கத்தார் : கனவுகளைக் காட்சியாக்கிய கலைஞன்.

நான் அவரது மேடை நிகழ்வை அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டடமேடையில் பார்த்தேன். அப்போது நான் ஆய்வு மாணவன். 1000 பேருக்கு மேல் நாற்காலிகள் போட்டு அமரக்கூடிய அரங்கு அது. ஆனால் அன்று நாற்காலிகள் எல்லாம் நெருக்கி முன்னோக்கி நகர்த்தப்பட்டு உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்னால் இன்னொரு ஆயிரம்பேர் நின்று பார்த்தார்கள். அவ்வளவுபேரும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள். புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுக்க முக்கியமான நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அவரது குழு அழைத்து வரப்பட்டிருந்தது. திறந்தவெளி அரங்குகளில் கட்டண நிகழ்ச்சியாக நடத்தக் கிடைத்த அனுமதி பின்னர் மறுக்கப்பட்ட நிலையில் எல்லா ஊர்களிலும் மூடிய அரங்குகளின் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன
நீண்ட காலம் பெருந்திரளான மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவற விட்டிருந்த கத்தார் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இரண்டாவது நாள் ஐதராபாத் நிஜாம் கல்லூரி மைதானத்தில் நடந்த ஜனநாட்ய மண்டலியின் 19 -வது ஆண்டு விழாக் கலை நிகழ்ச்சியின் போது திரும்பவும் மக்கள் முன்னாள் மேடையேறினார். ஜனநாட்ய மண்டலியின் வழக்கமான உடையில், சிவப்புக் கோடுகள் குறுக்கே ஓடும் கறுப்புப் போர்வையை இடுப்பிலும் மார்பின் குறுக்காகவும் கட்டிக் கொண்டு, இடது கையில் ஓசை எழுப்பும் சிறு கொட்டுமேள வாக்கியம், வலது கையில் ஆயுதம் என ஒப்பனைகளைத் தாங்கி அவர் மேடையேறிப் பாடும் காட்சியைக் காண ஆந்திரத்தின் பல பாகங்களிலிருந்தும் 20,000 பேருக்கு மேல் அந்த மைதானத்தில் குழுமியிருந்ததாக வாரப் பத்தி¢ரிகைகள் செய்திகள் வெளியிட் டிருந்தன. கத்தாரின் மேடை நிகழ்வுப் புகைப்படங்களையும் மக்கள் யுத்தக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் வெளியிட்ட ஆங்கில வாராந்தரி களின் செய்திக் கட்டுரைகள் நக்சலைட்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை விரிவாகப் பேசியிருந்தன.

தொண்ணூறுகளின் தொடக்கம் அது. ஆந்திரத்தில் சென்னாரெட்டி முதல் மந்திரியாக இருந்த போது மாநில அரசின் பெயருக்குக் குந்தகம் விழைவுக்கும் செய்திகளுக்குக் காரணமாக இருந்த நக்சலைட்டு களுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அறிவித்தார். தெலுங்கானா உள்பட்ட வடக்கு ஆந்திர மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த மக்கள் யுத்தக் குழு உள்பட்ட அனைத்து மார்க்சீய லெனினிய அமைப்புக்களின் மீதும் இருந்த தடை ஆணையை நீக்கி உத்தரவிட்டதோடு பேச்சு வார்த்தைக்கான திட்டங்களையும் முன் வைத்தார்.

மாநில அரசின் தாராளவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நக்சலைட் தலைவர்கள் பலரும் தங்களைப் பத்திரிகையாளர்களின் முன்னால் வெளிப்படுத்திக் கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கியிருந்தனர். மக்கள் இசைக் கலைஞர் எனவும் புரட்சியின் பாடகன் எனவும் ஆந்திரத்திலும் அண்டை மாநில இடதுசாரிப் புரட்சிகர சக்திகளிடமும் அறிமுகம் பெற்றிருந்த கத்தாரும் 1990, பிப்ரவரி 18 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தனது தலை மறைவு வாழ்க்கையை முடிவுக் கொண்டு வந்தார். தலைமறைவு வாழ்க் கையின் போது தான் பெற்ற அனுபவங்களை விட அவரது பேச்சில், ஆந்திர மாநிலத்தின் கிராமப் புறங்களில் நிலவும் வறுமை மற்றும் நிலக்கிழார்களின் ஆதிக்க மனப்போக்கு பற்றித் தான் அதிகம் தகவல் இருந்தன. அதற்கு முன்பும் பின்பும் எனப் பதினைந்து தடவைகளுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கத்தார். ஆந்திரக் காடுகளும் கிராமங்களும் மட்டும் அல்லாமல், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் , ஒரிசா என அண்டை மாநிலக் கிராமத்து மக்களோடு காடுகளில் வாழ நேர்ந்த அனுபவங்களும் உண்டு.

அந்தத் தடவை தான் நீண்ட காலம் தலைமறைவாக இருந்த காலம் எனச் சொல்லலாம்.1986 ஆம் ஆண்டு பிரகாசம் மாவட்டம் கரம்சேர் கிராமத்தில் பண்ணையார்களின் அடியாட்கள் தலித் மக்களைத் தாக்கிக் கொலை செய்த நிகழ்வுக்கு எதிராக மக்களைத் திரட்டினார் கத்தார். போராட்டத்தைப் பின்னின்று இயக்கிய மக்கள் யுத்தக் குழுவின் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாகச் செயல் பட்டதாகக் காரணம் காட்டி அவரது வீட்டைச் சோதனையிட்டது காவல் துறை. மக்கள் யுத்தக் குழுவும் தடை செய்யப்பட்டது. காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற் காகத் தலைமறைவான கத்தார் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் வெளியே வராமல் இருந்தார்.



கத்தாரின் மேடை நிகழ்வை ஒரு முறை நேரில் பார்த்த யாரையும் திரும்பவும் ஒரு முறை பார்க்கும்படியும் கேட்கும்படியும் தூண்டும் மேடை நிகழ்வு அது. மக்கள் பிரச்சினைகளைப் பேசும் உள்ளடக்கத்தோடு பாடப்படும் பாடல்களில் பொதுவாக இழையோடும் சோகத்துக்கும், ஆர்ப்பாட்டமான தீர்வுகளுக்கும் மாறான வடிவம் கொண்டவை அவரது பாடல்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளில் அவரது குழு தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்திய நிகழ்வுகளை நேரில் பார்த்து அனுபவத்த சில ஆயிரம் பேர்களில் பல நூறு பேர்களுக்காகவாவது அந்த நினைவுகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். துள்ளிக் குதித்து மேடையில் நுழையும் பாடகர்களின் ஆர்ப்பரிப்பான நுழைவும், அதற் கேற்ற இசைக்கோலமும் சேர்ந்து பார்வையாளர்களை உடனடியாகத் தன் வசப்படுத்தும் தன்மை கொண்டனவாக இருக்கும். மெலிதான தாள ஒலிக்கேற்ப அசைக்கப்படும் தடிமனான கம்பளியுடன் கூடிய உடல்களின் அசைவுகளும், உடம்போடு கூடிய இசைக்கருவிகளின் இயைபும் சேர்ந்து மேடை நிகழ்வைக் களை கட்ட வைத்துத் தன் வசப்படுத்தும் அனுபவம் அது.

மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய அந்தப் பாடல்கள் ஒருவிதத்தில் கேள்வி பதில் பாணியைக் கொண்டவை. இருப்பின் துயரத்தை முன் வைத்துவிட்டு அதற்கான காரணங் களையும், காரண கர்த்தாக் களையும் அடையாளப்படுத்தித் திரும்பவும் பார்வையாளர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் தன்மை கொண்டவை. இரண்டாவதாக எழுப்பும் கேள்விகள் இந்தக் காரணகர்த்தாக்களுக்கு என்ன தண்டனை தருவது என்பதாக அமைய, அதற்குப் பதில் தரும் விதமாக குழுவின் இன்னொரு பகுதி கோபமான குரலில் தண்டனையைச் சொல்லும் வடிவம் எல்லாப் பாடல்களின் அடிப்படை வடிவமாக இருந்தன. இந்த வடிவத்திற்கான இசைப் பின்னணியை ஆந்திரத்தின் பிரபலமான கிராமீயக் கலை களிலிருந்து பெற்றுத்தான் உருவாக் கினார் கத்தார். ஒக்க கதா, வீதி பாகவதம் போன்ற நடனம், பாடல், வசனம் கலந்த வடிவங் களையும், கிராமப்புறத்தெய்வமமான எல்லம்மாவின் கதையைச் சொல்லும் கதைப் பாடல் வடிவத்தையும் தனதாக்கிக் கொண்டிருந்தார்.கலை விரும்பிகள் கழகமாக இருந்து 1972-ல் ஜனநாட்ய மண்டலியாக மாறிய அமைப்பில் சேருவதற்கு முன்பு கத்தார் ஆரம்பித்த அமைப்பின் பெயர் புர்ரகதா. அந்தப் பெயர் ஒரு நாட்டார் கலைவடிவத்தின் பெயர். ஒற்றை இசைக் கருவி யுடன் கதை சொல்லும் பாணியில் பாடிச் செல்லும் நாடோடிப் பாடகர்களின் வடிவம் அது.

விட்டல்ராவ் கத்தார் ஆன கதை ;

புர்ரகதா வடிவத்தை மக்கள் விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்திற்குப் பயன் படுத்தி வந்த கும்மடி விட்டல் ராவ் (பெற்றோர் வைத்த பெயர்) மார்க்சீய லெனிய இயக்கங் களின் பக்கம் வந்தது திடீரென்று நடந்த ஒன்றல்ல; மெல்ல மெல்ல நடந்த ஒன்றுதான். ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் துக்கரான் கிராமத்தின் சேஷையா-லட்சுமம்மாவின் மகனாக 1949-இல் பிறந்த விட்டல்ராவின் இளமைக்கால வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதல்ல. அன்றாடம் செய்யும் பல்வேறுவிதமான வேலைகளில் கிடைக்கும் கூலியில் வாழ்ந்த தலித் குடும்பம் அவருடையது.என்றாலும் அவரது பெற்றோர் அவரது பள்ளிப் படிப்பையும் முடித்து கல்லூரிக்கும் அனுப்பி வைத்தனர். ஜூனியர் கல்லூரியில் புகுமுக வகுப்பிற்குப் பின் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தவருக்குத் தொடர்ந்து செலவு செய்து படிக்க முடியாத நிலை தோன்றிய போது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக வேலை செய்யத் தொடங்கினார். பல்வேறு வேலைகளைச் செய்தார். அத்துடன் பாடும் திறமை தன்னிடம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு இசைக்குழு ஒன்றை அமைத்தார். அந்த அமைப்பின் பெயர் தான் புர்ரகதா என்பது.

புர்ரகதா அமைப்பின் வழியாக விழிப்புணர்வுக் கருத்துக்களைச் சொல்லும் பாணியைக் கற்றுக் கொண்ட அவர் 1969-ல் தனித்தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கான போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் அதன் பெயரை மகாத்மா காந்தி என மாற்றிக் கொண்டு அரசின் களவிளம்பரத் துறையினருக்காகக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சமூக மேம்பாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அப்படியான நிகழ்ச்சியொன்றைக் கண்ட திரைப்பட இயக்குநர் பி.நரசிங்க ராவ் [இந்தியாவில் சமூகப் பிரச்சினை களை அதன் பொறுத்தப் பாட்டுடன் பேசிய மாபூமி, ரங்குலகலா, தாசி, கண் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்] அந்நிகழ்ச்சி யால் கவரப்பட்டு விட்டல்ராவை அணுகிப் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு தங்கள் அமைப்பான கலை விரும்பிகள் கழகம் நடத்தும் பகத்சிங் ஆண்டுவிழாவிற்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சி நடத்திய விட்டல்ராவ் அதன்பின்பு அந்தக் கழகம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவரிடம் நீங்களும் ஏதாவது எழுதி இந்த ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தில் வாசிக்கலாம் என நரசிங்கராவ் கேட்டுக் கொண்டதை ஏற்று ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டினார்.’’ ரிக்சாவை நிறுத்து- ரிக்சாக்காரனே’’ என்று தொடங்கும் அந்த முதல் பாடலே அவரை ஒரு மக்கள் பாடகனாகவும் சமூகப் போராளியாகவும் மாற்றிய திருப்பத்தைச் செய்தது .

ரிக்சாவை நிறுத்து- ரிக்சாக்காரனே!

இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன்.

விடிஞ்சது தொடங்கி ராத்திரி வரை ரிக்சா ஓட்டுறாய்

என்றாலும் உனது வயிறு நெறயலை

எவ்வளவு வியர்வை; எத்தனை ரத்தம்

என்றாலும் உனக்குக் கிடைக்கும் வருமானம் என்ன?

என்று கேட்பதாக அமைந்த அந்தப் பாடல் 1971-ல் எழுதி வாசிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட போது பார்வையாளர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. குறிப்பாக ரிக்சாக்காரர்கள் மத்தியில் அவரைப் பிரபலமான மனிதராக மாற்றியது.

பிற்காலங்களில் அந்தப் பாடலை அவர் பாடி முடித்தவுடன் ரிக்சாக்காரர்கள் தங்கள் வசம் இருந்த பணத்தை மேடை மீது வீசி எறிந்து தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்திய காட்சிகள் பல இடங்களில் நடந்ததுண்டு. தொடர்ந்து கலை விரும்பிகள் கழகத்தின் கூட்டங் களில் தான் எழுதிய பாடல்களைப் பாடிய விட்டல்ராவ், அவற்றைத் தொகுத்து ஒரு பாடல் தொகுப்பாக வெளியிட்ட போது அந்தத் தொகுப்பிற்கு வைத்த பெயர் ‘’கத்தார் ‘’ என்பது. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்த புரட்சிகரக் கட்சியின் பெயர் கதர் . அது தெலுங்கு உச்சரிப்பில் கத்தார் என மாறியது. அந்தப் பெயரில் பாடல் தொகுப்பை வெளியிட்ட பின்பு விட்டல் ராவ் நிகழ்ச்சி நடத்தச் சென்ற இடங்களில் எல்லாம், கத்தார் கூட்டம் வருகிறது என மக்கள் சொல்லத் தொடங்கினர். அதன் காரணமாக விட்டல் ராவும் கத்தார் என்ற பெயராலேயே அறியப்பட்டார். அவர் கலைவிரும்பிகள் கழகத்துடன் தொடர்பு கொள்ளக் காரணமான இயக்குநர் நரசிங்கராவிற்கு மார்க்சீய லெனினியக் கட்சியினருடன் தொடர்பு இருப்பதை அறிந்து இவரும் தன்னை அத்தோடு இணைத்துக் கொண்டார். அதே நேரத்தில் தனது குடும்ப வாழ்க்கையை நடத்த வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கனரா வங்கியின் குமாஸ்தாவாகத் தேர்வு பெற்று ஒன்பது ஆண்டுகள் பணியாற்றவும் செய்தார். 1984 ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டு விலகிய பின் முழுமை யாகத் தன்னை ஜனநாட்ய மண்டலியின் கலைஞனாக ஆக்கிக் கொண்டு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் நடக்கும் இயக்க மேடைகளிலும் பாடி வந்தார்.

பாடகர் மட்டும் அல்ல - தலைவன்; சிந்தனையாளன்

நாலரை ஆண்டுத் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்பு வெளிப்பட்ட கத்தார் மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுடன் சேர்ந்து வேலைகள் செய்து வருகிறார். இந்த தேசத்தில் நக்சலைட் இயக்கத் தினரின் நடவடிக்கைகள் பயங்கரவாதம் சார்ந்தவை என அரசுகள் கருதினால், அவற்றை ஒழிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றிச் சிந்தித்துத்தான் ஆக வேண்டும். அந்தச் சிந்தனை பயங்கர வாதத்திற்கெதிராக அரச பயங்கரவாதத்தை ஏவி, போலி என்கவுண்டர்கள் நடத்தி போராடுபவர்களை அழித்தொழிக்கும் செயலாக இருக்க முடியாது என்று பேச்சிலும் கலை நிகழ்ச்சிகளிலும் தெரிவித்து வருபவர் கத்தார். நக்சலைட்டுகள் முன் வைக்கும் கோரிக்கைகள் மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய பொருளாதாரப் பிரச்சினைகள் என்பதை ஒத்துக் கொள்வதோடு, அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன் வைக்க அவர் தவறுவதில்லை. சாதி, மதம், மொழி, வட்டாரம் எனப் பிரிவினைகள் பேசுவதற்கு வாய்ப்புள்ள புள்ளிகளைத் தவிர்த்து விட்டு உழைக்கும் மக்களின் விடுதலையைச் சாத்தியமாக்கிப் பொதுவுடைமை அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தில் பின் வாங்காத கொள்கையாளராகத் திகழ்ந்து வரும் கலைஞர். அதை நோக்கிய பிரசாரத்தைத் தொடர்ந்து செய்து வரும் கத்தார் அதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கியவர் அல்ல.

அவரது வழிமுறைகளும் நிகழ்ச்சிகளும் துப்பாக்கி முனையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நக்சலைட்டு களின் சித்தாந்தை ஆதரித்துப் பேசிகின்றன; அதனால் அவரைக் கைது செய்ய விரும்பினால் உடனே கைது செய்து விடுவோம் என ஒவ்வொரு அரசாங்கமும் சொன்னாலும், அவரைக் கைது செய்வதை அரசுகள் செய்ததில்லை. ஆனால் ஒருமுறை அவரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.அவரது உடம்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. என்றாலும் அவரது மரணம் நிகழவில்லை.மூன்று குண்டுகளில் இரண்டு நீக்கப் பட்டுவிட்டன; மூன்றாவது குண்டைத் தொட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என மருத்துவர்கள் சொன்னதால் அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டனர். அதற்குப் பிறகு தான் அவரது பெயரைப் ‘படிப்பைப் பாதியில் நிறுத்திய பொறியாளர்’ என்று எழுதி வந்த காவல்துறைக் குறிப்பேடுகள் ‘மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவன்; மாவீரன்’ என மாற்றி எழுதிக் கொண்டன என்பர்.

அமைதிக் குழுவும் பேச்சு வார்த்தைகளும்

தொண்ணூறுகளில் சென்னாரெட்டி அறிவித்தது போலவே அவ்வப்போது ஆந்திரத்தை ஆளும் அரசுகள் நக்சலைட்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வருவதும், நிபந்தனைகள் வைப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 2001 -ல் முதல் மந்திரியாக இருந்த தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு அமைதிக் குழுக்களை ஏற்படுத்தலாம் எனவும், பேச்சு வார்த்தை நடத்தலாம் என அறிவித்த போது நக்சலைட்டுகளின் சார்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட அனுப்பப்பட்ட இருவரில் கத்தாரும் ஒருவராக இருந்தார். இன்னொருவர் புரட்சிகரக் கவிதைகளின் ஆசிரியரான கவி வரவரராவ். அந்தப் பேச்சு வார்த்தையில் மட்டும் அல்ல 2004 -ல் காங்கிரஸ் அரசாங்கம் திரும்பவும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் நக்சலைட்டுகளின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டமூவர் குழுவில் கத்தாரும் இருந்தார். மூன்றாவதாகச் சேர்க்கப்பட்டவர் நாவலாசிரியர் கல்யாண்ராவ்.

அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கூற வந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் காஞ்சா அய்லயா இப்படிச் சொல்லியிருக்கிறார்;

ஆந்திரப் பிரதேச உழைக்கும் மக்களுக்கும் தெலுங்கு மொழியின் இலக்கியப் பிரதிக்கும் தொடர்பை ஏற்படுத்திய முதல் அறிவுஜீவி கத்தார். அந்தத் தொடர்பின் நீட்சி தான் கல்வியாளர்களைத் திரள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையையும் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

/ 08-07-97

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்