வாக்களிப்பும் எண்ணிக்கையும்

இந்தியா ஒன்றுபோல் சிந்திக்கிறது; ஒன்றுபோல் வாக்களிக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருப்பதின் அபத்தத்தைக் கைவிடவேண்டிய காலம் நமது காலம். ஆனால் இந்திய தேசியவாதத்தின் முரட்டுப் பக்தர்கள் அந்த அபத்தத்தைத் தொடரவே செய்வார்கள் என்பது குரூர உண்மை.

தமிழ்நாட்டின் சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 இல் முடிந்தது. எட்டுக்கட்டங்களாக நடக்கும் மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தபின் எண்ணிக்கை நடக்க வேண்டும்; இல்லையென்றால் தமிழ்நாட்டின் முடிவு அங்கே பிரதிபலிக்கும்; பாதிப்பை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை அபத்தமானது.

நாடாளுமன்றத்தேர்தல்களும் சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடந்த கால கட்டத்திலேயே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்றன தனித்தனியாகச் சிந்தித்து வாக்களித்த மாநிலங்கள். மாநிலத்தை யார் கையில் அளிக்க வேண்டும்; மத்தியில் யார் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிந்திய தேர்தல்களில் தமிழ்நாடு முழுக்கவும் இந்திய மனபோக்குக்கு மாறாகவே வாக்களித்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சநிலை வெளிப்பாடு 2019 நாடாளுமன்றத்தேர்தல்.
 
பக்கத்து மாநிலத்தேர்தல் முடிவுகளே அடுத்த மாநிலத்தில் தாக்கம் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் 2000 -க்குப் பின்னான சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டும் உண்மை. கேரளத்தின் தாக்கமோ, கர்நாடகத்தின் தாக்கமோ தமிழ்நாட்டைப் பாதிப்பதில்லை. அங்கிருக்கும் கட்சிகள் இங்கே செல்லாக்காசுகள். பீகாரும் உத்தரப்பிரதேசமும்கூட அப்படி ஆகிக்கொண்டிருக்கின்றன. அவசரநிலைக்குப் பின் உருவான மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகளின் மாநிலத்தலைமைகள் தங்களைத் தனித்துவம் கொண்டு நிரூபித்துள்ளன.

இந்தியாவில் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் மாநிலங்களின் வாக்காளர்கள் கூடத்தேசியத் தலைமைக்காக வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மை. கர்நாடகாவின் பாஜகவின் வெற்றி எடியூரப்பா என்ற மாநிலத் தலைவரின் வெற்றி என்பதனாலேயே பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெடித்தபின்னும் திரும்பவும் அவருக்கு வாய்ப்பளிக்கிறது தேசியத் தலைமை. இதனை உணர்ந்து கொள்ளாத நிலையில் தான் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்தையும் இழந்தது.
 
நாடாளுமன்றத்தேர்தலை நடத்துவதிலும் வாக்குகளை எண்ணி முடிவைச் சொல்வதிலும் இன்னும் சில காலம் தொடரலாம்; ஒரே நாளில் எண்ணுவதற்குக் காத்திருக்கலாம். ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை அந்தந்த மாநிலத்தின் நிகழ்வுகளாகக் கணக்கில்கொண்டு - முடிவுசெய்து தேர்தல் நடந்த அடுத்த நாள் எண்ணி, அரசைத்தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்; நம்பகத்தன்மையை உருவாக்கும்; செலவும் மிச்சமாகும். தேர்தல் ஆணையம் தனது தன்னாட்சி உரிமையைக் காட்ட நினைத்தால் இதனை முதலில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்ற கேள்விக்கு நான் படித்த இலக்கியங்களில் இரண்டு சித்திரங்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்று பூமணியின் பிறகு நாவல் தரும் சித்திரம். இன்னொன்று கிருஷ்ணன் நம்பியின் மாமியா வாக்கு. சிறுகதை
============================ ========
சக்கணன் திரும்பிவந்தான்.
“இப்பிடி உக்காருடா..ஆமா ஓட்டுப்போடப் போனாயே, எப்படிப் போட்ட, என்ன சங்கதி”
“போயாச்சுன்னா போடாம சும்மாவா வருவாக சாமி.”.
“அதுல்ல.. போடுறது போடத்தான் போற..எப்படிப் போட்டனுதான் கேக்கென்..”
“போடுறதென்ன மொதலாளி சொல்லிக்குடுத்தாக வீட்ல..அந்தப்படி போனஒடன ஒரு சீட்டுக்குடுத்தாக.. வாங்கீட்டுப் பின்னால கூடிப் போயித் தாவாரத்து ஓட்டுமேல போட்டுட்டுச் செவனேன்னு வந்துட்டேன்..”
கோவால் நாயக்கர் சம்முகஞ்செட்டியைப் பிடித்துக்கொண்டார்
“யோவ்,சம்முகம் பெலமாச் சிரிக்கீறே..நீரு எப்படிப்போட்டீராம்..”
“நான் அப்பிடியில்ல.. சீட்ட வாங்குனதும் விருவிருனு போய்ப் பொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துட்டென்”
“இந்தத் தொறட்டெல்லாம் எதுக்குனு சொல்லித்தான் பேசாமச் சீட்ட வாங்கி மடியில வச்சுக்கிட்டு அருவமில்லாம நடைய விட்டுட்டென்.. இந்தா பாரு சீட்ட..”
மடிக்குள்ளிருந்து ஓட்டுச் சீட்டை எடுத்து மடிப்புக்களை எடுத்துக் காண்பித்தார் கோவால் நாயக்கர்.
இடைவழியிலேயே தங்கிப் போனது ரெம்ப நல்லதாப் போயிற்று என்று தனக்குள் சொல்லிக்கொண்ட அழகிரி வேம்படிக்குப் புறப்பட்டான்.
===============================
இந்தக் காட்சி பூமணியின் பிறகு நாவலில் இருக்கிறது. நாவல் 1979 இல் வந்தது. இந்த நாவலைப் படமாக்கினால் இந்தப் பக்கத்தைக் காட்சிப் படுத்தினால் பூமணி திருடிவிட்டார் என்பார்கள். ஏனென்றால் ஏற்கெனவே இந்தக் காட்சியை உருமாற்றி வைத்துவிட்டார்கள்
மாமியார் வாக்கு பற்றித்தனிக்கட்டுரை உள்ளது. அங்கே சென்று வாசிக்கலாம்.


 https://ramasamywritings.blogspot.com/2010/01/blog-post.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்