எனது தொடர்வாசிப்புகளில் ஒன்று சாருநிவேதிதாவின் வலைப்பக்கம் தினசரி போய்வருவது எனக்கு வழக்கமில்லை. வாரத்தில் ஒருமுறையாவது சென்று வாசித்துவிட்டு வந்துவிடுவேன். அண்மைக்காலத்தில் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நேற்றைய தேதியிட்டு வந்துள்ள கவிதைகளின் தலைப்புகள்: தோக்யோவில் வாங்கிய ஷூ ஆதலினால் இருள் படிந்த இல்லம் அமிர்தம் வேண்டி நின்றேன்… பரோல் கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்லப்படும் படிமம், உள்ளுறை, குறியீடு என எதற்கும் முக்கியத்துவம் தராமல் எழுதப்படும் நேரடிக்கவிதைகளாக - PLAIN POETRY- இருக்கின்றன. கவிதையின் சொல்லும் பாத்திரமாக இருப்பவரைக் கூட அவர் பூடகமாக்கவில்லை. அவரது புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் இருப்பதுபோலவே அவரே கவிதை சொல்லியாகவும் இருக்கிறார். கேட்கும் இடத்தில் வாசிக்கும் ஒவ்வொருவரும் இருந்துகொள்ளும்படியான வடிவம் இது. தமிழ் மரபில் சங்கப்புறக்கவிதைகளில் - காஞ்சித்திணைக் கவிதைகளின் வடிவம். முதுமொழிக்காஞ்சி, பொருண்மொழிக்காஞ்சி குறிப்பான நிகழ்வுகள் இருக்காது; ஆனால் கவியின் நிகழ்காலத்தை நினைவூட்டும் விதமாக இருக்கும். அதே நேரம் எல்லாக்காலத்திற்கும்...