சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா
பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.