திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா


திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள்
தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே,அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் எனப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்றமுடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல்
இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா? ரசிக்கலாமா..?
தீபாவளிக்கு வந்த ஐந்து படங்களில் ...........  மட்டுமே நிற்கப் போகிறது. மற்றதெல்லாம் பணால்.. இது ஒருவகை விமரிசனக்குரல்.

1) --------- 2) ---------3)--------- 4) ------ 5) ------ 6)------ 7)-------- 8)--------- 9)-------- 10)-----இது இந்தவாரத்து வரிசை. அடுத்தவாரம் வரும் புதுவரவோடு அடுத்தவாரம் சந்திப்போம். இதுவும் ஒருவிமரிசனமுறை. எத்தனை நாளைக்குத்தான் இதேமாவு..தேசம்... பாதுகாப்பு.. தீவிரவாதம்.மீட்டெடுப்பு.காதல், திருடந்போலீஸ்...  ப்ளீஸ் விட்டுவிடுங்களேன். இந்தக் கூற்றும் விமரிசனக்கூற்றுத்தான்.    'அய்யோ, ?’  “...ச்சீய்." ’சூப்பர்’ இவைகளும்கூட விமரிசனக் குரல்கள் தான்.
இந்தக் குரல்களோடு சேர்ந்து தமிழ்ச் சினிமாவை விமரிசனம் செய்யலாமா...?
’அடுத்த சூப்பர் ஸ்டார் தயார். பெட்டி நிறையப் பணம் வைத்திருப்பவர்கள் அவர் வீட்டுக் கதவைத் தட்டவேண்டியது தான்’.
“கண்களை மூடிக்கொள்ளுங்கள். கனவில் அப்பொழுது தானே அவர் வருவார். ஆம் அடுத்த சாக்லேட் பேபி வந்தாச்சு”.
”தமிழர்கள் பாடு கொண்டாட்டம்தான். மலையாளத்திலிருந்து ஒரு மல்கோவாவும், குஜராத்திலிருந்து ஒரு பேல்பூரியும் இறக்குமதி இருக்கின்றன” திகட்டும்வரை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்தக்கூற்றுக்கள் சினிமாவைக் காணச் செல்பவருக்கு வழி சொல்லும் கூற்றுகள்.  இத்தகைய கூற்றுகள் சினிமாவின் பார்வையாளனை என்னவாக நினைக்கின்றன.
அவன் கலைஞனா.? தொழில்நுட்ப நிபுணனா..?ரசிகனா..?
தொண்டனா..வெறும் பார்வையாளனா.?
அல்லது சமூகஉயிரியா..?
அவனது தன்னிலை என்ன?
ஒரு படத்தின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது..?
உருவாக்கத்தில் பங்கேற்பவர்கள் யார்..? யார்..?
அவர்களது நோக்கங்கள் என்னென்ன..?
சினிமாவிற்கும் நடிகர்களுக்கும் என்ன உறவு..?
சினிமாவிற்கும் அரசியலுக்கும் என்ன உறவு..?
சினிமா கலையா..? தொழில்நுட்பமா..?வணிகமா..?
ஆக்கசக்தியா..? அழிவுசக்தியா..?
இப்படிப் பலகேள்விகள் உண்டு. பலவிடைகளும் உண்டு.
"எழுதிய கவிதையையே மறுபடியும் மாற்றி எழுதுவதில் இயக்குநர் --------- சமர்த்தர்.அவரது இந்தப் புதுவரவும் அப்படித்தான். ஆனால்  பழைய கவிதை; இருப்பதும் பழைய மொந்தையில்."- இது ஒரு தமிழில் அதிகம் விற்பனையாகும் வாரப்பத்திரிகை சினிமா ஒன்றிற்கு எழுதிய ஒன்னரைப் பக்க விமரிசனக்குறிப்பின் கடைசி வரிகள். இந்த வரிகளின் நோக்கம் அந்தச்சினிமாவை எல்லோரும் பார்த்தே ஆகவேண்டும் என்பதல்ல.அதே நேரத்தில் பார்க்கவே கூடாத படம் என்றும் சொல்லவில்லை.
"நடிகை ______கம்பீரமாக் உட்கார்ந்திருந்தார்.முகத்தில் களை கூடியிருக்கிறது.நடிப்புக் களையும்தான். எல்லாம் அந்த இயக்குநரின் கைவண்ணம்(!) ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இனி சும்மா ஆடிவிட்டுப் போகும் கிளாமர் பொம்மையாக வந்துவிட்டுப் போக முடியாது. அவர் திரும்பக் கூப்பிட்டுக் கால்வண்ணத்தைக் காட்டிவிடுவார்(?)
இந்த வரிகள் தமிழ் மக்களின் நாடித்துடிப்பைப் பிடித்துச் சொல்லும் பிரபல சமூக அரசியல் பத்திரிகை ஒன்றில் இடம் பெற்றுள்ள வரிகள். இந்த வரிகளில் ஏற்கனவே வந்து ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பற்றிய விமரிசனக் குறிப்பும் அதில் நடித்திருந்த நடிகைக்கும் அவரை இயக்கிய இயக்குநருக்கும் அளவான பாராட்டும் ,அவ்விருவருக்கும் இடையே இருப்பதாக நம்பப்படும் நட்புரீதியான உறவைப் பற்றிய குறிப்பும் வெளிப்படுகின்றன.
தமிழ்த் திரைப்படத்துறையின் மீதான இவ்வகைப்பட்ட குறிப்புக்களை தமிழ் நாட்டின் தலைநகரத்திலிருந்து வரும் வாராந்தரிகள் மட்டுமல்லபெருநகரங்களிலிருந்து வரும் தினசரிகளிலும் நாம் வாசித்திருக்கிறோம். திரைப்பட விமர்சனம், திரையுலகச் செய்திகள் என்கின்ற அளவில் தமிழ்ப் பத்திரிகைகளில் நாள்தோறும் சினிமாவைப்பற்றி ஏராளமாகவும் தாராளமாகவும் எழுதப்படுகின்றன.இந்த எழுத்துக்கள் எல்லாம் தமிழ்ச் சினிமாவைப் பற்றிய  ஆக்கபூர்வமான ஆய்வுக்குறிப்புக்கள் எனக் கருதத்தக்கனவா?
ஓரளவு கருதத்தக்கன என்றுதான் சொல்லவேண்டும்.ஆனால் இவையே திரைப்படங்கள் பற்றிய திறனாய்வு ஆகுமா என்றால்..? ஆகாது என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய குறிப்புகள், அந்த வாசகனுக்கு திரைப்படத்தைப் பார்க்கலாமா ?வேண்டாமா?என்பதில் உதவி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது நோக்கம் திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்குள்ள பொறுப்பைச் சுட்டிக்காட்டுவது.இவ்விரு நோக்கங்களும் ஒரு திறனாய்வில் வெளிப்படவேண்டியனதான் என்றாலும் நோக்கங்கள் மட்டுமே திறனாய்வு ஆகிவிடாது.
திறனாய்வு என்னும் சொல், கலை இலக்கியம் சார்ந்த ஒருசொல்லாகக் கருதப்பட்டாலும் திறனாய்வுப் பணி கலை இலக்கியம் அல்லாத பிற அறிவுத்துறைகளிலும், நடைமுறை வாழ்க்கையிலும் கணந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கலை இலக்கியத்துறையினர் மட்டுமே  அதற்கான விதிகளையும் வரையறைகளையும் நோக்கங்களையும் உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் திறனாய்வு என்ற சொல்லைக் கலை இலக்கியத்துறையின் சொல்லாக ஆக்கிக் கொள்ளவும் செய்துள்ளனர். இந்தப் பின்னணியில் சினிமாவைத்திறனாய்வு செய்வதற்கான விதிகளும் வரையறைகளும் நோக்கங்களும் என்ன என்று கேட்டுக்கொள்ளலாம்.
திறனாய்வு, தன் முன்னிற்கும் ஒன்றை என்னவாகக் கருதுகின்றது என்பது மிகமுக்கியம். கவிதை,கதை, நடனம்,நாடகம், ஓவியம்,சிற்பம், இசை,பாட்டு எனப்பிரித்துச் சொல்வதற்குக் காரணங்கள் அந்தந்தப் படைப்புகளுக்குள் மட்டுமே இருப்பதாக நம்ப வேண்டியதில்லை. படைப்பாளி,படைப்புமனம், படைப்புவகை, படைப்பு நோக்கம் என்பதாகச் செயல்படும் கூறுகள் படைப்புக்குள்ளும் இருக்கின்றன; வெளியிலும் இருக்கின்றன. படைப்புச் செயலில் ஈடுபடும்போது உணரப்படுகின்றன; ஈடுபடாத நிலையிலும் உணரப்படுகின்றன. படைப்புக்கலை நம்முன்னே எழுத்துக்கலை, பார்வைக்கலை, கேட்புக்கலை என்பனவாக இருக்கின்றன.இவைகளெல்லாம் உள்ளிணைந்த சேர்மக்கலை என்ற ஒன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இப்பிரிப்புகளெல்லாம் அவைகளை நுகர்பவர்களின் புலன்களை  மையப்படுத்திய பிரிப்புக்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
திரைப்படம் என்பது என்ன?
ஒரு திரைப்படம் அதன் நுகர்வோருக்குத் தந்துள்ள பெயர் பார்வையாளர் (Spectator). அந்த வகையில் அது தன்னை ஒரு பார்வைக்கலை(Visual)யாகக் காட்டிக் கொள்ள விரும்பியுள்ளது. ஆனால் திரைப்படம் வெறும் பார்வைக் கலை மட்டும் அல்ல;அதனை முழுமையாக நுகரக் கண்ணிற்கு நிகராகச் செவியும் அவசியம். அதேபோல் அதன் படைப்பாக்கத் தன்மையும் பிற கலைகளிலிருந்து முற்றிலும் வேறானது.தனிமனிதர்களின் படைப்பாக்கத் தன்மையிலிருந்து நாடகக் கலையே, கூட்டுக்கலையாக மாறத் திரைப்படம் தொழில் நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு ஒரு சேர்மக்கலையாக நிற்கிறது.
தொடக்ககாலத்தில் உள்வாங்கிய தொழில் நுட்பத்தோடு நிற்காமல் அத்துறையில் புதிதுபுதிதாக வரும் நுணுக்கங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றதாகவும், தனக்கேயுரியதாகப் புதிய தொழில்நுட்பம் தேவையென்பதை வலியுறுத்துவதாகவும் இருக்கிறது. இந்த அம்சம்தான் திரைப்படத்திற்குக் கலையென்ற பரிமாணத்திற்கும் கூடுதலாக இன்னொரு பரிமாணத்தையும் தந்துள்ளது. பார்வையாளர்களிடம் திரைப் படத்தால் தகவல்களைச் சேர்க்கவும்  கருத்துக்களை  உருவாக்கவும் இயலும் என்பதால் அது ஊடகம் என்ற இன்னொரு பிரிவுக்குள்ளும் நுழைந்துகொள்கிறது. எண்ணிக்கை யிலடங்கா மனிதர்களை ஒரே நேரத்தில் சந்திக்கும் சாத்தியம் அதற்கு உண்டு என்பதால் வெகுமக்கள் ஊடகமாகவும் ஆகியுள்ளது.
படைப்பாளி,பார்வையாளர் அல்லது நுகர்வோர், படைப்பாக்கமுறைகள், அதில் செயல்படும் மனிதர்கள் முதலானவற்றை மனதில்கொண்டு சினிமாவை கலை மற்றும் ஊடகம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. அதற்கு இன்னொரு முக்கிய பரிமாணமும் உண்டு. கச்சாப்பொருட்கள் மற்றும் கருவிகள், மூளை மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளிகள், சம்பளம் மற்றும் கூலி,முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், வெளியீடுகள் மற்றும் விளம்பரங்கள், மூலதனம் மற்றும் லாபம் சுரண்டல் மற்றும் இழப்பு என விரியும் இந்தப் பரிமாணம் திரைப்படத்தை ஒரு உற்பத்திப் பொருளாக மட்டும் கருதுகிறது. அதன் காரணமாக அதன் தயாரிப்புப் பணிகள் ஒரு தொழிற்சாலைப் பணியாகக் கருதப்படுகிறது. ஆனால் அந்தத் தொழிற்சாலை வெறும் திரைப்படங்களை மட்டும் உற்பத்தி செய்து பார்வையாளனிடம் தருவதில்லை. காட்சிகளாக விரியும் பிம்பங்களின் வழியே கனவுகளையும் உற்பத்தி செய்கிறது. ஆம் திரைப்படத்துறை  ஒரு கனவுத் தொழிற்சாலையாகவும் இருக்கிறது. ஆகவே,இந்த மூன்று பரிமாணங்களையும் -கலை, ஊடகம், வணிகம்சார் தொழில் என்ற மூன்றையும் உள்வாங்கிக் கொள்ளாத ஒரு திறனாய்வு, திரைப்படம் பற்றிய திறனாய்வாக ஆகமுடியாது.
தமிழில் சினிமா திறனாய்வு செய்யப்பட்ட கதை:
ஆனந்தவிகடன், குமுதம் ,குங்குமம், இந்தியா டுடே போன்ற பொதுப் பத்திரிகைகளிலும், திரைப்படத்துறை சார்ந்த இதழ்களிலும் இணைய இதழ்களிலும் முகநூல் குறிப்புகளிலும் அவ்வப்போது வரும் விரிவான கட்டுரைகளிலும் கூட அத்தொழில் காப்பாற்றப் படவேண்டும் என்ற விருப்பம்தான் அதிகம் உண்டு. ஏன் திரைப்படங்கள் தோல்வியடைகின்றன; அதைத் தடுப்பதற்குத் திரைப்படத்துறையினர் செய்யவேண்டியன எவையெவையென விரிவாக எழுதி ஆலோசனை வழங்குகின்றன. அல்லது தொடர்ந்து படங்கள் வெற்றியடைந்தால் அதற்கான காரணங்கள் என்ன எனக்கண்டறிந்து பாராட்டுகின்றன. இவற்றையெல்லாம் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அதன் பின்னணியில் சந்தையின் மதிப்பீடுகளும் ஏற்ற இறக்கங்களும் இருப்பது புரியவரும்.
இந்தப்போக்கிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிறுபத்திரிகைக்காரர்களுக்கும் கல்வித்துறைப்பட்டங்களுக்கும் தமிழ்ச்சினிமா சரியான கலையாக மட்டும் இருக்கவேண்டும் என்பதுதான் விருப்பம். இருதரப்பாருக்கும் ஒரேவிருப்பம் என்று சொன்னாலும் சினிமாவைப்பற்றிய பார்வைக்கோணத்தில் வேறுபாடுகள் உண்டு.
கல்வித்துறைப்பட்டங்களுக்காக ஆய்வு செய்பவர்கள் திரைப்படத்தை இலக்கியத்திலிருந்து உருவாகும் மாற்று வடிவமாகக் கருதி இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் அதே ஆய்வுமுறையியலையும் நுட்பங்களையும் பயன்படுத்திவருகின்றனர்.திரைப்படமாக ஆக்கப்பட்ட நாவல்கள், திரைப்படமும் நாவலும் போன்ற தலைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வேடுகளை வாசிக்கும் வாய்ப்புக்கிடைத்தவர்கள் இதனை உணர்ந்திருக்கக் கூடும். இத்தகைய ஆய்வேடுகளும் கட்டுரைகளும் இலக்கியப்பிரதியின் ஆதரவுக்குரலாக நின்று திரைப்படத்தைக் குறைகூறும் வேலையைத்தொடர்ந்து செய்துவருகின்றன. இந்த ஆய்வுகள் சினிமாவைத் தனித்தவொரு கலையாகக்கூட நினைப்பதில்லை; இலக்கியப்பிரதியின் நீட்சியாகவே கருதுகின்றன.
இங்கு சிறுபத்திரிகைகளின் தொடக்கக்காலக் கட்டுரைகள் -1990-வரை எழுதப்பட்ட கட்டுரைகள்- சினிமாவை இலக்கியத்தின் நீட்சியாகக் கருதவில்லை என்பதைச் சுட்டிச்சொல்லவேண்டும். அதற்கு மாறாகத் தனித்த இலக்கணங்களும் அழகியலும் கொண்ட ஒருகலையாக மட்டும் கருதும் போக்கு காணப்பட்டது. குறிப்பாக யதார்த்தவாத சினிமாவின் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்ட இவர்களே தமிழ்நாட்டில் திரைப்படச் சங்கம், அதற்கான இயக்கம், அவற்றை முன்னெடுப்பதற்கான சிற்றிதழ்கள் எனச் செயல்பட்டனர். இவர்களும் சரி, திரைப்படங்களை ஆய்வு செய்ய விரும்பிய கல்வித்துறை ஆய்வாளர்களும்சரி திரைப்படத்திற்கும் அதன் பார்வையாளர்களுக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றிப் பேசவேண்டும் எனக்கருதியதில்லை. என்றாலும் தமிழ்ச் சினிமாவை வரலாற்று நோக்கில் எழுதிப்பார்த்த அறந்தை நாராயணன் மற்றும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்களின் முயற்சிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியன.
இப்போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட போக்கு 1980-களின் பின்பாதியில் வெளிப்படத்தொடங்கின.
இனி என்ற இதழில்வெளியான கட்டுரைகள் அதுவரைத் தமிழில் சினிமாவைப் பற்றி எழுதிய எழுத்துக்களிலிருந்து மாறுபட்டதாக வந்தன. சினிமாவைத் தனியான ஒரு கலையாக மட்டும் பார்க்கும் பார்வையிலிருந்து விலகி, வாசகனிடம் அச்சினிமா எத்தகைய நம்பிக்கைகளை உருவாக்க முயல்கின்றன; அதற்காக என்னென்ன உத்திகள், வண்ணங்கள், கோணங்கள், எடுத்துரைப்பு முறைகள், இசைக்குறிப்புகள் போன்றன பயன்படுத்தப் பட்டுள்ளன என்று பேசின. ஆனால் அது தொடரப்படவில்லை. ஒரு பத்தாண்டு இடைவெளிக்குப்பின் காத்திரமான அரசியல், சமூக பின்புலத்துடன் 1990-களில் ஊடகம், நிறப்பிரிகை, சுபமங்களா, ஆய்வு போன்ற இதழ்களில் அதன் தொடர்ச்சி வெளிப்பட்டது. இன்று திரைப்படத்தைப் பற்றிய திறனாய்வு-அல்லது சொல்லாடல்- என்பன இத்தகைய கட்டுரைகளாகவே உள்ளன. தீராநதி, காலச்சுவடு, தீம்தரிகிட, கணையாழி, உயிர்மை, போன்ற அச்சிதழ்களும்,பல்வேறு இணையத்தமிழ் இதழ்களும் வெளியிட்டுவரும் கட்டுரைகளும் அதனையெழுதியவர்களும் தமிழ்ச்சினிமாவைப் புதுவிதமாகக் காட்ட முயன்று வருகின்றனர்.
2000-க்குப்பின் தீவிரமான சமூக, அரசியல், பொருளாதாரச் சிந்தனைகள் புதியபுதிய கொள்கைகளின் வெளிச்சத்தில் விவாதிக்கப்பட்டன. மாற்று அரசியல்,மாற்றுச்சமூகம் எனப்பேசுகிறவர்கள் அதற்கான முன் மாதிரிகளை மட்டும் முன் வைத்தால் போதாது; நடப்பு அரசியலையும் சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என நம்பத் தொடங்கினர். நடப்பு அரசியலும் நடப்புச்சமூகமும் வெகுமக்கள் சார்ந்தன என்பதால் இயல்பாகவே வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ள அனைத்தும் -வாய்மொழி,எழுத்து முதலான இலக்கியங்கள், நிகழ்த்துக்கலை, சலனப்படங்கள் முதலான கூட்டுக்கலைகள், வீட்டுபயோகப் பொருட்கள், தகவல் தொடர்புசாதனங்கள், ஊடகங்கள், இவைகளுக்கான விளம்பரங்கள் என அனைத்தும் கவனத்துக்குரிய ஆய்வுப் பொருள்களாகின. இப்படி ஆக்கியதின் பின்னணியில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் சிந்தனைத் தளத்தில் புதிய அலைகளையெழுப்பிய அமைப்பியல்வாதத்திற்கும் மாற்றுக்களைப் பற்றிய முன்மொழிதலைத் தொடர்ந்து தவிர்த்து வருகிற பின் -நவீனத்திற்கும் முக்கிய பங்குண்டு. அமைப்பியல்வாதமும் புதிய மார்க்சீயர்களும் பண்பாட்டு ஆய்வுகளின் போக்கை மாற்றியுள்ளனர் என்பதைப்பேச வந்த கார்நெல் பல்கலைக் கழகப் பேராசிரியரும் திறனாய்வாளருமான ஜோனதான் கல்லர் சொல்வதை இங்கே காணலாம்:
"பிரெஞ்சுமொழிப்பேராசிரியர்கள் சிகரெட்டுகளைப் பற்றியும் அமெரிக்கர்களுக்கு உள்ள கொழுப்பு மோகத்தையும் பற்றிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரில் பாண்டித்தியம் பெற்றிருந்தவர்கள் உடலை மையப்படுத்திய பாலின ஆய்வுகளுக்குள் நுழைந்துவிட்டனர்.நடப்பியல் எழுத்துக்களில் ஈடுபாடு காட்டிவந்த பேராசிரியர்கள் தொலைக்காட்சித் தொடர்களைப்பற்றிய ஆய்வுப் பணிகளுக்குள் புகுந்து விட்டனர்.என்ன நடந்து கொண்டிருக்கிறது.?பல்கலைக்கழகங்களில்..? 1990-களில் கலை இலக்கியத் துறைகளில் நடக்கும் பண்பாட்டு ஆய்வுகள் ஒரு பெரும் விலகலை மேற்கொண்டு விட்டன. 'மில்டனை' தள்ளி வைத்து விட்டு 'மடோனா'வைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர்; 'ஷேக்ஸ்பியரை'த் தூக்கிக்கடாசி விட்டு 'ஷோப் ஓபரா'வுக்குள் புகுந்து விட்டனர்."
இலக்கியத்தைப் படிப்பதற்கான கொள்கைகள் வேறு புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது வரும் கொள்கைகளை இலக்கியத்தைப் படிப்பதற்கான கொள்கைகள் என்ற எல்லைக்குள் சுருக்கி விடவும் முடியாது.கொள்கைகள் என்பன ஒருவிதத்தில் அனுபவங்களின் குறியீடுகள்தான்;அதாவது உற்பத்தி/ தயாரிப்பு மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதலின் அனுபவங்கள் தான். சுருக்கமாகச்சொல்வதானால் மனிதத் தன்னிலைகளைக் கட்டமைக்கும் விருப்பங்கள்.விரிவான அர்த்தத்தில் இக்கொள்கைகளை பண்பாட்டைப் போன்றன என்றுகூடக் கூறலாம்.இவைகளே பின்னர் வளர்ந்து-குழப்பங்களுடன் வளர்ந்து-பல்துறை ஆய்வுகளை உருவாக்கிவிட்டுக் கடைசியில் கொள்கைகளாக நின்றுவிட்டன. ஆகவே இவைகளுள் ஒன்றை வெறும் கொள்கைமட்டும் தான் என்றுசுருக்கிச் சொல்லிவிடுவது இயலாத ஒன்றுதான்.இன்று பண்பாட்டுத் துறைகளில் ஆய்வு வேலைசெய்வது என்பது ஆழமாகக்கொள்கைகளைச் சார்ந்து இருப்பதுதான். அதன் மூலம் அர்த்தம், அடையாளம், பிரதிநிதித்துவம், வெளிப்படுத்தும் முகவாண்மைக்கருவிகள் பற்றியெல்லாம் பேசுவதும்தான்.
இலக்கியக்கல்விக்கும் பண்பாட்டுக்கல்விக்கும் இடையேயுள்ள உறவு என்ன? என்று ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். விரிந்த கருத்தமைவின் அடிப்படையில் பண்பாட்டுக்கல்வி என்னும் திட்டம் பண்பாட்டின் வினைகள் எத்தகையன என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கம் உடையது.குறிப்பாக இந்தநவீன உலகத்தில்-பிளவுபட்டதாகவும் பிரிக்கவியலாததாகவும் உள்ள குழுக்கள் அடங்கிய சமூகங்களில்-அரசுஅதிகாரம், ஊடகத்தொழில்நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு மூலதனக்குழுமங்கள் போன்றன எவ்வாறு பண்பாட்டு உற்பத்திகளில் செயலாற்றுகின்றன; அவை தனிமனிதர்களுக்கிடையேயும் குழுக்களுக்கிடையேயும் கட்டி எழுப்பி உருவாக்கும் பண்பாட்டு அடையாளங்கள், அமைப்புகள் எத்தகையனவென்றும், அதன்முலம் விளையக்கூடிய சாதகபாதகங்களின் அளவுகள் எவ்வளவு என்பதையெல்லாம் விளக்குவதும் தான் எனப்பதில் சொல்லிக் கொண்டே போகலாம்.
 பண்பாட்டாய்வுகளின் பின்னணியில் இரண்டுவிதமான சிந்தனைப் போக்குகள் உள்ளன.1960-களில் பிரான்ஸில் தோன்றிய அமைப்பியல்வாதிகளின் -குறிப்பாக ரோலண்ந் பார்த்தின் ஆய்வு முறைகளின் வழி உருவான விதிகள், மரபுகளைப் பின்பற்றியது ஒருவகைச்சிந்தனைப் போக்கு. தொழில்ரீதியான குத்துச்சண்டை, சொகுசுக்கார்கள் போன்றவற்றிற்கு ஒயினையும் ஐன்ஸ்டீனின் மூளையையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட விளம்பரங்களைத் தொன்மநீக்கம் செய்து புதிய வரலாற்றுக் கட்டமைப்பு வாதத்தை முன் வைத்திருந்தார்.அதன் மூலம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் அடியோட்டமான மரபுகள், அதனால் உண்டாகக் கூடிய சமூகவிளைவுகள் போன்றனவற்றை விளக்கியிருந்தார்.
இரண்டாவது சிந்தனைப்போக்கு பிரிட்டனின் புகழ்பெற்ற  மார்க்சீயத் திறனாய்வாளர் ரெய்மாண்ட் வில்லியம்ஸின் வழியிலானது.1958-ல் வெளிவந்த இவரது பண்பாடும் சமூகமும் (culture and society ) என்ற நூலும் அதற்கு முந்திய ஆண்டில்-1957-ரிச்சர்ட் ஹோக்காட் எழுதிய கல்வியின் பயன்கள் (uses of literacy) என்ற ஆய்வுக் கட்டுரையும் பிரிட்டானிய பண்பாட்டியல் கல்வியில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளன. இவ்விருவர்களின் ஆய்வுகள் பண்பாட்டியல் கல்வியில் பயன்பட்டுவந்த-பயன்படுத்தப்படும் இரண்டு கருத் தாக்கங்களைத் தெளிவு படுத்த முயன்றன.
வெகுமக்கள் (popular)பண்பாடு, திரள்மக்கள்(mass)பண்பாடு என்ற அவ்விரு கருத்தாக்கங்கள் இன்றும்கூட குழப்பமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் உள்ளன. வெகுமக்கள் பண்பாட்டையறிய உயர்ந்த இலக்கியங்கள் உதவாது; அடித்தள மக்களின் குரல்களிலிருந்தே சாதாரண மனிதர்களின் விருப்பங் களையும் ஆசைகளையும் அறிய முடியும் என நம்பி வாய்மொழி இலக்கியங்கள், நாட்டார் வழக்காறுகள், நாட்டார் கலை இலக்கியங்கள், போன்றனவற்றைத் தொகுத்து ஆய்வுசெய்வது இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஆனால் திரள்மக்கள் பற்றிப் பேசுபவர்கள், இவைகளை ஆய்வுத் தரவுகளாகக் கொள்வதில்லை; அவர்களின் தரவுகள் நிகழ்காலம் சார்ந்தன மட்டுமே. எழுத்து, ஒலி, ஒளிவழியிலான ஊடகங்களில் இடம் பிடிக்கும் அனைத்துமே ஆய்வுத் தரவுகள்தான்.
மக்களை வெகுமக்கள், திரள்மக்கள் என ஆய்வாளர்கள் பிரித்துப்பேசுவதில் அடிப்படையான வேறுபாடுகளும்   உள்ளன. வெகுமக்கள் எனப்பேசுபவர்கள் அவர்களைப் படைப்பாளிகளாகவும் விருப்பங்களையும் ஆசைகளையும் வெளிப்படுத்துகிறவர்களாகவும் கருதுகின்றனர். ஆனால் திரள்மக்கள் எனப் பேசுவதில் அவர்களை நுகர்வோர்களாகக் கணிக்கும் பார்வைதான் அதிகம் வெளிப்படுகிறது. இத்தகைய கணிப்புக்களில் பெருமளவு உண்மை உண்டு. படைப்பூக்கமுள்ள வெகுமக்கள் தன்னிலைகள் வெறும் நுகர்வோர்களாக ஆக்கப்படும் நிலையில்தான் திரளின் உறுப்புக்களாகின்றனர்.வாசகராகவும் பார்வையாளராகவும் இருப்பதில் உள்ள தன்னுணர்வு நீக்கம்பெறும் நிலையில் நுகர்வோர் என்னும் திரளுக்குள் உறுப்பினராகி விடுதல் தொடர்ந்து நடக்கிறது. இதுதான் இப்போதைய ஊடக வலைப் பின்னல்களின் சாகசங்களும் சாதனைகளும் என்று கூடச்சொல்லலாம் .இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் பிற அதிகாரத்துவ அமைப்புக்களின் நோக்கங்களுக்கு பணியக்கூடிய தன்னிலைகளாக மாறும் சாத்தியங்கள் உண்டு.
பண்பாட்டைப்பற்றிய இந்த இரண்டு விளக்கங்களுக்குப்பின்னால், அதனை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்: பண்பாட்டுச் செயல்பாடுகள் என்பது மக்களின் வெளிப்பாடுகளாக இருக்கும் அதேவேளையில் அவர்களின் மீதான திணிப்புக்களாகவும் இருக்கின்றன. இவ்விளக்கம் பண்பாட்டுக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாகும். பிரிட்டனில் உருவான இக்கருத்தாக்கம் பின்னர் எல்லாநாடுகளிலும் பரவியது.அதிலிருந்து பண்பாட்டுக் கல்வி இருவிதப் போக்குகளுடனேயே வளர்ந்து வந்துள்ளது.
1. விளிம்புநிலை மக்களின் குரல்களைக் கண்டறிந்து தொகுத்து அதனையே அவர்களின் பண்பாட்டுக் கூறுகளாக முன்னிறுத்தும் வெகுமக்கள் பண்பாட்டாய்வுப் போக்கு.
2. ஆதிக்கக்கருத்தியல் மற்றும் அடக்கி வைக்கும் சிந்தனை முறை மூலம் பண்பாடு உருவாக்கப்படுதலைக் கண்டறிந்து சொல்லும் திரள்மக்கள் பண்பாட்டாய்வுப் போக்கு. இவ்விருபோக்குகளையும் இன்னொரு விதமாகவும் புரிந்துகொள்ளலாம். வெகுமக்கள் பண்பாட்டுக் கல்வி சாதாரண மனிதர்களின் வாழ்வுக்கான தேவைகளையும் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் கவனித்துக் கொண்டேயிருப்பது. ஆனால் திரள்மக்கள் பண்பாட்டுக் கல்வியென்பது சாதாரண மனிதர்கள் எவ்வாறு வடிவ மைக்கப்படுகிறார்கள்; உளவியல்ரீதியில் அவர்கள் உருமாற்றம் செய்யப்படுவது எப்படி? உருமாற்றம் செய்யப் படுவதால் ஒட்டுமொத்த சமூகப்போக்கில் ஏற்படக்கூடிய விளைவுகள் எத்தகையன? பயன்படுத்தும் நோக்கங்களுடன் வினைகளாற்றும் பண்பாட்டுச்சக்திகள் எவையெவை? என்பதையெல்லாம் கண்டறிந்து சொல்லும் நோக்கங்களுடையது. பண்பாட்டுக் கல்வியிலுள்ள இருவிதப் போக்குகளின் பின்னணியில், மக்களைப் பண்பாட்டு வடிவங்களும் செயல்பாடுகளும் எவ்வாறு தன்னிலைகளாக மாற்றுகின்றன என்பதும் ஒரு குறிப்பிட்ட ஆசைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் மட்டும் உரியவர்கள் எனச் சித்திரிக்க முயல்கின்றன என்பதும் கருத்தாக்க நிலையில் விளக்கப்படுகின்றன. இந்தக் கருத்தாக்கத்தை- உறுப்பினராக்கும் கருத்தாக்கத்தை- கோட்பாடாக முன்மொழிந்தவர் லூயி அல்தூஸர் என்னும் பிரெஞ்சு மார்க்சீயவாதி.
பண்பாட்டுக்கல்வி, பண்பாட்டை அதற்குள் செயல்படும் குறியீடுகள், செயல்பாடுகள் வழியாக ஆய்வு செய்கிறது. மக்கள், பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் அவர்களின் விருப்பங்களிலிருந்தும் எவ்வாறு வெளியேற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்கிற அதே நேரத்தில் சரியான பண்பாட்டு மதிப்பீடுகள் எவையென்பதைக்கண்டறிந்து சொல்லவும் முயற்சி செய்கிறது. நிகழ்கால முதலாளித்துவ சக்திகளின் கைகளிலுள்ள ஊடகத் தொழில் நிறுவனங்கள் முதலாளித்துவப் பண்பாட்டை உருவாக்கி மக்கள்மீது திணிக்க முயலும் போக்கையும் சுட்டிக் காட்டி, அதன்வழியே திரள்மக்களின் பண்பாடு மாற்றப்படுவதையும் பற்றி விவாதிக்கிறது. திரள்மக்கள் பண்பாடு பயன்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள், படைப்பாக்கச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியே நடைபெறும் பண்பாட்டுப் போராட்டத்தை எதிர்க்கும் நிலையில் வெகுமக்கள் பண்பாடு உருவாக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  
பண்பாட்டுக் கல்வியும் இலக்கியக்கல்வியும்:
இலக்கியக் கல்வியைக்கற்பித்து வந்த பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இன்று பண்பாட்டுக் கல்வியின் பக்கம் திரும்பியுள்ளன. ஆனால் இவ்விருவகைக் கல்விக்கும் அடிப்படையான வேறுபாடுகளும் சிக்கலான உறவுகளும் உள்ளன. கொள்கையளவில் பண்பாட்டுக் கல்வி எல்லாவற்றையும் ஒத்த தரத்தினதாகப் பார்க்கவும் உள்வாங்கிக் கொள்ளவும் செய்யும். ஷேக்ஸ்பியரும் ராப் இசையும் ; மேட்டுக்குடிப் பண்பாடும் பாமரர் பண்பாடும்; நிகழ்காலப் பண்பாடும் கடந்தகாலப்பண்பாடும் என எதனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா அர்த்தங்களும் பிரித்துப் பார்ப்பதிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் இலக்கியக் கல்வியோ எல்லாவற்றையும் ஒன்றாகக் கருதுவதுமில்லை; பிரித்துப்பார்ப்பதைத் தவிர்ப்பதுமில்லை.
பண்பாட்டுக்கல்வி இலக்கியக்கல்வியிலிருந்து வேறுபடும் இன்னொரு அம்சம் அதன் வளர்ச்சி.அதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கவனித்தால் அது ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவதொன்றை எதிர்த்தே வந்துள்ளது. முதலில் மரபான இலக்கியக் கல்வியைப் பண்பாட்டுக் கல்வி எதிர்த்தது என்பது சொல்லப் படவேண்டியது. மரபான இலக்கியக் கல்வியின் படிப்பு முறைகளைப் பண்பாட்டுக்கல்வி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.
மரபான இலக்கியக்கல்வியின் மூலம் சொல்லப்படும் விளக்கங்களின் வழி கிடைப்பதென்ன? என்று கேள்வியெழுப்பிடும் பண்பாட்டுக்கல்வி, உன்னதமான படைப்புக்கள் தரும் அனுபவங்கள், அவைகளுக்குள்  இருக்கும் படைப்புக்கூறுகள், அவற்றின் அழகு, படைப்பாளிகளின் சாதனைகள், படைப்பாளியின் சிந்தனை வெளிப்பாடு, அவனது உலகக் கோட்பாடு என்பனதான். ஆனால் சாதாரண வாசகர்களுக்கு இதனால் கிடைப்பன பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறது பண்பாட்டுக்கல்வி. ஆனால் இலக்கியக்கல்வியின் இப்போதைய போக்கு அத்தகையதல்ல. புதியபுதிய இலக்கியக் கொள்கைகள் உருவான பின்பு இலக்கியக் கல்வியே இறுக்கமானதாகவும் எதனுடனும் போட்டியிடத் தக்கதாகவும் மாறிக்கொண்டுதான் வருகிறது.
நிறைவாக இப்படி முடிக்கலாம்.
ஐரோப்பாவில் தோன்றிய எல்லாச் சிந்தனைகளையும் மாற்றங்களையும் போல அமைப்பியல்வாதமும் பின் நவீனத்துவமும் தமிழ் அறிவுலகத்தையும் பாதிக்கவே செய்துள்ளது. அந்தப்பாதிப்பின் விளைவாகத் தமிழ்ச் சினிமாக்களைப் பார்க்கவேண்டிய பார்வைகளும், விளக்கவேண்டிய முறைகளும், விவாதிக்கவேண்டிய சொல்லாடல் முறைகளும் மாறியுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு பொங்கலுக்கு வெளிவந்து பார்வையாளர்கள் முன் காளைகளை அடக்கும் விருமாண்டி வெறும் பொழுதுபோக்குச் சினிமாவாக மட்டும் கருதப்பட்ட பிரதிஅல்ல. எதிர்க்க முனைந்த அடாவடி அரசியலுக்கான பதில்கள் அதற்குள் இருக்கின்றன. தமிழ்மண், தமிழ்மொழியின் மணம், தமிழ்வீரம், தமிழ்ப் பெண்ணின் கற்பு என அடையாளங்களைப் பேசி அவ்வடையாளங்கள், மாறிவரும் சமூக நடைமுறைகளுக்கேற்ப மாறவேண்டிய கட்டாயங்களும் உள்ளன என்ற போதனைகளும் அதற்குள் இருந்தன. தாவித்தாவிச் செல்லும் ஊடகங்களின் வேகத்திற்கு உணவாகும் செய்தித் துணுக்குகளும் வியாபாரநுட்பங்களும் பின்னணியில் இருக்கின்றன. பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளின் விளம்பர உத்திகளைத் தனதாக்கிக் கொள்ளும் லாவகமும் உடன் பயணம் செய்துள்ளது. இவைகள் அல்லாமல் இன்னும் பலவும் கூட இருக்கக் கூடும். ஆகவே விருமாண்டியை விமரிசனம் செய்யக் “கலை”யின் விதிகள் மட்டும் போதாது. பண்பாட்டின், சமூகநடை முறையின், மூலதனத்தின், அதன் தொடர்ச்சியான வியாபாரத்தின் விதிகளும் தெரிந்தாகவேண்டும்.

 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்