ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக் கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம். இந்தக் கல்வி ஆண்டில் நான் ஒருங்கிணைக்கும் இது கடைசி நிகழ்வு. பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்னும் தலைப்பில் பயிலரங்கு ஒன்று மார்ச் 4, 5 தேதிகளில் நடக்க உள்ளது. வழக்கமாகப் பெண்ணியம் பேசும் ஆளுமைகளைத் தவிர்த்துவிட்டு நிதானமாகப் பார்வையை வெளிப்படுத்தும் புதிய ஆளுமைகளை அழைத்திருக்கிறேன். சிலருக்கு பல்கலைக்கழகத்தில் பங்கேற்கும் முதல் நிகழ்வு எனச் சொன்னார்கள். புதிய நீர்ப் பெருக்கு வழித்தடங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்








மாலன் நாராயணன் வாழ்த்துக்கள். சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.அவற்றுக்கு விடையளிக்க வேண்டியவர் நீங்களல்ல. ஆனாலும் கேள்விகளைப் பொதுவில் வைப்போம் (ஊதற சங்கை ஊதி வைப்போம். விடிகிறபோது விடியட்டும்) 1.கல்வியாண்டு ஜூன்.ஜூலையில் துவங்குகிறது என்னும் போது பல்கலைக் கழகங்களின் நிதியாண்டும் அப்போது துவங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆனால் அரசாங்கத்தைப் போல அது ஏன் ஏப்ரல் 1ம் தேதி துவங்க வேண்டும்? அதை மாற்ற முடியாதா? 2.அடுத்த கல்வியாண்டில் என்னென்ன நிகழ்வுகள் நடத்தப்பெற வேண்டும் என இந்தக் கல்வியாண்டிலேயே தீர்மானித்து ஒரு காலண்டரும், பட்ஜெட்டும் தயாரித்துக் கொள்ள முடியாதா? 3. இந்தக் கருத்தரங்குகளில் பேசப்படும் செய்திகள் படைப்புலகில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா? அந்த செய்திகளுக்கு ஏதேனும் ஃபாலோஅப் மேற்கொள்ளப்படுகிறதா? அவை மற்ற பல்கலைக்கழகங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறதா? சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன்? (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) 4.இந்தக் கட்டுரைகளை நூலாகவோ, இணையத்திலோ பகிர்ந்து கொள்ளும் திட்டமும் பட்ஜெட்டும் கருத்தரங்கை திட்டமிடும்போது தயாரிக்கப்படுகிறதா? எந்த அளவிற்குத் தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது?


Ramasamy Alagarsamy நன்றி மாலன் அவர்களுக்கு. வினாக்கள் எழுப்பவே ஆட்கள் இல்லை என்ற நிலையில் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்குமான பதில் ‘ எதுவும் இல்லை’ என்று சொல்லி விடுவேன் என நினைக்காதீர்கள். ஜனநாயக இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் நடக்கும் முயற்சிகள், புதிய சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவற்றிற்கு இருக்கும் தொடர்விளைவுகள் போலத் தான் இவற்றிற்கும் உண்டு. 1997 இல் நடத்திய ‘ பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்’ கருத்தரங்கை அடுத்த ஆண்டே நூலாக மாற்றினோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்படியே நூலாக ஆகவில்லை என்றாலும் சிலவற்றை இணைத்துப் பல்கலைக்கழக வெளியீடாக ஆக்கி இருக்கிறோம். கட்டுரை வாசிக்கும் நபர்கள், விரிவாக்கித் தாங்கள் வெளியிடும் தொகுப்புகளில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் பல்வேறு கல்வி நிறுவனங்களும் பாட நூலாக்கிப் பயனடைகின்றன.இலக்கிய உலகமும் வாசித்து விவாதிக்கிறது. ஒட்டு மொத்தமாகக் கல்வியுலகச் செயல்பாடுகள் அர்த்தமற்றவை என்று சொல்ல முயலும் வாய்ப்பை வழங்கக் கூடாது என்று தான் தொடர்ந்து விதம்விதமாகச் செயல்பட வேண்டியுள்ளது. 100 சதவீத அக் மார்க் நெய் விற்பனை எந்தக் கடையில்ம் இல்லை என்றே நினைக்கிறேன்.
28 February at 07:39 
Jamalan Tamil எந்த ஒன்றும் பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தி உய்வித்துவிடும் என்பது போன்ற ஒரு வெகுசன மனநிலையில் இத்தகைய நிலைகள அனுகமுடியாது. எல்லா கருத்தரங்குகள்ஈ கூட்ட ஒழுங்குகள் ஆகியவை ஒரே ஒரு முன்னணி சிந்தனையாளரை உருவாக்கினால் அதுவே பெரும் வெற்றிதான். அவர்தான் அதை மற்றவர்க்கு கொண்டு செல்வார். இந்த வலைபின்னலில் ஒருவர் பெற்றதை அவரது மையமான வலைபின்னல் கொண்டு போகும். அதிலிருந்து மற்றது. இப்படித்தான் இந்த சிந்தனை ஓட்டம் என்பது வெகுமக்கள் மயமாகும். அதனால் பல்கலைக்கழகம் குறைந்தபட்சம் வழக்கமான புளித்த மாவுகளை அரைக்காமல் இப்படி புதிய சக்திகளைக் கொண்டு புதிய சிந்தனைகளை பேசுவது அவசியமானது. பேச்சாளர்களும் புதியவர்கள் என்ற முறையில் அவரகளே தங்களது சிந்தனைகளை ஒழுங்குபடுத்த முடியும். எதாவது ஒரு இயக்கம் நடத்தும் கூட்டம், ஐந்துநட்சத்திர ரீதியான கருத்தரங்குகளைவிட இத்தகைய கூட்டங்கள் அதிக பாதிப்பை உருவாக்கக் கூடியவையே. மற்றபடி கல்வித்துறையின் நிதி அதற்கான திட்டம் போன்ற விஷயங்களில் திரு மாலன் நாராயணன் கருத்து கவனிக்கப்பட வேண்யடி ஒன்றே.
28 February at 11:54 · 

Uthra Dorairajan For the question.4, many organizers these days get ISBN number for their proceedings , and try to publish the papers. This trend is increasing. And us positive. As academicians ( science at least) have not been book authors or publishers, art of publishing as books is yet to pick up. Though, proceedings- a collection of articles has been a ritualistic affair. Ques3. There is definitely a purpose ( now am not going to compare the amount spent. It depend on the grants they get! Many seminars happen as low budget academic affair and some are lavish depending on the field, networking, granting authority and luck) . Most of the researchers understand what's happening on other parts, other univs, get in touch with other groups, or change the course of their reach work as they may find their route futile,... Also it helps deliberations and lead us to nxt level of research. Anyone can argue, with internet in hand, cannt these b achieved out effectively! Sometimes academicians, research scholars get to know different research groups, institutes, centers only thro interactions in such seminars. And more so, still there are researchers who do not google(!?) that way these serve as platforms to share knowledge . But sharing with other univs or in a common pool is yet to happen, I feel sir. That's why many a times research gets repeated, or the problem chosen for research remains same with a slight change of the subject they choose!
28 February at 12:01 ·

Badri Seshadri எனக்கும் இதில் நிறைய கருத்துகள் இருக்கின்றன. விரிவாக எழுதவேண்டும். ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மாலன் சொல்வதுபோல கருத்தரங்கக் கட்டுரைகள் புத்தக வடிவில் (அச்சில், ஐ.எஸ்.பி.என் எண்ணுடன்) வரவேண்டும். 20, 30, 50 பிரதிகள் அடித்தால்கூடப் போதும். கட்டுரை படைப்போருக்கு ஆளுக்கு ஒரு பிரதி, நிதி நல்கியோருக்கு ஆளுக்கு ஐந்து பிரதிகள், நிகழ்ச்சி நடத்தும் பல்கலைக்கழகம்/கல்லூரிக்குப் பத்து பிரதிகள். தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஆளுக்கு ஒரு பிரதியை வாங்கித் தம் நூலகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் இதையே ePub வடிவில் இலவசமாக இணையத்தில் பிரதியிறக்கிக்கொள்ள வசதியாக வைக்கவேண்டும்.

இதன் முக்கியமான நோக்கம், காப்பியடித்து பேப்பர் எழுதுவது, ஒரே ஆள் ஒரே பேப்பரை மாறி மாறி (கொஞ்சம்கூட வேல்யூ அடிஷன் கொடுக்காமல்) நான்கு மாநாடுகளில் தள்ளிவிடுவது போன்றவற்றைத் தடுப்பது. அடுத்து, இந்த விஷயங்கள் எல்லாம் உருப்படியாக இணையத்தில் pdf அல்லது ePub வடிவில் வந்தால் கூகிள் ஸ்காலர் தேடலில் வரத் தொடங்கும்.
28 February at 12:59 · 

மாலன் நாராயணன் Uthra Dorairajan thanks prof. for throwing some light on what is happening in the science arena. But researching in science and liberal arts are two different universe. All that I wish are; a)a seminar calendar at the beginning of every academic year with probable names of paper presenters which may be shared with neighboring universities if not with all. In this way a synergy may be developed, costs may be shared, papers could become better, publishing avenues may be probed. b) archiving at websites of the universities, teachers' associations with a search facility. Now, pardon me if I am wrong, money is spent at the eleventh hour in order to exhaust budgetary sanctions and hence inviting who ever is available and running seminars for the sake of seminars without any clearly drawn objectives.
28 February at 13:08 · 
மாலன் நாராயணன் Jamalan Tamilகடந்த 10 ஆண்டுகளில், ஏன் 20 ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளுங்கள், பல்கலைக்கழக கருந்தரங்குகள் மூலம் உருவான “முன்னணிச் சிந்தனையாளரை” சந்திக்க ஆவலாக இருக்கிறேன். தொடர்பு எண்கள், முகவரி அளிக்க இயலுமா?
28 February at 13:10 ·

Jamalan Tamil மாலன் நாராயணன் 1. இதுபோன்ற கேள்விகளுக்கு முன்பு முன்னணி என்பது பற்றி ஒரு முடிவிற்கு வரவேண்டும். ”முன்னணி” என்று நீங்கள் கோட் போட்டிருப்பது அதனால்தானே? 2. பல்கலைக்கழகம் உருவாக்காமல்தான் பல்கலையில் பணியாற்றி பல ஆய்வாளர்கள் சிறுபத்திரிக்கையில் பங்களித்து உள்ளார்களா? 3. உங்களை உட்பட பல்கலையின் ஆய்வுகள் பின்னணியில் உருவான ஆய்வாளர்களின் ஆய்வுகளை படிக்காமல்தான் எழுது வந்துள்ளீர்களா? 4. தமிழில் யாரெல்லாம் முன்னணி எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் தாருங்கள் எனக்கு தொடர்ப முகவரி எண்கள் எதுவும் வேண்டாம் காரணம் எனக்கே என் தொடர்பு எண் நினைவில் இருப்பதில்லை. இதெல்லாம் கோர்ட்டோ பாராளுமன்றமோ அல்ல எல்லா அத்தண்டிக்கேஷன் காட்டி உங்களிடம் நிருபிக்க. அதனால் நீங்கள் தமிழின் முன்னணி சிந்தனையாளர்களாக கருதுபவர்களை ஒரு பட்டியல் இடுங்கள் முதலில் அதில் யாரெல்லாம் பலகலைக்கழக ஆய்வாளர்களின் நுட்கள படிககாமல் உருவான சுயம்பலிங்கங்கள் என்று அவர்களிடமே ஒரு பெட்டி எடுத்து வெளியிடலாம்? 5. பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய மொழிப்புலத்தில்தான் இலக்கிய ஆக்கமும் மற்றதும் உருவாகி வருகிறது எல்லா மொழிகளிலுமே. அதாவது நமக்கு முந்தைய தலைமுறை பல்கலைக்கழ ஆய்வாளர்கள் உருவாக்கிய அறிவில்தான் நாம் உருவாகி இருக்கிறோம் என்பதே எனது தாழ்மையான கருத்து. 6. உங்கள் தமிழ் முன்னணி பட்டியலை எதிர்பார்க்கிறேன். நன்றி.
28 February at 16:01 · 
மாலன் நாராயணன் Jamalan Tamil "முன்னணிச் சிந்தனையாளர்” என்பது நீங்கள் உருவாக்கியச் சொல்லாடல். எனவே அதை நீங்கள்தான் விளக்க வேண்டும். எனக்கு முன்னணி பின்னணி என்ற முன்னொட்டுக்களில் நம்பிக்கை இல்லை. // உங்களை உட்பட பல்கலையின் ஆய்வுகள் பின்னணியில் உருவான ஆய்வாளர்களின் ஆய்வுகளை படிக்காமல்தான் எழுது வந்துள்ளீர்களா? // ஆமாம். நான் முறையாகத் தமிழ்ப் பயின்றவன் அல்ல.நான் என் புதுமுக வகுப்பிற்கு (இன்றைய அளவில் சொல்வதானால் 12ம் வகுப்பு) பின் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாகப் பயின்றதில்லை. ஆனால் என் சொந்த விருப்பின் பேரில் செவ்வியல், மற்றும் நவீனத் தமிழ் இலக்கியங்களை தேடிப் படித்திருக்கிறேன். நான் எழுத்தாளன் ஆனதற்கு என் படைப்பூக்கம்தான் காரணமாக இருந்ததே தவிர பல்கலைக்கழகங்களில் நடந்த ஆயுவுகள் அல்ல. // நமக்கு முந்தைய தலைமுறை பல்கலைக்கழ ஆய்வாளர்கள் உருவாக்கிய அறிவில்தான் நாம் உருவாகி இருக்கிறோம்// இந்தக் கருத்தை ராமசாமியே கூட ஏற்கமாட்டார் என்றே நினைக்கிறேன். சி.சு. செல்லப்பா, சிட்டி, சிவபாத சுந்தரம், நா.வானமாமலை, போற ஆய்வாளர்களும், கா.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன், ஏ.ஜே. கனகரட்டினா போன்ற தமிழ் விமர்சகர்கள்/ஆய்வாளர்கள் எனக்கு இலக்கியத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள். இவர்கள் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் அல்ல. //இதெல்லாம் கோர்ட்டோ பாராளுமன்றமோ அல்ல எல்லா அத்தண்டிக்கேஷன் காட்டி உங்களிடம் நிருபிக்க.// என்னிடம் எதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டாம். ஆனால் பொதுவெளியில் நீங்கள் வைத்த கருத்தை, அது குறித்து கேள்வி எழும் போது நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு
28 February at 16:47 · 

Chandra Thangaraj இந்த நிகழ்ச்சியில் ”எனது சிறுகதைகளில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்த பேராசிரியர் Ramasamy Alagarsamy அவர்களுக்கு மிக்க நன்றி

28 February at 16:55 · Edited · 
Ramasamy Alagarsamy மாலன் என்ன நோக்கத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் என்ற பின்னணிகளையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. எழுத்தாளர்களின் படைப்புலகமும் ஆய்வாளர்களின் ஆய்வுலகமும் எதிரெதிரானது என்ற பொது நம்பிக்கையை ஓரளவேனும் குறைத்து விட வேண்டும் என்று விரும்புபவன் நான். அதன் விளைவாகவே அவர் கோயம்புத்தூரில் ஜனவரி 20-22 இல் நடத்திய ”தாயகம் கடந்த தமிழ்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒரு பார்வையாளனாக எல்லா அமர்விலும் கலந்து கொண்டேன். அந்தக் கருத்தரங்கின் நிதிச் செலவு நிச்சயம் சில கோடிகள் இருக்கும். அதை வழங்கிட ஒருசில தனியார் நிறுவனங்கள் தயாராக இருந்திருக்கும். அவர்களும் கூட மார்ச் 31 -க்குள் நடத்திட வேண்டும் என்றே சொல்லியிருப்பார்கள். ஏனென்றால் அவர்களும் அந்த நிதியை வருமானவரிச் சலுகைக்காகக் காட்டியாக வேண்டும். நிதியாண்டு மார்ச் 31 இல் முடிவடையும் என்ற நடைமுறை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற நடைமுறை. அதனை இந்தியாவில் இருக்கும் அரசுகளும், அரசு நிறுவனங்களும் பின்பற்றி கொண்டிருக்கின்றன. மாற்றம் நடந்தால் நல்லதுதான். அந்நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலையைச் சக்தி வாய்ந்த ஊடகங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் முன்னெடுக்கலாம்.(தொடரும்)
28 February at 19:29 · 

Ramasamy Alagarsamy படைப்பாளிகள் x எதிரெதிர் மனநிலையால் தமிழுக்கு நேர்ந்த இழப்புகள் ஏராளம் என்பதை நான் அறிவேன். என்னைப் போலவே இரண்டிற்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என நினைத்த பேராசிரியர்கள் இப்போதும் இருக்கிறார்கள்; முன்பும் இருந்தார்கள். என்னுடைய ஆசிரியர்கள் - மதுரைப் பல்கலைக்கழகத்தில் இருந்த முத்துச் சண்முகன், தி.சு.நடராசன், சி.கனகசபாபதி, சு.வேங்கடராமன்-போன்றோர் என் முன்னே வந்து போகிறார்கள். அவர்களின் ஏற்பாட்டால் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப் பெற்ற சொற்பொழிவுகள் வழியாகவே சிட்டியும் சிவபாத சுந்தரமும் அவர்களது புகழ்பெற்ற நூலான தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை உருவாக்கினார்கள். பேரா. நா.வானமாமலை மதுரைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்த காலத்தில் பதிப்பித்த - உரையாற்றிய நூல்களே அவரைச் சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராகவும் முன்னோடியாகவும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தின. சி.சு.செல்லப்பா மதுரைப் பல்கலைக்கழகத்தோடு கொண்டிருந்த தொடர்பும் அவரது நண்பராக இருந்த சி.கனகசபாபதி எழுத்தில் எழுதிய கட்டுரைகளும் இருசாராரும் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
ஐரோப்பிய -அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களே தீவிரமான விமரிசனக் கருத்தியல்களை உருவாக்கித் தருகிறார்கள். தமிழில் புதிதான -அசலான விமரிசனக் கருத்தியல்கள் பேராசிரியர்களால் உருவாக்கப்படவில்லை என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. ஆ.முத்துசிவன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நுஃமான், , கோ.கேசவன், நா.வா.வின் சீடர்களாக அறியப்பட்ட தி.சு. நடராசன், ஆ.சிவசுப்பிரமணியன், எஸ். தோதாத்ரி, ந.முத்துமோகன், போன்றவர்களின் விமரிசனப் பங்களிப்புகள் கல்வித்துறை சாராத கா.நா.சுப்பிரமண்யம், சி.சு.செல்லப்பா, சி.ரகுநாதன், பிரமிள், வெ.சாமிநாதன் ஆகியோரின் பங்களிப்புகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்பதை ஆர்வத்தோடு செய்யும் பேராசிரியரான தமிழவன் தான் அமைப்பியல் என்னும் சிந்தனையோட்டத்தைத் தமிழ்ப் பரப்பிற்குள் உருட்டிவிட்டவர். தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் விமரிசனம் என்ற கருத்தாடல்களில் பங்கேற்ற ராஜ் கௌதமன் தனது கட்டுரைகள் பலவற்றைப் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் வாசித்து விவாதித்தவர். மொழியியல் அறிஞர்களான வ.அய். சுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், செ.வை, சண்முகன், க. அகத்தியலிங்கம் போன்றவர்களின் தமிழ்/ ஆங்கிலக் கட்டுரைகளை நமது நவீனத் தமிழ்ப் படைப்பாளிகள் வாசிக்காததால் இழந்து போனவற்றைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.
(இன்னும் தொடரும்)
28 February at 20:43 · Edited · 

Ramasamy Alagarsamy தமிழில் பத்துக் கவிதை எழுதியவரும், ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டவரும், ஒரு நாவலை எழுதியவரும் நாடகத்தை அதன் வடிவத்தில் எழுத முடியாமல் திணறியவரும் கொண்டிருக்கும் செருக்கு போலக் கல்வியாளர்கள் செருக்கோடு அலைவதில்லை. சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இரண்டு உலகமும் இணைகின்ற போது இன்னும் சில வழிகள் தோன்றலாம் என்றே நினைக்கிறேன். எப்போதும் போலத் தனித் தனியே தான் - செருக்கோடு - பயணம் செய்வோம் என்றால் நான் ஒன்றும் செய்து விட முடியாது. அதற்காக நான் ஒதுங்கிக் கொள்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.. பல்கலைக்கழகம் ஆண்டிற்குத் தரும் ரூ 50000/ தொகையில் எல்லாத் திட்டங்களோடும் முழுப் பயனையும் உள்வாங்கிக் கருத்தரங்குகள் நடத்துவது இயலாது என்று தெரியும். ஆனால் பயன் விளையும் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இல்லை என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் பத்தாண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரே ஆண்டில் செய்து முடிக்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையை இன்னொருவர் திசை திருப்ப முடியாது
இப்படிச் சொல்வதும் ஊதுற சங்கை ஊதும் வேலை தான்
(தேவைப்பட்டால் நாளையும் தொடரலாம்)
28 February at 19:31 · 
Ramasamy Balakrishnan சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை அல்ல ...கல்வியாளர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்லர்.பெரும்பாலான சிற்றிதழ் கட்டுரைகள் வேற்று மொழிபெயர்புகளாக உள்ளன.ஏன் சிற்றிதழ் கட்டுரைகளில் உரிய ஆதர நூல்களின் பட்டியல் காணப்படுவதில்லை ?
28 February at 20:28 · 
Ramasamy Balakrishnan வ.அய். சுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், செ.வை, சண்முகன், க. அகத்தியலிங்கம் போன்றவர்களின் தமிழ்/ ஆங்கிலக் கட்டுரைகளை நமது நவீனத் தமிழ்ப் படைப்பாளிகள் வாசிக்காததால் இழந்து போனவற்றைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. agreed
28 February at 20:29 · 

Ramasamy Balakrishnan vi ay subramaniam is a giant in linguistics I was taught in CUEFL by great professors in language litt like jayaseelan etc...
28 February at 20:31 · 

மாலன் நாராயணன் நான் கல்வியாளர்களின் பங்களிப்பை குறைத்துச் சொல்வதாக ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. நான் அப்படிக் கருதுபவனும் அல்ல. அப்படிச் சொல்லவும் இல்லை. சொல்லுமளவு மூடனோ, மூடிய மனம் கொண்டவனும் அல்ல. ஆனால் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளால் படைப்புலகில் தாக்கம் நேர்ந்து விட்டது போலவும், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் ’முன்னணி சிந்தனையாளர்’களை உருவாக்கித் தள்ளிவிட்டதாகவும் எண்ணிக் கொள்வது பிரமை.அல்லது மிகை. தமிழ் போதிப்பவர்களுக்கும் தமிழ் இலக்கியம் படைப்பாளிகளும், பரஸ்பர நம்பிக்கையோடும் மரியாதையோடும் இணைந்து இயங்கிய காலங்கள் தமிழ்ப் படைப்புலகின் பொற்காலங்கள். அதிலும் கூட தமிழ் இலக்கிய உலகில் நாட்டார் வழக்காற்றியலை அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவாக்கிய நா,வ, பல்கலைக்கழகங்களில் சமகால இலக்கியத்தை அறிமுகப்படுத்தி விவாதத்திற்குட்படுத்திய சி.க. ஆகியோர் படைப்பாளிகளோடு கொண்டிருந்த கேண்மை எங்கும் பதிவு செய்யப்படவில்லை எனினும் நினைக்கத் தக்கது. ஆனால் இன்று பல்கலைகளில் நிகழ்த்தப்படும் கருத்தரங்குகள் அத்தகைய commitmentடோடும், திட்டத்தோடும் நடத்தப்படுவதில்லை. மார்ச் முடிவதற்குள் பணத்தை செலவிட்டுவிடவேண்டும் என்ற நோக்கில் அகப்பட்டவர்களை இழுத்துப் போட்டு நடத்தப்படுபவை. முன் கூட்டியே திட்டமிடலாம், நடத்துங்கள் என்பதுதான் என் யோசனையும் வேண்டுகோளும்
28 February at 20:51 · 

Ramasamy Alagarsamy யோசனைக்கு நன்றி. என்னுடைய பதிவில், ”இருக்கும் நிலைமைக்குள் என்னால் என்ன செய்ய முடிகிறது” என்றுதான் பதிவு செய்தேன். இப்படிச் செய்பவர்களோடு இணைவதற்குப் படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் தயாராக இருந்தால் பொறுப்பு கூடவும், நிறுவனங்களைத் திசைமாற்றவும் முடியும் என்றே நம்புகிறேன். நான் பதிவு செய்த ஒரு குறிப்பு. நேரமிருக்கும்போது வாசியுங்கள்http://ramasamywritings.blogspot.in/2013/02/blog-post.html
28 February at 20:59 · 
மாலன் நாராயணன் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி. ஆனால் நீங்கள் சொல்வது போல் அது ‘கோடி’ செலவில் நிகழ்த்தப்படவில்லை. அயலகத்திலிருந்து பங்கேற்றவர்களின் விமானப் பயணச் செலவு, உறைவிடச் செலவு, இவைதான் பெரும் செலவுகள். இதற்குச் சில லட்சங்கள் செல்வாகின. இவை தவிர நூல் அச்சுச் செலவு, மதிய உணவுச் செலவு போன்ற செலவுகள் இருந்தன. அதற்கு சில லட்சங்கள் ஆயின. எப்படிப் பார்த்தாலும் கோடியெல்லாம் செலவாகவில்லை. அந்த கருத்தரங்கின் தேதிகளை மார்ச் 31 ஐ மனதில் கொண்டு தீர்மானிக்கவில்லை. அப்படித் தீர்மானிக்குமாறு நிதி ஆதாரங்களை உதவியவர்களும் கோரவில்லை. அந்தக் கருத்தரங்கை பொங்கலை ஒட்டி நிகழ்த்த விரும்பினோம். ஆனால் தமிழகம் பொங்கலை ஒருவார விடுமுறையில் கொண்டாடியது. புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடத்துவது வரும் படைப்பாளிகள் அதில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைத்து அந்த நாள்களைத் தேர்ந்தெடுத்தோம். அது ஐரோப்பா, அமெரிக்காவில் பனிக்கால விடுமுறை நாள்களாகவும் இருந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் அந்த நாள்கள் தீர்மானிக்கப்பட்டது. எங்களுக்கு உதவிய நிறுவனங்களைவிட, பல்கலைக்கழகங்கள் மிகப் பெரிய அமைப்புக்கள். சிந்தனைக் களங்களை அமைப்பதும், செழுமைப்படுத்துவதும் அவற்றினுடைய முக்கியப் பணி.எங்களுக்கு அது தன்னார்வப் பணி, எனவே அவர்கள் மனது வைத்தால் எங்களைவிடச் சிறப்பாக அவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும். அவ்வளவுதான்
28 February at 21:03 · 

Ramasamy Alagarsamy பல்கலைக்கழகங்கள் அடிப்படையில் நிறுவனங்கள்; அதிலும் பொதுத்துறை நிறுவனங்கள். இப்போது நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதோடு அரசியல்வாதிகளின் குரூரப்பார்வையில் இருப்பவை வேறு. இதற்குள் தான் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. சில போது சிந்திப்பவர்களைத் தயார்படுத்துகின்றன. கல்வி என்றவுடன் அதனோடு சேர்ந்து புனிதத்தைத் தொடுத்துக் கொள்வது நமது மரபான மனப்பான்மை.
28 February at 21:07 · 

Jamalan Tamil மாலன் நாராயணன்முன்னணிச் சிந்தனையாளர்” என்பதற்கு விளக்கம் தேவையா? அது யாரும் அறிந்த ஒரு சொல். நேரடி பொருளில் உள்ளது. அதற்கு விளக்கம் உங்களிடமும் நான் கெட்கவில்லை. யார் முன்னணி? எது முன்னணி? என்பதுதான் பிரச்சனைக்கு உரியது, அதைதான் நான் சுட்டினேன். முன்னணி, பின்னணியில் உங்களக்கு கருத்தில்லாமல் இருக்கலாம், ஆனால், நீங்கள் துவங்கிய என்ன பயன்? என்ற கேள்விக்குதான் அந்த பதில். இதே என்னபயன் என்ற கேள்வியை நீங்கள் ஒழுங்கமைத்த கூட்டங்களில் கேட்டிருக்கிறீர்களா? உடனடிப் பயனுள்ளதாக எதையும் படைக்க முடியுமா? அதன் பயன் பற்றிய எனது விளக்கமே முன்னணி பற்றி சொல்லவேண்டியதாகியது.
நானும்கூட முறையாக தமிழ் படித்ததில்லை. நான் அறிவியல் மாணவன் என்பதால். அதற்காக தமிழ் பல்கலைச் சார்ந்த அறிஞர்களின் கருத்துக்கள் இல்லாமல் நான் வளர்ந்துவிடவில்லை. உங்கள் அளவிற்கு எனக்கு தனித்து கற்கும் சிந்தனையோ? சுயமாக சிந்தித்து வளரும் படைப்பாற்றலோ இல்லை? படைப்பூக்கம் என்பது வேறு, ஆராய்ச்சி என்பது வேறு. படைப்பு என்ற பெயரில் கற்பனை கதைகளை ஆராய்ச்சியில் எழுதிவிடமுடியாது. அதனால் நம்மைப் போன்றவர்களைவிட பொறுப்பு அதிகம் கொண்ட அவர்கள்தான் ஒரு முறைப்படியான சிந்தனையை உருவாக்க முடியும். அந்தவகையில் குறைந்தபட்சம் இப்படி அவர்கள் நடத்துவது, தன்னார்வு மாநாடுகளைவிட சிறந்ததே.
வானமாமாலை, கேசவன் உள்ளிட்ட அ. ராமசாமி குறிப்பிடுபவர்கள் எல்லாம் யாராம். அவர்கள்தான் முன்னணிகள் என்வரையில். அவர்களிடம் கற்றவைதான். நீங்கள் குறிப்பிட்டவர்களின் பங்களிப்பும்கூட அதற்கு முந்தைய பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் விளைவாக உருவானதுதான். ஒருவகையில் பல்கலைக்கு வெளியில் இருப்பவர்கள் தங்கள் இயக்கத்தை அதற்கு இணையாகவே கட்டமைக்கிறார்கள். அந்தவகையில் பல்கலைக்கழக சிந்தனையே மையமானது. தமிழவன், அ.ராமசாமி, க. பஞசாங்கம், ராஜ்கௌதமன் உள்ளிட்டவர்கள் முன்னணியாக எதையும் சிந்திக்கவில்லை சொல்லவில்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும். உங்களுக்கு அவர்கள் முன்னணியாக தெரியாமல் இருக்கலாம். இதைதான் நான் ஆரம்பத்தில் சொன்னது. முன்னணி பற்றி நாம் தீர்மானிக்க வேண்டும் என்று.
28 February at 23:30 · 

Jamalan Tamil அறிவு வளர்ச்சி பற்றிய அடிப்படையான கருத்தாக்கம். நாம் நமது முந்தையவர்கள் அறிவில், மூதாதைகளின் தோளில்தான் அமர்ந்து உலகைப் பார்க்கிறோம் என்பது. அறிவு வளர்சி என்பது முந்தையவர்களின் அறிவிலிருந்து வராது சுயம்பு என்பதைப்போன்ற உள்ளொளிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சொல்வது ஏமாற்றுவேலை. அதற்கு எதற்கு ராமசாமியை சாட்சிக்கு அழைக்கிறீர்கள். தமிழ் பல்கலைக்கழகத்தின் இராகவையங்கார் துவங்கி சீனிவாச அய்யங்கார் இன்னும் பலர் எழுதிய ஆராய்ச்சிகள் வழியாகவே தமிழ் சமூகக் கட்டமைப்பு, தமிழ் அறிவு விகசிப்பு அத்தனையும் நடந்து உள்ளது. தொடர்ந்து எழுத்து, மணிக்கொடி என்று பேசுவது ஒருவகை இணை அறிவுருவாக்க நிகழ்வாக சித்தரிக்க முனைவதே. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழ்ந்த அறிவுத்தேடலை மறுக்க முடியாது என்பது எத்தனை உண்மையோ அத்துனை உண்மை, அதிலிருந்தும் அறிவுருவாக்கம் நிகழ்ந்து உள்ளது என்பதை ஏற்பதும். அதை இல்லை என்றால், நேற்று நாம் பிறந்து இன்று அறிவை பெற்றதாகிவிடும்.
நிச்சயமாக தமிழ் பல்கலைக்கழக அறிவுப்புலம் தமிழ் சமூக உருவாக்கத்தில் ஆற்றிய பங்கு பற்றி தனி ஆராய்ச்சியே செய்யப்பட வேண்டும். தமிழ் என்கிற அறிவுருவாக்கத்தில் அதன் பங்கு அப்பொழுதே அளவிட முடியும். அதற்காக ஒன்றுமே இல்லை என்பதாக சொல்வது சரியானது அல்ல. உடனே அது முன்பு. இப்போது கடந்து 20 ஆண்டுகளாக இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? இப்படி கால அளவிட்டு நீங்கள் குறிப்பை சொல்லவில்லை. எனது மொத்த உரையாடலும் உங்களின் இந்த வாசகங்களின் அடிப்படையில் எழுப்பப்பட்டதே. ”சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன்? (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) ” இந்த என்ன பயன் என்ற கேள்வி காலத்தை உள்ளடக்காதது. இது ஒட்டுமொத்தமாக கேட்கப்படும் கேள்வியே, இதன் பொருள் என்ன? புதிய தலைமுறை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்பதால் அது பயனற்றதாகிவிடும் என்பதுதானே?
நா.வானமாமலை, கா.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி இவர்கள் எல்லாம் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர்கள் இல்லையா? அதன்பின் வந்த எந்த ஆய்வளரையும் கேசவன், ராஜ் கௌதமன், தமிழவன், அ. ராமசாமி, க. பஞ்சாங்கம் என பலரும் முன்னணி சிந்தனைகளை பேசுபவர்கள்தான். இதில்தான் முன்னணி பற்றிய அரசியல் பிரச்சனை வருகிறது.
28 February at 23:32 · 
Jamalan Tamil பொதுவெளியில் நிருபிக்க வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. அதென்ன தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் தேவை? இதன் உட்கிடை என்ன? சம்பந்தபட்டவர்களைபோன் போட்டு விசாரிப்பீர்கள் என்பதால் எச்சரிக்கையாக நான் சொல்லவேண்டும் என்பதுதானே? இதைதான் நான் கோர்ட் பாராளுமன்றம் என்றேன். இங்கு யார் என்ன பேசினாலும், பார்வையாளர்கள், வாசிப்பாளர்கள் புரிந்து முடிவிற்கு போகப்போகிறார்கள். இதில் என்ன நிரூபனம். தொடர்பு எண் உட்பட கேட்பது ஏன்?
//“முன்னணிச் சிந்தனையாளரை” சந்திக்க ஆவலாக இருக்கிறேன். தொடர்பு எண்கள், முகவரி அளிக்க இயலுமா?// இந்த கிண்டல் தொனிக்கான பதிலே அது. நிரூபணம் தேவையற்ற பொதுவெளி உரையாடலில், அவரவர் அவரவர் நிலையை சொன்னால் போதுமானது. அவரவர் நிலைய வாசிப்பவர் உணர்ந்துகொள்ளப் போகிறார்கள். இதில் என்ன பிரச்சனை.?
விரிவான கருத்திற்கு நன்றி.
அன்புடன்,
ஜமாலன்.
28 February at 23:46 · 
Murugesa Pandian Natarajan பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் சில பேராசிரியர்கள் செய்யும் கருத்தரங்கப் பணிகளில் குறைகள் இருக்கின்றன.அது தவிர்க்க முடியாததது. ஆனால் காத்திரமான எண்ணம் மிக்க பேராசிரியர்கள் மாணவர்கள் வழியே சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். எழுபதுகளில் புதுக்கவிதை என்றால் கோவேறு கழுதை எனப் பண்டிதர்களால் இகழப்பட்ட சூழலில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் எழுத்து பத்திரிகை வெளியிட்ட புதுக்குரல்கள் புதுக்கவிதைத் தொகுப்பினைப் பாடமாக வைத்த பேராசிரியர் சி.கனகசபாபதி அவர்களின் முயற்சி தனித்துவமானது. உயர்கல்வியில் அபத்தமான கல்வித்தனமான விஷயம் தான் பெரும்பாலும் நடைபெறுகின்றன எனக் கண்ணை மூடிக்கொள்வது சரியல்ல. கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் வந்து பாடம் நடத்தி விட்டு ஊதியம் வாங்கிவிட்டுப் போக வேண்டியதுதானே..இவனுக தேவையில்லாமல் புதியதாக படைப்பாளர்களை அழைத்துக் கூட்டம் போடுறானுக .இது எல்லாம் தேவையா என்ற குரல் தொடர்ந்து என்னைப் போன்றோரின் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. எப்படியாவது புதிய விஷயங்களை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற அக்கறை முக்கியமானது. உயர்கல்வியிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் செயல்பட்ட பேராசிரியர்களின் வாரிசுகளாக இன்று கணிசமான பேரைச் சொல்லமுடியும். பெண்ணியம், தலித் பற்றிய அழுத்தமான பேச்சுகளைக் கேட்டுப் பதற்றமடைகின்ற கல்லூரிப் பேராசிரியர்கள் நிரம்ப உள்ளனர்.மாணவர்களின் நலம் கருதிப் புதிய போக்குகளை அறிமுகப்படுத்துவதற்காக மெனக்கெட்டுச் செயல்படும் பேராசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டிருக்கின்றது. எனது மதிப்பீட்டின்படி காத்திரமான விஷயங்களை எழுதவும் மேடையில் பேசவும் செய்கின்ற தமிழ்ப் பேராசிரியர்களின் எண்ணிக்கை இருபது கூட இருக்காது. தற்சமயம் பணியில் இருக்கின்றவர்களும் ஏழெட்டு ஆண்டுகளில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். எனவே சிறுபத்திரிகை சார்ந்த படைப்புகள்,கோட்பாடுகளை மாணவர்களிடம் பேசுபொருளாக்கவும் புதிய படைப்பாளர்களை உயர் கல்வி வட்டத்தில் அறிமுகப்படுத்தவும் வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.அ.ராமசாமி போன்றோர் படும் பாடுகளை நான் நன்கறிவேன். ஏதாவது செய்து கருத்தரங்கு நடத்தி இளைய தலைமுறையினரிடம் முக்கியமானவற்றைக் கொண்டு போகமுடியாதா என்ற ஆதங்கம் தான் இத்தகைய செயல்களின் பின்புலம். மாலன் எதிர்மறை அம்சங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.அதன் மறுபக்கம் முக்கியமானது.
4 March at 08:28 ·

மாலன் நாராயணன் @ Murugesa Pandian Natarajan அறுபதுகள், எழுபதுகளில் படைப்பிலக்கியத்திற்கும் பலகலைக்கழக போதகர்களுக்குமிடையே இருந்த உறவைவிட இனறைய நிலை நிச்சயமாக மேம்பட்டிடுக்கிறது . அது வரவேற்கத்தக்கதும் கூட. எழுத்துவில் என்று எழுதியதற்காக பலர் கூடி கேலி பேசி தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சிகளை சி.சு. செல்லப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா ஒன்றில் அமெரிக்கத் துணை தூதராக இருந்த ஃபிராங்க்ளின் சி.மணி, முத்துசாமி பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய போது மேடையில் இருந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன், யார் இவர்கள் என நீதிபதி மகராசனிடம் விசாரித்த சம்பவத்தை நானே எழுதியிருக்கிறேன். அது போன்ற சூழலில் சி.க. போன்றவர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. பிரான்சில் காலாவதியாகிப் போன பின் நவீனத்துவத்தை இடதுசாரிச் சார்புடைய பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்த முயன்றபோது அவர்களுக்கு இலக்கியச் சிற்றேடுகள் தேவைப்பட்டன. அதிலிருந்து அவர்களுக்கும் இலக்கியச் சிற்றேடுகளுக்குமான உறவுகள் மேம்பட்டன. இலக்கியச் சிற்றேடுகள் உயர்த்திப் பிடித்த புதுக்கவிதை, நவீன நாடகம், நவீன ஓவியம், Non -linear எழுத்து, கட்டுடைக்கும் விமர்சனம், ஆகியவற்றை அவர்களும் ஏற்று வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். சமூக அக்கறையின் காரணமாக தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்துக்களுக்கும் அங்கீகாரம் பெற்றன. ஓவ்வொரு காலத்தின் அரசியல்தான் இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிக்கிறது (இது என் அழுத்தமான நம்பிக்கை; இதைக் குறித்து விரிவாக என் புரட்சிக்காரர்கள் நடுவே என்ற நூலில் எழுதியிருக்கிறேன்) அதுதான் வகுப்பறையைத் தீர்மானிக்கிறது என்னும் போது, இன்று நம் மீது இடையறாது தாக்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிற்தா? உலகமயமாக்கலின் முக்கிய விளைவு to make local irrelevant என்பது. அது உள்ளூர் மொழி, கலாசாரம், பண்டங்கள், உடைகள், உணவு, பானங்கள், வழிபாடு எல்லாவற்றையும் தேவையற்றதாக ஆக்கிவிடும். அந்தச் சூழ்நிலையில் முதல் அடி மொழிஆசிரியர்கள் மீதுதான் விழும். அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? அதை விடுத்து மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதே. மீண்டும் சொல்கிறேன். முன்கூட்டியே திட்டமிட்டு செறிவான சிந்தனைக் களங்களாக கருத்தரங்குகளை அமையுங்கள். அது அத்தனை கடினமானதல்ல.
4 March at 08:59 · 

Murugesa Pandian Natarajan லட்சிய போதமுள்ள பேராசிரியர்கள் இன்று அருகி வரும் உயிரினமாகி விட்டனர் .தாய் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி மகத்தானது.இன்று சாதனையாளராக மதிக்கப்படுகின்றவர்களின் பின்னே ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர் வேலையை வயிற்றுப் பிழைப்புக்காகவும் எளிதாகவும் கருதி நிரம்பப் பேர் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளிக்கூட வேலைக்கு பத்து லட்சமும், பணியிட மாறுதலுக்கு இரண்டு லட்சமும் நல்லாசிரியர் விருது பெற 50,000/- பணமும் தர வேண்டிய நிலை. கல்லூரிகளில் 15 லட்சங்களும் பல்கலைக்கழக அள்வில் 25 லட்சங்களும் துணைவேந்தர் பணிக்கு ஆறு கோடிகளும் என எல்லாமே கல்வி மாபியாகள் தீர்மானிக்கின்றனர் . உயர்கல்வியினருக்குத் தரப்படும் கணிசமான ஊதியம் எல்லோரையும் நுகர்பொருள் பண்பாட்டிற்குள் தள்ளி விட்டது. இளைய தலைமுறையினரை உருவாக்கும் மகத்தான பணியில் இருக்கின்றோம் என்ற பிரக்ஞைகூட பல ஆசிரியர்களுக்கு இல்லை. முனைவர் பட்டம் பெற்று மூன்று அல்லது ஐந்து ஊதிய உயர்வு கிடைத்தவுடன் நூலகம் பக்கமே போகாத புதிய தலைமுறை ஆசிரியர்கள் உருவாகி விட்டனர். வெளியே இருந்து பார்க்கின்ற மாலனைப் போன்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் நிலைமை உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் கல்வியில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் வரும் என நம்பினேன்.இன்றைய உயர் கல்விச்சூழலைப் பார்க்கும்போது எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்து பட்ட வகுப்பில் மூன்று ஆண்டுகளும் முதுகலையில் இரு ஆண்டுகளும் தமிழ் இலக்கியம் பயின்று வெளியேறும் மாணவனால் தமிழைப் பிழையில்லாமல் எழுத முடியவில்லை. அப்புறம் கட்டுரை எழுதுவது எப்படி? உங்கள் ஊடக அனுபவத்தில் தமிழிலக்கியம் படித்தவர்களை ப் பார்த்திருக்கிறீர்களா?என்றாலும் கருத்தரங்குகளைச் செறிவாக நடத்த வேண்டும் என்ற உங்கள் அபிப்பிராயம் முக்கியமானதுதான்
4 March at 13:47 ·

மாலன் நாராயணன் அறிய வருத்தமாகத்தானிருக்கிறது.பத்து லட்சம் கொடுத்து பள்ளிவேலை வாங்கும் அளவிற்கு அதில் வருமானம் இருக்கிற்தா/ அல்லது பணிப்பாதுகாப்பு மட்டும்தான் காரணமா/
4 March at 13:52 · 

Loganathan Venugopal · 14 mutual friends
Quarterly control system என்பதற்குள் பல்கலைக்கழக செலவினங்கள் வருகின்றன என்றால், அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கலாமே. அப்போது கடைசி நேரத்திற்குள் செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அவசரம் சற்று குறையலாம் எனக்கருதுகிறேன்.
4 March at 18:38 ·
Loganathan Venugopal · 14 mutual friends
//அரசியல்வாதிகளின் குரூரப்பார்வையில் இருப்பவை வேறு// திரு. ராமசாமி அழகர்சாமி & // காத்திரமான எண்ணம் மிக்க பேராசிரியர்கள் மாணவர்கள் வழியே சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்// திரு முருகேசபாண்டியன் நடராஜன். முதலில் குறிப்பிடப்படுவதற்கு இரண்டாவதாக குறிப்பிடுவதை பதில் என்று கொள்ளலாம் எனக் கருதுகிறேன்
4 March at 18:44 ·
Bharathy LakshmanaPerumal Murugesa Pandian Natarajan கூறியது அப்பட்டமான உண்மை என்பதைத் தமிழ்ப் பேராசிரியர் எவரும் மறுக்க இயலாது. தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை இல்லையா!
5 March at 09:39 · 
Murugesa Pandian Natarajan கற்றுக்கொள்ளும் ஆர்வமற்ற மாணவர்கள் எண்ணிக்கை பெருகுவதுதான் துயரம்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்