நம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம்
தமிழ்ப் புனைகதையின் தொடக்கக் கவனம் பெண்களை எழுதுவதிலேயே குவிந்திருந்தது. பாரதியின் சந்திரிகையும் வேதநாயகம் பிள்ளையின் ஞானாம்பாளும் ராஜம் அய்யரின் கமலாம்பாளும் மாதவைய்யாவின் பத்மாவதியும் சரித்திரங்களாக்கப்பட்டனர். விரிவான நாவல் வடிவம் மட்டுமல்ல. சிறுகதையின் தொடக்கநிலைகூட மங்கையர்க் கரசியின் காதலையும் குளத்தங்கரையில் சந்தித்துக்கொண்ட பெண்ணின் கதையையும்தான் சொல்லமுயன்றன. ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் லட்சியவாதமும் நல்லொழுக்கமும் தியாகத்தின் வடிவமும் கொண்டவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறியாதவர்கள். அறிய விரும்பாதவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லது அனுப்பப்பட்டவர்கள் என்பதாகக் கதையெழுதிய ஆண்கள் எழுதிக் காட்டினார்கள். ஆண்கள் எழுதியதைப் போலவே தொடக்ககாலப் பெண்களும் எழுதிக்காட்டினார்கள்.