அருவி : விமரிசன நடப்பியலின் வகைமாதிரி
தனது முதல் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக இயக்குவதில் தீவிரம் கவனம் செலுத்துவதில் வெற்றியடைந்த இயக்குநர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் அருவி படத்தின் இயக்குநர் அருண் புருசோத்தமன். அருவி படம் பார்த்துமுடித்தவுடன் நினைவுக்கு வந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதுவரை தான் இயக்கிய படங்களுக்குத் தனது பெயரை ரா. பார்த்திபன் என எழுதிக்காட்டி வந்தவர், ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என நீண்ட பெயரை வைத்திருந்தார். அவர் எப்போதும் புதுமைவிரும்பி என்றாலும், அந்தப் படத்தில் காட்டிய புதுமை, காரணமற்ற புதுமைகளாக இல்லாமல், படத்தின் தேவைக்கேற்ற புதுமையாக இருந்தது.பிரெக்டின் காவியபாணிக் கதைகூற்றுமுறையைத் (Epic Narration) தேடிப் பயன்படுத்தியிருந்த பார்த்திபன், படம் முழுவதும் அதன் அடிப்படைத் தன்மையான விலக்கிவைத்தலும்(Alienation) ஒன்றிணைத்தலும் (Involvement) என்பதைக் கச்சிதமாகக் கையாண்டு படத்தைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவைத்தார். இத்தன்மை காரணமாகப் படத்தின் மையக் கதையோடு தொடர்ந்து பார்வையாளர்கள் விசாரணை நிலையிலேயே ஒன்றிணைந்து விலகினார்கள்.