அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன

இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன்.
அப்படித்தான் மாணவிகள் மட்டும் படிக்கும் அந்தக் கல்லூரியின் முகாமிற்குச் சென்றேன். நான் சென்றது ஒன்பதாவது நாள். நாளை பத்தாவது நாள். அத்துடன் இந்த நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முடிந்துவிடும். மாணவிகள் கல்லூரிக்குச் சென்று பெரும் தொகையான மாணவத்திரளுக்குள் கலந்துவிடுவார்கள்; அதே வகுப்பறையில்- அதேஆய்வுக்கூடங்களில்- அதே ஆசிரியர் – அவர்களை சந்திக்க வேண்டிய கட்டாயங்களிலிருந்து மாணவிகள் தப்பிவிட முடியாது.

இந்தப் பத்து நாட்களை நினைத்துக் கொண்டு கண்கள் விரிய மற்ற மாணவியர்களிடம் சில மாணவிகளாவது கதைகள் பேசக்கூடும். இந்த பத்து நாள் அனுபவம் அவளுக்குள் விரித்திருக்கும் மதில்களற்ற வகுப்பறைகளும் சொற்பொழிவுகளற்ற பாடங்களும் சொல்லிச்சொல்லி மகிழத்தக்கன என்று உணரக்கூடும்; நினைக்க வைக்கும்.

வீடுகளை விட்டுவிட்டு முகாமில் தங்கியிருக்கும் அவர்களுக்கு உரையாற்றும்படி அழைத்துச் செல்லப்பட்டிருந்த நான் உரையாடலைத் தொடங்கினேன். உரைக்குப்பதில் உரையாடல். மாணவிகள் முதலில் தயங்கினர். புதிதான ஓர் ஆணுடன் பெண்கள் பேசுவது தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா. அவர் அவர்களைப் போல இரண்டு மடங்கு வயதுகொண்ட பெரியவராக இருந்தாலும் ஆண் என்பது அல்லவா? அவரோடு பேசுவதை நமது சமூகம் எப்போது அனுமதித்தது.

எப்படியோ தொடங்கிவிட்டோம். தொடங்கிய பிறகு எங்கே நிறுத்துவது என்று எனக்கும் தெரியவில்லை. அவர்களுக்கும் தெரியவில்லை. பெண்களைப் பற்றி – ஆண்களைப் பற்றி, - இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் பற்றி – அதற்கு முந்திய நட்பு பற்றி – காதல் பற்றி - இவை பற்றியெல்லாம் நமது சினிமாக்கள் உருவாக்கியிருக்கும் கற்பிதம் பற்றி- என நீண்ட உரையாடல்கள்.. இறுதியாக அந்த ஊரைப்பற்றி வந்தது

கன்னியாகுமரியிலிருந்து அரபிக்கடலாக மாறிக்கொள்ளும் கடலின் கரையில் இருக்கும் பதிகள், விளைகளில் ஒன்று அந்தக்கிராமம். அறுநூறுக்குள் மக்கள்தொகை. முக்கிய தொழில் மீன் பிடிப்பது. பசு மாடுகள் வளர்ப்பது. அவை தரும் பாலை பக்கத்தில் உள்ளது புத்தளம் போன்ற சிறு நகரங்களுக்கும், நாகர்கோயில் போன்ற பெரு நகரத்திற்கு அனுப்பி தரப்படுவதின் அவர்களது வாழ்க்கைத் தேவை தீர்மானிக்கப்படுகின்றது அவற்றை எடுத்துச் செல்ல காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பேருந்துகள் வருகின்றன. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும் குழந்தைகளுக்கு உதவாத நேரத்தில் வந்து போகின்றன

அடர்ந்த தென்னந்தோப்புகளுக்கு இடையே இடம் விட்டு இடம் விட்டு தனித்தனியாக ஓட்டு வீடுகளும் கான்கிரீட் வீடுகளும் என அழகான அமைதியான ஊர். பாரதி பார்த்திருந்தால், கண்ணில் விரியும் கடலின் நீளமும் வானத்தின் நீலமும் சந்திக்கும் இந்த ஊரில்தான் காணி நிலம் வேண்டும் என்று பாடி இருக்கக்கூடும்.உரையாடலின்போது ஒரு மாணவி எழுந்து, “இந்த ஊரில் உள்ள நாற்பதுகான்கிரீட் வீடுகளில் ஒன்று கூட இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமில்லை” என்று சொன்னபோது நான் மாணவன் ஆனேன். அவள் ஆசிரியை ஆனாள்.

இங்க இருக்கிற ஓட்டு வீடுகளும் குடிசைகளும் தான் இந்த ஊர்க்காரங்கது. கான்கிரீட் வீடுகளோட சொந்தக்காரங்க பலர் நாகர்கோவில், சென்னை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் என நகரங்களில் வாழ்கிறார்களாம். அவர்கள் வசதியானவர்கள். குடும்பத்தோட ஒரு வாரம் பத்து நாள் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம்; மற்ற நாட்களில் பெரிதாக பூட்டு தொங்கிக் கொண்டிருக்க, காவல் காக்க இந்த ஊரில் யாருக்காவது சம்பளம் தரப்படும்

அதனைத் தொடர்ந்து இன்னொரு மாணவிவேறு விதமாகச் சொன்னாள். பல வீடுகளின் சாவிகள் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜுகளில் இருக்கின்றன. குடும்பத்தோட அமைதியாக வந்து தங்கிவிட்டுப் போகும் மனிதர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. குடும்பங்கள் மட்டுமே வருகின்றன. வருகின்ற அவர்களின் செயல்பாடுகள் முகச்சுளிப்பை அளிக்கின்றன. வருகின்றவர்கள் மீது ஊரில் உள்ளவர்கள் கோபமாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு வேறு ஒரு காரணத்தையும் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வந்து தங்கி விட்டுப் போகும் கூட்டத்தில் பெண்களில் சிலர் திரும்பத் திரும்ப வேறு ஆண்களோடு வந்து தங்கி விட்டுப் போகிறார்கள். குடும்பப்பாங்கான விபச்சார விடுதிகளாக அந்த நவீன மோஸ்தர் கான்கிரீட் வீடுகள் அந்தப் பதியில் வளர்ந்து விட்டன என்ற வருத்தம் அந்த ஊர்க்காரர்களுக்கு

வசதியானவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கடற்கரை வீடுகள் கட்டித்தரும் உலகமயப் பொருளாதாரத்தில் மிக முக்கிய விளைவை நேரில் கண்ட மாணவிகளுக்கு அதிர்ச்சிகள் கிடைத்திருக்கலாம். மாலை வேளைகளில் மாணவிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படவில்லை

இன்னும் சில வருடங்களில் அந்த கிராமம் உருவம் மாறக்கூடும். மீன் பிடித்தவர்களும் பசுமாடு வளர்ப்பவர்களும் வரும் பயணிகளுக்கு இடையூறு செய்கின்றனர் என்று சொல்லி இடம்பெயர்த்து விடலாம். பேருந்து வசதி இல்லாத அந்தப் பதிகளுக்கும் விளைகளுக்கும் கண்டெஸ்ஸா கார்களும் டாடா சுமோக்களும், அல்மர்டா வேன்களும் வந்துபோகின்றன. சாலைகள் போடப்படாமலேயே பன்னாட்டு வண்ணத் தொலைக்காட்சி அலைவரிசை களும் அந்த வீடுகளுக்குள் வந்து விட்டன.

வளர்ந்துவந்த பொருளாதாரத்தில் இவை நாகரிகச் சின்னங்கள். இந்த இருபது ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கின்றன என ஓரெட்டுப் போகவேண்டும். அதற்கு முதல் நிபந்தனையாக கரோனா முடிவுக்கு வரவேண்டும். சுற்றுலா ஊக்குவிக்கப்படவேண்டும். உரசிக்கொள்ளும் உடல்களால் நோய்த்தொற்று அபாயம் இல்லை என்று மருத்துவம் உறுதி அளிக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்