இன்னுமொரு போரை நினைத்தல் : ஆசி கந்தராஜாவின் நரசிம்மம்
ஈழத்தமிழ்ப் புனைகதைகள் இன்னும் போர்க்கால நினைவுகளிலிருந்து மீளவில்லை. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும் அதற்கு முந்திய கால் நூற்றாண்டுப் போர்க் காலத்தையும் மறந்து விட்டு ஈழநிலப்பின்னணியில் புனைவுகள் எழுதவேண்டும் என்றால் அதன் கோரத்தை - வடுக்களை- பாதிப்பை உணராத தலைமுறை ஒன்று உருவாகி வரவேண்டும். அதுவரை போர்க் காலம் என்பது நேரடியாகவும் நினைவுகளாகவும் பதிவு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது. உள்ளே இருப்பவர்களும் வெளியே புலம்பெயர்ந்தவர்களும் திருப்பத்திரும்ப அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.