநிலைகள் தான் இருந்தன. முதல் படிநிலையைத் தாண்ட எட்டாண்டு காலமும் அடுத்த கட்டமான பேராசிரியராகப் பதவி உயர்வுபெற இன்னொரு பத்தாண்டு காலமும் பணியாற்ற வேண்டும். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியராகவே இருந்து பணி ஓய்வு பெறுவார்கள்.
மூன்றடுக்கு நடைமுறையை 1996 இல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய சம்பளவிகித மாறுதல் குழு மாற்று அமைத்தது. பணிக்காலத் திறன் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு அடுக்குக்கும் இடையில் இன்னொரு அடுக்கைக் கொண்டுவந்த தோடு பணியின் பெயர்களையும் மாற்றிவிட்டது. விரிவுரையாளர் என்ற பெயர் ஒழிக்கப்பட்டு உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என்ற இரண்டாக மாற்றப்பட்டது. ஆனால் இடையில் தேர்வுநிலை உதவிப் பேராசிரியர், மூப்புநிலை உதவிப்பேராசிரியர் இணைப்பேராசிரியர், மூப்புநிலை இணைப்பேராசிரியர், இணைநிலைப் பேராசிரியர், எனப்படிநிலைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான கால இடைவெளி முறையே 5, 3, 3, 8, 3 எனப் பிரிக்கப்பட்டுப் பேராசிரியராக ஆகும் காலம் தள்ளிப்போடப்பட்டன. அத்தோடு இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தனது பணிகளை முறையாகச் செய்திருக்க வேண்டும் என்பதோடு, கற்பித்தல், கற்றல், மதிப்பிடுதல் ஆகிய மூன்றிலும் தொடர்ச்சியாகத் திறன்வளர்ப்பு இருக்கவேண்டும்; மூன்று நிலைகளிலும் புத்தாக்க முயற்சிகள் வெளிப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதற்காகத் தொடக்க நிலையில் – உதவிப்பேராசிரியர் நிலையில் நான்கு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்புக்கும், மூன்றுவார கால புத்தொளிப்பயிற்சி வகுப்புகள் இரண்டுக்கும் சென்று வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காமல் ஒருவர் பணி உயர்வு பெறுவது இயலாத ஒன்றாக மாறியது. அடிப்படையான இப்பயிற்சிகளோடு கட்டுரைகள்/ நூல்கள் எழுதுவது, ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவது, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்பது, கருத்தரங்குகள்/ பயிலரங்குகள் ஒருங்கிணைப்பது, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் போன்ற சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது போன்றவற்றோடு தேசிய அளவிலும் பன்னாட்டு நிலையிலும் நடக்கும் ஆய்வியல் கருத்தரங்குகளிலும் பங்கேற்பது, ஆய்வுக்கழகங்களை உருவாக்கிப் பணியாற்றுவது, ஆய்விதழ்களின் ஆசிரியர் பொறுப்பு எனப்பலவும் கூடுதல் தகுதியாகவும் திறனாகவும் கருதப்பட்டு பதவி உயர்வுகள் பெறுவதில் வேகம் குறைக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றையும் தக்க ஆதாரத்தோடு வழங்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் அமைக்கும் நேர்காணல் குழுவைச் சந்தித்து விவாதிக்க வேண்டும்.
புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து நேரடி விண்ணப்பம் மூலம் இணைப் பேராசிரியராக மனோன்மணியத்தில் இணைந்த நான், எனது வேலைகளின் போக்கிலேயே இத்திறன்கள் பலவற்றையும் அதனதன் போக்கில் செய்திருந்தேன். அதனால் உரிய நேரத்தில் – சரியாக எட்டாண்டுகளுக்குப் பின் பேராசிரியர் பதவிக்கு நகர்த்தப்பட்டேன். அதேபோலப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் மூத்த பேராசிரியராக நகரவேண்டும் என்றால் ஒரேயொரு நிலையில் மட்டும் போதிய மதிப்புப்புள்ளிகள் இல்லாமல் இருந்தது. பன்னாட்டுக் கருத்தரங்கப் பங்கேற்புகள் குறைவாகவே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். இரண்டு ஆண்டுகள் வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருந்தாலும் அதனை மாநாட்டுப் பங்கேற்பாக க்கொள்ள வாய்ப்பில்லை என்பதால், சரியான அர்த்தத்தில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிட வேண்டும் என்று நினைத்தேன் அந்த வகையான பங்கேற்பை இந்தியாவிற்குள் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் சிலவற்றில் பங்கேற்றுச் சரிசெய்யலாம்.இங்கே பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். என்றாலும், செய்ய வேண்டியதைச் சரியாகவே செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
*********
இந்திய/ தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே பணி சார்ந்த பயணங்களின் போது கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கி ஊர் சுற்றிப் பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்ட நோயாகிவிட்ட து. அப்படித்தான் கேரளத்தின் உள்காடுகளையும் கர்நாடகத்தின் மைசூர்,பெங்களூர் நகரங்களையும் புதுடெல்லியையும் சுற்றியிருக்கிறேன். அயல் நாடொன்றிற்குப் போய்விட்டுக் கட்டுரையை வாசித்து விட்டுக் கருத்தரங்கம் நடந்த கோலாலம்பூரை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு வரும் மனநிலை இல்லை. மாநாட்டை ஒட்டி முன்னும்பின்னுமாகச் சில கல்விப்புல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொண்டு மலேசியாவில் குறைந்தது பத்துநாட்கள் தங்குவது என்று முடிவுசெய்தேன். அதனால் கருத்தரங்கிற்குக் கட்டவேண்டிய பதிவுக் கட்டணம் நூறு அமெரிக்க டாலரை மட்டும் கட்டிவிட்டு விமானப் பயணத்திற்கான சீட்டுகளை முன்பதிவு செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டு எடுத்திருந்தால் கட்டணம் குறையும் என்றாலும் பயணத்திட்டம் முடிவாகாததால் பயண அனுமதிக்கான நுழைவு அனுமதியும் (Visa)வாங்கவும் இல்லை.
மாநாட்டிற்கான கட்டுரைச் சுருக்கத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த காலகட்ட த்தில் ஒருநாள் எழுத்தாளர் இமையத்திடம், மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் போகப்போகிறேன்; அதற்கான கட்டுரை ஒன்றை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அப்படியா? நானும் பங்கெடுக்கலாமா?’ என்று கேட்டார். அதில் என்ன சிக்கல்; நீயொரு தமிழின் முக்கியமான எழுத்தாளர்; அத்தோடு ஆசிரியர் ஆகவே கலந்துகொள்ளலாம்; கட்டுரைச் சுருக்கத்தைத் தயார் செய்துவிட்டுப் பதிவுக்கட்டணத்தைக் கட்டிவிடு’ என்று சொல்லி விவரங்களை இணையம் வழியாக அனுப்பி வைத்தேன். அவரும் வரத்தயாரானார்.
மலேசியப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இருக்கும் சிலரைத் தெரியும். அவர்கள் அனைவருமே தமிழ்மாநாட்டின் பொறுப்பாளராக இருப்பார்கள். அதனால் அவர்களிடம் வேறு ஏற்பாடுகளுக்குக் கேட்கமுடியாது. கோலாலம்பூர் பல்கலைக்கழகம் தவிர வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறதா? என்பது முதலில் தெரியவில்லை. பின்னர் சுல்தான் இத்ரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் படிப்பிற்குள் தமிழ் இருப்பதாக அறிய முடிந்த து. அத்துறையில் மதுரையைப் பலகலைக்கழகத்தில் படித்த முனைவர் வீரலட்சுமி என்பவர் இருப்பது தெரியவந்த து. அவரிடம் ஒரு அழைப்புக் கடிதம் தரமுடியுமா? எனக் கேட்டேன். அவரது துறையின் தலைவரோடு கலந்து பேசித் துறையில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றைச் செய்வதற்கான அழைப்புக்கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அது கூடுதலாகச் சில நாட்கள் மலேசியாவில் தங்குவதற்கு விடுப்புப்பெற உதவியது.
இதே நேரத்தில் கல்விப்புலம் சாராத இலக்கிய அமைப்புகளில் பங்கேற்கலாம் எனவு நினைத்தேன். ஏற்கெனவே முகநூல் வழியாக அங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகள், அமைப்புகள் குறித்துச் சில தகவல்கள் தெரியும். அத்தோடு மலேசியாவில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து விவாதக்களங்களை உருவாக்கிவரும் வல்லினம் குழுவையும் கேள்விப்பட்டிருந்தேன். அ.மார்க்ஸின் கட்டுரைகள் வல்லினத்தின் வந்து கொண்டிருந்த நேரம். அ.மார்க்ஸின் எழுத்துகளை வாசித்ததின் தொடர்ச்சியாகவே வல்லினம் இதழையும் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த மணிமொழி, யோகி, கே.பாலமுருகன் போன்ற பெயர்களையும் தெரிந்திருந்தது. இவர்கள் எல்லாம் முகநூலிலும் இருந்தார்கள். மணிமொழி ஒரு மொழி ஆசிரியை. அதன் காரணமாக வார்சாவிலிருந்த போதே தொலைபேசி வழியாகப் பேசியிருக்கிறார். யோகியின் கவிதைகளையும் பாலமுருகனின் கதைகளையும் கூட வாசித்துக் கருத்துச் சொன்னதின் வழியாக அறிமுகமுண்டு. வல்லினத்தின் ஆசிரியர் நவீனின் எழுத்துகளை வாசித்திருந்தேன் என்ற போதிலும், அவர் முகநூல் வழியாகவோ, தொலைபேசியிலோ பேசுவதில் ஒரு விலகலைக் காட்டக்கூடியவராக இருந்தார். ஒருவேளை அ.மார்க்ஸோடு முரண்பாடு கொண்ட ரவிக்குமாரோடு என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த விலகலைக் கடைப்பிடித்திருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். தமிழ்நாட்டிலேயே பலர் அப்படியான விலகலோடு இருந்தார்கள் என்பதால் இது சாத்தியம் என்பதாக நினைத்துக்கொண்டேன்.
வல்லினம் குழுவினர் ஒருவரையும் இமையத்திற்குத் தெரியாது. ஆனால் இமையத்தின் கதைகள் வழியாக அவரை வல்லினம் குழுவினர் தெரிந்து வைத்திருந்தனர். அவரும் வருகிறார் என்று சொன்னவுடன் ‘நாங்களும் மாநாட்டில் பங்கேற்போம்; முடிந்தால் தனிக்கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்யலாம்’ என்று தகவல் அனுப்பினார் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன். அதற்கு முன்பே வல்லினம் அ.மார்க்ஸ், லீனா மணிமேகலை, ஷோபாசக்தி ஆகியோரோடு சந்திப்புகள் நடத்திய தகவல்கள் முகநூல் வழியாகவும் இணையப் பக்கங்கள் வழியாகவும் தெரிந்த ஒன்றுதான். அதுபோல ஒரு சந்திப்பை இமையம் + அ.ராமசாமியை வைத்து நட த்துவோம் எனச் சொன்னார்கள். யோகியும் கூட அதை உறுதி செய்திருந்தார்.
கே.பாலமுருகன் தனது ஊர் மலேசியாவின் வடபகுதியில் கெடா பகுதியில் இருப்பதாகவும் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் தகவல் அனுப்பினார். இந்தத் தகவல்கள் ஒரு உற்சாகத்தைத் தந்தன. இந்தத் தொடர்புகள் வழியாக மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் பின்னும் சில நாட்கள் தங்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே மாநாட்டு நிகழ்வுகள் நடக்கும் நான்கு நாட்களோடு மேலும் மூன்று திங்கள் மலேசியாவில் தங்குவது என முடிவுசெய்தேன். ஆனால் என்னோடு மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன இமையம், மாநாடு முடிந்ததும் உடனே ஊர் திரும்பவேண்டும் என்று சொல்லிவிட்டார். பொதுவாக இமையத்திற்கு ஊர் சுற்றுவதிலோ மனிதர்களோடு உரையாடுவதிலோ பெரிய ஆர்வம் இருந்ததில்லை. மலேசியாவிற்குள் நுழைவதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க நினைத்தபோது, அது ஒன்றும் சிரமம் இல்லை; ஒருமாதத்திற்கு முன்பு இணையம் வழியாக விண்ணப்பத்தால் ஓராண்டுக்கு பலதடவை நுழைய அனுமதி கிடைக்கும் என்று தெரிந்தது. ஆக மலேசியாவில் ஒருவாரப்பயணம் என்பது உறுதியானது.
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.
கே.பாலமுருகன் தனது ஊர் மலேசியாவின் வடபகுதியில் கெடா பகுதியில் இருப்பதாகவும் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் தகவல் அனுப்பினார். இந்தத் தகவல்கள் ஒரு உற்சாகத்தைத் தந்தன. இந்தத் தொடர்புகள் வழியாக மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டிற்குப் பின்னும் சில நாட்கள் தங்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே மாநாட்டு நிகழ்வுகள் நடக்கும் நான்கு நாட்களோடு மேலும் மூன்று திங்கள் மலேசியாவில் தங்குவது என முடிவுசெய்தேன். ஆனால் என்னோடு மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன இமையம், மாநாடு முடிந்ததும் உடனே ஊர் திரும்பவேண்டும் என்று சொல்லிவிட்டார். பொதுவாக இமையத்திற்கு ஊர் சுற்றுவதிலோ மனிதர்களோடு உரையாடுவதிலோ பெரிய ஆர்வம் இருந்ததில்லை. மலேசியாவிற்குள் நுழைவதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க நினைத்தபோது, அது ஒன்றும் சிரமம் இல்லை; ஒருமாதத்திற்கு முன்பு இணையம் வழியாக விண்ணப்பத்தால் ஓராண்டுக்கு பலதடவை நுழைய அனுமதி கிடைக்கும் என்று தெரிந்தது. ஆக மலேசியாவில் ஒருவாரப்பயணம் என்பது உறுதியானது.
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.
தமிழ்நாட்டிற்குள் போகும் கல்விப்புலப் பயணங்கள் வாரம் தோறும் இருக்கும் என்பதால் அவரும் வருகிறேன் என்று சொல்லவும் மாட்டார். அவருக்கு விருப்பமான கோயில்கள் இருக்கும் நகரங்களுக்குப் போவதாகச் சொல்லும்போதுகூட வந்தே ஆவேன் என்று அடம்பிடித்ததில்லை. நானே முன்வந்து அழைத்தால்கூட வரத்தயங்கவே செய்வார். அங்கு போனபின்பு அவரது விருப்பம் முழுவதும் நிறைவேறாமல் என்னுடைய வேலைகளில் மூழ்கிவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் என்னோடு வருவதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
மலேசியப் பயணம் ஒருவாரத்திற்குள்ளான பயணம் என்பதால் உடன் அழைத்துப் போவதா? வேண்டாமா? குழப்பம் முதலில் இருந்த து, உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வரங்கங்களில் நான்கு நாட்கள் கழியும்; அந்த நேரங்களில் அவர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தரும் அறையில் தனியாகத் தங்கவேண்டியதாக இருக்கும். இன்னொரு நாட்டில் தனியறையில் இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் எளிதானதல்ல. அதனால் உள்நாட்டுப் பயணங்கள் போலவே தனியாகச் சென்று திரும்புவது என்று தனியாளுக்கு மட்டுமே மாநாட்டில் கட்டணம் செலுத்திப் பதிவுசெய்திருந்தேன்.
அதில் திருப்பம் ஏற்பட்டது சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்புதான். சிங்கப்பூரில் மனைவியின் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். இப்போது அழைப்பு மனைவியின் அண்ணன் மகளிடமிருந்து. தற்செயலான தொலைபேசிப் பேச்சில் சிங்கப்பூரில் இருக்கும் அண்ணன் மகளிடம், ‘ உங்க மாமா மலேசியா வருகிறார்’ என்று சொன்னபோது, ‘ மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்னுதான்; நீங்களும் வாங்க’ என்று அழைத்துவிட்டார் அவரது அண்ணன் மகள். அண்ணன் மகள் என்றால், நேரடியான அண்ணன் மகள் அல்ல. அவரது பெரியப்பாவின் மகன் வழியில் அண்ணன் மகள். பெயர் திலகராணி. என் மனைவிக்குப் பிரியமானவள். குழந்தையாக இருக்கும்போது என் மனைவியால் வளர்க்கப்பட்டவள் எங்கள் திருமணத்தின் போது நான்கு வயதுக்குள் இருக்கும். அவளது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர். அவள் பிறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதால் ‘அப்பனைத் தின்றுவிட்டு வந்த ராசியில்லாத பெண்’ எனக் கருதப்பெற்ற குழந்தை. அதனால் அவளது அம்மாவின் சீராட்டுக்குப் பதிலாக அத்தையின் மடியில் வளர்ந்த பெண். அந்த அத்தைதான் என் மனைவி. அதனால் அவளது அம்மாவைவிடவும் அத்தையான என் மனைவியை அதிகம் பிடிக்கும். அத்தையின் கணவரான என்னையும் அவளுக்குப் பிடிக்கும். அவளைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொன்னது நான் தான். சிங்கப்பூரில் திருமணம் செய்து கொடுக்கலாமா? என்ற ஆலோசனையில் கொடுக்கலாம் என்று சொன்னதும் நான் தான்.
சிங்கப்பூருக்கான மருமகளின் அழைப்பு இரண்டுவிதமாக இருந்தது. எப்படியும் அவளுக்கு அத்தையைச் சிங்கப்பூருக்கு அழைக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருந்ததை உணரமுடிந்தது. அவளும் அவளது கணவர்- செல்வக்குமாரும் போட்டுச் சொன்ன பயணத்திட்டங்கள் இப்படி இருந்தன. இருவரும் நேரடியாக கோலாலம்பூர் போய்விட்டு, அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்து ஒருவாரம் தங்கிவிட்டுப் போகலாம். அதில் சிக்கல்கள் இருக்கும் என்றால் இருவரும் முதலில் சிங்கப்பூர் வந்துவிட்டு, அத்தையை அவளிடம் விட்டுவிட்டு மாமா மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்து அத்தையை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பலாம். இந்த இரண்டில் இரண்டாவது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இந்த அழைப்பை ஏற்றுச் சிங்கப்பூர் போவதென்று முடிவானது.
சிங்கப்பூரில் மனைவிக்கு இருக்கும் உறவினர்களில் திலகராணி -செல்வக்குமார் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அவர்களிருவருக்கும் தாத்தாவாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மதுரை மாவட்டத்திலிருந்து பஞ்சம் பிழைக்கக் கிளம்பிய தனியாட்களில் ஒருவர். தோட்ட த்தொழில் மட்டும் அல்லாமல் பலவகையான தொழில் செய்து சிங்கப்பூரில் வாழ்ந்துவிட முடியும் என்பதை உறுதி செய்துகொண்ட பின், கிராமத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போன மனைவியையும் கைப்பிள்ளையையும் திரும்ப வந்து அழைத்துப் போனவர். மனைவியை அழைத்துப் போனாலும் அங்கேயே ஒரு காதலும் உண்டு. இரண்டு பேருக்கும் சேர்த்துப் பத்துப் பிள்ளைகளைப் பெற்றுச் சிங்கப்பூரின் மனித வளத்துக்குப் பங்களிப்பு செய்தவர். அவரது ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களுமான வாரிசுகள் இரண்டாம் தலைமுறையினர். எல்லோருமே சிங்கப்பூரில் தான் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒரு பயணத்தில் பார்த்துவிட முடியாது என்பதும் தெரியும். என்றாலும் விடுபட்ட சொந்தங்களைப் பார்ப்பது என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியான கணங்கள் என்பதை மறுக்கமுடியாதல்லவா?
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்களில் குடும்பங்களாகவும் தனிநபர்களாகவும் வெவ்வேறு திசையில் பயணித்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் இன்றும் உள்ளன. அறுபது வீடுகள் கொண்ட எங்கள் கிராமத்தில் மலைக்காரர் குடும்பம் என ஒன்று இருந்தது போல ரங்கூன்காரர் குடும்பம் ஒன்றும் உண்டு. மலைக்காரர் குடும்பம் என்பது தேயிலைத் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டபோது பொண்டாட்டியும் புருசனுமாக மூணாறு மலையில் குடியேறி அங்கேயே தங்கிய குடும்பத்தின் பெயர். எப்படியாவது சொந்தங்களில் பெண் பிள்ளைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரும்பவும் ஊருக்கு வரும்போது அந்தப்பெயரும் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டுவிடும். அதே கதைதான் ரங்கூன்காரர் குடும்பத்துக் கதையும். என்ன வேலை என்று தெரியாமலேயே அழைத்துச் செல்லப்பட்டு மலேசியாவின் ரப்பர்க்காடுகளில் கூலியாக இருந்து இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் ஊருக்கு வந்துபோகும் குடும்பத்தவர். ரங்கூன்காரராக இல்லையென்றால் ஒரு ஊரில் பினாங்குவாசியாக இருக்கலாம். இன்னொரு ஊரில் கெடாவாசியாக இருப்பார். அவர்களில் சிலர் பர்மாக்காரர்களாகவும் அறியப்பட்டதுண்டு. நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலிருந்து இலங்கையின் தேயிலைத்தோட்டங்களை வளப்படுத்தியவர்களும் தென் தமிழகத்துக் கூலி விவசாயிகள் தான். எந்த நாட்டுக்கு – எந்த ஊருக்கு என்று சொல்லாமலேயே கப்பலேற்றி அழைத்துப் போன வெள்ளையர்கள் எந்தப் பகுதித் தோட்டங்களில் தொழிலாளிகளாக ஆக்கினார்களோ அந்த ஊர்க்காரராக இங்கே அறியப்படுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகளை விடவும் மிலிட்டரிக்காரர்கள் சொல்லும் கதைகள் நம்ப முடியாதவைகளாக இருக்கும். இந்திய ராணுவத்துக்குப் போனவர்களும் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைப் போலவேதான் கதைகளை அளந்துவிடுவார்கள்
சிங்கப்பூருக்குப் போனவருக்கு ஒரு பிள்ளையையாவது சொந்தத்தில் தரவேண்டும் என்ற நினைப்பு உருவாவதில் தங்கியிருக்கிறது ஊர்ப்பற்று. தமிழ்நாட்டில் திருமணமாகி வந்த பெண்ணைப் பேறுகாலத்திற்காகச் சிங்கப்பூருக்கு அழைத்துப் போய் அவருடைய மகன்களுக்கு அங்கு குடியுரிமை பெற உதவியிருந்தார். அந்தப் பையன்களுக்குத் திரும்பவும் தமிழ்நாட்டில் உறவில் திருமணம் செய்ய வேண்டுமென்று தனது தம்பி வழிப் பேத்தியைத் திருமணம் செய்து கொண்டு போனார். இப்படி கொடுத்தும் எடுத்துமாக நடக்கும் உறவின் தொடர்ச்சிதான் சிங்கப்பூரில் மனைவிக்குச் சொந்தமாக இருந்தவர்கள். அங்கிருந்து இங்கு வரும்போதெல்லாம் சிங்கப்பூருக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டுப் போவார்கள். மெனக்கெட்டுப் போகாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்த என்னை மலேசியா போகும்போது சிங்கப்பூர் போகலாம் என்ற பேச்சு யோசிக்க வைத்த து.
மலேசியா பயணத்தோடு சிங்கப்பூரையும் சேர்த்துக் கொள்ளலாம். என்னுடைய அக்காமார்களை இப்போதாவது பார்க்க வேண்டும் என்று மனைவி சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் சிங்கப்பூர் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சரி போகலாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் மலேசிய மாநாட்டிற்கு தனியாளுக்கான பதிவுக்கட்டணம் மட்டுமே கட்டியிருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் திலகராணி – செல்வக்குமார் சொன்ன இரண்டாவது பயணத்திட்ட த்தை நடைமுறைப்படுத்துவது என்று முடிவுசெய்தோம். நான் சிங்கப்பூரில் மருமகளோடு இருக்கத் தயார்; நீங்கள் மட்டும் மலேசியா போய்விட்டுத் திரும்பவும் சிங்கப்பூர் வந்தால் போதும். நான் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் பயணம் உறுதியான போது அதையும் கல்வி மற்றும் இலக்கியம் சார்ந்த பயணமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையைப் புதிதாக உருவான முகநூல் நட்புகள் தந்தன. சிங்கப்பூரிலிருந்து தினசரி எனது முகநூல் பதிவுகளுக்கு முதல் விருப்பத்தைப் போடுபவராக இருந்தவர் கடலூரான் ஹாஜாமொய்தீன். தொடர்ச்சியாக அவரது விருப்பக்குறிக்குப் பின்னால் ஒருநாள் அவரது பெயருக்குப் முன்னால் இருக்கும் ‘கடலூரான்’ பற்றிக் கேட்டுவிட்டு, எனது பாண்டிச்சேரி காலத்தைப் பற்றிச் சொன்னதின் தொடர்ச்சியாக நெருக்கமானவர்களாக மாறியிருந்தோம். அவரிடம் தான் “இப்படியொரு உறவினர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்; வரலாம் என்றிருக்கிறேன்; இதனைத் தாண்டி கலை, இலக்கியம் சார்ந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். எந்த த்தயக்கமும் இல்லாமல் ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களில் முகம் தெரியாமல் – கடிதத்தொடர்பும் இல்லாமல் அறிமுகமான ஒருவர் உண்டு. சுந்தர ராமசாமி பல்லக்குத்தூக்கிகள் கதையை நாடகமாக்கியபோது அதைச் சிங்கையில் மேடையேற்றியவர்; பெயர் இளங்கோவன். அந்த நாடகம் எனது முதல் புத்தகமான ‘நாடகங்கள் விவாதங்கள்’ என்ற தொகுப்பில் மூன்றில் ஒரு நாடகமாக இருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வுசெய்வதற்காகப் போனபோது அந்தப் புத்தகத்தை வாங்கிப் போன சுந்தரராமசாமி சிங்கப்பூரில் இருந்த இளங்கோவனிடம் கொடுத்துவிட்டு வந்திருப்பதாகவும் மேடையேற்றும்போது உங்களை அழைத்தாலும் அழைக்கலாம் என்று சொன்னார். அப்படி அவர் அழைக்கவில்லை. ஆனால் அவரோடு சில காலம் தொடர்பிருந்தது. அவரது நாடக நூலொன்றைச் சென்னையில் அச்சிட்டு எடுத்துச் செல்ல வந்தபோது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த நூலைப் புதுவை முகவரியை வாங்கி நூலை அனுப்பிவைத்தார். ஊடாடி என்ற தலைப்பில் எழுதப்பெற்ற அந்நாடகம் இருமொழி நாடகமாக அச்சிடப்பெற்றதாக நினைவு. தமிழ்ப் பனுவல் குறித்து இரண்டு மாதத்திலேயே புதிய கோடாங்கியில் விரிவான அறிமுகம் ஒன்றை எழுதியிருந்தேன். நாடகத்துறையை விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு வந்தபின்பு தொடர்பு விட்டுப்போய்விட்டது. ஆனால் அவர் இப்போது என்ன செய்கிறார்; நாடகத்துறையில் தான் செயல்படுகின்றாரா? என்பது தெரியவில்லை. இளங்கோவன் என்ற அந்த நாடகக்காரரை சிங்கப்பூரில் இருந்த மற்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு முன்பாகப் படித்தவர் ஒருவர் இருக்கிறார். அமெரிக்கன் கல்லூரில் தற்காலிகப் பணியில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது நிரந்தரப் பணியில் சேர்ந்தவர் முனைவர் வேல்முருகன். சிங்கப்பூரில் வேலை கிடைத்த தால் அங்கேயே போய்விட்டார். அவர் பணியாற்றும் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் பார்த்துவிட்டுத் தமிழ்க் கல்வி அங்கு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டேன். அத்தோடு அவரிடமிருந்து ஓர் அழைப்புக் கடிதம் பெற்றுவிட்டால் அந்தப் பயணக் காலத்தை பணிமேல் விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது கொஞ்சம் யோசித்தார். மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவரது துறையில் இருக்கும் அனைவரும் போக இருப்பதால், அந்த நேரத்தில் துறையில் ஏதும் நிகழ்வு நட த்துவதும் மாணவர்களைச் சந்திப்பதும் இயலாது என்று பதில் சொன்னார். மாநாட்டிற்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து என்றால் ஏற்பாடு செய்யலாம் என்பதுபோலச் சொன்னார். அவரது தயக்கம் புரிந்ததால் அதைக் கைவிட்டேன். அங்கிருக்கும் இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் கிடைத்தால் கூடப் போதும் என்று பல்கலைக்கழகத்தில் பணிமேல் விடுப்பு அளிக்கும் அதிகாரி சொன்னதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது சிங்கப்பூரில் இருக்கும் முகநூல் மற்றும் எழுத்தாள நண்பர்களின் உதவிகளை நாடினேன்.
சிங்கப்பூரில் நவீனத்துவத்தை உள்வாங்கி எழுதும் புதிய எழுத்தாளர்கள் வரிசை ஒன்று உருவாகி வருவதை எனது வாசிப்பின் வழியாக அறிந்திருந்தேன். லதாவின் எழுத்துகளை காலச்சுவடில் வாசித்திருந்தேன். எனது நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் வழியாகச் சில சிங்கை எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றுள் ஷா நாவஸ் என்பவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றையும் உணவு தொடர்பான நூலையும் மனுஷ்யபுத்திரன் தந்ததால் வாசித்திருந்தேன். மனுஷ்ய புத்திரனும் அங்கே போய்விட்டு வந்து அவரது அனுபவங்களைச் சொல்லியிருந்தார். அத்தோடு அம்ருதா பதிப்பகம் வெளியிடும் முத்துக்கள் பத்து என்ற சிறுகதைத் தொகுப்பு வருசை ஒன்றுக்கு முன்னுரை ஒன்று வேண்டும் என்று திலகவதி கேட்டார். அவர் கேட்டு எதையும் மறுத்த தில்லை. அவர் அனுப்பி வைத்த பத்துக் கதைகளையும் படித்துவிட்டு முன்னுரை எழுதிக்கொடுத்தேன். கதைகளின் நிகழ்களம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்ற பகுதிகளாகவும் இங்குமங்குமான அலைவுகளே கதைகளின் சிக்கல்களாகவும் இருந்தன. அந்தக் கதைகளின் ஆசிரியரான ஜெயந்தி சங்கரும் சிங்கப்பூரில் இருப்பவர் என்பது புத்தகம் வந்த போது தெரிந்தது. இவர்களில் சிலரைத் தொடர்புகொண்டு இலக்கிய அமைப்பு ஒன்றின் அழைப்புக் கடிதம் பெற முயன்றேன்.
முயற்சி கைகூடி, சிங்கப்பூர் நூலக வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடகவியல் குறித்து ஓர் உரை நிகழ்த்த அழைப்பு கிடைத்தது. சிங்கப்பூர் வாசகர் வட்டம், அதன் செயல்பாடுகள் முன்பே முகநூல் வழியாகத் தெரிந்த ஒன்று . தமிழ்நாட்டிலிருந்து சென்ற சில எழுத்தாளர்கள் அவ்வாசக வட்டத்தின் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்ற அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அழைப்பை அனுப்பியவர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக இருந்த சித்ரா அவர்கள். அவரிடம் எடுத்துச் சொன்னவர்கள் ஷாநாவாஸும் கடலூரானும். அவ்விருவரையும் தொலைபேசி வழியாகப் பேசி ஏற்பாடு செய்தவர் ஜெயந்திசங்கர். வாசிப்பும் எழுத்தும் இப்படியான உதவிகளைப் பெற்றுத்தந்துவிடும். ஒரு கூட்ட த்திற்கு ஏற்பாடு செய்வதின் வழியாக ஒரு பயணத்தின் கண்ணிகளை எளிதாக அவிழ்த்துவிட முடியும் என்பதை அனுபவங்களின் வழியாகச் சொல்லவேண்டும் என்பதற்காகவே இந்த விவரிப்புகள் எல்லாம்.
பயணத்தில் சிங்கப்பூர் சேர்ந்துகொண்ட போது பயணப்பாதையும் மாறியது. சென்னை – சிங்கப்பூர் -கோலாலம்பூர் என்று போய்விட்டுத் திரும்பவும் கோலாலம்பூர் -சிங்கப்பூர் -சென்னை என்று மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தை தந்தது விமானக் குழுமங்கள் தரும் பயணச் சலுகையும் தான். பொதுவாக வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு விமானக் குழுமத்தின் பாதையொன்றைத் தெரிவுசெய்து ஒரு நாட்டின் ஒரு நகரத்தில் இறங்கிவிட்டு பயணமுடிவில் அதே நகரத்திலிருந்து திரும்பும் விதமாகப் பயணத்திட்டம் அமைந்தால் பயணக்கட்டணத்தில் சலுகை கிடைக்கும். போகவும் வரவுமான ஏற்பாட்டிற்குப் பதிலாக ஒற்றைவழி மட்டும் என்றால் கட்டண விகிதங்கள் கூடும். இந்தக் காரணங்களுக்காகவே பலரும் – சொந்தப்பணத்தில் பயணம் செய்யும் பலரும் போகவும் வரவுமான பயணத்திட்டத்தைத் தேர்வு செய்வார்கள். அரசாங்கம் அல்லது வேலை பார்க்கும் குழுமங்கள் தரும் பணத்தில் பயணம் செய்பவர்கள் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.
என்னுடைய இந்தப் பயணத்தின் ஒரு பகுதியைப் பல்கலைக்கழகம் அதன் கல்விப்பங்கேற்பு வரம்புக்குள் வழங்கும் என்றாலும் அது முழுமையான பயணத்திற்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு வாரப் பயணத்தை இறுதி செய்தேன். 2015, ஜனவரி 24 முன்னிரவு கிளம்பி சிங்கபூருக்கு அடுத்த நாள் அதிகாலையில் இறங்கும் விதமாக பயணச்சீட்டு வாங்கப்பட்டது. கிளம்பிய நேரம் அதேபோல் பிப்ரவரி 7 ஆம் தேதி சிங்கப்பூரில் அதிகாலை கிளம்பி 05.50 விமானத்தைப் பிடித்துச் சென்னையில் காலை நேரத்திலேயே வந்திறங்கும்போது நேரம் 07.40. 110 நிமிடப் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் சிங்கப்பூருக்கும் சென்னைக்குமிடையே இரண்டரை மணி நேரம் – 150 நிமிடங்கள் வானத்தில் காணாமல் போய்விடும் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து கீழைத்தேய நாடுகளுக்குள் நுழையும் போது உங்கள் வாழ்க்கையில் சில மணிநேரங்களைத் தொலைத்துவிடுவீர்கள். மேற்கு நோக்குப் பயணத்தால் பயணதூரத்திற்கேற்ப வாழ்க்கையின் காலமும் கூடிக்கொள்ளும். கிழக்கும் மேற்கும் திசைகளால் மட்டும் முரண்பட்டவையல்ல.
பின்குறிப்பு:
நண்பர் கே.பாலமுருகனின் குறிப்பொன்று:

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)
கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
“உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.
பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.
அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.
அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்
அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.
கே.பாலமுருகன்


கருத்துகள்