படைப்பாளுமையின் வெளிப்பாடுகள்: அது ஒரு கனாக்காலம், கஸ்தூரி மான்
அந்த வருடத் தீபாவளிக்கு வருவதாக இருந்த ஐந்து திரைப்படங்களில் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட படங்கள் மூன்று. பாலு மகேந்திராவின் ’அது ஒரு கனாக்காலம்’, லோகித்தாஸின் ’கஸ்தூரிமான்’, சேரனின் ’தவமாய் தவமிருந்து’. இப்படித் திட்டமிடுதலின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இயக்குநரின் அடையாளத்தைச் சொல்லும் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீா்மானம். அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காரணமும் அமைகின்றது. அத்தகைய படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்து. படைப்பாளிகளின் அடையாளத்தோடு வரும் படங்களுக்குத்தான் இந்த ஆபத்து. ஸ்டார்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் ஆகத் துடிக்கும் நடிகா்களின் அடையாளத்தோடு வரும் படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை.