பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்

 

ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான்.
'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' 
என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

“குளவி கூடுகட்டினால் நல்லதாச்சே” என்று சிரித்தவளிடம், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை, சுத்தம் பண்ணிடுங்க”என்று உள்ளே போனாள்.


இந்த ஒற்றை உரையாடலுக்குப்பின் கதைசொல்லும் முறை முழுமையாக மாறுகிறது. நினைவுக்குமிழிக்குள் ஆழ்ந்துவிடும் அந்தப்பெண்,“ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை” என்று சொன்ன அந்தப் பெண், ’அந்தக்குளவிக்கூடு’ பற்றிய நினைவுக்குள்ளேயே மூழ்கிப் போய்விடுகிறாள். இந்தக்கூற்று கர்ப்பம் தரித்தல், குழந்தைப்பேறு, தாய்மை என்னும் பெண்மையின் சாத்தியங்களோடு தொடர்புடைய நம்பிக்கையின்மேல் எழும் கூற்று. அதைச் சொல்லும் வேலைக்காரப்பெண் வீட்டு எஜமானியம்மாவின் இப்போதைய நிலையை அறிந்தே சொன்னாளா? என்ற கேள்விகளுக்குள் எல்லாம் நுழையவில்லை. 
குளவி கூடுகட்டுவதைத் தாய்மையோடு இணைத்துப் பேசும் நம்பிக்கை அவளுக்கு இல்லை என்பதற்குக் காரணம் அறிவுசார்ந்த தெளிவு அல்ல என்பது அந்த நினைவலைகளில் வெளிப்படுகிறது. ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும்கூட தன் உடல் ஆணின் - கணவனின் பாலியல் விருப்ப விளையாட்டுக்களமாக இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தின் மேல் எழும் நினைவுகளாக அலைகின்றன. தனது உடல் தாய்மையடையும் வாய்ப்பை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி என்பதைவிடத் தனது உடல் ஒரு பெண்ணின் முழுமையை இழந்து விட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி அது.
‘ஒரு பெண்ணுடல் எதில் முழுமையடைகிறது’ என்ற கேள்விக்கு “ஆணின் உடலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் களமாக இருப்பதில்” என்ற நம்பிக்கை பெண்களுக்கு எப்போதும் இருக்கிறது; அதற்கான சாத்தியங்களைத் தனது உடல் இழந்துவிட்டது என்பதாகத் தோன்றும்போது தன் மீதே ஒரு கழிவிரக்கமும், விரக்தியும் உருவாகி அலைக்கழிப்பதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். பாலியல் இச்சையைத் தூண்டும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு இந்தக் கதையில் ஒரு காரணமாக உணர்த்தப்படுகிறது. அவளது ஜாக்கெட்டுக்குள் திரட்சியாக இருக்கவேண்டிய முலைகளினிடத்தில் இருப்பன இரண்டு கரும்புள்ளிகள் என்ற குறிப்பு உண்டாக்கும் எண்ணங்களின் விரிவாகக் குளவி கதை நிகழ்த்தப்படுகிறது.

கதையில் பாத்திரத்தின் மனச்சிக்கலுக்கு நோயும் அதனால் இல்லாமல் போய்விட்ட முலைகளும் காரணம் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையென்றாலும், அவளது நினைவுகளின் வழியாக உணர்த்தப்படுகிறது. ஆண்கள் எழுதும் கதைகளில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய சித்திரங்களிலிருந்து பெரிதும் மாறுபடாத நுட்பமான சித்திரத்தை உமா மகேஸ்வரியின் குளவி கதை எழுதிக்காட்டுகிறது. இந்த எழுத்து பெண்ணுடலை எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பெற்ற கதையல்ல. 
‘தாய்மை’ என்னும் புனிதக் கருத்துரு உருவாக்கப்பெற்று பெண்ணுடல் மீது கவிழ்க்கப்பெற்ற சுமை என்பதை உள்ளார்ந்து எழுதிக்காட்டும் கதை.

இப்படியான எழுத்தை பெண்ணியச் சிந்தனையின் ஆணெதிர்ப்பு என்னும் ஒற்றைப்பரிமாணத்தைக் கொண்டு வாசித்து விடமுடியாது. குடும்ப அமைப்பு நபர்களின் உறவுகளால் உருவாவது என்ற பொதுவரையறையை இந்தியச் சமூகம் நிராகரிக்கிறது. இந்தியச் சமூகங்கள், குடும்ப அமைப்பை அகமணமுறை என்னும் சமூக உறவால் தீர்மானமாகும் ஓர் அமைப்பு என மறுவரையறை செய்கின்றன. இதிலிருந்து விலகி, குடும்பம் என்பது சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள் வழி உருவாக்கப்படும் கருத்தியலால் கட்டப்படும் அமைப்பு எனக்காட்டுவது நவீன எழுத்தின் பணியாக இருக்கிறது. 
இந்தக் கதையின் வழியாக உமாமகேஸ்வரி தன்னை நவீன எழுத்தின் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதையை மட்டுமல்ல அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான மரப்பாச்சியைக் கூட பெண்ணிய வாசிப்புச் செய்ய விரும்பினால் ஆண் - பெண் என்ற இருமையெதிர்வைத் தாண்டிப் பன்முக விசாரணைகளை முன்வைக்கும், சீமாந்த போவா போன்றோரின் சொல்லாடல்களைக் கற்று விவாதிக்க வேண்டும். 
மரப்பாச்சியிலும் பெண்ணுடல் கொள்ளும் மாற்றமே – ‘முலை முளைத்தலின் கிளர்ச்சியே’ கதைப்பொருள். முளைத்து வளரும் முலைகளைக் கவனிக்கவும் அது குறித்து உரையாடவும் ஓர் அந்தரங்கமான உறவொன்றை அவாவும் குழந்தமையைத் தாண்டிய பதின்ம வயதுப் பெண்ணொருத்தியின் தவிப்பைச் சொல்லும் கதை அது. தனக்கேன நேரம் ஒதுக்கும் குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாத அவளுக்கு அந்தரங்கமான உறவைத் தரும் ஒன்றாக வருகிறது அந்த மரப்பாச்சி. பரணிலிருந்து வேறு எதையோ தேடி எடுக்க முயன்ற அப்பாவின் கைக்கு அகப்பட்ட பொட்டலத்திற்கு ஞாபகங்களைக் கொண்டுவரும் பொருட்களோடு அந்த மரப்பாச்சியும் வந்தது என்று கதையைத் தொடங்கியுள்ளார் உமாமகேஸ்வரி 
ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று.

தன்னோடு பேசவும் வினாக்களுக்கு விடைகளைச் சொல்லவும் ஆளற்ற தனிமையில் உறவாடும் ஒன்றாக மாறிவிட்ட மரப்பாச்சியைத் தனது அந்தரங்க உலகத்தின் கனவாக ஆக்கிக் கொண்ட கணங்களை எழுதும் உமா மகேஸ்வரியின் எழுத்து பெண் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் நுட்பமாக காட்டுகிறது

‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.
மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின் இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.
வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.

தன்னை மரப்பாச்சியில் கண்ட கணங்களை மாற்றித் தனக்கான உலகத்தைத் தரும் இன்னொன்றாக – ஆணாக- மரப்பாச்சியை மாற்றிக் கொள்ளும் அந்தச் சிறுமிக்கு மரப்பாச்சியே எல்லாமுமாகிறது

தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள். 
மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள்
மரப்பாச்சி உருவாக்கித் தந்த கனவுலக வாழ்க்கையை விட்டு விலகி அது இல்லாத இன்னொரு வெளியில் நுழைய நேரிட்டபோது தனது உடலை வேறுவிதமாக உணர்கிறாள். ஒரு விடுமுறையில் அத்தையின் வீட்டிற்குப் போனபோது அத்தையின் கணவன் – மாமாவின் பேச்சும் உடலும் ஏற்படுத்திய உணர்த்துதல்கள் அவை
அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.
அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ‘ எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.

கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.
தொடர்ந்து அத்தையின் வீட்டில் இருந்து மாமாவினால் தடவப்படும் உடலாக – அத்துமீறப்படும் உடலாக இருந்துவிடக்கூடாது என்று உடலே சொல்லிக் காய்ச்சலை வரவழைத்துக் கொள்கிறது. குடும்ப உறவுகளால் அத்துமீறப்படும் பெண் உடலின் வேதிவினையைக் கவனமாக எழுதிக் காட்டும் உமா மகேஸ்வரி அதற்கான மருத்துவம் அவளது கற்பனை உலகில் – மரப்பாச்சி மூலம் உருவாக்கிக் கொண்ட கற்பனை வெளியில் இருப்பதாகக் காட்டியிருக்கிறார். அத்தை வீட்டிலிருந்து காய்ச்சலோடு திரும்பிய அந்தச் சிறுபெண் மரப்பாச்சியையே தேடுகிறாள்
அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.
எனக் கதையை முடித்திருக்கிறார். 
உயிரியல் இவ்வுலகின் உயிரிகளை ஆணென்றும் பெண்ணென்றும் வகைப்படுத்திக் காட்டப் பெரிதும் பயன்படுத்துவது அவற்றின் உடல் அடையாளங்களே. ஆணுறுப்போடும் பெண்ணுறுப்போடும் பிறப்பதின் வழியாக வேறுபடும் உடல்களில் ஆண்மையை உணர்தலும் பெண்மையை உணர்தலும் நிகழும் காலகட்டம் முக்கியமான காலகட்டம். வயதுக்கு வருதல் என்ற சொற்களால் குறிப்பிடப்படும் அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் ஏற்படும் பருண்மையான மாற்றம் முலை முளைத்தல். அதுபோன்றதொரு பருண்மையான உடல் மாற்றம் ஆணுக்கு இல்லை. இதனாலேயே பெண்ணுடலின் மீதான ஈர்ப்பை ஆணுடல் அவாவுகிறது என்று கூடச் சொல்லலாம் இதை ஒருவித உயிரியல் நடவடிக்கையாக மட்டும் கணித்துப் பேசுவது உடலியல் மருத்துவம். ஆனால் அந்தப் பதின் பருவத்தில் மனவியல் மாற்றங்களும் தன் உடலின் புதிர்களையும் ரகசியங்களையும் தானே கண்டுபிடித்துவிடும் எத்தணிப்புகளும் ஆணுக்கும் இருக்கின்றது; பெண்ணுக்கும் இருக்கின்றது. கண்டுபிடிப்பதோடு எதிர்பாலினருக்குக் காட்டிவிடும் எத்தணிப்புகளும் நடக்கின்றன என்கிறது உளவியல் மருத்துவம். 
உடலியல் மருத்துவமும் உளவியல் மருத்துவமும் அவற்றை அணுகும் முறைமைகளிலிருந்து இலக்கியப் பனுவலாக்கம் வேறுபடுகிறது. தனிமனிதர்கள் உருவாக்கிக் கொள்ளும் அந்தரங்க வெளிக்குள் சமூகத்தின் – உறவுகளின் நுழைவு திசைமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும் எனக் கரிசனம் கொள்கின்றன. உமாமகேஸ்வரியின் இவ்விரு சிறுகதைகளும் அத்தகைய விரிவான அலசல்களுக்குள் நுழையும் நோக்கம் கொண்டன அல்ல. இக்கதைகளின் நோக்கம் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணரும் பெண்ணின் இருவேறு கட்டங்களைச் சொல்வது மட்டுமே. எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய மரப்பாச்சி(2002) தோன்றுதலின் - முலை முளைத்தலின் கிளர்ச்சியைச் சொல்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பின் வந்த குளவி அதன் இழப்பைப் பேசுகிறது. பெண் உடலின் மாற்றங்களை அதன் நுட்பங்களோடும் உடலைப் பேசும் பெண்ணியச் சொல்லாடல்களின் விவாதங்களைக் கதைக்குள் கொண்டுவராமல் அனுபவங்களின் வெளிப்பாடாகக் கதையாக்கிய உமா மகேஸ்வரிக்குப் பெண்ணிய எழுத்துப் பரப்பில் முக்கியமான இடமுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்