நான் வாழும் நகரம்:

பழைமையையும், மாற்றங்களையும் திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்கோடு போடுவது தாமிரபரணி. ஒருவிதத்தில் வற்றாத நதி. எப்போதும் நீர் நகர்ந்து கொண்டேயிருக்கும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்நகரத்திற்கு வந்தபோது அல்வா, ஆறு , கோயில் என்ற மூன்று சொற்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதாக இருந்தது. 1997 கொடியங்குளம் நிகழ்வுக்குப்பின்’,கலவரம்’ என்ற சொல்லையும் அதன் அடையாளச்சொற்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டது. அந்த அடையாளத்தின் தொடர்ச்சியாக மாநாடுகள், கூட்டங்கள் நடக்கும் பரப்பாகவும் ஆனது. வாரந்தோறும். சனி, ஞாயிறுகளில் இலக்கியக்கூட்டங்களுக்கும் உரைப்பொழிவுகளுக்கும் குறைவிருக்காது. அதேபோல் மாதத்திலொன்றுக்குக் குறையாமல் அரசியல் நிகழ்வுகளுக்கும் பஞ்சமிருக்காது. சாதி அரசியலின் களமாகவும் மதத்தின் பிடியிலிருந்து விலகாத இறுக்கத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும் இவ்விரட்டை நகரம் கல்விக்கூடங்களின் தொகுப்பு என்பது சுவையான நகைமுரண்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முன் அம்பேத்கர் உள்வாங்கும் கொள்கையையும் அதன் பரிமாணங்களையும் முன்வைத்தார். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுவரும் மக்களைச் சமூகத்தின் மையநீரோட்டத்தோடு இணைத்துக்கொள்ளும்விதமாக இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டுமென வேண்டினார். அதன்வழியாகத் தன்னெழுச்சிபெறும் படித்து முன்னேறியவர்கள் தங்கள் சமூகத்தின் விடுதலையை முன்னெடுப்பார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் நடப்பதோ அதற்கு மறுதிசையில். நிகழ்கால அரசியல் கட்சிகளும் அதிகார மையங்களும் தனிநபர்களையும் குறியீடுகளையும் உள்வாங்கிக்கொண்டு பெருந்திரள் மக்களை வெளியே தள்ளும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. அம்பேத்கரைக் குறியீடாக்கி உள்வாங்கப் பார்க்கும் போக்கிற்கு இணையாக ஒண்டிவீரனை உள்வாங்கும் போக்கு நடக்கிறது.

நேற்று இரவு தொடங்கி வரிசைகட்டிய பதாகைகள் இன்று காலையில் ஒண்டிவீரனின் நினைவைப்பரப்பின. அப்பதாகைகளில் இடம்பெற்ற படங்கள் முன்வைத்த அரசியல் நிகழ்காலத்தமிழகத்தின் பேரரசியலை நுட்பமாகப் பேசின. ஒருவிதத்தில் உள்வாங்கும் அரசியலின் வெளிப்பாடுதான் என்றாலும் இதன் முகம் மாநில முகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்