கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.