தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல:
எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. கவிதை எப்போதும் உணர்வுகளையும் கவிதை சொல்வதற்கான கூற்றாளர்/ உரைப்பவரின் த்வனியையும் முன்வைக்கும். புனைவுகளோ பாத்திரங்களின் இருப்பையும் நோக்கங்களும் வளர்சிதை மாற்றங்களையும் முன்வைக்க முனையும். அதிலும் சிறுகதைகள் உருவாக்கப்படும் புனைவுப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் கணத்தைத் தீட்டிக்காட்டுவதை முதன்மையாக நினைக்கும். இன்னொரு புனைவு வடிவமான நாவலோ பாத்திரங்களின் பின்னணிகளை - காலத்தையும் வெளியையும் விரிவாக்கித்தருவதில் கவனம் செலுத்தும். நாடகங்களோ எப்போதும் கருத்தியல் அல்லது மனவியல் முரண்பாடுகளைக் காட்டுவதையே செய்கின்றன