இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்
நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.