அதுவுமொரு பசிதான் ! - ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப்பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள்.
காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உடல்களை இணைத்து இறுக்கிக் கொண்டிருந்த காட்சியைப்படமாக அந்தப் பத்திரிகையில் பார்த்த போது நினைவுக்கு வந்தது இந்தப்பாடங்கள் தான். பெண்ணுடலும் ஆணுடலும் இணையும் அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறக்கவே செய்திருப்பார்கள். அந்த ஆண் தான் புனைந் திருந்த குருக்கள் அல்லது அர்ச்சகன் என்ற பாத்திரத்தையும், அந்தப் பெண் பக்தை என்ற பாத்திரத்தையும் மறந்து அல்லது இழந்து போகாதிருப்பின் இந்தக் காட்சியை நாம் காண முடியாது. தன் விருப்பமின்றிச் சமூகம் தன் மீது சுமத்திய பாத்திரத்தை எப்போதும் விட்டு விட ஒவ்வொரு மனமும் விரும்பிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்சம் சில கணங்களாவது விட்டு விலகி விடவே விரும்புகிறது. அதற்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை.

ஒட்டு மொத்த இச்சையை உடலின் இச்சை எனப் பிரித்துப் பேசுவதன் மூலம், மனம் புனிதமானது; உடல் தீட்டானது; அது குற்றங்களைச் செய்யத் தூண்டிக் கொண்டேயிருப்பது;ஆனால் மனமோ அதைத் தடுத்து நிறுத்தி ஆற்றுப்படுத் துவது எனச் சமயம் விளக்குகிறது. சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் காரண மான மனம் கடவுளின் இருப்பிடம் எனவும், உடல் அழுக்கடையக் கூடியது; ஆசைகளின் இருப்பிடம்; சாத்தானின் வாசஸ்தலம் அல்லது அரக்கனின் கோட்டை; எனவே அது தீட்டானது எனவும் சமயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கூட ஆண் உடலை விடப் பெண் உடலே தீட்டை அனுபவித்துக் கொண்டே இருப்பது என நம்ப வைத்துள்ளது நம்பிக்கைகள்.

கடவுளை நினைக்கும் பக்தன் அந்த நேரத்தில் தன் இருப்பையே மறந்து தன்னை இழப்பதையே பக்த மனத்தின் உச்சநிலை எனச் சொல்வதற்கீடாக தனிமனிதன் காம விருப்பில் தன்னை இழந்து அதை அடையும் ஆவலோடு இருப்பதை எல்லோரும் பல கணங்களில் உணரவே செய்கிறார்கள். ஆனால் சமூக ஒழுங்கு கருதி அதை வெளியில் சொல்வதில்லை. வயிற்றின் பசியைத் தீர்க்க ஒரு தனிமனிதன் சமூகத்தின் விதிகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டுக் காரியங்களில் இறங்கும் நிலையில் அவனைக் குற்றவாளி எனச் சொல்லும் சமூக ஒழுங்குகள் தான் உடலின் பசிக்கான முயற்சிகளையும் குற்றம் எனவும், கள்ள உறவு எனவும் சொல்லிக் காட்டித் தண்டனை வழங் கவும், தள்ளி வைக்கவும் முயல்கிறது.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கருத்தைச் சொன்ன அறிஞனின் கூற்றை ஒவ்வொரு மனிதர்களும் விருப்பம் இல்லாமலேயே பின்பற்றிக் கொண்டிருக் கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் சமூகத்தின் நிர்ப்பந்தம், சூழல், கட்டுப்பாடுகள் என்பனவற்றை முழுமையாகப் புறக்கணித்து விட்டுத் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்வதையே எப்போதும் மனித மனம் விரும்புகிறது. ஆனால் சமூகமும் அதன் நிறுவனங்களும் உண்டாக்கி வைத்துள்ள கட்டுப்பாடுகளும், அதனால் கிடைக்கும் பாதுகாப்பும் இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதில் நிலைகுலையாமல் மனித வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

மனிதனை உடல் என்றும் மனம் என்றும் பிரித்துப் பேசுவது சமய அறிவின் முறையியல் எனச் சொல்லும் உளவியல், உடல் இச்சை என்று சொல்வது கட்டியெழுப்பும் ஒரு புனைவு என விளக்குகிறது. உடலுக்குத் தான் இந்தப் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாம் என்று சொல்வதை மறுத்து, உடல் பருண்மையாக- தூலமாக- தெரிவதைப் போல மனத்தின் இடம் எது எனச் சொல்ல முடியுமா? எனக் கேட்கிறது. மனம் என ஒன்று தனியாக இல்லை. உடலும் மனமும் ஒன்று தான் எனப் பேசும் உளவியலைத் தங்கள் படைப்புகளின் ஆதாரக் கோட்பாடாகக் கொண்டு தமிழில் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை எழுதியுள்ளார்கள். இதற்கு முழுமையான உதாரணமாக ஒரு படைப்பாளியைக் காட்ட வேண்டும் என்று கேட்டால் நான் ஜி.நாகராஜனையே முன் மொழிவேன்.

ஜி.நாகராஜன் இந்த உலகில் வாழ்ந்த காலம் வெறும் ஐம்பத்திரண்டே ஆண்டுகள் (1929-1981) தான். இதற்குள் அவரது படைப்புலக வாழ்க்கை என்பது 24 வருடங்கள் கொண்டது. இந்த 24 வருடங்களுக்குள் எத்தகைய இலக்கிய வரலாற்றிலும் இடம் பெறத்தக்க புனைகதைகளை எழுதி விட்டுச் சென்றுள்ளவர் ஜி.நாகராஜன். தொடக்கத்தில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார். அவர் பின்னாளில் அவ்வியக்கங்களுக்கும், அவை பின்பற்றிய இறுக்கமான கோட்பாடுகளுக்கும் எதிராகத் தன்னை நிறுத்திக் கொண்டவர். அவரது நாளை மற்றும் ஒரு நாளே என்ற நாவலுக்கும் குறத்தி முடுக்கு என்ற குறுநாவலுக்கும் அவற்றின் கதைக்களம் மற்றும் முன்நிறுத்தும் பாத்திரங்கள் சார்ந்து முன் மாதிரிகள் கிடையாது. எப்போதும் வெளிசார்ந்து மட்டும் அல்லாமல் சமூக நிலை, அதன் மதிப்பீடுகள், விதிகள், நிறுவனங்கள் , அவை வலியுறுத்தும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் என அனைத்துத் தளத்திலும் விளிம்பில் இருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டியவர் ஜி.நாகராஜன்., கதைசொல்லும் லாவகம், கதைக்களம், மைய நீரோட்ட வாசிப்பு மட்டுமே கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்யும் கேள்விகள் எனப் புதுமை காட்டும் அவரது மொத்தப் படைப்புகளும் ஜி.நாகராஜன் படைப்புகள் எனக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றுள்ளன. முதலில் தமிழ்ப் படைப்புகளை மட்டுமே வெளியிட்ட பதிப்பகத்தார் இப்போது வந்துள்ள புதிய பதிப்பில் அவர் எழுதிய ஆங்கிலப் பனுவல்களையும் இணைத்துள்ளனர். அவர் எழுதியதாக அச்சிடப் பெற்றுள்ள 34 சிறுகதைகளில் ஒன்று கல்லூரி முதல்வர் நிர்மலா என்பது.
கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.

“ எனக்கு முதலில் பயமாக இருந்தது,ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் ‘ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும் போது, ‘ பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை;பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்சொல்லும் போது சமயங்களில் அவன் கை என் மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்”

இப்படித் தொடங்கும் கதையின் தொடக்கம் உண்மையில் ஒரு கடிதத்தின் தொடக்கம். இதைப் படிப்பவள் அந்தக் கல்லூரியின் முதல்வர் மிஸ் நிர்மலா. அவள் வாசித்த அந்தக் கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். அவள் கவனக் குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்தச் சஞ்சிகையை எடுத்த அவள் அண்ணன் மூலம் தகப்பனார் சந்திரசேகரன் கைக்குப் போய் வாட்ச்மேன் காதர் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக மிஸ் நிர்மலாவின் மேஜைக்கு வந்துள்ளது.
நிர்மலா மணியை அழுத்திக் காதரை உள்ளே வரச் சொல்லி அவனிடம், “ஹாஸ்டலுக்கு வேற வாட்ச்மேன் போட்டிருக்கேன்” என்றவளிடம், ‘சரிங்க’ என்று சொல்லி ஏற்கிறான். தொடர்ந்து அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு “ உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?” எனக் கேட்க, “ தோட்ட வேலைக்குத் தானே நம்மெ காலேசுக்கு வந்தேன்.” என்கிறான். அவள், “ அப்படியா.. எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க.. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்” என உத்தரவு போடுகிறாள்.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனதுவலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்து கொள்வது போல், இல்லை மார்பகத்தைத் தடவிக் கொள்வது போல, சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று. அவ்வளவுதான்.

இந்த உத்தரவு காதருக்குத் தரப்பட்ட தண்டனையா? அல்லது ஒருவிதமான பரிசா? என்று கேள்வியை எழுப்பும் விதமாகக் கதையை முடிக்கும் ஜி. நாகராஜன் அதற்கான பதிலை வாசகர்களுக்குத் தரும் விதமாக நிர்மலாவின் கடந்த காலம் பற்றிய நினைவொன்றை ஒருபத்தியில் எழுதிக் காட்டியுள்ளார். அந்தப் பத்தியை நினைத்துக் கொண்டாள் நிர்மலா காதருக்கு அளித்தது தண்டனை அல்ல; இது காமத்தை இயல்பான ஒன்றாக நினைத்துக் கொண்ட நிர்மலாவின் சரியான முடிவு என்பது புரியும். அந்தப் பத்தியின் வரிகள் இதோ:வருஷம் பூராவும் இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்து விட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் தட்டுப் படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகள் இல்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்து விட்டான். இப்ப இருவரும் சேர்ந்து ‘ அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

ஜி.நாகராஜன் எழுதிக் காட்டும் இந்த வரிகள் கல்லூரி முதல்வர் நிர்மலாவின் நினைவுகளாக வருபவை.இந்த நினைவுதான் காதரைத் தன் தோட்டக்காரனாக ஆக்கிக் கொண்டது என வாசித்துக் கொள்ளத்தூண்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்