மதிப்பிழக்கும் உயர் ஆய்வுகள்


தமிழர்களாகிய நமது தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப் பதில் முன்னிலை வகிப்பவை எவை எனப் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படிப் பட்ட புள்ளி விவரங்கள் தேவை என்ற எண்ணம் கூடப் பெரும்பாலான தனிநபர்களிடம் இருப்பதில்லை. தனிநபர்களுக்கு இருப்பதில்லை என்பது பெரிய குறையாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதத்தைத் தருவதாக நம்பும் அரசு நிறுவனங்களுக்கு அப்படியான புள்ளி விவரங்கள் இன்றியமை யாதவை.

நமது அதிகார மையங்கள் அத்தகைய புள்ளி விவரங்களைத் தரும் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ள வில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் நிரூபித்து விட முடியும். தமிழகத்தில 15 - க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் நான்கு பல்கலைக் கழகங்களில் தான் புள்ளியியல் துறைகள் உள்ளன. அதே போல் இந்திய சமூகத்தின் அல்லது தமிழ்ச் சமூகத்தின் போக்கையும் ஆய்வு செய்து அரசுக்குத் தர வேண்டிய பொறுப்புடைய சமூகவியல் துறைகளும் கூடத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிரண்டில் தான் செயல்படுகின்றன.

செயல்படும் பல்கலைக் கழகங்களிலும் கூட தமிழ் வாழ்வு சார்ந்த ஆய்வுகளோ, தமிழர்களின் எண்ண ஓட்டம் சார்ந்த புள்ளி விவரங்கள் குறித்த படிப்புகளோ இருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. மேற்கத்திய அறிதல் முறை தரும் மாதிரிகளை வைத்துக் கொண்டு இந்தியாவைப் பற்றிச் சில தகவல்களைத் தரும் ஆய்வுகளே இங்கு நடைபெறுகின்றன. இந்தியாவின் அல்லது தமிழகத்தின் சமூகவியலைக் குறித்த காத்திரமான ஆய்வு முடிவுகள் எதனையும் தமிழகத்தின் சமூகவியல் துறைகள் எவையும் வெளியிட்டு விடவில்லை. அதே போல் இந்தியாவின் அல்லது தமிழகத்தின் புள்ளி விவரங்களைத் தரும் புள்ளியியல் துறைகளும் இங்கு இல்லை.

சமூகவியல் அல்லது புள்ளியியல் துறைகள் மட்டுமே இவ்வாறு இயங்குகின்றன என்று கருத வேண்டியதில்லை. சமூக அறிவியல் மற்றும் மொழிகள் சார்ந்த உயர்கல்வித துறைகள் அனைத்துமே இவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் செயல்படும் ஆங்கிலத் துறை களின் ஆசிரியர்களுக்கு இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் போக்கு எத்தகையன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் எதுவும் இருப்பதில்லை.

தமிழ் மொழியில் எழுதப் பெறும் சிறந்த படைப்புகளை விமரிசனத்தோடு உலக இலக்கியத்திற்கு அறிமுகம் செய்யும் பொறுப்பை இங்கு இருக்கும் ஆங்கிலப் பேராசிரியர்கள் செய்யவில்லை என்றால் அதற்கான அங்கீகாரம் எப்போதும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்ப்பேராசிரியர்களும், தமிழ் எழுத்தாளர்களும் மட்டும் முயன்று தமிழ் இலக்கியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று விட முடியாது. தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம் மட்டும் அல்ல; சரியான மொழி பெயர்ப்பையும் ஆங்கிலப் பேராசிரியர்கள் தான் செய்ய முடியும்.

தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் காட்டும் ஒரு சில ஆங்கில ஆசிரியர்களும் தங்களின் சொந்த விருப்பு வெறுப்போடு தேர்வு செய்து சில வகையான படைப்புகளைக் குறித்து மட்டுமே ஆங்கிலத்தில் அறிமுகம் செய்கின்றனர். அதனால் தமிழின் எல்லாவகை இலக்கியப் படைப்புகளும் உலக இலக்கியத்திற்குள் இடம் பெறாமல் போய்விடுகின்றன. உலக அளவில் செய்யப்படும் எந்த அறிமுகமும் இந்திய மொழிகளில் அல்லது இந்திய இலக்கியத்தில் அதன் இடம் இத்தகையது என்பதாக அமைய வேண்டும். அப்படியான தேவையை நிறைவேற்றும் கடமை அல்லது சமூகப் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக ஆங்கிலப் பேராசிரியர்கள் கருத வேண்டும்.

தமிழியல் துறைகளோ எப்போதும் மாதிரிகளை வைத்துக் கொண்டு இன்னொரு நகலை உருவாக்கும் சிறு தொழிற்கூடங்களாக இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் பிள்ளையார் செய்யும் ரோட்டோரத்துக் கலைஞனைப் போல ஆய்வேடுகள் உருவாக்கப்படுகின்றன. அவை சொல்லும் முடிவுகள் எதுவும் தமிழின் புலங்களான மொழித்துறைக்கோ, இலக்கியத் துறைக்கோ, பண்பாட்டுத் துறைக்கோ எள் முனையளவும் உதவும் நோக்கம் கொண்டனவாக இல்லை. அச்சுப்பிள்ளையார்கள் சதுர்த்திக்குப் பின்னால் ஆற்றிலோ குளத்திலோ கரைக்கப் படுவது போல தமிழ் ஆய்வுப் பட்டங்கள் எண்ணிக்கைக் குளத்தில் கரைந்ததுதான் பலன்.

இப்படி எல்லாம் சொல்வது பலருக்குக் கோபத்தை வரவழைக்கலாம். இருபதாண்டுக் காலம் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அதுதான் உண்மை. இப்படிச் சொல்வதற்கு எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை.

உயராய்வு நிறுவனங்களில் -குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் சமூக அறிவியல் துறைகளும் மொழிகளின் புலங்களும் அவற்றின் வெளிகள் எவை என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளாமல் அந்நியப்பட்ட ஆய்வுகளையே செய்து கொண்டிருக்கின்றன இந்தியாவில் செய்யப்படும் ஆய்வுகள் இந்தியாவை அல்லது தமிழகத்தை மறந்த ஆய்வுகளாக இருக்க முடியுமா என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்டுக் கொண்டு விடை தேட முனைந்தாலே அந்நியப்படும் ஆய்வுகளுக்குள் நுழையாமல் தப்பி விடலாம்.
குறிப்பாகப் புள்ளியியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், மேலாண்மையியல், குற்றவியல், உளவியல், மானிடவியல், பண்பாட்டியல், மொழியியல், தத்துவம் போன்ற துறைகளின் ஆய்வுகள் நமது காலத்தையும் நமது வெளியையும் விட்டு விலகிச் செல்லாமல் இருந்தாலே காத்திரமான ஆய்வாக ஆகி விடும் வாய்ப்புகளைப் பெற்று விடும். இவையெல்லாம் தனித்தனியாக ஆய்வுகளில் ஈடுபடுவதை விடவும் ஒருங்கிணைந்து செயல்படும் போது அந்த ஆய்வுகள் கூடுதலான சமூகப் பொறுப்பைக் கொண்டதாக ஆகிவிடும்.

இன்றைய நிலையில் தமிழக வாழ்வில் ஏற்பட்டுள்ள பேரியல் மாற்றங்களையும் நுண்ணியல் மாற்றங் களையும் வெளிக்கொண்டு வரும் ஆய்வுத் திட்டங்கள் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப் பட வில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இத்தகைய ஆய்வுகள் தேவையில்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. வருவாய் தரும் முதல¦ட்டுத்திட்டங்கள் சார்ந்தும், மக்கள் நலனை மையப் படுத்தும் செலவினங்கள் சார்ந்தும் இத்தகைய புள்ளி விவரங்கள் தேவை என்பதைக் கூட நமது அதிகார மையங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சமூகப் பொறுப்புள்ள ஆய்வுகளை மேற்கொள்ளாதவரை பல்கலைக் கழக ஆய்வுகள் அந்நியப் பட்ட ஆய்வுகள் என்ற அவப்பெயரைத் தாங்குவதை நிறுத்தி விட முடியாது. ஆய்வு செய்ய வரும் ஆய்வாளருக்கு ஆய்வுப் பட்டம், வேலைக்கான கூடுதல் தகுதியாகக் கருதுவதைக் கூட ஓரளவு சகித்துக் கொள்ள முடியும். தமிழ் ஆய்வுக்கு வழிகாட்டும் நெறியாளர்களும் கூடத் தங்கள் பதவி உயர்வுக்கான மதிப்புப் புள்ளிகளைப் பெற்றுத் தரும் ஒன்றாக ஆய்வைக் கருதுவதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? இப்படியான புரிதலோடு செயல் படும் போது தான் பதவி உயர்வுக்காக அடுத்தவர்களின் ஆய்வுகளைத் திருடித் தனது ஆய்வாகச் சொல்லும் ஆபத்துக்கள் நிகழ்கின்றன.

நியாயமான ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் பதவி உயர்வுக்கு மாறாக அதிகார மையங்களை நெருங்கிச் சென்று, தவறான தகவல்களைத் தந்து பெறும் பதவி உயர்வுகள் தலைக்கு மேல் கட்டித் தொங்கும் நெருப்புக் குண்டம் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கண்டு பிடிக்கப் பட்டால் தான் தண்டனை என நினைப்பது தனிமனிதத் தன்னிலை யின் சாவு. தனிமனிதத் தன்னிலையின் மரணத்தை சமயங்கள் தலைவிதி எனச் சொல்லி விலகிச் செல்லலாம். தர்க்கம் சார்ந்த அறிவோ அப்படிச் சொல்லாது. அது மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று தான் வருணிக்கும்.

இந்தியாவில் அதிகாரத்தை நாடிச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னிலைக்கு இயல்பான மரணத்திற்குப் பதிலாகத் தற்கொலையைப் பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிப் பிரதமர் தொடங்கித் தனது ஓவியத்தை ஆதிமூலத்தின் ஓவியம் எனச் சொல்லி விற்கும் கலைத்திருடர்கள் வரை இதுதான் நிலைமை.

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
SAMOOKA KARUTHUKAL MAATRANKAL NIKALWUKAL AAKIYANA KURITHA AAIWUKAL THODARUM NILAI WEKU THOORAM ILLAI

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்