நெருப்பும் இன்னொரு நெருப்பும்- விழிப்புணர்வின் பெயரில் காமத்தூண்டல்

 Fire - ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு தீபா மேத்தா இயக்கிய படம். 1996 இல் வந்த அந்தப் படத்தின் பெயரைத் தாங்கி தமிழில் இப்போது ஒரு சினிமா வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வந்த அந்த சினிமாவிற்கு அரங்குகளில் நல்ல கூட்டம் . பாண்டிச்சேரி போயிருந்தபோது பார்க்க நினைத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம் முதல் தீயின் காட்சிகளை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் இருக்க வாய்ப்புண்டு என்பதுபோலச் சுவரொட்டிகளும் சமூக ஊடக முன்னோட்டங்களும் இருந்ததைச் சொல்லலாம்.

நெருப்பு, நிலம், நீர் என மும்மைத் தொகுப்பாக தீபா மேத்தா இயக்கிய படவரிசையில் தீ முதல் படம். அதன் மூலக்கதை இந்தியப் புனைகதை ஆசிரியர் இஸ்மத் சுகாயின் சிறுகதை. அந்தச் சினிமாவில் இந்தியத் திரைத்தாரகைகளில் சிறந்த நடிகைகளாகக் கருதப்பட்ட சப்னா ஹாஸ்மியும் நந்திதா தாஸும் நடித்தனர். இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சடங்குகள், சமயநம்பிக்கைகளை விமரிசிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அந்தப்படத்தின் காட்சிகள் காமத்தைத் தூண்டும் நோக்கத்தோடு இருந்தது எனச் சொல்லி அப்போதைய இந்திய அரசாங்கத்தின் தணிக்கைக்குழு தடை செய்தது. அதைவிடவும் அழுத்தமான காமத்தூண்டல் காட்சிகள் இடம் பெற்ற சினிமாக்களைத் தடை செய்யாமல் அனுமதித்த தணிக்கைக் குழு இந்தப்படத்தைத் தடுக்க நினைத்ததற்கு வேறொரு காரணம் இருந்தது. பெண்ணுடல் மீது மோகம் கொள்ளும் இன்னொரு பெண்ணுடல் என்பதான ஒருபால் உறவை இயல்பானதாகத் தீபா மேத்தா காட்டியிருந்தார். அதனாலேயே அந்தத் தடை எனப் பலரும் தணிக்கைக் குழுவினரை விமரிசன செய்து எழுதியது நினைவில் இருக்கிறது. நான் அந்தப் படத்தை ஒரு திரைப்படவிழாவில் பார்த்து எழுதியதும் நினைவில் இருக்கிறது.

தீபா மேத்தாவின் சினிமாவை நினைவூட்டும் விதமாக அதே பெயரை வைத்து, காமத்தைத் தூண்டும் காட்சிகள் நிரம்பிய படம் என்பதை நினைவுபடுத்தியுள்ளார் இயக்குநர். இந்த நெருப்பு (ஃபயர்) சினிமாவை இயக்கிக் கதைசொல்லியாக நடித்துள்ளவர் ஜெ. எஸ். கே. சதீஸ்குமாரே படத்தின் தயாரிப்பாளர். ஒரு குற்றம் எப்படி நடந்தது; காவல் துறை எப்படித்துப்பறிந்தது என்பதுபோலத் திரைக்கதை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பறியும் காவல் அதிகாரியே சொல்லும்விதமாகக் காட்சிகளும் வசனங்களும் அமைந்துள்ளதால், படத்தின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பதாகப் பாவனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்தக் காவல் அதிகாரியில் பேச்சுக்குப் பிறகு காட்சிப்படுத்தப்படும் பெரும்பாலான காட்சிகள் ஆண் - பெண் உறவுகளை நிகழ்த்தும் படுக்கையறைக் காட்சிகளே.

உடலியக்க - பிசியோதெரபிஸ்ட் -மருத்துவரால் ஏமாற்றப்படும் பெண்கள் குறித்த கதைநிகழ்வுகள் என்பதால் ஆண் - பெண் உறவுக்காட்சிகளாக இல்லாமல் உடலியக்க மருத்துவக்காட்சிகளாகவே பெண் உடல்களைக் காட்சிப்படுத்தி மலினமாகப் பார்வையாளர்களுக்குத் தீனியாக்கி இருக்கிறது நெருப்பு. சில ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த பாலாஜி முருகதாஸ் படத்தின் எதிர்நிலை நாயகப்பாத்திரமான - பிசியோ தெரபி மருத்துவராக நடித்துள்ளார். அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த ரக்‌ஷிதா மகாலெட்சுமியும், சுரேஷ் சக்ரவர்த்தியும் முதன்மையாக பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்கள் அல்லாமல் சாக்‌ஷி அகர்வால், காயற்றி, சாந்தினி போன்ற அதிகம் அறிமுகம் இல்லாத பெண்கள் நடிக்கவைக்கப்பட்டுள்ளனர்.


ஒளிப்பதிவு, ஒளியமைப்பு. காட்சிக்கான கட்டடங்கள், இயற்கைச் சூழல், ஒலிப்பதிவு போன்றவற்றில் துல்லியத்தன்மையுடன் செய்யப்பட்டுள்ள படத்தின் நோக்கம், பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்; இல்லையென்றால் பாலியல் ரீதியாக ஏமாற்றப்படும் வாய்ப்புகள் நிரம்பியதாக நமது காலம் இருக்கிறது என்று சொல்வதாகச் சினிமா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்சிகளில் உருவாக்கப்படும் களிப்பூட்டும் தன்மை உண்மையில் ஆண் - பெண் உறவுசார்ந்த காட்சித்துண்டுகளால் நிரப்பப்பட்டுப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கமே அதிகம் நிறைந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளரின்/ இயக்குநரின் நோக்கம் விழிப்புணர்வு உண்டாக்குவது என்பது போலத் தோன்றினாலும் வணிக வெற்றிக்குப் பெண்ணுடலைப் பயன்படுத்தும் எதிர்மறை நோக்கம் கொண்ட படம் இந்த நெருப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

கிராமங்களுக்குத் திரும்புதல் - சொந்த அனுபவங்கள் சார்ந்த பரிசீலனைகள்