படையெடுக்கும் சினிமாச் செயலிகள்

இவ்வகைப் படங்களுக்கெல்லாம் மேற்கத்தியப் படங்களே முன்மாதிரிகள். தனிமனித மூளையில் உருவாகும் சிக்கல்கள் எவ்வகையான குற்றச்செயல்களாக வெளிப்படுகின்றன என்பதை அவற்றோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளோடு விவாதிக்கும் படங்களை எடுப்பார்கள். அதற்காக அதன் ஆழத்திற்குள் சென்று விவாதிக்கும் காட்சிகளும் உரையாடல்களும் இடம்பெறும். ஆனால் இப்போது இணையவழித் திரையிடல்களில் வரும் இந்திய/ தமிழ்ப் படங்கள் அவற்றை மேல்கட்டுமான நிலையில் விவாதித்து நகர்கின்றன.
திகில் படங்கள்
------------------------
ஒருமாதத்திற்கு முன்னால் பெண்மையப் படங்களாகப் பார்க்க வைத்தன இந்தச் செயலிகள். இப்போது குற்ற நிகழ்வுகள்- திகிலூட்டும் கணங்களை மையப்படுத்திய படங்களை வரிசைப்படுத்துகின்றன. இரண்டு நாள் விடுமுறையில் தலைக்கூத்தல் என்ற படத்தைத் தொடர்ந்து ரன் பேபிரன்( ) என ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொண்ட படத்தையும் வசந்தமுல்லை என்ற கவிதைத் தனமான தலைப்புகொண்ட படத்தையும் பார்த்தேன். இவை பொழுதுபோக்கு நோக்கம் கொண்டவை என்றாலும் இவற்றைத் தொடர்ந்து பார்க்கும் நிலையில் பார்வையாள மனநிலைக்குச் சிக்கல் ஏற்படுவது நிச்சயம்.

பணம்; மேலும் பணம்;பணம் தரும் சொகுசு வாழ்க்கை அதனை விடாப் பிடியாக வேலை; வேலை என அலையும் காலத்தை உருவாக்கியிருக்கிறது நமது காலம். அதிலும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஈடுபடும் திறமையான இளைஞர்கள் ஓய்வு, குடும்பத்தினருடன் ஒட்டாமை, வாசிப்பு, பொழுதுபோக்கு என எதிலும் ஈடுபடாமல் பணிச்சுமைப் பண்பாட்டில் மூழ்கிப் போகிறார்கள். இவர்களை எச்சரிக்கும் விதமாக - அழுத்தம் கூடும் பணிகளை மேற்கொள்ளும்போது கவனம் கொள்ள வேண்டிய மருத்துவ அறிவைத் தரும் படமாக வந்துள்ளது வசந்தமுல்லை திரைப்படம். திகிலூட்டும் பேய்மாளிகைப் படங்களின் திரைக்கதை அமைப்போடு கூடிய வசந்தமுல்லையின் திருப்புக் காட்சிகள் குழப்பத்திற்கு மேல் குழப்பமாக அடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தீர்க்கும் கடைசி 15 நிமிட மருத்துவமனைக் காட்சிகள் தான் முந்திய குழப்பங்களைத் தீர்க்கின்றன. பாபி சிம்ஹாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்யா கடைசி 15 நிமிடம் வந்து பார்வையாளர்களுக்கு குழப்பம் தீர்க்கிறார். நாயகியாக நடித்துள்ள புதுமுகம் குழப்பங்களை உள்வாங்கிச் சில நேரங்களில் தவிக்கிறார்.
*********
இதே வகைமையில் தான் ஆர்ஜே பாலாஜி முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘ரன்பேபிரன்’ என்ற படமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜியோடு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்தப் படம் கொலை,தற்கொலை, துரத்தும் மர்ம மனிதர்கள் என்ற முடிச்சுகளால் பின்னப்பட்டுள்ளது. வரப்போகும் சிக்கலின் ஆழம் தெரியாமல் உதவிசெய்து மாட்டிக்கொள்ளும் அப்பாவி வங்கிப்பணியாளர் ஒருவர் தான் தப்பிவிட முடியும் என்ற போதிலும் குற்றவாளிகள் தான் தண்டிக்கப்படவேண்டும்; அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற நிலைபாட்டோடு குற்றத்தின் பின்னணியைத் துப்பறிந்து நிரூபிக்கும் கதை. குற்றம் நடக்கும் இடம் கிறித்தவ சமயத்தினர் நடத்தும் மருத்துவக் கல்லூரி எனவும், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் மனிதர் கிறித்தவப் பாதிரியாராகவும் அக்கல்லூரியின் முதன்மைக் கல்வியாளர் எனவும் காட்டாது பொதுமைப் படுத்தியிருக்க வேண்டும். திறமையான மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு செயல்படும் நேர்மையான மனிதர்களுக்குப் பின்னால் இருக்கும் கறுப்புமனிதர்கள் பாலியல் வல்லுறவு கொள்வதோடு, மருத்துவக் கல்வியை விலைபேசும் குற்றச்செயலிலும் ஈடுபடுகிறார்கள் என நிகழ்காலப் பிரச்சினைகளையும் படத்தில் பேச முயன்றுள்ளனர்.
*******
சினிமாவாயினும் நாடகமாயினும் இலக்கியமாயினும் ஒரேவகையான தயாரிப்புகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது ஆபத்தானது. அதனைப் படங்களைத் தயாரிப்பவர்களும் வெளியிடுபவர்களும் உணர்வதில்லை. பார்வையாளர்களாகிய நாம் தான் தெரிவுசெய்து பார்க்கவேண்டும். காதல், அன்பு, தியாகம் போன்ற அலுப்பூட்டும் பொருண்மை கொண்ட சமூக நடப்புகளை விவாதிக்கும் -பொதுத்தன்மை கொண்ட படங்களைக் கூட அடுத்தடுத்துப் பார்த்துக் கடந்துவிடமுடியும். ஆனால் மனப்பிறழ்வுகள் சார்ந்த குற்றச்செயல்களையும் பாலியல் வல்லுறவுகளையும் காட்சிப்படுத்தும் படங்களைத் தொடர்ந்து பார்ப்பது பார்வையாளர்களின் மனநலனில் பாதிப்பு உண்டாக்கும்.

தலைக்கூத்தல் :அறைகுறைச் சமூகப்புரிதல்


தலைக்கூத்தல் – என்ற தலைப்பில் பிரைமில் இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கத் தொடங்கியபின் அது உருவாக்கிய அலுப்பும், சினிமாவின் அடிப்படைகளை உள்வாங்காத போக்கும் போதும் பார்த்தது என்று சொன்னது. ஆனால் 2019 இல் ‘பாரம்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு தமிழ்மொழிப் பிரிவில் தேசிய விருது வாங்கிய பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம் தான் இப்போது ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் வந்துள்ளது என்று தெரிந்தபோது எப்பாடுபட்டாவது பார்த்துவிடுவது என்று முடிவுசெய்து தொடர்ந்தேன். சமமான இடைவெளியில் நான்கு நாட்களில் பார்த்து முடித்தபோது தேசியவிருதுக்குப் பரிந்துரை செய்பவர்களின் நிலைபற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறந்த நண்பர் அருண்மொழி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது இந்தப் படத்திற்கு விருது வழங்கியது பற்றித்தான் என்றபோது அவரது சினிமாவின் மீதான காதலும் மேதமையும் நினைவுக்கு வந்தது.

தலைக்கூத்தல் என்னும் சமூக நிகழ்வு

தலைக்கூத்தல் – இந்திய/ தமிழ் நாட்டுக்கிராமங்களில் சடங்காக இருக்கிறது. எல்லாச் சடங்குகளுக்குப் பின்னால் சில நம்பிக்கைகள் இருப்பது போல ‘தலைக்கூத்தலு’க்குப் பின்னாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அம்மை நோய் வந்தால், குளிக்க வைக்காமல் குளிர்ச்சியூட்டும் வேம்பில் இலையைப் பரப்பிப் படுக்கையில் கிடத்தி வைத்திருப்பார்கள். அம்மைக் கொப்பளங்கள் மறைந்த நிலையில் தலைக் கூத்துவார்கள். சிறுமி, பருவப்பெண் என்னும் நிலையை அடைந்துவிடும் உடலியல் மாற்றத்தைக் கண்டவுடன் குறிப்பிட்ட நாட்கள் தனியே வைத்து சத்துமிகுந்த உணவுப்பண்டங்களைச் சமைத்துக் கொடுத்தபின்னர், உறவுகள் சூழ ‘தலைக்கூத்தி’ப் புத்தாடை அணிந்து வீட்டுக்குள் சேர்ப்பார்கள். அந்த நிகழ்ச்சி திருமணத்திற்குப் பெண் தயாராக இருக்கிறாள் என்பதின் அறிவிப்பு. பருவத்திற்கு வந்தது தொடங்கி ஒவ்வொரு மாதமும் வெளியேறும் ரத்தப்போக்கின்போது மூன்று நாள் தனித்திருந்து ‘தலைக்கூத்தி’க் கொண்டே பெண் எல்லோரோடும் இணைந்துகொள்வாள். இதுவும் கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.

இவ்வகையான தலைக்கூத்தல் அல்லாமல், குற்றச் செயலொன்றோடு தொடர்புடைய ‘தலைக்கூத்தல்’ ஒன்று உண்டு. வயதானவர்கள்/ நோயாளிகள் மீது செலுத்தப்படும் வன்கொலை அது. நோய்வாய்ப்பெற்ற முதியவர்களுக்கு இனியும் தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியாது என்ற நிலையில்/ பார்த்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் ‘தலைக்கூத்தி முடித்து வைக்கும்’ சடங்கொன்று நடக்கும். குளிர்ச்சியான நீரால் குளிக்கவைத்துக் கட்டிலைவிட்டு இறக்கித் தரையில் போட்டு வைப்பார்கள். கூடுதலாக இளநீர் அல்லது பாலைக் கொடுப்பார்கள். அவற்றைத் தாங்காத உடலிலிருந்து உயிர் பிரிந்துவிடும் என்பது நம்பிக்கையும் நடைமுறையும். ஒருவிதத்தில் நவீன மருத்துவம் முன்வைக்கும் ‘கருணைக்கொலை’ போன்றது.

மேற்கையும் கிழக்கையும் எதிரும்புதிருமாக முன்வைத்துக் கீழைத்தேயப் பண்பாடு -இந்தியப்பண்பாடு மேலானது; சிறப்பானது எனக் காட்டும் போக்கின் வெளிப்பாடாக இந்தப் படம் முன்வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. கருணைக்கொலை போன்ற ஒன்றை இந்தியமனநிலை கொண்ட மகனால் – தந்தை மீது பாசம்கொண்ட தனயனால் ஏற்க முடியாது என்பதை விவாதிக்கும் படமாக பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிப் பரிசைத் தட்டிச் சென்றிருக்கார். அப்போது வைத்த பெயர் ‘பாரம்’. அப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் படத்தைப் பார்த்த நண்பர் அருண்மொழி அப்போதே சொன்னது நினைவில் இருக்கிறது. ‘சினிமாவின் மொழி தெரியாத இயக்குநர்’ இயக்கியபடம்; என்று சொல்லிவிட்டுக் கதைநிகழ்வை விவரித்தார் அருண்மொழி. அப்போது “தேர்வுக்குழுவில் அதேபோல் ஒரு முட்டாள் இருந்திருப்பார்; அந்தப் படம் பேசும் ‘இந்தியமனம்’ என்பதற்காகப் பரிசுக்குப் பரிந்துரைப்பார்” என்று நான் சொன்னேன். அப்போது நாங்கள் பேசிக்கொண்டது தவறல்ல என்பதை இப்போது ‘தலைக்கூத்தல்’ உறுதி செய்கிறது.

********

தனித்தனியான மூன்று கதைகள் தலைக்கூத்தல் என்ற சினிமாவுக்குள் உள்ளன. நினைவுதப்பிக் கண் விழிக்காமல் கிடக்கும் தந்தையைப் பாரமாக நினைக்காமல் கூடவே இருந்து பார்ப்பதற்காகக் கிராமத்திற்கு வந்து தங்கிவிடும் மகனின் -சமுத்திரக்கனி ஏற்றுள்ள பழனியின் கதை மையக்கதை. விபத்தில் ஏற்பட்ட உடல் குறையால் தனது மனைவியோடு உடலுறவு கொள்ள முடியாத நிலையை வெளியே சொல்லமுடியாமலும், அவளின் ஆசையான ஒரு குழந்தைக்குத் தாய் என்ற பதவியைத் தரமுடியாமல் ஊரைவிட்டுக் காணாமல் போகும் பழனியின் நண்பரின் கதை ஒரு கிளைக்கதை. இவ்விருவரோடும் நேரடியாகத் தொடர்பில்லாமல், ஊரில் சலவைத் தொழில் செய்யும் குடும்பத்து இளம்பெண் மீது காதல் ஏற்பட்டு அவளைப் பலியாக்கும் இடைநிலைச் சாதி இளைஞனின் கதை மற்றொன்று. இம்மூன்று கதைகளையும் இணைக்கும் தலைப்பாகப் ‘பாரம்’ என்ற சொல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘தலைக்கூத்தல்’ என்ற சொல்லுக்கு அந்த வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இம்மூன்று கதைக்குள்ளும் ‘தலைக்கூத்தல்’ நிகழ்வை வைத்து விவாதிக்கமுடியும்.ஆனால் இயக்குநர் அதனைச் செய்யவில்லை. மனப்பிறழ்வு கொண்டவனைப் போல ஊரில் திரியும் பேரில்லாத அந்தக் கதாபாத்திரத்தின் நினைவோட்டமாக – மனக்குழப்பத்தின் காரணமாகத் தலைக்கூத்தலை குறியீட்டாக்கிப் பொருத்தமாக அவற்றை இணைத்திருக்கலாம். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தந்தையின் முன் கதையொன்றின் வழியாக இவற்றை இணைத்திருக்கலாம். அதற்கான எந்த வாய்ப்பையும் இயக்குநர் பயன்படுத்தவில்லை.

பேச்சி என்ற தெய்வத்தின் பெயர் கொண்ட சலவைசெய்யும் குடும்பத்துப் பெண்ணுக்கும் இவரது நினைவு தப்பிய மயக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோலக் காட்சிகள் வந்தாலும் என்ன வகையான உறவு என்பது விளக்கப்படவில்லை. பேச்சியோடு பேசித் தனது வயிறு வளர்க்கும் குறிசொல்லும் கதாபாத்திரம் நகைச்சுவைக்காகச் சேர்க்கப்பட்டதுபோல் உருவாக்கப்பட்டுப் பின்னர் தலைக்கூத்தும் சடங்கைச் செய்யும் ஒன்றாக மாற்றுவதில் எந்தவிதத் தர்க்கமும் இல்லை. பழனியின் மனைவியிடம் காம ம் சார்ந்த எதிர்பார்ப்புகொண்ட தீப்பெட்டிக் கம்பெனி மானேஜரோடு எந்தவித மோதலும் காட்டாமல் ஒதுங்கிப் போகும் மனநிலை நிச்சயம் கிராமத்து மனநிலை கிடையாது. இவை எதையும் செய்யாத இயக்குநர் ஒவ்வொரு காட்சிகளை அடுத்தடுத்து அடுக்கும்போது ஒன்றின் தொடர்ச்சி என்பதுபோல ஒன்றில் மேல் ஒன்றாக நிறுத்திக் கலைத்து- சூப்பர் இம்போஸ் செய்து-தொகுத்திருக்கிறார். அப்படித் தொகுத்ததின் நோக்கம் என்னவென்று சரியாகத் துலக்கம் செய்யவில்லை.

ஒற்றைக் கிராமத்தின் எல்லைக்குள் மொத்தக் கதையும் நிகழ்கிறது. கதையின் காட்சிகளுக்காக அந்தக் கிராமத்தின் சில வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அக்கிராமத்தின் தெருக்கள், தோட்டங்கள், மலைகள், குளம், ஆறு, சாலை எனக் காட்சிக்கான பின்னணிகளை உள்வாங்கியுள்ளன. அத்தோடு பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கூடம், தீப்பெட்டிக் கம்பெனி எனக் கொஞ்சம் விரிந்துள்ளது. ஆனால் படத்திற்கான காலப்பின்னணி இதுவென உருவாக்கிக் காட்டப்படவில்லை. ஆடைகள், வீட்டுப்பாத்திரங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றனவற்றைக் கொண்டு கால் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பின்னணி என்று யூகிக்க முடிகிறது.

கால் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்நாட்டுக் கிராமத்தின் இருப்பை இன்றைய சினிமாவாக வைக்கும்போது எழும் கேள்விகள் எதனையும் இயக்குநர் எழுப்பிக்கொள்ளவில்லை. வணிக சினிமாவில் வெற்றிபெற நினைக்கும் இயக்குநர்கள் அதைத் தவறாது செய்கிறார்கள். ஆனால் ஒரு கலைத்தன்மை கொண்ட – சமூக இருப்பைக் காட்டும் சினிமா இயக்குநர் அப்படியொரு கேள்வியை எழுப்பி விவாதிக்கவேண்டியது அடிப்படையான கலை நோக்கு என்பதைக் கூடப் புரிந்திருக்கவில்லை. அந்தப் புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்ட சினிமாவுக்கு அந்த ஆண்டின் சிறந்த சினிமா என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சினிமாவுக்கு நேரிடும் விபத்துகள் என்று ஒதுங்கிப்போகவேண்டியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்