பண்டிகைகள் - விளையாட்டுகள் - பொழுதுபோக்குகள்

ஐபிஎல் என்னும் மெலோ-டிராமா

காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும்

என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்களில் கணித்துச் சொன்ன முடிவுகள் எல்லாம் அந்தர் பல்டியாகி விட்டன. நான்கூட கல்கத்தா நைட்ரைடர்ஸ் கோப்பையைப் பெறும் என்று ஒரு பதிவே போட்டேன். இப்போது அந்த அணி ப்ளே ஆப் - கோப்பைக்கான நிறைவுச் சுற்றுக்குள் கூட வருமா? என்று ஐயத்தை உண்டாக்கிவிட்டுத் தவிக்கிறது. இப்போது 12 ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்றால் கடைசி 4 அணிக்குள் வரும் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலையைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவாரத்திற்கு முன்னால் அந்த வாய்ப்பே இல்லை என்று கோலியே மனம் தளர்ந்துபோய்ப் பேசினார்.

தொடக்கத்திலிருந்தே புள்ளி அடிப்படையில் முதல் இடம் பெற்றுவரும் தோனியின் தலைமையிலான சென்னை அணிக்குமட்டுமல்ல மீதமுள்ள ஏழு அணிகளுக்கும் கோப்பைக்கான நிறைவுச் சுற்று வாய்ப்பு இருக்கிறது என்பதுபோல வெற்றிகளையும் தோல்விகளையும் கவனமாகத் திட்டமிட்டு அடைகிறார்கள். தோனி இல்லையென்றால் தோற்போம் என்று சொல்லும் சென்னை அணி சொல்வது அந்தத் திட்டத்தின் ஒரு திசைமாற்றத்தைத் தான். ரகசிய முடிவைத்தான்.

நல்லதொரு மெலோடிராமாவிற்கு ஒற்றை இயக்குநர் இருப்பதற்குப் பதிலாகப் பல இயக்குநர்கள் இருப்பார்கள். அவர்கள் கலந்துபேசி எடுக்கும் முடிவின்படியே காட்சிகள் அமைக்கப்படும். நடிகர்கள் நடிப்பார்கள். பாடல்கள் எழுதி வாங்குவார்கள். பயமுறுத்தும் ஒளி - ஒலியமைப்புகள் இடம்பெறும். மெலோடிராமாத் தனமான சினிமாக்கள் எப்போதும் தோற்பதில்லை என்பதை இந்திய சினிமாவின் இயக்குநர்களும் பார்வையாளர்களும் அறிவார்கள்.

2019 - ஐபிஎல் கொண்டாட்டங்கள் அதே வகைமையில் - மெலோடிராமா என்னும் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மொழிகள் இதுபோன்ற பொழுதுபோக்குத் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அதிலும் தமிழ்த்தேசிய முதலாளிகளான இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனும் சன் குழுமத்தின் கலாநிதி மாறனும் இதில் கில்லாடிகள். இவ்விருவரில் சன் குழுமம் பள்ளிப்பிள்ளைகளின் கோடைவிடுமுறையைப் பணமாக்க - காஞ்சனா, முனி எனப் பேய்களைத் தயாரித்துக் காசு பண்ணும் நிறுவனம்.
பொழுதுபோக்குப் பொருளாதாரத்தின் கனவான்கள்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் - பார்வையாள நினைவுகள்


ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது.

மொத்தமாகக் கட்டினால் 10000/- ரூபாய்க்கும் கீழே தான் விலை இருந்தது. 36 மாதத் தவணைகளில் கட்டி முடிக்கும்போது சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகையைக் கணக்குப் பார்த்தபோது இரண்டு மடங்காக இல்லை ஆயிரம் ரூபாய் குறைவாக வந்தது. அலைவரிசைகளை மாற்றும்- ரிமோட் கண்ட்ரோல்- மாற்றியையும் சேர்த்து வாங்கியிருந்தால் இரண்டு மடங்குக்கும் மேலே போயிருக்கும். அப்போது அது மட்டுமே 1000 ரூபாய். தனிக்காட்டு ராணியாக தூரதர்ஷன் மட்டுமே ஒளிபரப்புச் செய்த காலத்தில் மாற்றியையும் சேர்த்துத் தலையில் கட்டிவிடப்பார்த்த காட்சிக்கூட விற்பனையாளரின் சாதுரியப் பேச்சுகளுக்கு மசியவில்லை.

பாண்டிச்சேரி-மகாத்மா காந்தி சாலையில் இருந்த பிபிஎல் காட்சிக் கூடத்திலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியை மட்டுமே வாங்கினோம். அதுவரை எழுது மேசையாக இருந்தது அன்றுமுதல் தொலைக்காட்சி மேசையாக மாற்றம்பெற்றது. ஒளிபரப்பு இல்லாத போது மூடிவைக்க டர்க்கித் துவாலை துவைத்து வைக்கப்பட்டது. அந்த வருடத்துக் கோடை விடுமுறைக்குச் சொந்தக் கிராமத்திற்கே போகவில்லை. வண்ணத் தொலைக்காட்சியில் உலகக் கோப்பைப் போட்டிகள் 1992 இல் என்றாலும் கறுப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியில் உலகக் கோப்பை கிரிக்கெட்டைத் பார்த்தது 1987 இல். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர் குடியிருப்பில் - பக்கத்து வீட்டில் உயிரியல் துறையில் ஆய்வாளராக நண்பர் அன்புதுரையின் வீட்டில் பத்துக்குப் பத்து அறைக்கேற்பச் சின்னதான கறுப்பு- வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது.

சொந்த ஊரில் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்துத் திண்டுக்கல் போனபின்பே கிரிக்கெட் என்றொரு விளையாட்டு இருப்பது தெரியும்.டட்லி பள்ளி விடுதியில் தங்கிக் கால்பந்து விளையாடுவதற்காகக் கேரளத்தின் மூணாறிலிருந்தெல்லாம் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து கால்பந்து விளையாடாமல் கிரிக்கெட் விளையாடக் காரணம் கிட்டிப்புள் விளையாண்ட அனுபவம்தான்.

அதற்குமுன்பு அதிகம் விளையாண்டது கிட்டிப்புள் மட்டுமல்ல; கபாடியும். எந்தக் கருவிகளும் இல்லாமல் உடலை மட்டும் கொண்டு விளையாடும் கபாடியைவிடக் கிட்டிப்புள் பிடித்தமான விளையாட்டாக இருந்தது..ஒன்றரை அடி நீளக் குச்சியும் மூன்று அங்குல அளவில் ஒரு குச்சியும் கொண்டு ஆடும் கிட்டிப்புள்ளில் கோதுவிடுவது பெரிய குச்சி. பறந்து போவது சின்னக்குச்சி. பறக்கும்போதே பிடித்துவிட்டால் கோதியவர் ஆட்டம் இழப்பார். எதிரே இருக்கும் எல்லைக் கோட்டுக்கு ஓடும்போது குச்சியைத் தடுத்து ஒரு முனையில் வைத்துவிட்டால் ஓடுபவரின் ஆட்டம் முடிந்துவிடும். ஏறத்தாழ கிட்டிப்புல்லின் விதிகள் என்றாலும் இங்கே குச்சிகளுக்குப் பதில் மட்டையும் பந்தும்.
பள்ளிப் படிப்புக் காலத்தில் தொடங்கி பிரியமான அணியாக இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணிதான். விவியன் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் கோல்டிங், ரிச்சி ரிச்சர்ட்சன், வால்ஸ், அம்புரோஸ் போன்றவர்களின் பெயர்களுக்கு பின்னால் தான் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும். வெங்கட்ராகவன் அணித் தலைவராக இருந்த காலத்தில் காவஸ்கர், விசுவநாத், ஸ்ரீகாந்த் போன்ற மட்டையாளர்களும் கபில்தேவ், ரோஜர் பின்னி போன்ற பந்து வீச்சாளர்களும் விடுதி அறைகளில் ஒட்டப்பட்ட படங்களாக இருந்தனர். 1983 உலகக் கோப்பையை - ப்ரூடெண்சியல் உலகக் கோப்பையைத் தட்டிவந்த கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டின் ஆளுமையாக ஆனார். அதுவரையிலும் பிராமணர்களின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டை மற்றவர்களின் விளையாட்டாகவும் மாற்றியவராக கபில் நின்றார். அவர்தான் வெற்றிக்குப் பின் ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சொந்த மொழியில் பேசியவராகவும் இருந்தார்.மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை எனப் பெருநகரங்களின் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த ஹரியானாவின் கபில்தேவின் நீட்சியாக மகேந்திர சிங் தோனி 2011 இல் திரும்பவம் கோப்பையைப் பெற்று இந்தியக் கிரிக்கெட்டின் ஆகப்பெரும் அடையாளமாக வலம் வருகிறார்.

***********
அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது.

ஓர் அணி விளையாட்டில் இருக்க வேண்டிய வேகமும் சுறுசுறுப்பும் வேகமும் இல்லாத கிரிக்கெட், தொடக்கத்தில் வானொலி வர்ணனை மூலமும், பின்னர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான விளையாட்டாகவும் மாறியதன் பின்னணியில் வெறும் மேற்கத்திய மயமாதல் மட்டுமே இருப்பதாக ஒருவர் மதிப்பிட்டால் அது பெருந்தவறாக ஆகி விடும். ஏனென்றால் கிரிக்கெட்டைச் சுற்றிப் பல விளையாட்டுக்கள் நடக்கின்றன. அவை சிறு முதலாளிகளின் வியாபார வளர்ச்சி தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சி வரை உதவும் காமதேனுவாக மாறி விட்டது. நேர்க்காட்சிக்காகச் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கூடும் 60 லட்சம் பேர்களோடு தொலைக் காட்சிகளின் வழியாக பல நூறு லட்சம் கண்களின் களிப்புக்கான காட்சிப் பொருளாகத் தன்னை ஊருமாற்றம் செய்து கொள்ள அனுமதித்தது தான் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிக் கதை.

கிளித்தட்டும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் கோலியும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், புவனேஷ்குமாரின் பந்துவீச்சும், குல்தீப் யாதவின் சுழற்சியும் காட்சிகளாகி விட்டன.
காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும்
என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். வகையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு இப்போதுதான் நடந்துமுடிந்திருக்கின்றன
*************************
எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகி விட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று.

வெவ்வேறு நோக்கங்களுடன் புதியபுதிய அலைவரிசைகளைத் தொடங்கும் தொலைக்காட்சி குழுமங்கள் மாநில மொழிகளில் வர்ணனை சொல்வதற்காகவும் அலைவரிசைகளையும் தொடங்கியுள்ளன. சென்னையில் உட்கார்ந்து கொண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்துப் போட்டிகளைக் கச்சடாவான தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள். அந்தப் பேச்சுகளில் வழிவது கிரிக்கெட்டின் நுட்பங்களும் புள்ளிவிவரங்களும் மட்டுமல்ல. போலியான உணர்ச்சிகளைத் தூண்டும் சொற்களால் தேசப்பற்றும் வட்டாரப்பற்றும். விளையாட்டை அரசியல்மயப்படுத்தி விற்பனைச் சரக்காக்கி நாடுகளிடையே பகைமுரணை உருவாக்குவதில் ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன.

கிரிக்கெட் ஆடியவனாகப் பார்க்கத் தொடங்கிய ஆர்வம் இப்போது அதன் விமரிசகனாகப் பார்க்கும்படி மாற்றியிருக்கிறது. நோக்கம் எதுவாக இருந்தாலும் பார்வையாளர்களைத் திளைக்கச் செய்யும் களியாட்டக்கூறுகள் கொண்டதாகக் கிரிக்கெட் மாற்றம் பெற்றுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

பண்டிகைநாள் சினிமா: தனித்தாளுகையின் (Mono-Poly ) குரூரம்

இந்த வருடத் (2019) தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டிப் பொழுது போக்காகத் திரையரங்கிற்குச் சென்று புதிதாக வந்துள்ள சினிமா ஒன்றைப் பார்க்கலாம் என நினைக்கும் ஒருவருக்கு - ஒரு குடும்பத்திற்கு - தரப்பட்டுள்ள வாய்ப்புகள் இரண்டே இரண்டுதான். ஒன்று பிகில் இன்னொன்று கைதி.

கடந்த ஒருவாரமாகச் சென்னை அம்பத்தூரில் இருக்கிறேன். அண்மைக் காலங்களில் சென்னை வந்தால் தங்கும் இடமாக அம்பத்தூர் இருப்பதால் அங்கிருக்கும் நாட்களில் அதிகமான சினிமாக்களைப் பார்க்கும் அரங்க வெளியாக ராக்கி சினிமாஸ் இருக்கிறது. நடந்து போய்வரும் தூரத்தில் இருக்கும் அவ்வெளியில் முன்னொட்டும் பின்னொட்டுமாக ராக்கியுடன் சேர்த்துகொண்ட 4 திரை அரங்குகள் இருக்கின்றன. நேற்று வெள்ளி முதல் ஒருவாரத்திற்கு நான்கு அரங்கிலும் விஜய் நடிக்க, அட்லி இயக்கியுள்ள பிகில்தான் காட்டப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இங்கே கைதி பார்க்க நினைத்தாலும் வாய்ப்பில்லை சென்னை நகரத்திலேயே கைதி ஓடும் அரங்குகள், பிகில் வெளியாகியிருக்கும் அரங்குகளின் எண்ணிக்கையில் பாதிகூட இல்லை. ஒருவாரத்திற்குச் சினிமாவைப் பற்றி நினைத்தால் பிகிலை மட்டுமே நினைக்கவேண்டும்.

இந்தச் சூழலை உருவாக்கியவர்கள் சினிமாவைப் பணம் கொடுத்துப் பார்க்கும் அதன் ரசிகர்களாகிய நுகர்வோர் அல்ல. சினிமாவின் தயாரிப்பாளர்களும் வாங்கி விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களும் பார்வையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் திரையரங்க உரிமையாளர்களும் செய்துகொண்டுள்ள வியாபார ஒப்பந்தங்கள் வழி இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புச் சங்கிலி(Network) சினிமா ரசிகர்களைக் ”கொடுப்பதைத் திண்” என ஆணையிட்டு அடக்கும் குரூரத்திற்குள் நகர்த்தியுள்ளது. இந்தக் குரூர வியாபார உத்தியால் முதலில் பாதிக்கப்படுவது சினிமா ரசனை. எல்லாவற்றிலும் போட்டியை அனுமதிக்கும் காலத்தில் சினிமா ரசிகர்களுக்கு ஒன்றை மட்டுமே வழங்கும் ஒற்றை ஆதிக்கம் ஏன் என அதில் தொடர்புள்ள ஒருவரும் சிந்திக்கவில்லை.

மக்களின் மனத்திறப்பையும் விவாதங்களையும் விரும்பும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இதனைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் மனம் மற்றும் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டிய அரசு மக்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கும் முறைமையை உருவாக்க வேண்டும். பெரும்போக்குப் படங்களின் வருகையின் போதே சிறுபோக்குப் படங்களும் வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நட்சத்திர நடிகர்கள் நடிக்கப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் உருவாக்கும் மனநிலை, மந்தைத் தனத்தை உருவாக்கும் ஆபத்து கொண்டது. அதிலிருந்து விடுபட நினைக்கும் மனிதர்களுக்கான வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. அப்படி மறுத்தல் எதிர்மறைச் சிந்தனைகளை உருவாக்கும். அவர்களின் செயல்பாடுகள் மந்தைகளின் செயல்பாடுகளை விடக் கூடுதல் ஆபத்துகளைச் சமூகத்தில் உண்டாக்கலாம்.

தீபாவளிக்கு எல்லாவகையான பலகாரங்களும் கிடைக்கவேண்டும். அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து செய்த பலகாரங்களோடு, கோதுமை, மைதா,ரவை, பருப்புகள், விதைகள் எனப் பலவற்றையும் அடிப்படைப்பொருட்களாகக் கொண்டு சர்க்கரை கலந்து செய்த இனிப்புகளும் கிடைக்கவேண்டும்.சர்க்கரை கலக்காத காரங்களும் வேண்டும். அவ்வாறு கிடைக்காமல் - கிடைப்பதைத் தடுக்கும் விதமாக ஏதோவொரு பலகாரம் மட்டுமே மொத்தமாகத் தயாரிக்கப்பட்டு அனைத்துக் கடைகளிலும் விற்கப்படும் என்றால் ஏற்றுக் கொள்வோமா? நாக்கால் சுவைத்து உடலுக்குள் அனுப்பும் இனிப்புப்பண்டங்களிலும் காரங்களிலும் வேறுவேறு வகைகளை நாடுகிறோம். அதே நேரத்தில் மென் உணர்வுகளைக் கண்களின் வழியாகவும் காதுகள் வழியாகவும் நமக்குள் அனுப்பும் சினிமாவில் ஒன்றே ஒன்றுதான் என்பதை எப்படி ஏற்பவர்களாக மாறிப்போகிறோம்?.

இந்த நேரத்தில் ஒரு கடந்தகாலத் தீபாவளி நினைவுக்கு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் - 1978 - ஒரு தீபாவளியன்று தான் அவள் அப்படித்தான் படம் பார்த்தேன். வண்ணக் கலவையாகத் தமிழ்ச் சினிமா மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கறுப்பு -வெள்ளையில் ருத்ரையாவின் படம். நாயகியாக ஸ்ரீப்ரியா, முக்கியமான இரண்டு பாத்திரங்களில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் நடித்திருந்தார்கள். அந்தப்படம் வெளியான அதே தீபாவளியன்று 8 சினிமாக்கள் வெளியாகி மதுரையின் ரசிகர்களுக்குப் பலவிதமான படங்களின் ரசனை வழங்கின. முதல் படமாக அவள் அப்படித்தானைப் பார்த்தபின் அதே நாளில் வெளியான ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கப் பாலச்சந்தர் இயக்கிய தப்புத்தாளங்களையும், கமல்ஹாசன் நடிக்கப் பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்களையும் அடுத்தடுத்த வாரங்களில் பார்த்தேன். அப்போதெல்லாம் நீண்ட் நாட்கள் ஒரே அரங்கில் ஓடும் சினிமாவே வெற்றிப்படம். கிரிக்கெட்டில் சதம், இரட்டைச்சதம் அடிப்பதுபோல 100 நாட்கள், 200 நாட்கள் கொண்டாடப்படும். கடந்த காலங்களைத் திரும்பக் கொண்டுவர நினைப்பவன் அல்ல நான். ஆனால் கடந்த காலம் பார்வையாளர்களுக்கு வழங்கிய வாய்ப்புகளைத் திருடிக்கொண்டு போகின்றார்கள் என்று கூக்குரல் போடுவது அவசியம் என்று நினைக்கிறவன். கூட்டாகச் சேர்ந்து திருடுபவர்களுக்கு அரசாங்கம் உதவக்கூடாது என்று சொல்லத்தானே வேண்டும் -
வெண்மணி நினைவுநாள்- சில குறிப்புகள்

அறுபத்தியெட்டில கீழவெண்மணியில் நடந்த அக்கிரமம்;
நாம கண்ணுங்காதும் வாயும்பொத்தி இருந்த அக்கிரமம்.
இந்தமாதிரி கொடுமைகள் இங்கு எங்குமே நடக்கிறது
இந்தியாவில் எங்குமே நடக்கிறது.

1980 -களில் தீவிரமாக இயங்கிய பல தெருநாடகக் குழுக்கள் இப்படித் தொடங்கி நடத்திய நாடகத்தின் தலைப்பு: நியாயங்கள். மதுரை நிஜநாடக இயக்கம் 50 -க்கும் மேற்பட்ட மதுரை மாவட்டத் தெருக்களில் நடத்தியிருக்கிறது. அதில் நடிகனாக இருந்த நான் பாண்டிச்சேரிக்குப் போனபின்பு கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் வழியாகப் புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், கல்பாக்கம், பகுதிகளிலும் நடத்தியிருக்கிறோம். அப்போது வெண்மணி முதல் சுண்டூர் வரை எனப் பெயரை மாற்றியிருந்தோம். சில நிகழ்வுகள் டிசம்பர் 25 அன்று வெண்மணி நினைவுக்காகவும் நடத்தப்பெற்றது.

1968, டிசம்பர் 25 இல் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்படுவதற்கு முன்பு காவல் துறையின் துணையோடு நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாள்படை துப்பாக்கியோடு விவசாயக் கூலிகளைச் சுட்டும் உடல்களைச் சிதைத்தும் நெருப்பில் வீசியெறிந்து கொன்றது. வெண்மணிக் கொலை நிகழ்வு நடக்கக் காரணம் யார்? என்பதைச் சுட்டிக்காட்டுவதிலோ, அந்நிகழ்வுக்குக் காரணமான கருத்தியலும் அமைப்புகளும் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான பணிகளைச் செய்திருக்கிறோம் என்பதிலோ சண்டையும் உரிமை கோரலும் நடக்குமென்றால் வரவேற்கலாம். அதற்குப் பதிலாக எந்த இயக்கம் உழைக்கும் கூட்டத்தைத் திரட்டியதால்- போராட்டக்களத்தை அமைத்துத் தந்ததால்- வன்கொலைக்கு ஆளானார்கள் என்பதை அடையாளப் படுத்தி உரிமை கோருவதில் என்ன பெருமை இருக்கமுடியும் என்று தெரியவில்லை. கூலி உயர்வு கேட்ட காரணம் பின்னணியில் இருந்தது. கேட்டுப் போராடத் தூண்டியது இடதுசாரிக் கட்சியின் விவசாயத்தொழிலாளர்களின் சங்கம். எரிக்கப்பட்ட இடம் ராமையாவின் குடிசை. எரிக்கப்பட்ட அனைவரும் தலித்துகள்.

நிலப்பிரபுத்துவத்திற்கெதிராக - வர்க்கமாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களை உழைக்கும் வர்க்கமாகப் பார்க்கத் தயாரில்லை ஆளும் வர்க்கம். இந்தியாவில் - தமிழ்நாட்டில் இருப்பது வர்க்கவேறுபாடல்ல; சாதி ஆதிக்கம் மட்டுமே என்பது ஆதிக்கசாதி நிலக்கிழார்களின் கருத்தியல். சாதிப்பிரிவினை தீண்டாமையை ஏற்கிறது. தீண்டாமையைக் காரணம்காட்டி எல்லாவகையான உரிமைகளையும் மறுக்கிறது. அதனை மீறுபவர்களைக் கொல்லவும் அதிகாரம் இருப்பதாக நினைக்கிறது சாதி ஆதிக்கம். நினைத்ததை நடத்திக்காட்டிய நிகழ்வு கீழ்வெண்மணி. நடத்தியபின் அந்த நிலக்கிழார் செய்த பரப்புரைகள் அதையே உறுதிசெய்தன.

இப்போது வெண்மணி நினைவு நாளுக்குச் சொந்தம் கொண்டாடுவதில் நடக்கும் சண்டை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 50 வது நினைவு ஆண்டில் அச்சண்டை கூச்சலாக மாறி முகநூல் எங்கும் கேட்கிறது.தொலைக்காட்சிப் பெருக்கத்தால் நேரலைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன. நினைவுநாள் அஞ்சலிகளில் கொண்டாட்ட மனநிலை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதை அமைப்புகள் உணரவேண்டும்.

வெண்மணிப் படுகொலைநாள் எப்படி நினைக்கப்படவேண்டும்?. சாதிச் சங்கத் தலைவர்களின் ஜெயந்திகளைப் போலவா? கோயில் கொடை போலவா? என்பதைப் போட்டிபோடும் அமைப்புகள் யோசிக்க வேண்டும். உள்ளடக்கத்தைவிடவும் வடிவத்திற்கு முதன்மை அளிக்கவேண்டிய காலகட்டத்தில் -ஊடகப் பெருக்கக் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்